Monday, 16 November 2015

                            புதுக் கவிதையில் மானுடம்

     அளந்து அளவிடற்கு இயலாத பரப்பளவைத் கொண்டது தமிழ் இலக்கியம். புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், நீதிநூல்கள், அறநூல்கள், அகம், புறம் தழுவிய இலக்கண நூல்கள் என விரிந்து… பரந்து… கொண்டேச் செல்லும் இதன் எல்கை.
    
      கட்டுரை, கவிதை என்னும் இருவேறு வடிவங்களைக் கொண்ட இவ்விலக்கியம், ஆரம்பக் காலத்தில் முழுக்க முழுக்க கவிதை வடிவத்தைத் தன்னகத்தேக் கொண்டு சிறப்புற்று விளங்கியது.
    
     அக்காலத்துக் கவிதை இலக்கியம் முழுவதும் இறைவனையும் அரசனையும் மையப் பொருளாகவும் காதலையும் வீரத்தையும் கருப்பொருளாகவும் கொண்டு மரவோடு ஒட்டி உறவாடி நின்றது. பாமரர்களால் படித்து அறிந்து கொள்ள முடியாமல், பண்டிதர்களால் மட்டுமே உய்த்துணரும் நிலையில் கவிதை இலக்கியம் கோலோச்சி நின்றது.
    
     காலத்தின் கட்டாயத்திற்கும் மக்களின் மனநிலைக்கும் உட்பட்டு இருபதாம் நூற்றாண்டின் முற்காலத்தில் இக்கவிதை இலக்கியத்தின் வடிவம் மாறுபட்டது; பாடுபொருள் வேறுபட்டது. அதன்பின் மரபுக்கவிதை என்ற வடிவம் மாறுபட்டு புதுக்கவிதை என்ற வடிவம் உருப்பெற்றது. இறைவனும் அரசனும் மட்டுமே பாடுபொருள் என்ற நிலைமாறி மக்களும் மாக்களும் பாடுபொருளாயின.
    
     பண்டிதர்களால் மட்டும் படித்து, ருசிக்க முடிந்த கவிதையை பமரர்களும் படித்து… சுவைத்து… ரசித்து… ஆனந்த நர்த்தனமாடும் அளவிற்கு ஆக்கித் தந்தனர் மகாகவி பாரதியார் தொடங்கிய புதுவரவுக் கவிஞர்கள்.

     புதுக் கவிதையில் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற நெறிமுறை ஏதும் இல்லை. எதையும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற முழு சுதந்திரம் இருந்தது. அதனால், சிறிது சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட புதுக் கவிதைப் புனைந்தார்கள். அக்கவிதைகள் மானுடத்தின் அன்றாடத் தேவையிலிருந்து தொடங்கி அவர்களின் உள்ளுணர்வுகளின் அடியாழத்தைவரை படம் பிடித்துக் காட்டின.

     அதற்கு அத்தாட்சியாகத்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி இவ்வையகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வளர்ச்சிக்கு சோறும், அறிவு வளர்ச்சிக்குக் கல்வியும் வேண்டும் எனக் கருதினான். அதனால்தான் அவன்;
                 “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
                    வாழும் மனிதருக் கெல்லாம்
                 பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
                     பாரை உயர்த்திட வேண்டும்” என்றார்.

     மேலும் ஒருவன் வயிராற உண்ண உணவில்லாமல் இருந்தால் இவ்வையகத்தை என்னச் செய்ய வேண்டும் என்பதை;
            “தனியொருவனுக்கு உணவில்லையெனில் – இந்த
            ஜகத்தினை அழித்திடுவோம்” – என்கிறான்.
இதிலிருந்தே புதுக்கவிதைகளில் மானுடத்தின் பேச்சும்… மூச்சும்… பதிவாகத் தொடங்கின.

     இப்படிப் பாரதியால் புதுக்கவிதைகளில் தொடங்கி வைக்கப்பட்ட மானுடச் சிந்தனைகள் பிற்கால புதுக்கவிஞர்களால் புதுப்பொலிவுற்றுத் திகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது. கல்வியின் சிறப்பு, பெண்விடுதலை, சாதி, மத ஒற்றுமை, இளைஞர் நலன், பண்பாடு பேணுதல், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத அழிப்பு, மொழிவளர்ச்சி என மானுடம் பற்றிய எத்தனையோ உயரிய விஷயங்களில் தங்களின் சிந்தனையைத் திருப்பியுள்ளார்கள் புதுக்கவிஞர்கள்.
     பெண்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லக்கூடாது; புத்தகங்களைப் படிப்பதை மட்டுமின்றி, கையினால் தொடுவதுகூட பவம் என்றிருந்த நிலையை மாற்றிட, ஒரு புதுக்கவிஞன் எழுச்சியோடு இப்படி எழுதுகிறான்;
           
           “பெண்ணே
           அகிலமெல்லாம்
           ஆட்சி செய்யும்
           வல்லமை உனக்குண்டு
           ஆலயமெல்லாம் அபிஷேகம் செய்யும்
           புனிதமும் உனக்குண்டு”.
பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் என்ன, ஆலயங்களுக்குள்ளே சென்று பூஜை செய்வதற்கான தகுதியையும் பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படி அற்புதமாய் சித்தரிக்கிறார் இக்கவிஞர்.

     பெண்களைத் தொடர்ந்து இளைஞர்கள் நிலையும் இன்று இளக்காரமாக்கப்படுகிறது. படித்துப் பட்டம் பெற்றும்  வேலைவாய்ப்பின்மை, சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற ஆக்கமும் ஊக்கமும் இன்மை, போதைப் பொருள்களை விற்பதற்கு இளைஞர்களை
ஈடுபடுத்துதல் என இளைய சமூகத்தின் நிலைப் பரிதாபகரமானது. இந்நிலையில் இந்த இளைஞர்களின் சக்தியைப் புரிந்து கொண்ட ஒரு கவிஞர்  இளைஞர்களுக்கு இப்படிப் புத்தி கூறுகிறார்.
             
               “இளைஞனே/ நீ
               ஆரதனைக் கூடத்தின்
               அர்ச்சனைப் பூ… நீ
               நீ நினைத்தால்
               துரும்பையும் தூணாக்கலாம்
               புல்லையும் புல்லாங் குழலாக்கலாம்
               மண்ணையும் பொன்னாக்கலாம்
               நீ எழுந்து நடைபோடு
               ஒரு கால் முன்னே செல்ல
               இன்னொரு கால்
               பின் வாங்காது
               என்பதை உணர்ந்துகொள்”

     இதோடு மட்டும் நின்றுவிடவில்லை, இன்னொருக் கவிதை இளைஞர்களிடம் நம்பிக்கைக் கொள்ளச் சொல்கிறது.
                 “நம்பிக்கை நார் மட்டும்
                 நம் கையில் இருந்தால்
                 உதிர்ந்த பூக்களும்
                 ஒங்வொன்றாக வந்து
                 ஒட்டிக்கொள்ளும்
                 கழுத்து மாலையாகவும்
                 தன்னைத்தானே கட்டிக்கொள்ளும்”

இப்படி இளைஞர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுப்பதின் மூலம் அவர்கள் தங்கள் சக்தியை உணர்ந்து நல்வழிப்படுவதற்கு ஏதுவாகும்.

     சாதீயச் சண்டைகளும் சமய மோதல்களும் நாளுக்கு நாள் நம் நாட்டில் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சியும் மக்களிடையே ஒற்றுமை உணர்வும் சீர்குலைந்து போகின்றன. இந்நிலையில் இந்த வேறுபாடுகளைக் களைந்து அனைத்துச் சமயத்தவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஒரு கவிஞர் தம் புதுக்கவிதையால் இப்படிப் புத்திமதி கூறுகிறார்;

                “இராமனா? புத்தனா?
                இயேசுவா? அல்லாவா?
                ஆண்டவன் யாரென்று
                அலசிப் பார்க்காதீர்
                இராமனும் புத்தனும்
                இயேசுவும் அல்லாவும்
                பக்தனை இரட்சிக்கும்
                உத்தமர் என்றே உணர்ந்திடுவீர்!”
     இந்தக் கவிஞனோடு நின்றுவிடவில்லை, இன்னொரு கவிஞன் இப்படி எழுதுகிறான்;

               “கோயிலை மசூதியை ஆலயத்தை
               இடிப்பவனாய் இருக்காதே
               கீதையைப் பைபிளைக் குர்ஆனைப்
               படிப்பவனாய் இரு.”

ஆகா என்னே அற்புதம் இதைவிட மத ஒற்றுமைக்கு இன்னொரு கவிதை வேண்டுமா? என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது.
    
     இதோடும் நின்றுவிடவில்லைக் கவிஞர்களின் கனவுகள். இதோ இந்தக் கவிஞரைப் பாருங்கள்; இவர் எப்படிச் சிந்திக்கிறார் என்று;

              “இந்துவே திரண்டு வா என்றோ
              கிறிஸ்தவனே கிளம்பி வா என்றோ
              இஸ்லாமியனே எழுந்து வா என்றோ
              எழுப்பாதீர் முழக்கம்
              மனிதனே இணைந்து வா
              என்று முழங்கி
              மானுடத்தை இனியேனும்
              மகத்துவப் படுத்துங்கள்”

இந்தக் கவிதைகளைக் கற்றுணர்ந்த பிறகும், ஒருவருக்கு மதபேதம் வருமாயின் அவர் நிச்சையம் மனிதராக இருக்கவே முடியாது.

     புதுக்கவிஞர்கள் தங்கள் கவனத்தைத் தமிழ் மீதும் செலுத்தியுள்ளனர், தங்கத்தின் மீதும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் இன்று தமிழ் மொழிக்கு ஒரு சவால் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆங்கில மொழியின் மீது தீராதத் தாகம் கொண்டு, தங்கள் பிள்ளைகளை ஆங்கில மொழியில் கற்க வைப்பதில் குறியாக உள்ளனர். அதனால் அரசுப் பள்ளிகளில்கூட இன்று ஆங்கிலவழிக் கல்விக் கற்பிக்கும் அவலநிலை நேர்ந்துள்ளது.

     அதோடு மட்டுமின்றி, பெற்றோரை, தங்கள் பிள்ளைகள் அம்மா, அப்பா என்று அழைப்பதையே கௌரவக்குறைவாகக் கருதுகின்றனர். இந்த அவல நிலையைப் புரிந்து கொண்ட ஒரு கவிஞர்:

             “அதோ
             அம்மா என்றவனை
             அடிக்கிறாள் ‘மம்மி’
             இதோ
             அப்பா என்றவளை
             முறைக்கிறார் டாடி”  என்று கனல் கொட்டுகிறார். இந்த மனநிலை மக்களிடமிருந்து மாறி அழகுத் தமிழுக்கு ஆராதனைச் செய்யும் பொருட்டு ஒரு கவிஞர்:-
               “டாடி மம்மிக்கு
               டாட்டாக் காட்டி
               அம்மா அப்பா
               என்றே நம்மை
               அழகுத் தமிழில்
               அறிமுகம் செய்வோம்” என்கிறார்.

இன்னும் ஒரு கவிதையில்:-

                வீதிகள் தோறும்
                தாய்மொழி மழலைப்
                பள்ளிகள் நிறுவி
                அன்னியமொழி கான்வென்ட்டுக்கு
                திண்டுக்கல் பூட்டுப்
                போட்டுச் சாத்துவோம்” எனச் சவுக்கடி கொடுக்கிறார்.

     தமிழர்களின் பண்பாடாகத் திருமணத்தின் போது தாலிகட்டும் பழக்கம் இருந்தது. அந்தத் தாலி ஆரம்பகாலங்களில் பெயரளவுக்குத் தங்கம் வைத்துச் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. தாலிக்குத் தங்கம் என்ற நிலைமாறி, தங்கமே தாலி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதனால், தங்கத்தின் விலையோ நாளுக்கு நாள் வானத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது.

     சாதாரண பாமர மக்களால் இந்தத் தங்க விலைக்கு ஈடுகொடுத்துத் தாலிக்குத் தங்கம் வாங்கி, தங்கள் இல்லங்களில் இருக்கும் பெண்களை திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு முடியாமலே போகிறது. இதனால், எத்தனையோ ஏழை எளிய வீட்டுப் பெண்கள் வயது முதிர்ந்த பிறகும் திருமணம் நடக்காமல் முதிர் கன்னியர்களாகவே மாறி வருகின்றனர். இந்த இழிநிலையைக் கண்ணுற்ற ஒரு கவிஞர்:-
 
             “தாங்காத தங்கவிலை
             ஏறுமென்றால்
             தாலிக்குமிங்கே
             தங்கம் வேண்டாமென்போம்
             தாரத்திற்கு
             மஞ்சள் கயிறு போதுமென்போம்
             தர்மத்தைக் காத்திடவே 
             தயங்காது நின்றிடுவோம்” என்று எச்சரிக்கிறார்.

     எவ்வளவுதான் கல்வியில் சிறந்தாலும் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அறிவியலில் வளர்ந்தாலும் இன்னும் நம்மிடையே தீண்டாமைத் தாண்டவமாடிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனைத் தீர்த்துக் கட்டுவதற்குத் துணிந்தவர்கள் எத்தனை எத்தனையோபேர். அவர்களில் கவிஞர்களின் பங்கும் அளவிடற்கரியது. ஒரு கவிஞன் தீண்டாமையை தீர்த்துக் கட்ட முடிவெடுத்துவிட்டான். இதோ அவனின் கவிதைக் கணையாளி.
                 “தீண்டாமைக் கொசுக்களைத்
                 தீர்த்துக்கட்ட
                 நிலப்பிரபுத்துவச் சாக்கடையை
                 நிர்மூலப்படுத்துவோம்”

     பொருளாதார ஏற்றத்தாழ்வுதான் தீண்டாமைக்குக் காரணம். அதனால் நிலப்புரபுத்துவத்தை இல்லாமல் ஆக்குவதுதான் இதற்குச் சரியான தீர்வாக அமையும் என்கிறார். மேலும் ஒரு கவிஞர் கூறும் போது:-
                
                  “தீண்டாமையென்பது
                  தீயினும் கொடுமை
                  அதைத்
                  தீர்த்துக்கட்டுவது
                  நாட்டுக்குப் பெருமை” என்கிறார்.

     நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் விசாயிகள். விவசாயத்தால் மட்டுமே ஒரு நாட்டை மிக உன்னதமான வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். அதனால்தான் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் வாசகத்தை நம் நாட்டின் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளோம். அப்படிப்பட்ட உழவர்களைப் பற்றி ஒரு கவிஞர் தமது கவிதை வரிகளில்:-

                “நாங்கள் சேற்றில்
                கால் வைத்தால்தான்
                நீங்கள் சோற்றில்
                கைவைக்க முடியும்”  என்று உழவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறார்.

     அதோடு மட்டும் நின்று விடாமல், மனித வாழ்க்கை, உழைப்பை நம்பியே இருக்கிறது என்பதை  எடுத்துக்காட்ட
                “கைரேகைப் பார்ப்பவனே
                கையில் இல்லை தனரேகை
                தளராமல் ஏர்பிடித்து
                தரிசுகளில் நாம் கீறும்
                தரை ரேகையே நமது
                தனரேகை” என்று
உழவுக்கும் உழைப்பிற்கும் மேலும் மேன்மையூட்டுகிறார்.

     உழைப்பின் பயனை நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.  உழைப்பினால் மடுடுமே அனைத்து வளங்களையும் பெற முடியும். உழைக்காதவர்கள் மனிதர்கள் அல்ல; அவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடு என எச்சரிக்கிறார் ஒரு கவிஞர்.

               “விதைக்க மறந்தவனே
               உனக்கேன் அறுவடை ஞாபகம்
               உரிமையின் தூது
               கடமையின் கைகளிலாதான்
               தந்தனுப்பப்படுகிறது.”  இப்படி எத்தனையோ கவிதைகள் உழைப்புக்கு, உயர்வும் உணர்வும் கொடுத்து எழுதப்பட்டுள்ளன.

     இச்சமூகத்தில் வாழும் அனைத்து மக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின்றி சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்வதற்காக அரசு எத்தனையோ திட்டங்களைத்தீட்டி மக்களுக்காக அர்ப்பணிக்கிறது. அந்தத் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக உரிய மக்களிடம் சென்றுச் சேருகின்றனவா என்றால் அது மிகப்பெரியக் கேள்விக்குறியாகவே இருக்கும். இந்தப் பரிதாபநிலையைப் பார்த்த ஒரு படைப்பாளி தனது உணர்வை இப்படி கவிதையாய் படைத்துள்ளார்.

               “அணைக்கட்டுகளில்
               திறக்கப்படும் தண்ணீர்
               பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
               மேட்டை நோக்கியே பாய்கிறது” – என்கிறார்.
     இதோடு மட்டும் நின்று விடாமல் இன்னொரு கவிஞர்
              
                “சுதந்திர வெளிச்சம்
                சேரியில் விழாமல்
                மாளிகை நிழல்களே
                மறைத்து விடடன”   என்று ஏங்குகிறார்.
 
     இக் கவிதைகளை மேலாட்டமாகப் படிக்காமல் ஆழமாகப் படிக்கும் போதுதான் இதன் அர்த்தம் என்னவென்றுப் புரியும். ஏழைகளுக்காகக் குரல் கொடுக்க எங்கள் எழுத்துகளாலும் முடியும் என்பதை இக்கவிஞர்கள் எப்படி நிரூபித்திருக்கிறார்கள் என்பதை உணரும்போது நமக்கும் மெய்சிலிர்க்கிறது.

     எவ்வளவுதான் பிரிவினைகள் நமக்குள்ளே இருந்தாலும் நாமெல்லாம் இந்தியத்தாயின் தவப்புதல்வர்கள் என்பதில் ஒன்றுபடுவோம்! பெருமைக் கொள்வோம். இந்த வகையில் நம் தேசத்திற்கு எவ்வகையிலும் ஊறுவிளைவிக்காமல் கட்டிக்காப்பது நம் கடமையன்றோ? அதனை ஒரு கவிஞர் எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்:-
               “எந்த மதம் ஆனாலும்
               இந்தியாவில் பிறந்தவர்கள்
               இந்தமண்ணின்
               குழந்தைகள்
               ஒரு நாட்டின் நதிநீரை
               ஒரு தாயின் பாலாக
               உண்டு வளர்ந்தவர்கள்”
இது எவ்வளவு இயல்பான, எதார்த்தமான உண்மை. ஊட்டிவிடும்  அன்னையின் கரங்களை எவரேனும் வெட்டிவிடுவதுண்டா? இல்லை ஈன்றெடுத்தத் தாயைத் தலைகுனிய வைப்பதுண்டா? அதுபோன்று நமக்கு, உண்ண உணவும் உறங்க இடமும் சுவாசிக்கக் காற்றும் தந்தருளும் பாரத அன்னையை வேற்றுமையிலும் ஒற்றுமையோடு நின்றுக் கட்டிக்காப்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். இதனையே இன்னும் ஒரு கவிஞர் இப்படி எழுதுகிறார்.
              “துளிகள்தான் நாம்
              என்றாலும்
              குடத்தில் எடுத்து நம்மைக்
              குறைக்க முடியாதபடி
              கலந்து கொள்வோம்
              ஒரு கடலாவோம்.”
இவ்வரிகள் இந்தியத் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
    
     தேசத்தின் ஒற்றுமையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை; படைக்காதப் படைப்பாளிகளில்லை. தேசத்தின் ஒற்றுமையே நம் வாழ்க்கைக்குப் பலம் என்றுக் கருதுவோர் கவிஞர்கள்.

     இதோ இந்தக் கவிஞர் இப்படி எழுதுகிறார்:-
            
          “எல்லாத் தளைகளில் இருந்தும்
          என் மானுடம்
          விடுதலையாக
          ஒரு முகமாகி எழுந்தால்
          ஒரு நொடி போதும்…”
இவ்வரிகள் அனைத்து இந்தியக் குடிமகனுக்கும் சுவாசக் காற்றாகட்டும்; எங்கும் பேச்சாகட்டும்.
 
     இப்படிப் புதுக்கவிதைகள் என்பது வெறுமனே கவிஞர்களால் பொழுதுப்போக்கிற்காக எழுதப்படுபதல்ல; அவற்றிற்குள்ளே மானுடத்தின் மகத்தும் ததும்பி வழிகிறது. அதை நுகர்ந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!!


     இக்கட்டுரை 23-1-2015 அன்று நாகர்கோவில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது.            

Tuesday, 21 July 2015

நெருப்பு மகுடம் என்றொரு மணிமகுடம்

                                           நெருப்பு மகுடம் என்றொரு                                                          மணிமகுடம்

     கண்டதையும் கேட்டதையும் கவிதையாக்கும் வல்லமைப் படைத்தவர்கள் கவிஞர்கள். ஆனால், அந்தக் கவிதைகள் எத்தனை காலம் மக்கள் மனதில் அல்லது இலக்கிய உலகில் நீடித்து நிற்கும் என்பது கேள்விக்குறி.

     படிக்க படிக்கப் பரவசமூட்டும் கவிதைகளைப் படைப்பவர்களல்ல கவிஞர்கள். படிக்க படிக்க மனித மனங்களைப் பக்குவப்படுத்தும்   கவிதைகளைப் படைத்தளிப்பவர்களே தலைசிறந்த கவிஞர்கள்.

     அந்த வகையில் கவிஞர் ஜி. அருள்பாபி அவர்கள், பரவசமூட்டும் கவிதைகளைப் படைப்பதை விட,படிப்பவர் மனங்களைப் பக்குவப்படுத்தும் கவிதைகளைப் படைப்பதில் முந்தி நிற்கிறார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

     யார் இந்த அருள்பாபி “வானம் தொடும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்போடு தமிழ் இலக்கிய உலகில் உலாவரத் தொடங்கியவர். தனது கவிதைக் காதலை மெல்ல கரம் பிடித்துச் சினிமா துறைக்குள் தலைகாட்ட எத்தனித்துக் கொண்டேயிருக்கும் துடிப்பு மிக்க இளைஞர். பத்திரிகைத்                                          துறையில் கொண்ட தணியாத தாகத்தால் “வெற்றி முரசு” என்னும் மாத இதழுக்கு உயிரேற்றிக் கொண்டிருப்பவர். இத்தனைக்கும் மேலாக மனிதநேயம் என்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர். அன்னாரின் இரண்டாவது கவிதை படைப்புதான் “நெருப்பு மகுடம்”.

     படிக்க படிக்கப் பக்கங்களை விரைவாகப் புரட்ட வேண்டும் என்ற வேகத்தைத் தந்து கொண்டேயிருக்கின்றன ஒவ்வொரு கவிதைகளும். வெறும் வார்த்தை ஜாலங்களோ, வசன மொழிகளோ மட்டும் இல்லாமல் கருத்துத் திரட்டுக்களாகவும் ஆக்கித் தந்திருப்பது படிப்போரை ஆச்சரியத்தில் ஆக்கிவிடும்.

                       “இடஒதுக்கீடு தேவைதான்
                       சாதி அடிப்படையில் அல்ல…
                       பொருளாதார அடிப்படையில்!” என
  ‘மானுடத்தின் மகத்துவம்’ என்னும் கவிதை மூலம்  அவர் உணர்த்த வருவது சாதியின் பெயரில் மானுடத்தைக் கூறுபோடும் கயவர்களின் கன்னத்தில் ஓங்கி அடிப்பதுபோல் உள்ளது.

     காதலுக்கு இலக்கணம் சொன்ன பாரதியைக் கூட எதிர் கேள்வி கேட்கும் நெஞ்சுரம் இந்தக் கவிஞனைவிட வேறு யாருக்கு வரும்.

                         “காதல் காதல் காதல்
                         காதல் போயின் சாதல் சாதல் சாதல்
                         என்றாயே பாரதி
                         எப்படி இது சாத்தியம்?”
இப்படி முறுக்கு மீசைக்காரனிடத்தில் மிடுக்காக வினா எழுப்பிவிட்டு அடுத்து என்ன கேட்கிறார் பாருங்கள்!

                          “காதல் போயின்
                          சாதல்தான் தீர்வா…?
                          வாழ்தல் முறையில்லையோ...?”
எனப் பாரதியை  முறைத்துப் பார்த்துக் கொண்டே கேட்பதை நம்மால்கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையே! இதோடாவது விட்டுவிட்டாரா பாரதியை? இல்லை இல்லை மீண்டும் ஓர் எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறார்

                          பாரதி… நீ
                          காதலுக்கு சாரதியாயிரு…
                          சாதலுக்கு
                          காரணியாயிராதே…
இத்தனை துணிச்சலோடு கவிதை எழுதியிருக்கும் இந்தக் கவிஞனுக்குள் இன்னொரு பாரதியும் மறைந்திருக்கிறார் என்றால் அதுவும் மிகையல்ல.
     இந்த உலகத்தில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தக் கவிஞனுக்கு எத்தனை நம்பிக்கைப் பாருங்கள்!

                          “உலகம்
                          சிலுவைத் தந்தால் ஏற்றுக்கொள்…
                          சிலுவைகளை சிறகுகளாக்கும்
                          வலுவை உனக்குள் உருவாக்கு!
                          முட்கிரிடம் தந்தால் சூடிக்கொள்
                          நாளைய பொற்கிரீடத்திற்கான
                          ஒத்திகை அது!”
வாழ்க்கையில் சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் இளைஞர்களைக்கூட இந்தக் கவிதை துக்கி நிறுத்தும். வெறுப்புற்ற வாழ்க்கைக்கு இனிப்பூட்டி, இனியும் கொஞ்சம் காலம்கூட வாழத்தூண்டும்.

     மதுக்கடைகள் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் நூலகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு யாருக்கு இங்கே நேரம் இருக்கிறது. இதோ இந்தச் சிந்தனைச் சிற்பி ‘புத்தகங்கள்’ என்னும் கவிதையில் நூலகத்தைப் பற்றி தனது  சிந்தனையை    எப்படிச் சிதற விட்டிருக்கிறார் பாருங்கள்!

                          “தயவு செய்து நூலகத்தை
                          தாமதமாய் திறக்காதீர்கள்…
                          இந்தியாவிற்கு மேதைகள் கிடைப்பது
                          தாமதப்பட்டு விடும்!”

இதனைப் படிக்கும் போது ஏதோ இவர் நூலகர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் போல் தோன்றலாம். ஆனால் அதற்குள் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருப்பது சமூகச் சிந்தனையோடு படிக்கும் அனைவராலும் புரிந்து கொள்ள இயலும்.

     சமுதாயத்தின் அவலங்களை மட்டும் சுட்டிக் காட்டாமல், சமுதாயத்தின் தேவைகளையும் முன்னேற்றங்களையும் சுட்டிக் காட்டுவதில் முன்னணியில் நிற்கிறார் இந்த முற்போக்குக் கவிஞர்.

     தான் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஊன்றுகோலாய் இருந்தவர்களை இந்த உலகம் அறிய வேண்டும் என்ற அவாவில், தனக்கு தமிழமுதூட்டிய தனது தமிழாசிரியை லில்லிபாயிலிருந்து தொடங்கி, பலருக்கும்  ஏணியாய் இருக்கும் எப். எம். செல்வராஜ் வரைக்கும் பலரின் குணாதிசையங்களை முனைப்புடன் கவிதையாக்கியிருப்பது இக் கவிஞனின் நன்றி மறவாத இயல்புக்கு ஓர் அடையாளமாகும்.

     இவ்வளவு நல்லியல்புகளையும் கவிப்புலமையும் தன்னகத்தேக் கொண்டுள்ள    இக் கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் திரையுலகில் இசையாய் ஒலிக்கும் நாள் மிக அருகிலாகட்டும்.

     முதற்சங்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலைப் பெற்றுக்கொள்ள தொடர்புக்கு...

ஜி. அருள்பாபி,                                                          
தமிழில்லம்,            
ஆலுவிளை,  
செம்பொன்விளை அஞ்சல் 629 804,                         
கன்னியாகுமரி மாவட்டம்.                         
பேச: 9786158809      

                             
     

                           






            
   

  


                          

Monday, 22 June 2015

மதிப்பீடு

                                                     மதிப்பீடு


                               மாதவியாயினும்
                    மாடியில் வாழ்ந்தால்
                    கண்ணகிப் பட்டம்…!

                             கண்ணகியாயினும்
                   குடிசையில் வாழ்ந்தால்
                   மாதவிப் பட்டம்…!

                    இது நான் முதல் முதலில் எழுதிய கவிதையாகும். இக் கவிதை 1992 ஆம் ஆண்டு குமரிமாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட “சிற்ப வெளிச்சம்” என்னும் கவிதை நூலில் பிரசுரமானது.

     இக் கவிதையின் பொருள்:  ஒரு பெண் எவ்வளவுதான் ஒழுங்கீனமாக நடந்தாலும் அவள் மாடமாளிகையில் வாழ்ந்தால் இச்சமூகம் அவளை, கண்ணகியைப் போன்று கற்புடையவள் என்று புகழும்.


     ஒரு பெண் எவ்வளவுதான் கற்புடையவளாக இருந்தாலும், அவள் ஓலைக் குடிசையில் வாழ்ந்தால்  அவளை மாதவியைப் போன்று மாசுடையவள் என்றே தூற்றும்.           

Friday, 12 June 2015

கண் கண்ட கல்லூரி

                                                      கண் கண்ட கல்லூரி  

     கல்லூரி ஒரு ‘கோயில்’. அதில் பேராசிரியர்கள் ‘தெய்வங்கள்’ ஆகிறார்கள்; மாணவமணிகள் ‘பக்தர்கள்’ ஆகிறார்கள். அவர்கள் படிக்கும் பாடபுத்தகங்கள் அவர்களுக்குப் ‘பிரசாதம்’ ஆகின்றது. 

     பேராசிரியரைத் தெய்வமாக மதிப்பவன் ‘பேரறிஞன்’ ஆகிறான். பாடபுத்தகத்தைப் பிரசாதமாக நினைப்பவன் ‘பட்டம்’ என்னும் நாலெழுத்துக்கு அதிபதியாகிறான்.

     கடவுளை நம்பாதவன் ‘நாஸ்திகன்’ ஆவதுபோல், பேராசிரியரை மதிக்காதவன் ‘பேதை’ ஆகிறான்.  கோயிலில் செல்வதால் ‘பக்தி’ பெருகுகிறது.  கல்லூரியில் பயில்வதால் ‘பண்பு’ வளர்கிறது.

     ஆகவே, அன்பிற்கினிய மாணவ, மாணவிகளே, நாம் கல்லூரியை ‘கோயிலாக’ நினைத்து, பேராசிரியர்களைத் ‘தெய்வமாக’ மதித்துப் பாடபுத்தகத்தைப் ‘பிரசாதமாக’ பாவித்து நல்முறையில் நடப்போமென்றால், நம் வாழ்க்கையில் எவ்வித வழுக்குதலும் இன்றி முன்னேறுவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

     [இக்கட்டுரை, நான் மார்த்தாண்டம், நேசமணி நினைவுக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டுஇளங்கலைப் பயின்று கொண்டிருந்த போது முதல் முதலில் எழுதியது. இது அக்கல்லூரியின் 1987 – 1988 ஆம் ஆண்டுமலரில் பிரசுரமானது.] 
    
  



   

Friday, 5 June 2015

சமரசம்

                                                                      சமரசம்

                              ஆப்பிளுக்கு
                              அடம்பிடித்த பிள்ளைக்கு
                              தக்காளியைக் காட்டி
                              சமரசம் செய்தார்
                              அப்பா!

                              இரண்டின் நிறமும்
                              சிவப்பு
                              கூடவே

                              வறுமையின் நிறமும் ...!      

Wednesday, 25 February 2015

மாணவர்களுக்கு இது ஒரு மாணிக்கம்.

                              

                                   மாணவர்களுக்கு இது ஒரு                              மாணிக்கம்.


Displaying book front.jpg





     எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டியவர்கள் நம் நாட்டு மாணவச் செல்வங்கள். அதனால்தான் எதிர்கால இந்தியாவின் தலையெழுத்து வகுப்பறைகளில் நிர்ணையிக்கப்படுகிறது எனக் கோத்தாரிக் கல்விக்குழு தீர்க்கத்தரிசனமாகக் கூறியுள்ளது.

     இப்படிப்பட்ட மாணவ மாணவிகளை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கவேண்டியது யார் பொறுப்பு? இப்படியொரு கேள்வியை முன் வைத்தால் அதற்குள் வருபவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமாகத்தான் இருக்க வேண்டும்.

     இந்த மகத்தான பொறுப்பை இவ்விருவரும் செவ்வனவே செய்கின்றார்களா? என மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தால் அதற்குக் கிடைக்கும் விடை வேப்பம் குருந்தைப் போல் மிகவும் கசப்பாகவே இருக்கும்.

     எங்கோ ஒரு மூலையில் சில பெற்றோரும் ஆசிரியரும் தங்களின் பொறுப்பைக் கரிசனையாக எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கரிசனத்தை எத்தனை மாணவ மாணவியர் கருத்தாகக் கொண்டு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், அதுவும் நமக்கு ஆறுதல் தருவதாக அமையாது.

     மாதா, பிதா, குரு இந்த மூன்று சொற்களும் மகத்துவம் வாய்ந்த தெய்வத்தினும் முன் நிற்பவை.
ஆனால், இந்தச் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து பள்ளி வகுப்பறையில் குருவைக் குத்திக் கொலை செய்யும் நிலைமைக்கும் தாலோலித்து வளர்த்த மாதா, பிதாவைத் தாங்கி பிடிக்கும் தருணத்தில் தனிமைப்படுத்தும் நிலைக்கும் நம் மாணவர் சமுதாயமும் இளைஞர் பட்டாளமும் துணிந்து இறங்கியுள்ளன.

     இந்தச் சூழ்நிலையில்தான் “மாணவர்களின் வளமான வாழ்விற்கு…” என்னும் தலைப்பில் அருமையான இந்நூல் தமிழகத்தில் தவழ்ந்து வருகிறது.

     யார் இதைத் தவழ விட்டிருக்கிறார்? உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் தாரக மந்திரத்திற்குப் பாத்திரமானவர். கூரியக் கல்வி அறிவும் சீரிய நிர்வாகத் திறனும் கொண்டவர். தொடர்ந்து ஈரேழாண்டுகளாகப் படந்தாலுமூடு, கிரேஸ் கல்விக் குழுமத்தின் நிர்வாகியாகத் திறம்படப் பணியாற்றி வருபவர், ஆசிரியர் பட்டப்படிப்புடன் வணிகவியல் முதுகலைப்பட்டம் பெற்றுத் தற்போது முனைவர் பட்டத்திற்காய் முனைந்து ஆய்வுப்பணியைச் செய்து கொண்டிருப்பவர், சிறந்த மனிதநேயப் பண்பாளர் திரு. இரா. மத்தியாஸ் அவர்களே ஆவார்.

     நாலிரண்டு ஆண்டுகளாக என்னோடு நெருங்கிப் பழகி, மனம் திறந்து பேசி, நாட்டு நடப்புகளை அலசி, நட்புக்கு இலக்கணமாகத் திழும் இவர் மாணவர்களின் மனங்களைக் கவ்வி இழுக்கும் அளவுக்கு இப்படியொரு புத்தகத்தைப் புனைந்திருப்பது அடியேனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

     ஏனென்றால் தலைசிறந்த கல்வியாளர்களோ, பல்கலைக்கழகப் பேராசிரியர்களோ, மனநல வல்லுநர்களோ எழுத வேண்டிய ஓர் ஆக்கப்பூர்வமான நூலை இவரால் எப்படி எழுத முடிந்தது? என்பதுதான் அந்த ஆச்சரியம்.

     இவர் இந்நூலை ஓர் ஆய்வு நூல் போன்று மாணவர்களின் வாழ்வு வளம் பெறப் பெற்றோரின் பங்கு, ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் பங்கு எனும் மூன்று பிரிவுகளாகப் பகுத்துள்ளார்.

     இந்த மூன்று பகுதிகளிலும் அவரவர்களின் கடமைகள், செயல்பாடுகள் எவை எவை என்பவற்றைச் சிறு சிறு கதைகள், புனித நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள், திருக்குறள், புறநானூறு, பழமொழி உட்பட பல்வேறு இலக்கிய, நீதி நூல்களின் மேற்கோள்கள், கல்வியாளர்கள், தேசத் தலைவர்களின் அறிவுரைகள் ஆகியவற்றை மேற்கோள்களாகச் சுட்டிக்காட்டியிருப்பது படிப்போருக்குச் சிறந்த மனவெழுச்சியைத் தருவதாக உள்ளது.

     குறிப்பாக பெற்றோரின் பங்கு என்னும் பகுதியில், “ஒரு குழந்தையின் எதிர்காலம் முற்றிலும் தாயின் செயலில் அடங்கியிருக்கிறது” என்ற மாவீரன் நெப்போலியனின் கருத்தையும், ஆசிரியர் பகுதியில் “தாழ்மையாயிருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாயிருங்கள் தன்னலத்தை விட்டொழியுங்கள்” எனப் பகவத்கீதை இயம்பும் இயல்பையும், மாணவர்களின் பங்கைக் கூறுமிடத்து,
                 
                “குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
                மாண்ட உஞற்றிலவர்க்கு” – என்னும் திருவள்ளுவரின் 

திருவாய் மலர்ந்தருளலையும் எடுத்தியம்பியிருப்பது நன்மையும் இனிமையும் பயப்பதாயுள்ளது.

     கூடவே ஒவ்வெருப் பகுதியிலும் அவரவர்களுக்கான உறுதிமொழியையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவற்றில் முதல் பகுதியான பெற்றோரின் பங்கில் “தாய்த் திருநாட்டின் அனைத்து மக்களின் வாழ்வும் வளமும் என் குழந்தையின் வாழ்வு என எண்ணி வழி நடத்துவேன்” என்னும் உறுதி மொழி அனைத்துப் பெற்றோரும் தங்கள் நெஞ்சங்களில் வாஞ்சையுடன் நிலை நிறுத்த வேண்டியதாகும்.

     இரண்டாம் மூன்றாம் பகுதிகளான ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் பங்கு ஆகியவற்றில் இந்தியத் திருநாட்டின் மேன்மைமிகு குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த டாக்டர் ஆ.பெ.அப்துல்கலாம் அவர்கள் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் நூலாசிரியர் பணிபுரியும் கிரேஸ் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் நேரடியாக உரையாடியபோது ஆசிரியர்கள், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழிகள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டார். அப்பட்டியலை அப்படியே இவர் கையாண்டுள்ளார். அவற்றில் “நான் ஆற்றும் ஆசிரியப்பணி ஓர் அரும்பணியாகும். நான், நல்லதொரு மாணவனை மட்டும் தயார் செய்யவில்லை, ஒரு நல்ல எதிர்கால குடிமகனை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதையுணர்ந்து பொறுப்புணர்சியோடு செயல்படுவேன்”  என்பதின் மூலம் ஆசிரியர்களின் தட்டிக்கழிக்க முடியாதப் பொறுப்புணர்ச்சியை மிகுந்த பொறுப்போடு நிலைநிறுத்துகிறார்.

     அதுபோலவே மாணவர்களுக்கான பங்களிப்பில் “நான் எனது விடுமுறை நாள்களில் எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்கச் சொல்லிக் கொடுப்பேன்” எனச் சமூக அக்கறையை ஊட்டி விடுவது எதிர்கலாத்தில் இச்சமூகத்தில் எழுத்தறிவின்மையை இல்லாமலாக்குவதற்கான அடித்தளமாகவே அமைந்துள்ளது.

     பெற்றோரின் பங்கில் குடும்பத்திலிருந்து தொடங்கி விருந்தோம்பல் வரை மொத்தம் 24 சிறு சிறு தலைப்புகளில் அரும்பெரும் கருத்துகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். அவற்றில் குழந்தைகளின் திறனறிதல் என்னும் பொருளுக்குள் “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் திறன் பற்றி நன்குத் தெரிந்திருக்க வேண்டும். கூடவே அவர்களின் போக்கையும் உணர்ச்சிக் கிளர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு அவர்களை வழிநடத்த தாமும் தமது அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

     இது இந்த நாட்டில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் மீது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை இன்றைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருப்பதே இந்நாட்டில் மாணவர்களும் இளைஞர்களும் வாழ்க்கையில் வெறுப்புற்று வழி தவறிச் செல்வதற்கும் வாழ்க்கையை அநியாயமாக மாய்த்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.

     பெற்றோர்கள் பிள்ளைகளின் திறமைகளையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் அறிந்துகொண்டு அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டுமே தவிர பிள்ளைகளின் திறமைக்கு மீறிய செயல்களைச் செய்யவோ, படிக்கவோ தூண்டக்கூடாது. அதுபோலவே அவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பிள்ளைகள் மீது திணிக்கவும் முற்படக் கூடாது. அதனால்தான் இதுபோன்ற விபரீத விளைவுகள் பிள்ளைகள் மத்தியில் பெருகி வருகின்றன.

     இதுபோன்று ஆசிரியர்களின் பணிகளைப் பற்றி விளக்கும் போது “ஆசிரியர்கள் கல்வி வழிகாட்டிகள்” என்னும் தலைப்பிலிருந்து தொடங்கி “இதயங்களில் இடம்பிடித்தல்” எனத் தொடர்ந்து “கலையார்வம்” வரை பதினைந்து பொருள்களுக்குள் தனது சிந்தனையோட்டத்தைச் சிற்பம் போல் வடிவமைத்துள்ளார்.

     கூடவே மாணவர் பகுதியில் மாணவர்கள் யார்? என்பதற்கு “மாணவர்கள் என்போர் மாண்புடையவர்கள்” என விளக்கமளிப்பதோடு “பெற்றோரைக் கனப்படுத்துதல்,”
 “தீய பழக்கங்களைக் கைவிடுதல்” எனத் தொடர்ந்து “தேர்வுக்குத் தயாராகுதல்” வரை 21 தலைப்புகளில் மாணவர்களின் மனநிலையை ஒரு மனநல வித்தகரைப் போன்று அறிந்து, தெளிந்து மிக அற்புதமான கருத்துகளை அருமருந்தாகத் தந்துள்ளார்.

     எதிர்கால இந்தியாவின் எழுச்சிமிகுத் தீபங்களாகத் திகழ வேண்டிய மாணவர்கள் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டு இப்படியொரு நூலை ஆக்கித் தந்திருக்கும் ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

     இவரது தீவிர வாசிப்பும் ஆழ்ந்த அனுபவமும் மேலும் பல நல்ல நூல்களை நல்குவதற்கு வாழ்த்துவோம்! புத்தகத்தை மாணவர்களுக்குப் பிறந்த  நாள் பரிசாக வாங்கி வழங்குவோம்.

     குறிப்பு: “மாணவர்களின் வளமான வாழ்விற்கு” என்னும் நூல் திரு. இரா. மத்தியாஸ் அவர்களால் எழுதி “காவ்யா” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும். இது, அந்நூலுக்கு   நான் எழுதிய அணிந்துரை. நூலின் விலை ரூ.120 நூல் கிடைக்கும் இடம்.
                           காவ்யா,                                                                        16,இரண்டாம் குறுக்குத்தொரு, டிரஸ்ட்புரம்,                                கோடம்பாக்கம், சென்னை-600 024. 
                           போன்: 044-23726882, 9840480232.
                           நூலாசிரியரின் தொடர்புக்கு: 9487574425.