Tuesday, 21 July 2015

நெருப்பு மகுடம் என்றொரு மணிமகுடம்

                                           நெருப்பு மகுடம் என்றொரு                                                          மணிமகுடம்

     கண்டதையும் கேட்டதையும் கவிதையாக்கும் வல்லமைப் படைத்தவர்கள் கவிஞர்கள். ஆனால், அந்தக் கவிதைகள் எத்தனை காலம் மக்கள் மனதில் அல்லது இலக்கிய உலகில் நீடித்து நிற்கும் என்பது கேள்விக்குறி.

     படிக்க படிக்கப் பரவசமூட்டும் கவிதைகளைப் படைப்பவர்களல்ல கவிஞர்கள். படிக்க படிக்க மனித மனங்களைப் பக்குவப்படுத்தும்   கவிதைகளைப் படைத்தளிப்பவர்களே தலைசிறந்த கவிஞர்கள்.

     அந்த வகையில் கவிஞர் ஜி. அருள்பாபி அவர்கள், பரவசமூட்டும் கவிதைகளைப் படைப்பதை விட,படிப்பவர் மனங்களைப் பக்குவப்படுத்தும் கவிதைகளைப் படைப்பதில் முந்தி நிற்கிறார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

     யார் இந்த அருள்பாபி “வானம் தொடும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்போடு தமிழ் இலக்கிய உலகில் உலாவரத் தொடங்கியவர். தனது கவிதைக் காதலை மெல்ல கரம் பிடித்துச் சினிமா துறைக்குள் தலைகாட்ட எத்தனித்துக் கொண்டேயிருக்கும் துடிப்பு மிக்க இளைஞர். பத்திரிகைத்                                          துறையில் கொண்ட தணியாத தாகத்தால் “வெற்றி முரசு” என்னும் மாத இதழுக்கு உயிரேற்றிக் கொண்டிருப்பவர். இத்தனைக்கும் மேலாக மனிதநேயம் என்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர். அன்னாரின் இரண்டாவது கவிதை படைப்புதான் “நெருப்பு மகுடம்”.

     படிக்க படிக்கப் பக்கங்களை விரைவாகப் புரட்ட வேண்டும் என்ற வேகத்தைத் தந்து கொண்டேயிருக்கின்றன ஒவ்வொரு கவிதைகளும். வெறும் வார்த்தை ஜாலங்களோ, வசன மொழிகளோ மட்டும் இல்லாமல் கருத்துத் திரட்டுக்களாகவும் ஆக்கித் தந்திருப்பது படிப்போரை ஆச்சரியத்தில் ஆக்கிவிடும்.

                       “இடஒதுக்கீடு தேவைதான்
                       சாதி அடிப்படையில் அல்ல…
                       பொருளாதார அடிப்படையில்!” என
  ‘மானுடத்தின் மகத்துவம்’ என்னும் கவிதை மூலம்  அவர் உணர்த்த வருவது சாதியின் பெயரில் மானுடத்தைக் கூறுபோடும் கயவர்களின் கன்னத்தில் ஓங்கி அடிப்பதுபோல் உள்ளது.

     காதலுக்கு இலக்கணம் சொன்ன பாரதியைக் கூட எதிர் கேள்வி கேட்கும் நெஞ்சுரம் இந்தக் கவிஞனைவிட வேறு யாருக்கு வரும்.

                         “காதல் காதல் காதல்
                         காதல் போயின் சாதல் சாதல் சாதல்
                         என்றாயே பாரதி
                         எப்படி இது சாத்தியம்?”
இப்படி முறுக்கு மீசைக்காரனிடத்தில் மிடுக்காக வினா எழுப்பிவிட்டு அடுத்து என்ன கேட்கிறார் பாருங்கள்!

                          “காதல் போயின்
                          சாதல்தான் தீர்வா…?
                          வாழ்தல் முறையில்லையோ...?”
எனப் பாரதியை  முறைத்துப் பார்த்துக் கொண்டே கேட்பதை நம்மால்கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையே! இதோடாவது விட்டுவிட்டாரா பாரதியை? இல்லை இல்லை மீண்டும் ஓர் எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறார்

                          பாரதி… நீ
                          காதலுக்கு சாரதியாயிரு…
                          சாதலுக்கு
                          காரணியாயிராதே…
இத்தனை துணிச்சலோடு கவிதை எழுதியிருக்கும் இந்தக் கவிஞனுக்குள் இன்னொரு பாரதியும் மறைந்திருக்கிறார் என்றால் அதுவும் மிகையல்ல.
     இந்த உலகத்தில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தக் கவிஞனுக்கு எத்தனை நம்பிக்கைப் பாருங்கள்!

                          “உலகம்
                          சிலுவைத் தந்தால் ஏற்றுக்கொள்…
                          சிலுவைகளை சிறகுகளாக்கும்
                          வலுவை உனக்குள் உருவாக்கு!
                          முட்கிரிடம் தந்தால் சூடிக்கொள்
                          நாளைய பொற்கிரீடத்திற்கான
                          ஒத்திகை அது!”
வாழ்க்கையில் சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் இளைஞர்களைக்கூட இந்தக் கவிதை துக்கி நிறுத்தும். வெறுப்புற்ற வாழ்க்கைக்கு இனிப்பூட்டி, இனியும் கொஞ்சம் காலம்கூட வாழத்தூண்டும்.

     மதுக்கடைகள் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் நூலகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு யாருக்கு இங்கே நேரம் இருக்கிறது. இதோ இந்தச் சிந்தனைச் சிற்பி ‘புத்தகங்கள்’ என்னும் கவிதையில் நூலகத்தைப் பற்றி தனது  சிந்தனையை    எப்படிச் சிதற விட்டிருக்கிறார் பாருங்கள்!

                          “தயவு செய்து நூலகத்தை
                          தாமதமாய் திறக்காதீர்கள்…
                          இந்தியாவிற்கு மேதைகள் கிடைப்பது
                          தாமதப்பட்டு விடும்!”

இதனைப் படிக்கும் போது ஏதோ இவர் நூலகர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் போல் தோன்றலாம். ஆனால் அதற்குள் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருப்பது சமூகச் சிந்தனையோடு படிக்கும் அனைவராலும் புரிந்து கொள்ள இயலும்.

     சமுதாயத்தின் அவலங்களை மட்டும் சுட்டிக் காட்டாமல், சமுதாயத்தின் தேவைகளையும் முன்னேற்றங்களையும் சுட்டிக் காட்டுவதில் முன்னணியில் நிற்கிறார் இந்த முற்போக்குக் கவிஞர்.

     தான் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஊன்றுகோலாய் இருந்தவர்களை இந்த உலகம் அறிய வேண்டும் என்ற அவாவில், தனக்கு தமிழமுதூட்டிய தனது தமிழாசிரியை லில்லிபாயிலிருந்து தொடங்கி, பலருக்கும்  ஏணியாய் இருக்கும் எப். எம். செல்வராஜ் வரைக்கும் பலரின் குணாதிசையங்களை முனைப்புடன் கவிதையாக்கியிருப்பது இக் கவிஞனின் நன்றி மறவாத இயல்புக்கு ஓர் அடையாளமாகும்.

     இவ்வளவு நல்லியல்புகளையும் கவிப்புலமையும் தன்னகத்தேக் கொண்டுள்ள    இக் கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் திரையுலகில் இசையாய் ஒலிக்கும் நாள் மிக அருகிலாகட்டும்.

     முதற்சங்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலைப் பெற்றுக்கொள்ள தொடர்புக்கு...

ஜி. அருள்பாபி,                                                          
தமிழில்லம்,            
ஆலுவிளை,  
செம்பொன்விளை அஞ்சல் 629 804,                         
கன்னியாகுமரி மாவட்டம்.                         
பேச: 9786158809      

                             
     

                           






            
   

  


                          

No comments:

Post a Comment