Friday, 14 September 2012

வீடு தேடி வரும் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை வேண்டும்.


    வீடு தேடி வரும் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை வேண்டும்.

     இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கிடுப் பார்க்கும் போது பிற அனைத்துத் துறைகளை விடவும் தகவல் தொழில் நுட்பத்துறை வியத்தகு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டுள்ளது.
     வானொலி, தொலைக்காட்சி, செல்போன், சினிமா, இன்டர்நெட், இமெயில் என நீண்டு கொண்டேப் போகிறது இதன் பட்டியல்.
     இன்றையக் காலகட்டத்தில் இவையொன்றும் புதுமையுமல்ல... வியப்புமல்ல... ஆனால், இவையனைத்தும் இன்று நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளன.
     இந்தியாவிற்கென்று ஒரு பண்பாட்டு, நாகரிகம் உண்டு.  இங்குக் கடைபிடித்து வரும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலக நாடுகளே மதித்துப் போற்றுகின்றன.  பெரும்பாலான அண்டை நாட்டினர் இந்தியாவின் உறவு முறைகளையும் குடும்ப அமைப்பு முறைகளையும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
     இது இந்தியாவிற்குப் பெரும் கொளரவத்தையும் இந்தியர்களுக்கு  நன்மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் விஷயமாகும்.
     ஆனால், இந்தியாவில் சின்னத்திரைகள் மூலம் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மற்றும் ஆபாச விளம்பரங்கள், இந்நாட்டின் சுய கொளரவத்தையும் இந்தியர்களின் நற்பெயரையும் கடுமையாகப் கெடுத்துள்ளன.
     முன்பெல்லாம் வர்த்தக விளம்பரங்கள் தினசரி மற்றும் வார, மாத பத்திரிகைகள் மூலம் மட்டுமே பிரசுரிக்கப்பட்டு வந்தன.  அதுவும் வர்த்தகத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் விதத்தில் உயர் தரத்திலான விலைமதிப்பற்ற பெருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டன.
     சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் காந்தியடிகள் நடத்தி வந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார்.  விளம்பரங்கள் கூட மக்களை ஏமாற்றும் ஒரு வித்தை என்றே அவர் கருதினார்.
     என்றாலும், தரமான பொருள்களை மக்கள் விரைவாக அறிந்து கொண்டு  அவற்றைப் பயன்படுத்துவதற்கு விளம்பரங்கள் ஏதுவானால் அவற்றை வரவேற்பதில் ஒன்றும் தவறில்லை.
     ஆனால், இன்று நிலைமை நேர்மாறாக மாறிவிட்டது.  தரமான பொருள்களும் தேவையான பொருள்களும் என்றில்லாமல் தேவையற்ற, தரமற்ற பொருள்களுக்கும் விளம்பரம் நிர்பந்தம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
     அந்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் மட்டுமின்றி இன்று தொலைக்காட்சி, இன்டர்நெட், இமெயில் ஆகியவை வாயிலாக வீடுதேடி வரத் தொடங்கியுள்ளன.
     அதிலும் எப்படிப்பட்ட பொருள்களுக்கு எப்படிப்பட்ட விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்பதுதான் அதிர்ச்சியானது.
     பெண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும், அவர்கள் பருவ காலங்களில் பயன்படுத்தும் விரலளவு பொருள்களுக்கும்கூட விளம்பரம் செய்யத் தொடங்கியிருப்பதுதான் அதிர்ச்சியானது.
     ஆரம்பத்தில் இந்த விளம்பரங்களுக்கு வெறுமனே அந்தந்த ஆடைகளை மட்டுமே காட்டி ஒளிபரப்பி விளம்பரம் செய்தனர்.
     ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.  அந்த ஆடைகளை மட்டும் அணிந்து கொண்டு அரைகுறையாக, அப்பட்டமாக பெண்களை வைத்து விளம்பரம் செய்கின்றனர்.  இது வீடுகளில், பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து  நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பெரும் தர்மச் சங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றது.
     இந்த விளம்பரங்கள்,  ஒரு நாள் ஒரு தடவை அல்லது இரண்டு தடவையல்ல நாள் முழுக்க ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையிடையே கால் மணி நேரம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
     இந்த விளம்பரங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ தொலைக் காட்சிகளில் மட்டுமல்ல பெரிய பெரிய சேட்லைட் தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒளிபரப்பப்படுகின்றன.  இது யாராலும் சகித்துக் கொள்ள இயலாததாகும்.
     இந்த, ஆபாச விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வரலாம்.  அதற்காக, இந்த நிறுவனங்கள் ஏன் கோடானுகோடி குடிகளைக் கெடுக்க வேண்டும்?
     பண்டைய காலத்தில் சினிமா தியேட்டர்களில் மட்டுமே எப்போதாவது ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டன.  அதுவும் முழுக்க முழுக்க ஆபாச காட்சிகளாக இருக்காது.  இடையிடையே ஏதேனும் ஒன்றிரண்டு ஆபாசக் காட்சிகள், மின்னல் வேகத்தில் தோன்றி மறைவனவாக இருக்கும்.  அப்படி இருந்தாலும் அப்படங்களில் பெரியவர்கள் மட்டும் பார்க்கக் கூடியப் படம் என்பதைக் குறிப்பதற்காக ‘A’ (Adult only) என்ற குறியீடு  பொறிக்கப் பட்டிருக்கும்.  இந்தக் குறியீட்டைப்   பார்த்த உடனையே இளைஞர்களும் பெண்களும் அம்மாதிரியானப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவார்கள்.
     மேலும் ஒவ்வொரு படமும் நடித்து முடித்து வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு முன்னர்  திரையிடப்பட்டு, அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அப்படங்கள் திரையிடப்படும்.
     ஒருவேளை திரை அரங்குகளில் ஆபாசப் படங்கள் வெளியிட்டாலும் அதை விரும்பி திரையரங்குகளில் சென்று பார்ப்பவர்கள் மட்டுமே கெட்டுப் போவார்கள்.
     ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல கண்ணைக் கூச வைக்கும் விளம்பரங்கள் சின்னத் திரைகள் மூலம் மக்களைத் தேடி வீடுகளுக்கே வந்து விடுகின்றன.  இதனால், சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்றில்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களும் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
     இப்படி விளம்பரங்கள் மூலமாக பெண்களை மட்டும் ஆபாசமாகக் காட்டவில்லை.  அந்தப் பட்டியலில் இப்பொழுது ஆண்களையும் சேர்த்துள்ளனர்.  ஆண்கள் அணியும் உள்ளாடைகளான பனியன், ஜட்டிக்கும் விளம்பரம் செய்கின்றனர்.
     ஆண்கள் அணியும் ஜட்டி விளம்பரத்திற்கு, ஆண்கள் வெறும் ஜட்டியை மட்டும் அணிந்து கொண்டு ஹாயாக காட்சிக் கொடுக்கின்றனர்.  அதுபோலவே பனியன் விளம்பரத்திற்கும் செய்கின்றனர்.
     முன்பெல்லாம் பெண்களை வைத்து ஆபாச விளம்பரங்கள் தயாரித்து வந்த விளம்பர மற்றும் தொழில் நிறுவனங்கள் தற்போது ஆண்களையும் அந்தப் பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளன.
     அதுபோல், பெண்களின் உள்ளாடைகளை மட்டும் காண்பித்து விளம்பரம் செய்த நிறுவனங்கள் தற்போது அவர்கள் அதே ஆடைகளை அணிந்த நிலையில் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளன.
     இதே நிலை இப்படியேத் தொடர்ந்தால் அரசு, குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கருத்தரிப்பை தடுப்பதற்காக ஆண்களும் பெண்களும் அணிந்துக் கொள்வதற்காக நிரோத், காண்டம் போன்ற பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என விளம்பரப்படுத்தி வருகிறது.  ஒருவேளை இந்தப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இவற்றின் விற்பனையை அதிகரிப்பதற்காக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் இவற்றை அணிவது எப்படி? பயன்படுத்துவது எப்படி? என்று நேரடியாக செய்முறை விளம்பரங்களை சின்னத்திரைகள் மூலம் விளம்பரப்படுத்தினால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
     இது மாதிரியான அபத்தமான ஆபாச விளம்பரங்களை தொலைக்காட்சி, இன்டர்நெட், இமெயில் போன்றவை மூலம் ஒளிபரப்பாமல் தடைச் செய்ய வேண்டியதோ அல்லது கட்டுப்படுத்த வேண்டியதோ தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். 
     அதற்காக, இதுபோன்ற மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் விளம்பரம் செய்வதைத் தணிக்கைச் செய்வதற்கு அரசு சார்பில் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்க வேண்டும்.
     வர்த்தக நிறுவனங்களோ அல்லது விளம்பர நிறுவனங்களோ ஏதேனும் விளம்பரங்களை மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் ஒளிபரப்ப வேண்டும் என்றால் அவற்றை தணிக்கைக் குழுவிடம் சமர்பித்து அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்ற நியதியை சட்டமாக்க வேண்டும்.
     மிக விரைவில் இந்த நடைமுறையை அரசு கொண்டு வந்தே ஆக வேண்டும்.  இல்லையேல் நம் நாடு மிக விரைவில் அன்னிய நாடுகளின் கலாச்சாரத்திற்கு ஒத்துப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.
     அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் இங்குள்ள இளைஞர்கள் மிக விரைவில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள்.  அதோடு இந்தியாவின் மகத்துவத்திற்கு மிகவும் அரணாக இருந்து வரும் ஆன்மீக, பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு சேதம் ஏற்பட்டு விடும்.
     அதன் மூலம் இந்தியா தனது சுய கொளரவத்தையும் இந்தியர்கள் தங்களின் மதிப்பையும் இழக்க நேரிடும் என்பது மட்டும் நிஜமாகும்.
               சமுதாய நண்பன் ஆகஸ்ட் 2012 இதழில் பிரசுரமானது.      

Sunday, 19 August 2012

மறுமலர்ச்சி வேண்டும் மருத்துவத் துறையில்


                      மறுமலர்ச்சி வேண்டும் மருத்துவத் துறையில்
இந்தியா, வல்லரசுக் கனவோடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கின்றது.  அதன் வளர்ச்சியின் வேகம் அண்டை நாடுகளையே அச்சங் கொள்ளச் செய்துள்ளது.
     பொருளாதார நெருக்கடி... தீவிரவாதத்தின் கொடூரம்... இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு விறுவிறுவென விண்ணை முட்டும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது.
     ஆயினும், வானுயர்ந்த மரத்தின் ஆணி வேருக்குள் மண்புழு நுழைந்தது போன்று சில சிற்றெறும்புகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையிடையே இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
     அவற்றில் ஒன்றுதான் அடிக்கடி இந்தியாவிற்குள் ஊடுருவும் அநியாயமான நோய்க் கிருமிகள்.  எய்ட்ஸ், டெங்கு, எலிக்காச்சல் சிக்கன்குனியா என அவ்வப்போது இவை இந்தியாவையே குலைநடுங்க வைக்கின்றன.
     பண்டைக்காலங்களில், மக்கள் அறிவிலோ, அறிவியலிலோ அல்லது மருத்துவத்திலோ அந்த அளவிற்கு வளர்ச்சி பெறாதக் காலகட்டத்தில் பெரியம்மை, தட்டம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் வந்து  கிராமம்  கிராமமாக மக்களைத் தாக்கி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்து பின்பு அந்தக் கிராமங்களே காணாமல் போனதாக வரலாறுகள் கூறுகின்றன.
     ஆனால், இன்று நம் இந்தியா அப்படியல்ல.  எத்தனை எத்தனையோ முறைகளில் முன்னேறியிருக்கின்றது.  என்றாலும், ஆண்டாண்டு தோறும் ஏதேனும் ஒரு கொடிய நோய் நம் நாட்டில் பயங்கரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான மக்களைக் காவு கொள்கின்றது.
     இந்த நோய்க் கிருமிகள் ஏன் பரவுகின்றன? எப்படிப் பரவுகின்றன?  என்ற ஆழமான ஆய்வை இன்றுவரை நமது மத்திய, மாநில அரசுகளோ அல்லது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களோ மேற்கொண்டதே இல்லை என்பதே நிதர்சனம்.
     இப்படிப்பட்ட நோய்கள் பரவும் நேரங்களில், அந்த இடங்களில் மட்டும் ஒரு சில நாள்கள் மேலோட்டமாக ஏதேனும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு பின்பு அதைப்பற்றிய எவ்விதச் சிந்தனையுமின்றி அப்படியே கைகழுவி விட்டுவிடுகின்றனர்.
     அதன் பின்னர் அந்த நோயினால் பதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆயினர்? அப்பகுதி எப்படியுள்ளது? என்பது பற்றிய எவ்விதமான எண்ணங்களோ அல்லது அது குறித்தத் தொடர் நடவடிக்கைகளோ அரசிடமிருந்தோ அல்லது மருத்துவ ஆராய்ச்சித் துறையிடமிருந்தோ இல்லாமல் போவது மிகுந்த வேதனைக்கும் பொறுத்துக் கொள்ள இயலாமைக்கும் வழிவகுக்கிறது.
     மிகக் கொடிய நோய்களான எயிட்ஸ், சிக்கன்குனியா, டெங்குக் காச்சல், எலிக்காச்சல் ஆகியவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்தப் பாதிப்புகளிலிருந்து, அவர் மீண்டு இயல்பான வாழ்க்கைக்கு வருவது மிகக் கடினமாகவே உள்ளது.  இந்நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் முழுவதும் அதன் பதிப்பு இருந்து கொண்டேதான் இருக்கின்றது.  அவை அடிக்கடி அவர்களைப் பெரும் சிரமங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன.
     இந்நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் டெங்குக்காச்சல் பரவியது.  இது திருநெல்வேலி மாவட்டத்தில் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தியது. இளம் பிஞ்சுகளிலிருந்து முதிர் மனிதர்கள் வரை நூற்றுக்கும் அதிகமானவர்களின் உயிர்களை இலகுவாகக் காவு கொண்டது.
     இதனால், பெற்றவர்களும் பேணிக்காத்தவர்களும் துடிதுடித்துப் போயினர்.  ஆனால், நமது அரசும் மருத்துவத் துறையும் கண்மூடி, வாய்பொத்தி மெத்தனமாய் இருந்தன.
     இந்தியாவிற்குள் இந்த இழிநிலை இப்போதும் ஏன் நீடிக்கிறது? எத்தனை எத்தனையோ நவீன வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்நாடு பெற்றிருந்தும் இன்னும் இன்னுயிர்களை அநியாயமாகக் காவு கொடுப்பது எந்த வகையில் நியாயமானது? 
     இந்தியா, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்துபோனப் பின்பும் இன்னும் இதுபோன்ற நோய்கள் வருவதன் காரணத்தையும் அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான மருந்து வகைகளையும் கண்டறியாமல் இருப்பது இப்பெரும் நாட்டிற்கும் மாபெரும் மருத்துவத் துறைக்கும் பெரும் இழுக்கன்றோ?
     சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பைப் பற்றி என்னுடைய, ஓர் அறிவு சார்ந்த நண்பரோடு வருத்தம் மெருகேறிய கனத்த இதயத்தோடு விவாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
     அப்போது, அவர் தமது அறிவு முதிர்ச்சியினால், இந்நோய்கள் பற்றிய சில ஐயப்பாடுகளை முன்வைத்தார்.  அந்த ஐயப்பாடுகள் அனைவருக்கும் நியாயமாகப் படுபவையே ஆகும்.
     இந்தியா, மிக விரைவில் வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை நமது அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டு விட்டது.  இந்த வளர்ச்சியைப் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட ஐக்கிய அரபுநாடுகள் எள்ளளவிற்கும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது சகித்துக் கொள்ளவோ தயாரில்லை.
     அதனால், இந்தியாவின் பல்துறை வளர்ச்சிக்கு ஏதேனும் விதங்களில் முட்டுக்கட்டைப் போட்டே ஆகவேண்டும் என்பது அவற்றின் தீர்க்கமான முடிவு.  அதற்காக, இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் மூட்டிவிடுதல், மக்களின் ஆரோக்கியத்தையும் இயல்பான வாழ்க்கையையும் பாதிக்கும் விதத்தில் இது போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் நோய்க் கிருமிகளைப் பரவச் செய்தல், பொருளாதார வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துதல் போன்ற சதி வேலைகளைச் செய்து வருகின்றன.
     அதனால்தான், இந்தியாவின் கட்டுப்பாடு, கலாச்சாரம், சீதோஷண நிலை இவற்றிற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற இது போன்ற கொடிய நோய்கள் பரவி இந்திய மக்களைக் கதிகலங்க வைக்கின்றன.  எனத் தனது ஐயப்பாட்டை முன் வைத்தார்.
     இது, கோட்பதற்கு வியப்பாகவும் நம்புவதற்குச் சிரமமாகவும் இருக்கலாம்.  ஆனால், இதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதன் உண்மை நிலைப் புரியவரும்.
     நம் நாட்டில் இருக்கின்ற அறிவாளிகள், அரசின் உளவுப்பிரிவினர் ஏன் இந்தக் கோணங்களில் சிந்தித்து அவற்றின் உண்மைத் தன்மையினைக் கண்டறியக் கூடாது?
     ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் மேன்மையிலும் பொறாமை கொள்ளும் பிற நாடுகள் அந்நாட்டைப் பலவீனப்படுத்தவும் வீழ்ச்சியடையச் செய்யவும் பயன்படுத்தும் உபாயங்கள் பலவிதமானவை.  அவற்றில் இதுவும் ஓர் உபாயமாகும்.
     இந்தத் தந்திரத்தைப் புரிந்து கொண்டு இவற்றையெல்லாம் தகர்த்தெறியும் சூத்திரமும் புத்திக் கூர்மையும் நம் நாட்டுத் தலைவர்களுக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வேண்டும்.  அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு அநியாயமாக இன்னுயிர்களைப் பலிகொள்ளும் கொடிய நோய்களுக்கு நம் நாட்டிலிருந்து நிரந்திரமாக விடை கொடுக்கும் திராணியை நம் நாடு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
     என்றால் மட்டுமே இதுபோன்ற கொடுமைகளிலிருந்து நம் நாட்டை விடுவித்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதைகளில் இட்டுச் செல்ல முடியும்.  நம் நாட்டை மிக விரைவில் சக்தி மிக்க வல்லரசாக மாற்றிக் காட்ட முடியும்.
             ஃபெட்காட் செய்திகள் ஏப்ரல்-ஜூன் மாத இதழில் பிரசுரமானது.   
        















      

Tuesday, 26 June 2012

விடியலைத் தேடும் விடிவெள்ளி


                  விடியலைத் தேடும் விடிவெள்ளி
                       நூல் அணிந்துரை

     வழுதூர் மு. செல்லத்துரை எழுதிய நான் என்னும் கவிதை நூலுக்கு         எழுதிய அணிந்துரை
     உழைப்பு, படிப்பு இவை இரண்டையும்  துடிப்பாகக் கொண்டு காட்சிக்கு எளிமையாய், பேச்சுக்கு இனிமையாய், பழகுவதற்கு அருமையாய் களங்கமின்றி கவிதை வடிப்பதில் வல்லவனாய் விளங்குபவர்தான் என் இளவல் வழுதூர் மு. செல்லத்துரை அவர்கள்.
     கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல் கொண்ட கொள்கையில் கோணல்கள் நேராமல் நாளும் பொழுதும் உழைத்து... உழைத்து... வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறார்.
     காணும் காட்சி... கேட்கும் பேச்சு... சுவாசிக்கும் காற்று... பருகும் தண்ணீர்... சந்திக்கும் மாமனிதர்கள்... இயற்கையாய்... செயற்கையாய்... உலகில் உள்ளது அனைத்தும் இவரது கவிதைக்குக் கருத்தாழங்களாக அமைந்துள்ளன.
     கூடவே, கல்வியின் உயர்வையும் காதல் உணர்வையும் கவிதையாக்கியுள்ளார்.  இவர் காதலைக் காதலிக்கும் ஓர் அற்புதக் கவிஞர்.  அதனால், காதலுக்கு இலக்கணத்தை வடித்துள்ளார்.  அதோடு, கனிந்த காதல் கைக்கூடாமல் போனதால் விரக்தியுற்ற கவிதையும் ஆக்கியுள்ளார்.  இரண்டையும் விரசமின்றி வித்தியாசமாய்ப் படைத்துள்ளது இவரின் படைப்பின் இரகசியமாகும்.
     இயற்கையை ரசிக்கும் இவரது ரசனை சற்றே வாசகர்களையும் வருடியெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
                     இன்னிசைப் பாடும் குயிலும்
                       இதயம் கவர்ந்திட்டமயிலும்
                     ஊனுடல் சுட்ட வெயிலும்
                        என்னுடல் வருடிய தென்றலும்
                      என்னை ஈர்த்தது ஏனோ? – நான்
                        இனிதாய் ரசித்திடத் தானோ!”
     இந்த நவயுகத்தில் புதுக்கவிதைகளின் பிரளயத்தின் மத்தியிலும் எதுகை, மோனை இயைபுத் தொடைகள் தப்பாமல், இவர் பழங்கவிதைப் பாடுவதிலும் வல்லவர் என்பதை நிரூபித்துள்ளார்.
     தான் தானாக இருக்க வேண்டும் என அவா கொள்ளும் இவர் நான் என்னும் இவ்வினிய கவிதை நூலைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடையே உலாவ விட்டுள்ளார்.  இதற்குள் அவர் மட்டுமல்ல நாமும் இருக்கின்றோம்.  நம் எண்ணங்களும் உணர்வுகளும்கூட உலாவிக் கொண்டிருக்கின்றன.
     தமிழகத்தின் முன்னணி இதழ்களான ராணி, முதற்சங்கு உட்பட பல வார, மாத இதழ்களில் இவரது படைப்புகள் பல ஆண்டுகளாக பதிவாகி வருகின்றன.  இவற்றுடன், நாகர்கோவில் அகில இந்திய வானொலியின் காற்றலை வழியாகவும் நம் காதுகளைத் தொட்டிருக்கின்றன.  அவைகளின் தொகுப்பாகத்தான் நான் நமக்காக நூல் வடிவம் பெற்றுள்ளது.
     பண்பால் இவர் உயர்ந்து நிற்பது போன்று படைப்பாலும் பாரெங்கும் இவர் கீர்த்தி பரவட்டும்.  மனம் திறந்து வாழ்த்துவோம்... வேண்டியதைச் செய்வோம்.
                                 
                                

                 

                                    நூலாசிரியரைப்பற்றி...
                  படைப்பாலும் படிப்பாலும்
                  சிகரத்தைத் தொட்டுவிடத் துடிப்பவர்
                  வழுதூர்.மு. செல்லத்துரை.

                  முக்கடலும் முத்திடும் கன்னியாகுமரியில்
                   அம்சிக்கு அருகே வழுதூரில்
                  முத்துநாயகம் – தாய் தம்பதிக்கு
                  புதல்வனாய் பிறந்த இவர்
                  புரட்சிப் பூக்கள், கார்முகிலின் தூறல்கள்
                  புன்னகை என முக்கனிபோல்
                  மூன்று நூல்களைத் தமிழ் இலக்கியத்
                  தடாகத்தில் தவழவிட்டு புன்னகைக் கவிஞர்
                  என இலக்கிய ஆர்வலர்களால்
                  அடையாளப்படுத்தப் பட்டவர்.

                  நான்- என்னும் நான்காவது நூலில்
                  தன்னை ஆதிஉணர்ந்தவன்-தூய
                  அன்பில் நிறைந்தவன்
                  ஜோதி வடிவான இறைவனை-நிதம்
                  துதித்துக் கொண்டிருப்பவன்!” – என
                  அவை அடக்கத்துடன் அறிமுகப்படுத்திக்
                  கொண்டு நம்மையும் தம்பால்
                  ஈர்க்க முயற்சிக்கிறார்.

                  தன்னை நேசித்தவர்களை
                  தான் நோசித்தவர்களை
                  தயங்காமல் தரணிக்கு
                  அறிமுகம் செய்து ஆராதிக்க முற்படுபவர்.

                  விடாமுற்சியை மூச்சாகக் கொண்ட – இவர்
                  முன்னேற – நாமும் இணைந்தே
                   இறைவனை வேண்டுவோம்.    
   இது இந்நூலின் பின் பக்க அட்டையில் எழுதப் பட்டுள்ள நூலாசிரியரைப் பற்றிய அறிமுகவுரை.
     ( இந்நூல் 17-06-2012 அன்று முதற்சங்கு பதிப்பகத்தால் நாகர்கோவிலில் வைத்து வெளியிடப்பட்டதுநூல் விலை ரூ.60. நூல் தொடர்புக்கு வழுதூர் மு. செல்லத்துரை 9442008269)                         
                                                                          
                         

Friday, 22 June 2012

ஒரு மகத்தான மனிதரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்


         ஒரு மகத்தான மனிதரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்   
  
     இந்தியா பல்துறை வளர்ச்சி பெற்று வல்லரசு அந்தஸ்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய நாடு.
     சமதர்ம்ம சோசலிசத்தையும் சகிப்புத் தன்மையும் தாரக மந்திரமாகக் கொண்டு அன்னிய நாட்டினரையும் வசீகரிக்கும் சக்தியோடு வல்லரசு அந்தஸ்தை நோக்கி அடியெடுத்து முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது.
     கல்வி, அறிவியல், ஆன்மீகம் தொழில் நுட்பம், பொருளாதாரம் ஆகியத்துறைகளில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி எக்காளமிடலாம்;  அந்த அளவிற்கு இந்தியாவின் மேன்மை உயர்ந்துள்ளது.
     இருப்பினும் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் மட்டும் ஏனோ அன்னிய நாடுகளுக்கு இந்தியா மீது இருக்கும் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் அளவுக்குக்கூட இவர்களுக்கு இல்லாமல் போகிறது.  அதற்குக் காரணம் அரசியல்  கட்சிகளிடையே வலுவான தலைமை இல்லாததும் தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் சக்தி இல்லாமல் போனதுமே ஆகும்.
     இதனால்தான் நம் நாடு இன்று லஞ்சத்திலும் ஊழலிலும் தீவிரவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் சிக்குண்டு சிதறிக்கிடக்கிறது.  இது சர்வ சக்தி வாய்ந்த இந்திய தேசத்திற்குப் பொருத்தமானதன்று.
     எனவே, இந்திய சேதம் இன்னும் வலுப்பெற்று மிக விரைவில் வல்லரசாக வேண்டும் என்றால் நம் நாட்டிற்கு வலுவான, நேர்மையான, உறுதியான, பிரச்னைகளை இரும்பு காரம் கொண்டு அடக்கும் நெஞ்சுரம் மிக்க திடமான தலைமை வேண்டும்.  அத்தலைமையை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும்.  அந்த அதிகாரம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
     இந்நிலையில், தற்போது இந்தியாவிற்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இந்தியாவின் ஜனாதிபதி என்பவர் இத்தேசத்தின் முதல் குடிமகன்.  அவர் அப்பழுக்கற்றவராக வேறு எதிலும் நாட்டமின்றி தேச நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நாட்டு மக்களை மிக உன்னத நிலைக்கு வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டும்.
     இதற்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நலத்தில் நாட்டம் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னிறுத்தி பொதுமக்களே அவர்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும்.  இந்த நடைமுறையை மிக விரைவில் இந்திய தேசத்தில் கொண்டுவர வேண்டும்.
     இம்முறையைத் தவிர்த்து தற்போது உள்ளது போன்று மக்கள் பிரதிநிதிகள் அதாவது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஜனாதிபதியை தேர்வு செய்வது என்றால் மீண்டும் மீண்டும் நம்நாடு வலுவிழந்து, வளர்ச்சியின்றி தாழ்ச்சியுற்றுப் போகும்.
     ஏனென்றால், தற்போது இந்தியாவில் ஜனாதிபதியாக முன்னொழியப் பட்டிருப்பவர்களும் தேர்வு செய்யப்படுபவர்களும் யாராக இருக்கிறார்கள் என்றால் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து அதன் பின் வயதாகி, வலுவிழந்து, சுயநினைவுகளற்று எழும்பி நடப்பதற்கும் இருப்பதற்கும்கூட சக்தியற்றவர்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் முன்மொழிகின்றன.
     அவர்களுக்கு, அவர்கள் சார்ந்திருக்கின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஓட்டுப் போடுகின்றனர்.  அதனால் மட்டும் வெற்றி வெற முடியாது என்ற நிலை வந்தால் மாற்று அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு லட்சோப லட்சம் அல்லது கோடானுகோடி பணத்தைக் கொட்டி ஓட்டை விலைக்கு வாங்கி தங்களுக்குச் சாதகமானவரை ஜனாதிபதியாக்குகின்றனர்
     அப்படி, ஜனாதிபதியாகும் அருகதையற்றவர்கள் ஐந்து ஆண்டு காலம் சொர்க்க பூமியாக விளங்கும் ஜனாதிபதி மாளிகையில் தங்களின் சொந்த, பந்த பரிவாரங்களுடன் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து மக்களின் வரிபணத்தை கோடிகோடியாகச் செலவு செய்து அந்நிய நாடுகளில் அநாவசியமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்டிற்கு நஷ்டத்தையும் மக்களுக்கு இழுக்கையும் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்று, மீண்டும் மரண காலம் வரை மக்களின் பணத்தில் ராஜ மரியாதையுடன் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
     இப்படிப்பட்டவர்கள் ஜனாதிபதி ஆவதினால் நாட்டில் மக்களுக்குத் தேவையான, காலத்திற்கு ஏற்ற ஒரு சட்டத்தை இயற்றவோ அல்லது பாராளுமன்றத்தில் ஆளும் அரசியல் கட்சிகளால் கொண்டுவரப்படும் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கோ இயலாது.  அவர்களை ஜனாதிபதியாக முன்மொழிந்து, ஜனாதிபதியாக்கிய அரசியல் கட்சி என்ன செய்வதற்குச் சொல்கிறதோ அதற்கு மட்டும் தலையசைத்து வெறும் ஒரு பொம்மை போலிருந்து பாவனைச் செய்து ஐந்தாண்டுக் காலத்தைக் கடத்தி விடுவார்கள்.
     இதனால்தான், இந்தியாவின் ஜனாதிபதிகளுக்கு தலையாட்டிப் பொம்மைகள் என்றும் கண்ட கண்ட இடங்களில் கையெழுத்திடும் ரப்பர் ஸ்டாம்புகள் என்றும் பட்டப் பெயர்கள் வந்தன.
     இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்படாத ஒரு சட்டம் உள்ளது.  அது, இந்தியாவில் மிக உயர்ந்தப் பதவி வகிக்கும் நீதிபதிகள், ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரை எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் தனிநபரோ அல்லது தகவல் தொடர்புச் சாதனங்களோ விமர்சிக்கக் கூடாதென்று.
     ஆனால், இன்று நிலைமை நேர்மாறாக மாறிவிட்டது.  தற்போது மிக அதிக அளவில் மக்களாலும் மீடியாக்களாலும் விமர்சிக்கப்படுபவர்கள் நீதிபதிகளும் ஜனாதிபதிகளும் ஆளுநர்களாகவும்தான் இருக்கின்றனர்.  ஏனென்றால், அந்த அளவுக்குத்தான் அவர்களின் தராதரமும் செயல்பாடுகளும் இருக்கின்றன.
     எனவே, இந்த இழிநிலைகளை இந்திய தேசத்திலிருந்து துடைத்தெறிந்து விட்டு மீண்டும் இந்தியாவை தலைநிமிர வைத்து, அத்தனை நாடுகளும் தலைவணங்கும் ஒரு வல்லரசு நாடாக இந்திய நாட்டை மாற்றியெடுக்க வேண்டும்.  அதற்கு இந்தியாவின் முதல் குடிமகனை நிர்ணையம் செய்யும் தகுதியை மக்களிடம் வழங்க வேண்டும்.  அவர்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
     அப்போதுதான் நேர்மையான, திறமையான, திடமான, ஒரு மகத்தான மனிதரை இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுத்து, இந்தியாவின் மகத்துவத்தை மெருகேற்ற இயலும்.
                      சிறுமலர் – ஜூன் 2012 இதழில் பிரசுரமானது.    
                          

Friday, 18 May 2012


           விரும்பியதைப் படிப்போம் இயன்றதைச் செய்வோம்

     தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து தற்போது பெற்றோர்களும் பிள்ளைகளும் தேர்வு முடிவுகளைப் பற்றி பொழுதெல்லாம் சிந்தையும் இரவெல்லாம் கனவுகளுமாய் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
     சில வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேய், பிசாசைப் போன்று பித்தலாட்டம் பேசியே மிரட்டிக் கொண்டிருப்பார்கள். நீ மட்டும் இந்தப் பரிட்சையில் ஜெயிக்கல உன்னைக் கொன்றேப் போட்டிருவேன். இப்படி ஒரு தரப்பு பெற்றோர். உனக்கு மெடிசின் படிக்கக் கூடிய அளவுக்கு மார்க் கிடைக்கல அப்புறம் இந்த வீட்டிலையே உன்னை வச்சிருக்க மாட்டேன் இப்படியென்று இன்னொரு தரப்புப் பெற்றோர்.
     இப்படி ஒவ்வொரு வீட்டிலும் அதட்டலும் மிரட்டலும்தான் நடந்தேறிக் கொண்டிருக்கும்.  ஆனால், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டு இன்னொருத் தரப்பு பெரும்பான்மை பெற்றோர் கடவுளே என் புள்ள இராப்பகலா குடிக்கக் கஞ்சியில்லாம, உடுக்கத் துணியில்லாம, தூங்க நேரம் கிடைக்காம கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சுப் படிச்சான் அவன் கண்டிப்பா இந்தப் பரிட்சையில ஜெயிப்பான்.  அப்படி ஜெயிச்சா எப்படி அவன மேல் படிப்பிற்கு விடுவது என ஏங்கித் தவித்துப் புலம்பிக் கொண்டே இருப்பாங்க.
     தேர்வில் வெற்றி பெற்றேயாக வேண்டும் இல்லையேல் கொன்றே விடுவேன் என ஒரு தரப்பினரும், வெற்றி பெறுவது மட்டுமல்ல அதிக மார்க்கும் வாங்க வேண்டும் இல்லையேல் வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என இன்னொருத் தரப்பும், கண்டிப்பா வெற்றி பெற்று விடுவார்கள் அப்படி வெற்றி பெற்றால் எப்படி மேலும் படிக்க வைப்பது என்று முன்னிரண்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இன்னொரு தரப்புமாக மூன்று தரப்பினர் தங்கள் எண்ண அலைகளையும் கற்பனைக் கனவுகளையும் சுமந்து கொண்டும் புலம்பிக் கொண்டும் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.
     தங்கள் பிள்ளைகள் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் பெற்றோர்களிடையே இப்படி பல்வேறு விதமாக இருப்பது நியாயமானதே ஆகும்.  ஆனால், அவை ஒருபோதும் தங்கள் பிள்ளைகளின் தகுதியையும் திறமையையும் மிக மிஞ்சியதாக இருக்கக் கூடாது.  அப்படியிருந்தால் அது மிகவும் ஆபத்தும் விபரீதமுமானதாக மாறிவிடும்.
     முன்பு எப்போதும் இல்லாத மிகமிகத் தரம் தாழ்ந்த ஒரு கொடியச் செயல் தற்போது தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.  அது, மிக விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவரும் போது இனியும் தொடர இருக்கிறது.  அக்கொடியத் தீங்கு மீண்டும் தொடரக் கூடாது என்பதுவே அவா.  அதற்காகவே இக்கட்டுரை.
     தேர்வு முடிந்த அன்றிலிருந்தே தொடங்கிய பெற்றோர்களின் இவ்வண்ணமான அதட்டலும் மிரட்டலும் பிள்ளைகளின் அடிமனதிற்குள் ஓர் ஆழமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.  அது, எப்பொழுதும் அவர்களை என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று துரத்திக் கொண்டே இருக்கும்.  அதன் விளைவு ஒரு வேளை இப்படி அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் உட்பட்ட பிள்ளைகள் தேர்வில் தோற்றுப் போகவோ அல்லது மதிப்பெண் குறைவாக எடுக்கவோ செய்தால் உடனே அவர்களைத் தற்கொலைச் செய்துக் கொள்வதற்குத் தூண்டுகிறது, அதை அப்படியே அரங்கேற்றியும் விடுகின்றனர்.
     இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் நடக்கும்.  தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே  இந்த அநீதித் தொடங்கி விடும்.  பெற்றோர் எதிர்பார்ப்பது போல் மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் சிலரும் தேர்வு முடிவு வெளியாகும் போது தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் பலரும் கொடிய தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
     அதன்பின், தேர்வு முடிவுகள் வெளியான பிறகுத் தோற்றுப் போகவோ அல்லது மதிப்பெண் குறைந்துப் போகவோ செய்தால் பெற்றோர்களின் அதட்டல், மிரட்டல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல் எண்ணிலடங்காப் பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை அநியாயமாக மாய்த்துக் கொள்கின்றனர்.
     பத்து மாதம் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்து ஆளாக்கியப் பிள்ளைகளுக்கு ஏன் இப்படியொரு சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
     படித்து ஒரே அடியாகப் பாசானால் மட்டும்தான் வாழ்க்கை அமையுமா? இல்லை படித்து அதிக மதிப்பெண் வாங்கி டாக்டர், இஞ்ஞினியர் ஆனால் மட்டும்தான் வாழ்க்கை உயருமா? இப்படிப்பட்ட அர்ப்பமான ஆசை ஏன் பெற்றோர்களிடம் எழுகின்றது.
     சில பெற்றோர் என்ன நினைக்கின்றனர் என்றால் அவர்களால் படித்துப் பட்டம் பெறவோ அல்லது உயர்ந்த பதவிகள் வகிக்கவோ இயலவில்லை; அதனால், தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, மிக உயர்ந்த பதவியை வகிக்க வைக்க வேண்டும்.  அதன் மூலம் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும் அபிமானமும் அடைய வேண்டும்.  அப்படி நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குள்ளே இருக்கும் திறமைகளையும் தகுதிகளையும் உய்த்துணர தவறிவிடுகின்றனர்.
     இப்படிப்பட்டப் பெற்றோர் ஒரு விஷயத்தை மிகத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து  அதிக மதிப்பெண் பெறுவதோ அல்லது அவர்களுக்குச் சற்றும் தொடர்வும் விருப்பமும் இல்லாதத் துறைகளில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு அவற்றை அவர்களால் படிக்க இயலாமல் தள்ளாடுவதைப் பார்த்து வேதனைக் கொள்வதோ அல்ல உங்கள் கடமை.
     இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, இறைவன் ஒவ்வொருக் குழந்தைகளையும் படைக்கும் போது அவர்களுக்குள்ளே ஏதேனும் ஒரு திறமையை வைத்து உங்களுக்கு வரப்பிரசாதமாக அக்குழந்தைகளைத் தருகிறார்.  அத்திறமைகளைக் கண்டுப்பிடித்து, அவற்றை என்னென்ன முறைகளில் வளர்த்தெடுப்பதற்கு உங்களால் முடியும் எனச் சிந்தித்து அவற்றிற்கு வேண்டிய உதவிகளை மட்டும் செய்துக் கொடுத்தால் போதும் அத்திறமையினால் அக்குழந்தைகள் இவ்வையகத்தையே தன்வசமாக்கி விடுவார்கள்.  அதன் மூலம் நீங்களும் பெரும் மனநிறைவும் பெருமையும் அடைய முடியும்.  அவர்களும் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவார்கள்.
     இனி, மூன்றாவது நிலையில் இருக்கும் பெற்றோரின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்ப்போம்.  இவர்களின் பிள்ளைகள் கஷ்டப்பட்டு உழைத்து கூடவே படித்து வெற்றிக் கனியைத் தட்டி விட்டார்கள்.  இவர்களால் தொடர்ந்து மேல்படிப்பு படிக்க இயவில்லையே என்பதுதான் ஏக்  கம்.  இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்கென்று பல்வேறு எளிமையான வழிமுறைகள் உள்ளன.
     நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி வெறும் பிள்ளைகளுக்கு அரசுக் கல்லூரிகளில் இலவசமாகப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.  இல்லை தனியார் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு வங்கிகள் மூலம் எளிமையாகக் கடன் பெற்று எந்த ஓர் உயர் தொழில் நுட்ப கல்வியையும் அவர்களால் கற்பதற்கு முடியும்.  அதுவும் இல்லையேல் இன்று பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகள் சுழற்சி முறை  கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளன.  அந்தக் கல்லுரிகளில் சேர்ந்துப் படித்தால் அவர்கள் ஒரு நாளின் காலை அல்லது மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று விட்டு மறு பாதி நேரத்தில் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கூட பட்டப் படிப்புகளைப் படிக்கலாம்.
     இவை எதற்கும் வழியில்லை என்றால்கூட இன்று, அனைவருக்கும் வீட்டிலிருந்தே படிக்கும் வண்ணம் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தொலை நொறிக் கல்வியை நடத்துகின்றன.  நமது பிள்ளைகள் சமர்த்துகளாக இருந்தால் அவர்கள் தினமும் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுகூட உயர் படிப்புகளைப் படிக்க இயலும்.
     எனவே, பொற்றோர்களே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் விருப்பு வெறுப்புகளையும் சுய கொளரவத்தையும் சமுதாய விழுமங்களையும் உங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் மட்டும் திணிப்பதற்கு விரும்பாதீர்கள்.  அப்படி நீங்கள் திணிப்பதற்கு முற்படும் போது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.  இதனால், வாழ்ந்து, வளர்ந்து, உயர வேண்டிய பிள்ளைகள் பிஞ்சுப் பருவத்திலையே தற்கொலை என்னும் கொடிய தீங்கிற்குள் புகுந்து விடுகின்றார்கள்.
     ஏன் நமது இச்சைகளுக்காகவும் சுயகொளரவத்திற்காகவும் நம் பிள்ளைகளை பலிகடாவாக்க வேண்டும்?  அவர்கள் விரும்பும் பாடத்தைப் படிக்கவும் அவர்களால் இயன்ற வேலையைச் செய்யவும் வழிவகைச் செய்வதுதானே பெற்றோராகிய உங்களது தலையாயக் கடமை.
     எனவே, தேர்வு முடிவுகள் வெளிவரும்போது அவர்கள் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் அதிக மதிப்பெண் வாங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களைத் திட்டாமலும் மிரட்டாமலும் தட்டிக் கொடுத்து தூக்கி நிறுத்தி நல்லதொரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகைச் செய்வோம்.
                சமுதாய நண்பன் மே 2012 இதழில் பிரசுரமானது.         
                                                                                     



Sunday, 6 May 2012

கோடை விடுமுறையில் கோடி இன்பம் பெறுவோம்


          கோடை விடுமுறையில் கோடி இன்பம் பெறுவோம்...

     ஆஹா... மகிழ்ச்சியோ... மகிழ்ச்சி... பள்ளிகளில் தேர்வு முடிந்து விடுமுறைக் கிடைத்தாகி விட்டது.  முன்பெல்லாம் தேர்வு முடிந்து விடுமுறைக் கிடைத்தால் உடனே நினைவிற்கு வருவது உறவினர்களும் விருந்தும்தான்.  கோடை விடுமுறையை மாறி மாறி உறவினர்களின் வீடுகளில் செலவழித்து அங்கிருந்து அறுசுவை விருந்துண்டு, ஆடிப்பாடிக் கொண்டாடித் திரிந்ததெல்லாம் அந்தக்காலம்.
     ஆனால், இன்றோ, கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்டப் பிறகு உறவுகளும் விருந்துகளும் மக்கி மறைந்து மண்ணாகி விட்டன.
     உறவுகளின் வீடுகளைத் தேடிச் செல்வதற்குப் பதில் கம்பியூட்டர் கல்லூரிகளையும் கராத்தேப் பள்ளிகளையும் நாடிச் செல்ல வேண்டியுள்ளது.  முன்பு உறவுகளையும் விருந்துகளையும் நாடி அனைவரும் விரும்பிச் சென்றனர்.  ஆனால், இன்று கம்பியூட்டர் கல்லூரிக்கும் கராத்தேப் பள்ளிக்கும் செல்வதற்குப் பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லை. என்றாலும் பெற்றோர்கள் வலுகட்டாயமாக அவற்றிற்குள் தள்ளி விடுகின்றனர்.  பிள்ளைகளும் வேண்டா வெறுப்பாக இவற்றை ஏற்றுக் கொண்டு நேரத்தை வீணடிப்பதற்காகச் சென்று வருகின்றனர்.
     மேலும் பழங்காலங்களில் கோடை விடுமுறையில் கிராமப்புறப் பிள்ளைகளிலிருந்து நகர்ப்புறப் பிள்ளைகள் வரை விளையாடுவதற்கென்று சில தனிப்பட்ட விளையாட்டுகள் இருந்தன.  கபடி, கோலி, கிளியாந்தட்டு, கைப்பந்து, வட்டெறிதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் பிள்ளைகளின் பருவத்திற்கு ஏற்றாற் போல் இருந்தன.
     இந்த விளையாட்டுகளை எல்லாம் அந்தந்த ஊர்களில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடி மகிழ்ந்தனர்.  இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் இளைஞர்களிடையே சிறப்பான ஓர் அறிமுகம் கிடைத்து வந்தன.  அவர்களுக்குள் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள் யாதுமின்றி அனைவரும் ஒரு தாய் மக்கள் போல் கூடி விளையாடி வேற்றுமையில் ஒற்றுமைக் கண்டனர்.
     இவற்றின் மூலம் இளைஞர்களிடையே கூட்டு முயற்சியும் கூட்டுச் சிந்தனையும் உருவாகி பல்வேறு இளைஞர் அமைப்புகளும் விளையாட்டு மன்றங்களும் உருவாகின.  இவற்றின் மூலம் இளைஞர்களிடையே சேவை மனப்பான்மையும் தொண்டுள்ளவும் பிறரோடு ஒட்டி ஒழுக வேண்டும் என்ற சீரியச் சிந்தனையும் மேலோங்கும்.  இவற்றால் இளைஞர்கள் தீய வழிகளை நாடிச் செல்லாமல் நாட்டு நலனில் அக்கறைக் கொண்டனர் என்றே சொல்லலாம். 
     ஆனால், இன்று நிலைமை நேர் எதிராக மாறிவிட்டது. இன்று  ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டோ பிள்ளைகள் மட்டும் உள்ளனர்.  அவர்களைக் கண்ணின் கருவிழி போல் பேணிக் காப்பதில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.  அதனால், அவர்களை வீட்டை விட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுவதைத் தவிர்த்து வேறு எங்கும் அனுப்புவதற்கு பெற்றோர் விரும்புவதில்லை.  ஊரிலுள்ள இளைஞர்களுடன் இணைந்து பழகவோ அல்லது விளையாடவோ சுத்தமாக அனுமதிப்பதில்லை.
     ஊரிலுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த உலகமே அழிந்துப் போகும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.  உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றால் தங்கள் பிள்ளைகள் உதவாக்கரைகளாகி விடுவார்களோ எனப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.  இவர்களின் இப்படிப்பட்ட எண்ணங்களினாலும் ஐயப்பாடுகளினாலும் பாழ்பட்டுப் போவது நம் நாட்டின் மேன்மைப் பொருந்திய உறவுகள் என்பதையும் இளைஞர்களின் ஆக்கத்திறன் என்பதையும் யாரும் அறியிலர் என்பது வேதனைக்குரியது.
     இன்றைய பெரும்பாலானப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்கள் பிள்ளைகள் மீது கொண்டுள்ள எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  அந்த எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிள்ளைகள் மீது வலுகட்டாயமாகத் திணிப்பதற்கு எத்தணிக்கின்றனர்.  இப்படிப்பட்ட எத்தணிப்புகள் சில பிள்ளைகளிடையே மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இதனால், பிள்ளைகள் மீள முடியாத விரக்திக்கும் வாழ்க்கை மீது வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.  காலப்போக்கில் அவர்கள் பெற்றோர்களை மதிக்காமலும் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவர்களாகவும் மாறிவிடுகினறனர்.   
     எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் எதிர்வினைகளை ஓரளவுக்காவதுச் சமாளிக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கும் எதிர்பார்புகளுக்கும் பாதியளவாயினும் மதிப்பளிக்க வேண்டும்.  அவற்றை ஈடேற்றுவதற்கு துணை நிற்க வேண்டும்.  என்றால் மட்டுமே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுமூகமானச் சூழ்நிலையை உருவாக்கி பிள்ளைகளை வீட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுடையவர்களாக வார்த்தெடுக்க முடியும்.
     இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் பெரிய பெரிய படிப்புகளைப் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்று மிக உயர்ந்தப் பதவிகளை வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.  படிப்புக்கும் பதவிக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
     ஆனால், பிள்ளைகளோ, தங்களின் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தங்களுக்குள் இருக்கும் பல்வேறுத் திறமைகளை வெளிக் கொணர்ந்து அவற்றில் சாதனைப் படைக்க விரும்புகின்றனர்.  அந்தத் திறமைகள் விளையாட்டுத் துறையிலாக இருக்கலாம் கலைத்துறையிலாக இருக்கலாம் அல்லது படைப்புத் துறையிலாக இருக்கலாம்.  இவற்றில் எதுவாக இருந்தாலும் இன்று சமூகத்தில் நல்ல மதிப்பு மிக்கவையே என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
     ஒரு பிள்ளை  விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் பெற்றிருந்தால், அவன், அத்துறையில் பல அளப்பரிய சாதனைகள் படைத்து உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரனாக மாறமுடியும்.  இதனால், அவர்களின் பெற்றோரும் சமூகத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெறுவதற்கு இயலும்.
     அதுபோல்தான் கலைத்துறையும் படைப்புத் துறையும் உள்ளன. கலைத்துறையில் இசை, நாட்டியம் எனப் பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனிக் கவனம் செலுத்தினாலே போதும்,
 அவர்கள் இசைத் துறையிலும் நாட்டியக் கலையிலும் கொடிகட்டிப் பறக்க முடியும்.  அதற்குச் சான்றாக எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கின்றனர். 
     இவை அனைத்திற்கும் மேலானதுதான் படைப்புத் திறன்.  ஒரு பிள்ளைக்கு கலைகளையோ, இலக்கியங்களையோ படைக்கும் திறன் மட்டும் இருந்தால் போதும் அவனால் இந்த உலகத்தையே வசப்படுத்தி விட முடியும்.  அதோடு, அவன் வழ்ந்து மறைந்த பின்பும் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டும் பிறரால் போற்றிப் புகழ்ந்து கொண்டும் இருக்கக் கூடியவனாக மாறிவிடுவான்.
     இப்படிப்பட்ட தனித்திறன் படைத்திருக்கும் பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.  இவர்கள் மீது படிப்பு ஒன்றை மட்டுமே திணிக்கும் எண்ணத்தை பெற்றோர்கள் அறவே கைவிடவேண்டும்.  அவர்கள் படித்துப் பட்டங்கள் பெற்று  உயர் பதவிகளை வகிப்பதை விட தங்களின் தனித்திறமைகளை வளர்த்து அவற்றில் மிக உன்னத சாதனைகள் படைத்து வானழாவிய கீர்த்தி பெற்று உயர்வார்கள். 
     அப்படிப் பட்டத் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பமாக இந்தக் கோடை விடுமுறையப் பெற்றோர்களும் பிள்ளைகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  தற்போது குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளன.  எங்குப் பார்த்தாலும் கம்பியூட்டர் கல்லூரியும் கராத்தேப் பள்ளிகளும் நடனப் பயிற்சிகளும் இசைப் பயிற்சிகளும் ஓவியப் பயிற்சிகளும் கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன.  இவற்றில் ஏதேனும் ஒரு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பை நமது குழந்தைகளுக்கு நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும்.  குழந்தைகளும் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்கைக்குப் பயனுள்ள ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இல்லையேல் தங்களுக்குள் மறைந்துக் கிடக்கும் ஏதேனும் திறமையை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 
     இவை அனைத்திற்கும் மேலாக குழந்தைகளை ஒரு சில நாள்களாவது சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று அவர்களை இன்புற வைக்க வேண்டும். 
     கூடவே, மறைந்து வரும் விருந்தோம்பலையும் மாய்ந்து, தேய்ந்து வரும் உறவு முறைகளையும் புத்துயிர்ப்பெறச் செய்வதற்கு நம் பிள்ளைகளை நமது உறவினர்கள் வீடுகளுக்கு விடுவதும் நமது உறவினர்களை நாம் அழைத்து விருந்தோம்பல் செய்வதும் இன்னும் அதிகமாக கோடை விடுமுறையை அர்த்தமுள்ளதாக மாற்றும். 
     இளைஞர்கள் தங்களுக்குள் ஒன்று கூடி ஊருக்குள் உருப்படியான ஏதேனும் நற்பணிகளை செய்வதும் இளைஞர் மன்றங்கள், விளையாட்டு மன்றங்கள் ஆகியவை அமைத்து அதன் மூலம் ஊருக்குள் இருக்கும் குறைகளைக் களைவதற்கும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதின் மூலம் நாம் விடுமுறையில் கோடி இன்பம் பெற முடியும்.
                 ஏப்ரல் 2012 சமுதாய நண்பன் மாத இதழில் பிரசுரமானது.