விடியலைத் தேடும் விடிவெள்ளி
நூல் அணிந்துரை
வழுதூர் மு. செல்லத்துரை எழுதிய ‘நான்’ என்னும் கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை
உழைப்பு,
படிப்பு இவை இரண்டையும் துடிப்பாகக்
கொண்டு காட்சிக்கு எளிமையாய், பேச்சுக்கு இனிமையாய், பழகுவதற்கு அருமையாய் களங்கமின்றி
கவிதை வடிப்பதில் வல்லவனாய் விளங்குபவர்தான் என் இளவல் வழுதூர் மு. செல்லத்துரை
அவர்கள்.
‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்றில்லாமல் கொண்ட கொள்கையில் கோணல்கள்
நேராமல் நாளும் பொழுதும் உழைத்து... உழைத்து... வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி
உயர்ந்து கொண்டே இருக்கிறார்.
காணும் காட்சி... கேட்கும் பேச்சு... சுவாசிக்கும் காற்று... பருகும்
தண்ணீர்... சந்திக்கும் மாமனிதர்கள்... இயற்கையாய்... செயற்கையாய்... உலகில் உள்ளது
அனைத்தும் இவரது கவிதைக்குக் கருத்தாழங்களாக அமைந்துள்ளன.
கூடவே, கல்வியின் உயர்வையும் காதல் உணர்வையும் கவிதையாக்கியுள்ளார். இவர் காதலைக் ‘காதலிக்கும்’ ஓர் அற்புதக் கவிஞர். அதனால், காதலுக்கு இலக்கணத்தை
வடித்துள்ளார். அதோடு, கனிந்த காதல் கைக்கூடாமல் போனதால் விரக்தியுற்ற
கவிதையும் ஆக்கியுள்ளார். இரண்டையும்
விரசமின்றி வித்தியாசமாய்ப் படைத்துள்ளது இவரின் படைப்பின் இரகசியமாகும்.
இயற்கையை ரசிக்கும் இவரது ரசனை சற்றே வாசகர்களையும் வருடியெடுக்கும்
என்பதில் ஐயமில்லை.
“இன்னிசைப் பாடும் குயிலும்
இதயம் கவர்ந்திட்டமயிலும்
ஊனுடல் சுட்ட வெயிலும்
என்னுடல் வருடிய
தென்றலும்
என்னை ஈர்த்தது ஏனோ? – நான்
இனிதாய் ரசித்திடத் தானோ!”
இந்த நவயுகத்தில் புதுக்கவிதைகளின் பிரளயத்தின் மத்தியிலும் எதுகை, மோனை
இயைபுத் தொடைகள் தப்பாமல், இவர் பழங்கவிதைப் பாடுவதிலும் வல்லவர் என்பதை
நிரூபித்துள்ளார்.
தான் தானாக இருக்க வேண்டும் என அவா கொள்ளும் இவர் ‘நான்’ என்னும் இவ்வினிய கவிதை நூலைத் தமிழ் இலக்கிய
ஆர்வலர்களிடையே உலாவ விட்டுள்ளார்.
இதற்குள் அவர் மட்டுமல்ல நாமும் இருக்கின்றோம். நம் எண்ணங்களும் உணர்வுகளும்கூட உலாவிக்
கொண்டிருக்கின்றன.
தமிழகத்தின் முன்னணி இதழ்களான ராணி, முதற்சங்கு உட்பட பல வார, மாத இதழ்களில்
இவரது படைப்புகள் பல ஆண்டுகளாக பதிவாகி வருகின்றன. இவற்றுடன், நாகர்கோவில் அகில இந்திய வானொலியின்
காற்றலை வழியாகவும் நம் காதுகளைத் தொட்டிருக்கின்றன. அவைகளின் தொகுப்பாகத்தான் ‘நான்’ நமக்காக நூல் வடிவம் பெற்றுள்ளது.
பண்பால் இவர் உயர்ந்து நிற்பது போன்று படைப்பாலும் பாரெங்கும் இவர் கீர்த்தி
பரவட்டும். மனம் திறந்து வாழ்த்துவோம்...
வேண்டியதைச் செய்வோம்.
நூலாசிரியரைப்பற்றி...
படைப்பாலும் படிப்பாலும்
சிகரத்தைத் தொட்டுவிடத்
துடிப்பவர்
வழுதூர்.மு. செல்லத்துரை.
முக்கடலும் முத்திடும்
கன்னியாகுமரியில்
அம்சிக்கு அருகே வழுதூரில்
முத்துநாயகம் – தாய்
தம்பதிக்கு
புதல்வனாய் பிறந்த இவர்
‘புரட்சிப் பூக்கள்’, ‘கார்முகிலின் தூறல்கள்’
‘புன்னகை’ என முக்கனிபோல்
மூன்று நூல்களைத் தமிழ்
இலக்கியத்
தடாகத்தில் தவழவிட்டு ‘புன்னகைக் கவிஞர்’
என இலக்கிய ஆர்வலர்களால்
அடையாளப்படுத்தப் பட்டவர்.
‘நான்’ - என்னும் நான்காவது நூலில்
தன்னை “ஆதிஉணர்ந்தவன்-தூய
அன்பில் நிறைந்தவன்
ஜோதி வடிவான இறைவனை-நிதம்
துதித்துக் கொண்டிருப்பவன்!” – என
அவை அடக்கத்துடன்
அறிமுகப்படுத்திக்
கொண்டு நம்மையும் தம்பால்
ஈர்க்க முயற்சிக்கிறார்.
தன்னை நேசித்தவர்களை
தான் நோசித்தவர்களை
தயங்காமல் தரணிக்கு
அறிமுகம் செய்து ஆராதிக்க
முற்படுபவர்.
விடாமுற்சியை மூச்சாகக் கொண்ட – இவர்
முன்னேற – நாமும் இணைந்தே
இறைவனை வேண்டுவோம்.
இது
இந்நூலின் பின் பக்க அட்டையில் எழுதப் பட்டுள்ள நூலாசிரியரைப் பற்றிய அறிமுகவுரை.
( இந்நூல் 17-06-2012 அன்று முதற்சங்கு
பதிப்பகத்தால் நாகர்கோவிலில் வைத்து வெளியிடப்பட்டது. நூல் விலை ரூ.60. நூல் தொடர்புக்கு வழுதூர் மு. செல்லத்துரை 9442008269)
No comments:
Post a Comment