Friday, 18 May 2012


           விரும்பியதைப் படிப்போம் இயன்றதைச் செய்வோம்

     தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து தற்போது பெற்றோர்களும் பிள்ளைகளும் தேர்வு முடிவுகளைப் பற்றி பொழுதெல்லாம் சிந்தையும் இரவெல்லாம் கனவுகளுமாய் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
     சில வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேய், பிசாசைப் போன்று பித்தலாட்டம் பேசியே மிரட்டிக் கொண்டிருப்பார்கள். நீ மட்டும் இந்தப் பரிட்சையில் ஜெயிக்கல உன்னைக் கொன்றேப் போட்டிருவேன். இப்படி ஒரு தரப்பு பெற்றோர். உனக்கு மெடிசின் படிக்கக் கூடிய அளவுக்கு மார்க் கிடைக்கல அப்புறம் இந்த வீட்டிலையே உன்னை வச்சிருக்க மாட்டேன் இப்படியென்று இன்னொரு தரப்புப் பெற்றோர்.
     இப்படி ஒவ்வொரு வீட்டிலும் அதட்டலும் மிரட்டலும்தான் நடந்தேறிக் கொண்டிருக்கும்.  ஆனால், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டு இன்னொருத் தரப்பு பெரும்பான்மை பெற்றோர் கடவுளே என் புள்ள இராப்பகலா குடிக்கக் கஞ்சியில்லாம, உடுக்கத் துணியில்லாம, தூங்க நேரம் கிடைக்காம கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சுப் படிச்சான் அவன் கண்டிப்பா இந்தப் பரிட்சையில ஜெயிப்பான்.  அப்படி ஜெயிச்சா எப்படி அவன மேல் படிப்பிற்கு விடுவது என ஏங்கித் தவித்துப் புலம்பிக் கொண்டே இருப்பாங்க.
     தேர்வில் வெற்றி பெற்றேயாக வேண்டும் இல்லையேல் கொன்றே விடுவேன் என ஒரு தரப்பினரும், வெற்றி பெறுவது மட்டுமல்ல அதிக மார்க்கும் வாங்க வேண்டும் இல்லையேல் வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என இன்னொருத் தரப்பும், கண்டிப்பா வெற்றி பெற்று விடுவார்கள் அப்படி வெற்றி பெற்றால் எப்படி மேலும் படிக்க வைப்பது என்று முன்னிரண்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இன்னொரு தரப்புமாக மூன்று தரப்பினர் தங்கள் எண்ண அலைகளையும் கற்பனைக் கனவுகளையும் சுமந்து கொண்டும் புலம்பிக் கொண்டும் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.
     தங்கள் பிள்ளைகள் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் பெற்றோர்களிடையே இப்படி பல்வேறு விதமாக இருப்பது நியாயமானதே ஆகும்.  ஆனால், அவை ஒருபோதும் தங்கள் பிள்ளைகளின் தகுதியையும் திறமையையும் மிக மிஞ்சியதாக இருக்கக் கூடாது.  அப்படியிருந்தால் அது மிகவும் ஆபத்தும் விபரீதமுமானதாக மாறிவிடும்.
     முன்பு எப்போதும் இல்லாத மிகமிகத் தரம் தாழ்ந்த ஒரு கொடியச் செயல் தற்போது தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.  அது, மிக விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவரும் போது இனியும் தொடர இருக்கிறது.  அக்கொடியத் தீங்கு மீண்டும் தொடரக் கூடாது என்பதுவே அவா.  அதற்காகவே இக்கட்டுரை.
     தேர்வு முடிந்த அன்றிலிருந்தே தொடங்கிய பெற்றோர்களின் இவ்வண்ணமான அதட்டலும் மிரட்டலும் பிள்ளைகளின் அடிமனதிற்குள் ஓர் ஆழமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.  அது, எப்பொழுதும் அவர்களை என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று துரத்திக் கொண்டே இருக்கும்.  அதன் விளைவு ஒரு வேளை இப்படி அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் உட்பட்ட பிள்ளைகள் தேர்வில் தோற்றுப் போகவோ அல்லது மதிப்பெண் குறைவாக எடுக்கவோ செய்தால் உடனே அவர்களைத் தற்கொலைச் செய்துக் கொள்வதற்குத் தூண்டுகிறது, அதை அப்படியே அரங்கேற்றியும் விடுகின்றனர்.
     இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் நடக்கும்.  தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே  இந்த அநீதித் தொடங்கி விடும்.  பெற்றோர் எதிர்பார்ப்பது போல் மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் சிலரும் தேர்வு முடிவு வெளியாகும் போது தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் பலரும் கொடிய தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
     அதன்பின், தேர்வு முடிவுகள் வெளியான பிறகுத் தோற்றுப் போகவோ அல்லது மதிப்பெண் குறைந்துப் போகவோ செய்தால் பெற்றோர்களின் அதட்டல், மிரட்டல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல் எண்ணிலடங்காப் பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை அநியாயமாக மாய்த்துக் கொள்கின்றனர்.
     பத்து மாதம் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்து ஆளாக்கியப் பிள்ளைகளுக்கு ஏன் இப்படியொரு சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
     படித்து ஒரே அடியாகப் பாசானால் மட்டும்தான் வாழ்க்கை அமையுமா? இல்லை படித்து அதிக மதிப்பெண் வாங்கி டாக்டர், இஞ்ஞினியர் ஆனால் மட்டும்தான் வாழ்க்கை உயருமா? இப்படிப்பட்ட அர்ப்பமான ஆசை ஏன் பெற்றோர்களிடம் எழுகின்றது.
     சில பெற்றோர் என்ன நினைக்கின்றனர் என்றால் அவர்களால் படித்துப் பட்டம் பெறவோ அல்லது உயர்ந்த பதவிகள் வகிக்கவோ இயலவில்லை; அதனால், தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, மிக உயர்ந்த பதவியை வகிக்க வைக்க வேண்டும்.  அதன் மூலம் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும் அபிமானமும் அடைய வேண்டும்.  அப்படி நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குள்ளே இருக்கும் திறமைகளையும் தகுதிகளையும் உய்த்துணர தவறிவிடுகின்றனர்.
     இப்படிப்பட்டப் பெற்றோர் ஒரு விஷயத்தை மிகத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து  அதிக மதிப்பெண் பெறுவதோ அல்லது அவர்களுக்குச் சற்றும் தொடர்வும் விருப்பமும் இல்லாதத் துறைகளில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு அவற்றை அவர்களால் படிக்க இயலாமல் தள்ளாடுவதைப் பார்த்து வேதனைக் கொள்வதோ அல்ல உங்கள் கடமை.
     இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, இறைவன் ஒவ்வொருக் குழந்தைகளையும் படைக்கும் போது அவர்களுக்குள்ளே ஏதேனும் ஒரு திறமையை வைத்து உங்களுக்கு வரப்பிரசாதமாக அக்குழந்தைகளைத் தருகிறார்.  அத்திறமைகளைக் கண்டுப்பிடித்து, அவற்றை என்னென்ன முறைகளில் வளர்த்தெடுப்பதற்கு உங்களால் முடியும் எனச் சிந்தித்து அவற்றிற்கு வேண்டிய உதவிகளை மட்டும் செய்துக் கொடுத்தால் போதும் அத்திறமையினால் அக்குழந்தைகள் இவ்வையகத்தையே தன்வசமாக்கி விடுவார்கள்.  அதன் மூலம் நீங்களும் பெரும் மனநிறைவும் பெருமையும் அடைய முடியும்.  அவர்களும் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவார்கள்.
     இனி, மூன்றாவது நிலையில் இருக்கும் பெற்றோரின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்ப்போம்.  இவர்களின் பிள்ளைகள் கஷ்டப்பட்டு உழைத்து கூடவே படித்து வெற்றிக் கனியைத் தட்டி விட்டார்கள்.  இவர்களால் தொடர்ந்து மேல்படிப்பு படிக்க இயவில்லையே என்பதுதான் ஏக்  கம்.  இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்கென்று பல்வேறு எளிமையான வழிமுறைகள் உள்ளன.
     நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி வெறும் பிள்ளைகளுக்கு அரசுக் கல்லூரிகளில் இலவசமாகப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.  இல்லை தனியார் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு வங்கிகள் மூலம் எளிமையாகக் கடன் பெற்று எந்த ஓர் உயர் தொழில் நுட்ப கல்வியையும் அவர்களால் கற்பதற்கு முடியும்.  அதுவும் இல்லையேல் இன்று பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகள் சுழற்சி முறை  கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளன.  அந்தக் கல்லுரிகளில் சேர்ந்துப் படித்தால் அவர்கள் ஒரு நாளின் காலை அல்லது மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று விட்டு மறு பாதி நேரத்தில் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கூட பட்டப் படிப்புகளைப் படிக்கலாம்.
     இவை எதற்கும் வழியில்லை என்றால்கூட இன்று, அனைவருக்கும் வீட்டிலிருந்தே படிக்கும் வண்ணம் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தொலை நொறிக் கல்வியை நடத்துகின்றன.  நமது பிள்ளைகள் சமர்த்துகளாக இருந்தால் அவர்கள் தினமும் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுகூட உயர் படிப்புகளைப் படிக்க இயலும்.
     எனவே, பொற்றோர்களே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் விருப்பு வெறுப்புகளையும் சுய கொளரவத்தையும் சமுதாய விழுமங்களையும் உங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் மட்டும் திணிப்பதற்கு விரும்பாதீர்கள்.  அப்படி நீங்கள் திணிப்பதற்கு முற்படும் போது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.  இதனால், வாழ்ந்து, வளர்ந்து, உயர வேண்டிய பிள்ளைகள் பிஞ்சுப் பருவத்திலையே தற்கொலை என்னும் கொடிய தீங்கிற்குள் புகுந்து விடுகின்றார்கள்.
     ஏன் நமது இச்சைகளுக்காகவும் சுயகொளரவத்திற்காகவும் நம் பிள்ளைகளை பலிகடாவாக்க வேண்டும்?  அவர்கள் விரும்பும் பாடத்தைப் படிக்கவும் அவர்களால் இயன்ற வேலையைச் செய்யவும் வழிவகைச் செய்வதுதானே பெற்றோராகிய உங்களது தலையாயக் கடமை.
     எனவே, தேர்வு முடிவுகள் வெளிவரும்போது அவர்கள் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் அதிக மதிப்பெண் வாங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களைத் திட்டாமலும் மிரட்டாமலும் தட்டிக் கொடுத்து தூக்கி நிறுத்தி நல்லதொரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகைச் செய்வோம்.
                சமுதாய நண்பன் மே 2012 இதழில் பிரசுரமானது.         
                                                                                     



No comments:

Post a Comment