Sunday, 6 May 2012

கோடை விடுமுறையில் கோடி இன்பம் பெறுவோம்


          கோடை விடுமுறையில் கோடி இன்பம் பெறுவோம்...

     ஆஹா... மகிழ்ச்சியோ... மகிழ்ச்சி... பள்ளிகளில் தேர்வு முடிந்து விடுமுறைக் கிடைத்தாகி விட்டது.  முன்பெல்லாம் தேர்வு முடிந்து விடுமுறைக் கிடைத்தால் உடனே நினைவிற்கு வருவது உறவினர்களும் விருந்தும்தான்.  கோடை விடுமுறையை மாறி மாறி உறவினர்களின் வீடுகளில் செலவழித்து அங்கிருந்து அறுசுவை விருந்துண்டு, ஆடிப்பாடிக் கொண்டாடித் திரிந்ததெல்லாம் அந்தக்காலம்.
     ஆனால், இன்றோ, கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்டப் பிறகு உறவுகளும் விருந்துகளும் மக்கி மறைந்து மண்ணாகி விட்டன.
     உறவுகளின் வீடுகளைத் தேடிச் செல்வதற்குப் பதில் கம்பியூட்டர் கல்லூரிகளையும் கராத்தேப் பள்ளிகளையும் நாடிச் செல்ல வேண்டியுள்ளது.  முன்பு உறவுகளையும் விருந்துகளையும் நாடி அனைவரும் விரும்பிச் சென்றனர்.  ஆனால், இன்று கம்பியூட்டர் கல்லூரிக்கும் கராத்தேப் பள்ளிக்கும் செல்வதற்குப் பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லை. என்றாலும் பெற்றோர்கள் வலுகட்டாயமாக அவற்றிற்குள் தள்ளி விடுகின்றனர்.  பிள்ளைகளும் வேண்டா வெறுப்பாக இவற்றை ஏற்றுக் கொண்டு நேரத்தை வீணடிப்பதற்காகச் சென்று வருகின்றனர்.
     மேலும் பழங்காலங்களில் கோடை விடுமுறையில் கிராமப்புறப் பிள்ளைகளிலிருந்து நகர்ப்புறப் பிள்ளைகள் வரை விளையாடுவதற்கென்று சில தனிப்பட்ட விளையாட்டுகள் இருந்தன.  கபடி, கோலி, கிளியாந்தட்டு, கைப்பந்து, வட்டெறிதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் பிள்ளைகளின் பருவத்திற்கு ஏற்றாற் போல் இருந்தன.
     இந்த விளையாட்டுகளை எல்லாம் அந்தந்த ஊர்களில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடி மகிழ்ந்தனர்.  இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் இளைஞர்களிடையே சிறப்பான ஓர் அறிமுகம் கிடைத்து வந்தன.  அவர்களுக்குள் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள் யாதுமின்றி அனைவரும் ஒரு தாய் மக்கள் போல் கூடி விளையாடி வேற்றுமையில் ஒற்றுமைக் கண்டனர்.
     இவற்றின் மூலம் இளைஞர்களிடையே கூட்டு முயற்சியும் கூட்டுச் சிந்தனையும் உருவாகி பல்வேறு இளைஞர் அமைப்புகளும் விளையாட்டு மன்றங்களும் உருவாகின.  இவற்றின் மூலம் இளைஞர்களிடையே சேவை மனப்பான்மையும் தொண்டுள்ளவும் பிறரோடு ஒட்டி ஒழுக வேண்டும் என்ற சீரியச் சிந்தனையும் மேலோங்கும்.  இவற்றால் இளைஞர்கள் தீய வழிகளை நாடிச் செல்லாமல் நாட்டு நலனில் அக்கறைக் கொண்டனர் என்றே சொல்லலாம். 
     ஆனால், இன்று நிலைமை நேர் எதிராக மாறிவிட்டது. இன்று  ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டோ பிள்ளைகள் மட்டும் உள்ளனர்.  அவர்களைக் கண்ணின் கருவிழி போல் பேணிக் காப்பதில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.  அதனால், அவர்களை வீட்டை விட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுவதைத் தவிர்த்து வேறு எங்கும் அனுப்புவதற்கு பெற்றோர் விரும்புவதில்லை.  ஊரிலுள்ள இளைஞர்களுடன் இணைந்து பழகவோ அல்லது விளையாடவோ சுத்தமாக அனுமதிப்பதில்லை.
     ஊரிலுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த உலகமே அழிந்துப் போகும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.  உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றால் தங்கள் பிள்ளைகள் உதவாக்கரைகளாகி விடுவார்களோ எனப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.  இவர்களின் இப்படிப்பட்ட எண்ணங்களினாலும் ஐயப்பாடுகளினாலும் பாழ்பட்டுப் போவது நம் நாட்டின் மேன்மைப் பொருந்திய உறவுகள் என்பதையும் இளைஞர்களின் ஆக்கத்திறன் என்பதையும் யாரும் அறியிலர் என்பது வேதனைக்குரியது.
     இன்றைய பெரும்பாலானப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்கள் பிள்ளைகள் மீது கொண்டுள்ள எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  அந்த எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிள்ளைகள் மீது வலுகட்டாயமாகத் திணிப்பதற்கு எத்தணிக்கின்றனர்.  இப்படிப்பட்ட எத்தணிப்புகள் சில பிள்ளைகளிடையே மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இதனால், பிள்ளைகள் மீள முடியாத விரக்திக்கும் வாழ்க்கை மீது வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.  காலப்போக்கில் அவர்கள் பெற்றோர்களை மதிக்காமலும் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவர்களாகவும் மாறிவிடுகினறனர்.   
     எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் எதிர்வினைகளை ஓரளவுக்காவதுச் சமாளிக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கும் எதிர்பார்புகளுக்கும் பாதியளவாயினும் மதிப்பளிக்க வேண்டும்.  அவற்றை ஈடேற்றுவதற்கு துணை நிற்க வேண்டும்.  என்றால் மட்டுமே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுமூகமானச் சூழ்நிலையை உருவாக்கி பிள்ளைகளை வீட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுடையவர்களாக வார்த்தெடுக்க முடியும்.
     இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் பெரிய பெரிய படிப்புகளைப் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்று மிக உயர்ந்தப் பதவிகளை வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.  படிப்புக்கும் பதவிக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
     ஆனால், பிள்ளைகளோ, தங்களின் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தங்களுக்குள் இருக்கும் பல்வேறுத் திறமைகளை வெளிக் கொணர்ந்து அவற்றில் சாதனைப் படைக்க விரும்புகின்றனர்.  அந்தத் திறமைகள் விளையாட்டுத் துறையிலாக இருக்கலாம் கலைத்துறையிலாக இருக்கலாம் அல்லது படைப்புத் துறையிலாக இருக்கலாம்.  இவற்றில் எதுவாக இருந்தாலும் இன்று சமூகத்தில் நல்ல மதிப்பு மிக்கவையே என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
     ஒரு பிள்ளை  விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் பெற்றிருந்தால், அவன், அத்துறையில் பல அளப்பரிய சாதனைகள் படைத்து உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரனாக மாறமுடியும்.  இதனால், அவர்களின் பெற்றோரும் சமூகத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெறுவதற்கு இயலும்.
     அதுபோல்தான் கலைத்துறையும் படைப்புத் துறையும் உள்ளன. கலைத்துறையில் இசை, நாட்டியம் எனப் பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனிக் கவனம் செலுத்தினாலே போதும்,
 அவர்கள் இசைத் துறையிலும் நாட்டியக் கலையிலும் கொடிகட்டிப் பறக்க முடியும்.  அதற்குச் சான்றாக எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கின்றனர். 
     இவை அனைத்திற்கும் மேலானதுதான் படைப்புத் திறன்.  ஒரு பிள்ளைக்கு கலைகளையோ, இலக்கியங்களையோ படைக்கும் திறன் மட்டும் இருந்தால் போதும் அவனால் இந்த உலகத்தையே வசப்படுத்தி விட முடியும்.  அதோடு, அவன் வழ்ந்து மறைந்த பின்பும் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டும் பிறரால் போற்றிப் புகழ்ந்து கொண்டும் இருக்கக் கூடியவனாக மாறிவிடுவான்.
     இப்படிப்பட்ட தனித்திறன் படைத்திருக்கும் பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.  இவர்கள் மீது படிப்பு ஒன்றை மட்டுமே திணிக்கும் எண்ணத்தை பெற்றோர்கள் அறவே கைவிடவேண்டும்.  அவர்கள் படித்துப் பட்டங்கள் பெற்று  உயர் பதவிகளை வகிப்பதை விட தங்களின் தனித்திறமைகளை வளர்த்து அவற்றில் மிக உன்னத சாதனைகள் படைத்து வானழாவிய கீர்த்தி பெற்று உயர்வார்கள். 
     அப்படிப் பட்டத் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பமாக இந்தக் கோடை விடுமுறையப் பெற்றோர்களும் பிள்ளைகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  தற்போது குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளன.  எங்குப் பார்த்தாலும் கம்பியூட்டர் கல்லூரியும் கராத்தேப் பள்ளிகளும் நடனப் பயிற்சிகளும் இசைப் பயிற்சிகளும் ஓவியப் பயிற்சிகளும் கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன.  இவற்றில் ஏதேனும் ஒரு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பை நமது குழந்தைகளுக்கு நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும்.  குழந்தைகளும் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்கைக்குப் பயனுள்ள ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இல்லையேல் தங்களுக்குள் மறைந்துக் கிடக்கும் ஏதேனும் திறமையை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 
     இவை அனைத்திற்கும் மேலாக குழந்தைகளை ஒரு சில நாள்களாவது சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று அவர்களை இன்புற வைக்க வேண்டும். 
     கூடவே, மறைந்து வரும் விருந்தோம்பலையும் மாய்ந்து, தேய்ந்து வரும் உறவு முறைகளையும் புத்துயிர்ப்பெறச் செய்வதற்கு நம் பிள்ளைகளை நமது உறவினர்கள் வீடுகளுக்கு விடுவதும் நமது உறவினர்களை நாம் அழைத்து விருந்தோம்பல் செய்வதும் இன்னும் அதிகமாக கோடை விடுமுறையை அர்த்தமுள்ளதாக மாற்றும். 
     இளைஞர்கள் தங்களுக்குள் ஒன்று கூடி ஊருக்குள் உருப்படியான ஏதேனும் நற்பணிகளை செய்வதும் இளைஞர் மன்றங்கள், விளையாட்டு மன்றங்கள் ஆகியவை அமைத்து அதன் மூலம் ஊருக்குள் இருக்கும் குறைகளைக் களைவதற்கும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதின் மூலம் நாம் விடுமுறையில் கோடி இன்பம் பெற முடியும்.
                 ஏப்ரல் 2012 சமுதாய நண்பன் மாத இதழில் பிரசுரமானது.
   

 



No comments:

Post a Comment