Saturday, 16 December 2023

என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

                                 என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

புரட்சியில் மலரும் மறுமலர்ச்சி.
தன் இளம் வயது முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரபலமான தமிழ் இலக்கியவாதிகளுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டவர் கவிஞர் கருங்கல் கி கண்ணன் அவர்கள். அதன் வெளிப்பாடு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் அவருக்கு அதீதமான காதல் இயல்பாகவே உருவாகி விட்டது.
அக்காதல் இன்று இவரை ஒரு பெரும் கவிஞராக்கியுள்ளது. அத்தோடு, பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிக் கலப்பில்லாமல் தூயத்தமிழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கில் தமிழன்னை தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பு இன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனது கிளையைப் பரப்பி, பல ஆயிரக்கணக்கானத் தீவிர தமிழ்ப் பற்றாளர்களைச் சேர்த்துப் படர்ந்து பந்தலித்த ஓர் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இதோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்தில் தமிழன்னைக்குப் பிரமாண்டமான தமிழன்னை ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஊணின்றி… துயிலின்றி… ஓய்வின்றி… அதிதீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது எண்ணம் மிக விரைவில் ஈடேறும் என்பது திண்ணம்.
அவருக்குள்ளே நிரம்பி… தழும்பி… நிறைந்து… நிற்கும் கவித்துவம் ஒவ்வொரு நாளும் முகநூலில் கவிதையாக பிரசவமெடுக்கும். சில அற்புதமானக் கவிதைகள் பல முன்னணி பாடகர்களால் பாடப்பட்டு, அவை ஒலி நாடாவாக வெளிவந்துள்ளன. அந்தப் பாடல்கள் கேட்போரை பரவசமடையச் செய்யும்.
இந்நிலையில், இதுவரை அவர் எழுதியுள்ள கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து 'என் உயிர் தமிழுக்கே' என்னும் எளிமையும் இனிமையும் நிரம்பிய இக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
சமுதாயத்தில் மக்களிடையே அன்றாட வாழ்வியலில் நடைபெறும் நிகழ்வுகளையும் அவர்களின் உளவியலையும் மிக உன்னிப்பாக உற்று நோக்கி, அவற்றையே கவிதையின் கருப்பொருளாக்கியுள்ளார். அதனால் இவரது கவிதைகளில் ஆசை, ஆதங்கம், கோபம், தாகம், வேகம், வெறுப்பு ஏக்கம், வருத்தம், அன்பு, ஆன்மீகம், எழுச்சி, தத்துவம், தன்னம்பிக்கை என அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கலாம்.
என்றாலும் நூலின் ஆதி முதல் அந்தம் வரையிலும் தமிழ் மொழியின் மீது இவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அபார நம்பிக்கை இழையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்திடலாம். அதற்குச் சான்றாக
'எனது தமிழ்த் தொண்டு
என் பிறப்பின் நோக்கம் என்னும்' வரிகள் விளங்குகின்றன.
தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பேச்சுக்குப் பேச்சு மூச்சுக்கு மூச்சு தமிழ்… தமிழ்… என முழக்கமிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் தமிழ் மொழி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை கவிஞரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. இதனை
'உலகம் முழுதும் வாழ்கின்றோம்
வாழும் நாட்டில் வீழ்கின்றோம்' என்னும் வரிகளால் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
இது போன்று கண்ணனின் கவிதை நூல் முழுக்க தமிழ் கனல் பற்றி எரிவதைப் படிப்பவர்கள் அனைவராலும் உணர முடியும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அண்டி வருவோருக்கு அருள்பாலிக்கும் மண்டைக்காட்டுப் பகவதியம்மனின் அருள் தனக்குள்ளே புகுந்து தமிழன்னைக்குப் பணியாற்றிட பணித்திருப்பதாகவும், தமிழ் சித்தர்களின் ஞானமும் யோகமும் தனக்குள்ளேயிருத்து தமிழுக்கு, தமிழன்னை திருக்கோயில் எழுப்பிட உந்துவதாக உணர்ந்துள்ள கவிஞர் கருங்கல் கண்ணன் வருங்காலத்தில் தமிழகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களின் வரிசையில், தமிழன்னைக்கு ஆலயம் எழுப்பியவர் என்ற பெருமையில் முதன்மையானவராக திகழ்வார் என்பது திண்ணம். அவரது இந்தக் கன்னிக் கவிதை நூலை இருகரம் நீட்டி வரவேற்போம்.
தமிழன்னை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் விலை: ரூ. 130.
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9442077246
என்றும் சிநேகங்களுடன்…
அருமனை.
17-08-2022.
முனைவர் கமல. செல்வராஜ்.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person, monument, temple and text
All reactions

No comments:

Post a Comment