Saturday, 16 December 2023

மாணவர் மாண்புகள் நூல் உள்ளோட்டம்.

                      மாணவர் மாண்புகள்.

நூல் உள்ளோட்டம்.
முனைவர் கமல. செல்வராஜ்
“ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு கல்வி வளர்ச்சியை அடியொற்றி அமைந்துள்ளது” என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை.
இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி அனைவரின் அடிப்படை உரிமை என்றே கருதப்படுகிறது. ஆண், பெண் பாலினப் பாகுபாடின்றி, அனைவருக்கும் பொதுவானதாக, கவ்விக் கற்பிக்கப்படுகிறது.
கல்வியென்பது வெறுமனேப் படித்துப் பட்டங்கள் பெற்று, உயர் பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதற்காக மட்டும் அமைந்து விடக்கூடாது. அது மனிதன், வளமான மாண்புகளோடு வாழ்வதற்கான வழிகாட்டு நெறிமுறையாக அமைய வேண்டும்.
அந்த வகையில் இந்திய அரசாங்கம், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக National Council of Educational Research and Training (NCERT) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பு பள்ளிக்கல்விக்கானப் பாடப்புத்தகங்கள் தயாரித்தல் உட்பட பள்ளிக்கல்விக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச் செய்யும் ஓர் அங்கமாக விளங்குகிறது.
இவ்வமைப்பின் ஆய்வின்படி, மாணவர்கள் 16 வயதிற்குள் கல்வியின் மூலம் 83 விழுமியங்களை அடைய வேண்டும் என வரையறுத்துள்ளது. அந்த விழுமியங்களை அடியொற்றி, இந்நூலாசிரியர், இந்நூலைப் படைத்தளித்துள்ளார். இது இக்கால மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக உள்ளது.
கற்றல், கற்பித்தலில் நீண்ட, நெடிய அறிவாற்றலின் தெளிந்த நீரோடை. எழுத்துலகில் சமுதாயத்திற்குப் பயனுள்ளப் பத்துப் புத்தகங்களைப் படைத்துள்ளவர். இலக்கியத்தில் ஈடிணையற்ற ஈடுபாடு, இளைஞர்களின் முன்னேற்றத்தில் முழுமையாக தன்னை அற்பணித்தவர் என இந்நூலாசிரியர் கப்பியறை முனைவர் வ. இராயப்பன் அவர்களின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பயன்படும்.
சாதாரணமாக இப்படியொரு முயற்சியெடுப்பதற்கு, எவரின் மனமும் திடம் கொள்ளாது. ஏனென்றால், 83 விழுமியங்களுக்கும் பொருத்தமான, நேர்த்தியானக் கருத்துருவை ஆய்ந்தறிந்து, அவற்றை விளக்கியுரைப்பது அசாதாரணமானது. எனினும் இவரின் ஆழமான அறிவாற்றலும், தீராத்தேடல் வேட்கையும் இந்நூலை முழுமையாக வெற்றியடையச் செய்திருக்கின்றன.
ஒவ்வொரு விழுமியத்திற்கும் துல்லியமான, பொய்யாமொழியொன்றை நுழைவாயிலாக்கி, இறுவாயிலில், ஈடிணையற்ற, பல்துறை வித்தகர்களின் அப்பழுக்கற்ற வாழ்வியல் கூறுகளைப் படம்பிடித்து, மாணவர் மனதில் பசுமரத்தாணியாகப் பதியம் செய்துள்ளார்.
கூடவே, பல்சமயப் புனித நூல்களின் கருத்துகளும், காப்பிய, இலக்கிய, இதிகாச நூல்களின் வாழ்வியல் கோட்பாடுகளும் சான்றாதரங்களாக எடுத்தியம்பியிருக்கும் விதம் வியப்பிற்குரியது.
இன்றைய நவயுகத்தில், மலிந்துள்ள தகவல் தொழில் நுட்பத்திலும், மதிமயக்கும் போதையிலும் சிக்குண்டுப் பரிதவித்து, கற்பிக்கும் ஆசிரியர்களை, வகுப்பறையில் வம்புக்கிழுத்து, ஆபாசத்தால் அபிஷேகம் செய்யும் மாணவர்களின் உளவியலை உள்வாங்கி, அவற்றிலிருந்து, அவர்களை விடுவித்து, எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக்க நூலாசிரியர் எடுத்திருக்கும் முயற்சி அளப்பரியது.
நூலாசிரியரின் தாய்மொழியாம் செந்தமிழில் இயற்றியிருக்கும் இந்நூல், தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் பார்வையில்பட்டு, ஆங்கிலம் உட்பட இத்தேசத்தின் அனைத்து மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, நாளைய மாணவர் சமுதாயம் வளமான வாழ்வியல் விழுமியங்கள் நிறைந்ததாக மாற இந்நூல் வழிகோலூம் என்பது திண்ணம்.
சென்னை காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் 236 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ. 270 ஆகும். நூலை பெற்று கொள்வதற்கு நூலாசிரியரை 8903179137 என்னும் கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person and text that says 'காவ்யா மாணவர் மாண்புகள் கப்பியறை வ. இராயப்பன்'
All reacti

No comments:

Post a Comment