Friday, 22 March 2024

பண்பாட்டின் அடையாளம் பண்டிகைகள்.

               பண்பாட்டின் அடையாளம் பண்டிகைகள்.

இதுவரை பத்து நூல்களை எழுதி, தமிழக அரசின் தமிழறிஞர் விருதினையும் பாராட்டினையும் பெற்றவர், இந்நூலாசிரியர்
திரு. செ. வின்சென்ட் அவர்கள்.
தமது பதினொன்றாவது நூலாகப் பல்சமய நாட்களும் பண்டிகைகளும் என்னும் இந்நூலை வெளியிட்டுள்ளார். நூலின் பெயர் இவ்வாறு இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அதிகப்பட்சமானக் கருத்துகள் திருவிவிலியத்தை அடியொற்றி, ஆய்து… தெளிந்து… ஆதாரப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளன.
திருவிவிலியத்தைப் பின்பற்றுபவர்கள் நாள், கோள், இராசி, ஜோதிடம் போன்றவற்றை நம்புவதுமில்லை, பின்பற்றுவதுமில்லை என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இந்நூலாசிரியர், திருவிவிலியத்தில், இவை அனைத்தும் எவ்வாறெயெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன, அவை எந்தெந்த முறையில் நம்பப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதை, மிகத் தெளிவான வசனங்களுடனும், ஆதாரப்பூர்வமான அட்டவணையுடனும் (பக்கம் 37,38,39) விளக்கியுள்ளார்.
இஸ்லாமியர்கள் நடத்தும் ஐந்து நேரத்தொழுகை, சூரியனின் உதயத்தையும் அதன் திசையையும் மையமாகக் கொண்டே நிர்ணைக்கப்படுகின்றன, அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளும் அவ்வாறே என்பதையும் சான்றாதாரத்துடன் (பக்கம் 40,41) எடுத்துரைத்துள்ளார்.
இதன் வாயிலாக, நாளும் கோளும் இராசியும் ஜோதிடமும் ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் பின்பற்றுவதல்ல மாறாக அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்களாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாக உணரலாம்.
இந்நூலில் கிறிஸ்துமஸ் பண்டிகைப் பற்றிய விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, ஓணம் ஆகிய பண்டிகைகள் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தும், இத்தேசத்தின் பண்பாட்டினைப் பிரதிபலிப்பவை என்பது நிதர்சனமான உண்மை.
மிகத்தீவிரமான வாசிப்பு, இடைவிடாத எழுத்து இவ்விரண்டையும் வாழ்நாள் இலச்சியமாகக் கொண்டவர் இந்நூசிரியர். இவரின் எழுத்துகளில் செந்தமிழ் நடையும் இலக்கிய நயமும் இருக்காது.
எனென்றால், எட்டாம் வகுப்பிற்குப் பிறகுப் பள்ளிப்படிப்பு எட்டாக்கனியானது இவருக்கு. எழுத்தோடு, ஓவியம், சிற்பம், பல்குரலிசை இவற்றில் கைதேர்ந்த கலைஞரிவர். எழுத்தை நேசிக்கும் அனைவரும், இவருக்கு உதவிக்கரம் நீட்டினால், இவரின் இலட்சியம் இமயத்தை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையோடு... வேண்டுகிறேன்… வணங்குகிறேன்… வாழ்த்துகிறேன்.

(இந்நூலைப் பெற்றுக் கொள்வதற்கு நூலாசிரியர் திரு செ. வின்சென்ட் அவர்களை தொடர்பு கொள்ள: 9751519114)
என்றும் சிநேகங்களோடு…
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை
கன்னியாகுமரி மாவட்டம்
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (youtube)
May be an image of 2 people and text that says 'பல்சமய நாட்களும் பண்டிகைகளும் கிறிஸ்துமஸ் தீபாவளி ரம்ஜான் 2024'

No comments:

Post a Comment