Monday, 25 December 2017

மானுடத்தின் மணிமகுடம்.

                                   மானுடத்தின் மணிமகுடம்.


இக்கட்டுரை புதிய தேடல் என்னும் மாத இதழில்(டிசம்பர் 2017 ) பிரசுரமாகியுள்ளது.

நான் சிறுவனாக இருக்கும் போது, ஆண்டுதோறும் ஓணம் மற்றும் கிறிஸ்மஸ் ஆகிய இரு பண்டிகைகளையும் எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
இவ்விருப் பண்டிகை நாள்களில் மட்டும்தான் வீட்டில் வயிராற அறுசுவை உணவும் பல்வகைப் பலகாரங்களும் கிடைக்கும். கூடவே நாள் முழுவதும் நண்பர்களுடன் சுதந்திரமாக விளையாடுவதற்கான அனுமதியும் அளிப்பார்கள்.

ஓணத்திற்கு அடையாளம், வீட்டின் அருகிலுள்ள மரங்களில் ஊஞ்சலும் வீடுகளின் முற்றத்தில் சிறிய சிறிய அத்தப்பூ களங்களுமே ஆகும். அதுபோல் கிறிஸ்மஸ்சிற்கு அடையாளம், வீடுகளின் முன்பு மின்னித் துலங்கும் நட்சத்திரங்களின் (ஸ்டார்) அலங்காரமும் முற்றங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறிய சிறிய புல்குடில்களும் ஆகும்.

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். என்றாலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கிய உடன், அவர்களின் வீடுகளின் முன்பு புல்குடில்கள் அமைத்து விடுவார்கள். அக்குடிலில் குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் விதத்தில் இயேசுகிறிஸ்துவின் சிறு சிறு பொம்மைகள், ஆட்டுக்குட்டிகள், பசுக்களின் பொம்மைகள், கன்னிமரியா உட்பட கிறிஸ்தவர்கள் புனிதர்களாகக் கருதப்படுபவர்களின் சொரூபங்கள் வரையிலும் வைக்கப்பட்டிருக்கும்.

அதன் மூலம்தான் இயேசுகிறிஸ்துவின் மகத்துவம் நிறைந்த பிறப்பைப் பற்றி பிறர் அறிந்து கொள்வதற்கு இயலும். அவர் மனித குலத்தின் இரட்சகராய் இப்பூவுலகில் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தார் என்ற தத்துவத்தை மிகவும் தத்துருவமாக அப்புல்குடில்கள் விளக்கி நிற்கும்.
அப்புல்குடில்கள் பார்ப்பதற்கு எவ்விதமானக் கவர்ச்சிகளும் அற்றவையாக இருக்கும். ஆடம்பரமான அலங்காரங்கள் இருக்கவே இருக்காது. பார்ப்பவர்களைப் பற்றியிழுக்கும் கருணை, இரக்கம், அன்பு, தியாகம், பக்தி ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாகவே அவை அமைக்கப் பட்டிருக்கும்.

கூடவே நவம்பர் மாதத்தின் கடைசி அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து வீடுகள்தோறும் சென்று பஜனை பாடுவதற்குத் தொடங்கி விடுவார்கள். அப்பஜனை ஒவ்வொரு நாளும் இரவில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டைக்கூட விட்டு வைக்காமல் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களின் வீடுகளிலும் பாடப்படும். அதனால் எப்பொழுது பஜனைப் படுவதற்கு வருவார்கள் என்ற எதிர்ப்பார்புடனே ஒவ்வொரு வீட்டாரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

அதுபோன்றே கிறிஸ்மஸ் வந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமோ கொண்டாட்டம். ஏனென்றால் வீட்டில் வரும் விருந்தினர்கள் விதவிதமான கேக் மற்றும் பல விதமானப் பலகாரங்களை வாங்கி வருவார்கள். கூடவே எங்கள் வீட்டிலும் பணியாரத்திலிருந்து தொடங்கி உண்ணியப்பம் வரைப் பலவிதமான பலகாரங்களைச் சில நாள்களுக்கு முன்பே செய்து, நாங்களும் செழிப்பாகச் தின்று விட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிப்போம். அது போலவே அயல் வீடுகளிலிருந்து எங்களுக்கும் வந்து சேரும்.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஓணம், கிறிஸ்மஸ் ஆகிய இரு தினங்களிலும் வீட்டைத் தவிர வெளியே கடைகளில் சென்று ஒருவர் கூட சாப்பிட மாட்டார்கள். அதைப் போன்று போதைப் பொருள்களை அருந்திவிட்டு தெருவில் அலைந்து திருபவர்களையோ, அட்டகாசம் செய்பவர்களையோ பார்க்கவே முடியாது. அவ்வாறு செய்தால் அதை பெரும் அவமானமாகவே அனைவரும் கருதுவார்கள்.

இதனால் கிறிஸ்மஸ் அல்லது கிறிஸ்தவர்கள் என்றாலே பிற மதத்தைச் சார்ந்த மக்கள் மத்தியிலும் ஒரு மகத்தான மரியாதை இருந்தது. அவர்கள் வழிபடும் பிதாமகன் இயேசு கிறிஸ்துவும் மானுடத்தின் மணிமகுடமாகவே மதிக்கப்பட்டு வந்தார்.

இவ்வளவு மேன்மையும் மகத்துவமும் நிறைந்த விழாவாக இருந்த கிறிஸ்மஸ் இன்று அதன் மகத்துவத்தின் அடிநாளத்திலிருந்து சற்றே விலகித்தான் செல்கிறதோ என்ற ஐயப்பாடுதான் எழுகிறது.
ஏனென்றால் மானுடத்தின் மணிமகுடமாகத் திகழும் அந்தப் பிதாமகனின் எளியப் பிறப்பை சித்தரிக்கும் விதமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீட்டு முற்றத்திலும் எவ்விதப் பணச் செலவுமின்றி, மிக எளிமையாக அமைக்கப்பட்டு வந்த புல்குடில்கள், இன்று பொது இடங்களில் பல லட்சம் பணத்தைச் செலவழித்து, வான்முட்ட உயர்ந்த போட்டிக் கோபுரங்களாக மாற்றியுள்ளனர். அதோடு பொதுமக்களின் காட்சிப் பொருளாகவும் மாற்றி, வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரு தலை சிறந்த உத்தியாக்கியுள்ளனர்.
இதனால் இதுவரை மக்கள் மனங்களில் எளிமையின் அடையாளமாக, கருணையின் வடிவமாகக் கருதப்பட்டு வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் தத்துவம், இளைய மற்றும் புதிய தலைமுறையினருக்கு திரித்து உணர்த்தப்படுவதாக மாறிப்போகுமோ என்ற பயப்பாடு பழம் பெரும் கிறிஸ்தவ ஞானிகளின் மனங்களில்கூட எழத்தொடங்கியுள்ளது என்பது எதார்த்தமான உண்மை.

அதைப் போன்றே அக்காலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடுகளிலும் பாடப்பட்டு வந்த பஜனை முறையும் இன்று அடியோடு, அதன் அடிப்படை நோக்கத்தை மறந்து திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான நிஜம்.

ஏனென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவச் சபையைச் சார்ந்தவர்களும் அவரவர் சபையினரின் வீடுகள் எங்கிருக்கிறது எனத் தேடிப் பிடித்து, அவர்களின் வீடுகளில் மட்டும் சென்று ஒரேயொரு நாள் மட்டும் பஜனை பாடும் பழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். பிற மதத்தினரின் வீட்டு முற்றத்தில் நின்று பஜனைப் பாடுவதை முற்றிலும் மறந்து வருகிறார்கள். அதனால் முந்தைய காலங்களில் பிற மதத்தினரோடு கொண்டிருந்த அணுகு முறைக்கும் குந்தகம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது என்பதை நடுநிலையான கிறிஸ்தவர்கள் உணரத்தான் செய்கிறார்கள்.

இவற்றைப் போன்றுதான் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள்களை அருந்தி விட்டு வீட்டிலும் ரோட்டிலும் ஆர்ப்பாட்டம் செய்தால்தான் ஓணமும் கிறிஸ்மஸ்சும் வந்து விட்டது என அறிவார்கள் என ஆண்களும் இளம் தலைமுறையிலும் நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். இது உண்மை என்பதை நிருபிப்பதற்கு இன்றைய டாஸ்மாக் கடைகளின் வியாபார விகிதமே சான்றாகும்.
டாஸ்மாக் கடைகளில் கிறிஸ்மஸ்சிற்கு முந்தய நாள் விற்பனையும் அன்றைய நாள் விற்பனையும் பிற நாள்களின் விற்பனையை விட பத்து மடங்கு அதிகம் என்பது அவற்றின் விற்பனை கணக்கீடு தரும் புள்ளி விவரம். இதே நிலைதான் ஓணப் பண்டிகையன்றும் நடைபெறுகிறது என்பதொன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.

இப்படி கிறிஸ்மஸ் பண்டிகையானது தற்போது வீடுகளில் புல்குடில் அமைப்பதிலிருந்து தொடங்கி… பஜனைப் பாடுவதில் தொடர்ந்து… கொண்டாட்டம் வரையிலும் பல்வேறு பரிணாம மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அபரிதமாக உயர்ந்துள்ளது. இம்மாற்றங்களும் உயர்வுகளும் ஒரு போதும் அந்த மானிடத்தின் மணிமகுடத்தின் மாண்புக்கு மாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்றால் மட்டுமே கிறிஸ்தவத்தின் விழுதுகள் மேலும் மேலும் விடர்ந்தெழும்.

Monday, 18 December 2017

கன்னியாகுமரி : ஆபத்தை உருவாக்கும் ‘ஓகி’ அரசியல்!

நேற்று (27-12-2017) ietamil E Journal இல் வெளியான எனது கட்டுரை.
கன்னியாகுமரி : ஆபத்தை உருவாக்கும் ‘ஓகி’ அரசியல்!
கடல் தொழில் செய்யும் மக்களாக இருந்தாலும் மலையோர மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான நிவாரணத் தொகையும் இழப்பீடும் வழங்க வேண்டும்.

முனைவர் கமல. செல்வராஜ்
காலையில் எழுந்து கடலுக்குப் போகணும், விடிஞ்சதும் ரப்பர் பால் வெட்டப் போகணும், வெயிலுக்கு முன்னாடி குலைத்து நிற்கும் வாழைக் குலைகளை பொதிந்து விடணும் என அவரவரின் தொழிலுக்கு ஏற்ப மறு நாள் வேலைகளை மனதிற்குள் பதியம் செய்து விட்டு படுக்கைக்குச் சென்ற குமரி மக்களை நடுராத்திரியில் கொள்ளை மழையும் கொடும் காற்றும் ஓகி புயலாக அடித்து நொறுக்கி தாண்டவமாடி சரியாக பதினைந்து நாள்கள் உருண்டோடிவிட்டன.
ஓகியின் கோரத் தாண்டவத்தில் தடம் பறிந்து போன பணக்கார மரமான ரப்பர் மரங்கள் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகம். குலைத்ததும், குலைக்கும் பருவத்தை எட்டியதுமாக சுமார் முப்பது லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை வாழை மரங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை கடல் தொழிலை நம்பி வாழும் மக்களில் காணாமல் போன மக்களின் எண்ணிக்கை அந்தக் கடலம்மைக்கு மட்டமேத் தெரியும். இரவை பகலாக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்ற மின்கம்பங்கள் இடைமுறிந்து போனது 16 ஆயிரத்திற்கும் அதிகம்.
ஒட்டு மொத்தத்தில் மூன்று நாள்கள் குமரி மாவட்டம் இருளின் கோரப்பிடியில் மூழ்கித் தவித்தது. பதினைந்து நாள்களாகியும் இன்னும் மின்சாரம் எட்டிப் பார்க்காத மலையோரக் கிராமங்களும் வீடுகளும் எண்ணிலடங்காதவை.
கடலுக்குப் போனவங்க எப்பத்தான் திரும்பி வருவாங்க என்ற தீராத ஏக்கத்தில் கடலோர மக்கள். கட்டான கரண்டு இனி எப்பத்தான் வரும் என்ற எதிப்பார்ப்பில் மலையோர மக்கள். தடம் பறிந்து போன ரப்பருக்கும், முறிந்து போன வாழைக்கும் எப்பத்தான் நிவாரணம் கிடைக்கும் என்ற தாகத்தில் விவசாயிகள்.
மாநிலத்தின் முதலமைச்சர் முதல் மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் வரை வந்தாச்சு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் வழக்கம் போல் வந்து ஆறுதல் கூறியாச்சு. குஜராத் தேர்தல் முடிந்ததாலும், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதாலும் ஒருவேளை பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட வந்து போகலாம். யார் வந்து என்ன பயன் என்பது மட்டுமே மக்களின் கேள்விக்குறி.
கடலில் சென்று மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்சம் பணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து விட்டது. அதோடு காயமடைந்தவர்களுக்கும், சேதமடைந்த படகுகளுக்கும் போதிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டார்கள்.
ஆனால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தாக்கியும், மரம் முறிந்து விழுந்தும் சுமார் பத்துக்கும் அதிகமானோர் இன்னுயிர் நீத்துள்ளனர். கூடவே பலர் பெரும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். அவர்களுக்குக் கடலோர மக்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. இந்தப் பாகுபாடு குமரிமாவட்ட மக்களிடையே பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடலோரப் பகுதி மக்களை ஒன்றிணைத்து அந்தந்தப் பகுதியிலுள்ள பாதிரிமார்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். கடைசியாக குழித்துறை ரயில்வே நிலையத்தில் பிரமாண்டமான மறியல் போராட்டத்தையும் நடத்தி முடித்தார்கள். அதனால் அவர்கள் கேட்டவைக்கு வாக்குறுதி கிடைத்து விட்டது.
அந்த அளவிற்கு பிற மக்களை ஒன்றிணைப்பதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் யாரும் முன்வரவில்லை. அதனால் அவர்களுக்குப் போதிய நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பது அந்த மக்களின் குமுறல். இது மாவட்டத்தில் இருக்கும் சில சாதி அமைப்புகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி வெளிப்படையாகச் சாதி ரீதியாக வினா எழுப்பி போஸ்டர் யுத்தம் நடத்தும் அளவிற்கு வந்துள்ளது. இது மாவட்டத்தில் மிகப் பெரிய ஆபத்தை உருவாக்குமோ என்ற அச்சத்தைக்கூட ஏற்படுத்தியுள்ளது.
பதினைந்து நாள்கள் கடந்த பிறகும் கண்டுகொள்வார் யாரும் இல்லை என்ற விசாயிகள், அவர்களின் கூட்டமைப்பின் சார்பில் குமரிமாவட்டத்தில் கடையடைப்பு (பந்த்) போராட்டத்தை அறிவித்தனர். அப்போராட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, தி.மு.க, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் ஆதரவுத் தெரிவித்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது.
பகல் நேரத்தில் போலீசாரின் துணையோடு அரசு பஸ்களை இயக்குவதற்கு முற்பட்டபோது கூட வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து சுமார் முப்பதிற்கும் அதிகமான பஸ்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் அரசு தானே முன்வந்து நடத்தும் பந்த் போல், எதிர் கட்சிகள் நடத்திய பந்த் முழு வெற்றி பெற்றது.
இனியும் அரசு விழித்துக் கொண்டு உயிர் இழப்பு ஏற்பட்டவர்கள் கடல் தொழில் செய்யும் மக்களாக இருந்தாலும் மலையோர மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான நிவாரணத் தொகையும் இழப்பீடும் வழங்க வேண்டும். மட்டுமின்றி ரப்பர் மரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு அரசு தற்போது அறிவித்திருக்கும் ஒரு ஹெட்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்பது மிகவும் சொற்பமானத் தொகையே ஆகும். ஏனென்றால் ரப்பர் மரத்தைப் பொறுத்த வரை அதை நடவுச் செய்யது பின்னர் குறைந்தது ஏழு ஆண்டுகள்வரை எவ்வித வருமானமுமின்றி பராமரித்தால் மட்டுமே அதிலிருந்து வருமானம் பெறுவதற்கு முடியும். வருமானம் பெறுவதற்குத் தொடங்கினால் சுமார் பதினைந்திலிருந்து இருபது ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
அதனால் குறைந்த பட்சம் கடலில் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் சாதாரணப் படகுக்கு வழங்கும் அளவிற்காவது, ரப்பர் மரத்திற்கும் வழங்க வேண்டும். அதுபோன்றே வாழை விவசாயிகளுக்கும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக நல்ல முறையிலான நஷ்டஈடு வழங்க வேண்டும்.
பெரும் இழப்பீடு ஏற்பட்டிருக்கும் வாழை, ரப்பர் விவசாயிகள் வங்கிகளிலிருந்து, விவசாயக் கடன் பெற்றிருந்தால் அக்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்வதற்கான புதிய விவசாயக் கடனும் வழங்க வேண்டும். என்றால் மட்டுமே விவசாயிகளை ஓரளவிற்குக் காப்பாற்றிக் கொள்வதற்கு முடியும்.
மேலும் புயல் வந்து 15 நாள்கள் கடந்த பின்பும் மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இருக்கும் பகுதிகளில் மிக விரைவாக மின்சாரம் வழங்குவதற்கு போர்கால துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வசதியின்மையினால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது. இவற்றுடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் ரோடுகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைப்பதற்கும் அரசும் அதிகாரிகளும் துரித நடவடிக்கை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும்.
இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு அரசு கடலோர மக்களுக்கும் கரையோர மக்களுக்கும் வழங்கும் நிவாரணத் தொகைக்கும் நஷ்ட ஈட்டிற்கும் பாரபட்சம் இருப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்து மக்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமையை அடியோடு நீக்க வேண்டும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

Monday, 13 November 2017

ஒரு கொலை எழுப்பும் கேள்விகள்!

டெல்லி பள்ளியில் நடந்திருக்கும் ஒரு கொலை, நமது கல்வி முறை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அது பற்றி இங்கே கருத்தை பகிர்கிறார், முனைவர் கமல.செல்வராஜ்.


முனைவர் கமல. செல்வராஜ்
பள்ளிக் கூடங்கள் பண்பாட்டின் கருவூலங்கள். வகுப்பறைகள் அறிவின் பிறப்பிடங்கள். இவை இரண்டும் மனித வாழ்க்கையை பதப்படுத்திப் பக்குவப்படுத்துபவை.
இங்கிருந்துதான் அன்பும், அறிவும், அறமும் அரும்ப வேண்டும். என்றால்தான் ஆக்கப்பூர்வமான எதிர்கால சமுதயத்தை உருவாக்குவதற்கு இயலும். ஆனால் சமீபகாலமாக நமது நாட்டில் பள்ளிக் கூடங்களில் நடக்கும் சிலக் கொடூரச் சம்பவகளைப் பார்க்கும் போது உள்ளம் பதறிப் போகிறது.
அப்படிப்பட்டச் சம்பவங்களில் ஒன்றுதான் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரயான் சர்வதேசப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவன் பிரதியுமன்(வயது 7) மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது. நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை உருவாக்கியிருக்கும் இக்கொலை சம்பவத்தின் காரணிகளை அறிந்த ஒவ்வொருவரும் பேரதிர்ச்சி அடையாமலிருக்க இயலாது.
கொலை நடந்தவுடன் உள்ளூர் போலீசார், அப்பள்ளியின் பேருந்து நடத்தினர் அசோக் குமார் மற்றும் இருவரை கைது செய்துள்ளனர். அதோடு அசோக் குமார், மாணவனைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவனின் பெற்றோர் தொடர்ந்து நடத்திய வற்புறுத்துதலினாலும், போராட்டத்தினாலும் அவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து விசாரணையில் திருப்பம் ஏற்பட்டு உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.
அக்குற்றவாளி வேறு யாருமல்ல, அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் 16 வயதான மாணவன் ஒருவன்தான். அவன் எதற்காக இக்கொடூரக் கொலையைச் செய்திருக்கிறான் என்பதுதான் விசித்திரமானது.
அப்பள்ளியில் நடக்கவிருந்த தேர்வைத் தள்ளி வைக்கவும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறிதளவுகூட ஈவிரக்கமின்றி இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.
பள்ளிக் கூடங்களில் தேர்வு நடைபெறுவதும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டப்படுவதும் இயல்பான ஒரு நடைமுறையே. ஒருவேளை இந்த இரண்டு விஷயங்களும் எதேனும் ஒரு காரணத்திற்காக ஒரு நாள் மாற்றி வைத்தாலும், அதற்குப் பதில் இன்னொரு நாள் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இத்தனை கொடூரமான முறையில் கொலை செய்யத் துணிந்திருக்கும் ஒரு மாணவனுக்கு இது தெரியாத விஷயமாக இருக்காது. அதனால், கொலை செய்தவன் இவனாக இருந்தாலும், கொலைக்கானக் காரணம் இதுவாகத்தான் இருக்குமா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சி.பி.ஐ. போலீசாரின் விசாரணை நுணுக்கத்தாலும், உளவியல் அணுகுமுறையாலும் இந்தக் கொலையாளி மாணவனை இன்னும் மிகத் துல்லியமாக விசாரித்தால், பல முடிச்சுகள் அவிழ்வதற்கும், வேறு காரணங்கள் புலப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.
ஒருவேளை அம்மாணவன் கூறியிருப்பது போல் தேர்வும், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் காரணமாக இருந்தால், பள்ளிகளில் இப்படிப் பட்ட நடைமுறைகள் இருப்பது அர்த்தமற்றதாக அல்லவா உள்ளது?
பள்ளிகளில் தேர்வு நடத்துவது என்பது மாணவர்களின் கற்றல் அடைவுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பயமுறுத்துவதற்காகவோ, பழிவாங்குவதற்காகவோ இருக்கக் கூடாது. ஆனால் இன்றைய கல்வி முறை அதற்கு இடம் கொடுக்கிறதா? என்றால் அது இம்மியளவிற்கும் இல்லையென்றே கூறலாம்.
மாணவர்களின் மதிப்பீடுகளை இழக்கச் செய்து, வெற்று மதிப்பெண்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கும் கல்வியாகவும், கல்விக் கூடங்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் மாறி வருகிறது நம் நாடு என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
இந்த நடைமுறையை உடனடியாக நம் நாட்டிலிருந்தும், கல்வி முறையிலிருந்தும் மாற்றியாக வேண்டும். மதிப்பெண்ணிற்குப் பதில், மதிப்பீடுகளை வளர்க்கும் கல்விக்கு முக்கியத்தும் கொடுத்தாக வேண்டும். மாணவர்கள், பள்ளிப் பாடங்களை மனப்பாடம் பண்ணி மதிப்பெண்கள் பெறும் தேர்வு முறைகளை மாற்றி, அவர்களின் தனித்திறன்களைச் சோதித்தறியும் தேர்வுகளாக மாற்றவேண்டும்.
அதுபோலவே பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்கள் நடத்துவதும், மாணவர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்றோருடன் பகிர்ந்து கொண்டு, அதில் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை பெற்றோர் முன்னிலையிலும், மற்றவர்கள் மத்தியிலும் வெறுமனே கொச்சைப் படுத்துவதற்காக மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, மாணவர்களின் பிரச்னைகளைப் பெற்றோரிடம் கலந்தாலோசித்து, அப்பிரச்னைகளுக்கு நல்ல ஆரோக்கியமானத் தீர்வை உருவாக்கும் கூட்டமாக அமைய வேண்டும்.
இதைத் தவிர்த்து வீட்டிலிருக்கும் பெற்றோரைப் பள்ளியில் வரவழைத்து, மாணவர்களை, ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகள் போல் பாவித்து, பழிசுமத்தும் நடைமுறைப் போக்கை பள்ளிகளும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி குறை கூறவோ, பழிசுமத்தவோ செய்தால், அதனை பெற்றோர்களும் அப்படியே நம்பி விடுகின்றனர். உடனே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏதோ கொடும் குற்றம் புரிந்த குற்றவாளியாக கருதுகின்றனர். இச்செயல் மாணவர்களின் மனதில் ஒரு பழிவாங்கும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
அதனால் ஏற்படும் மன அழுத்தவும், பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போகும் போதும் சில மாணவர்கள் இதுபோன்ற எதிர்வினை செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிறது.
எது எப்படியாயினும் இக்கொடூரக் கொலையைச் செய்திருக்கும் மாணவனை, அவனது வயதைக் காரணம் காட்டி சும்மா விடுவது அல்லது சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துப் பராமரிப்பது என்பது எவ்வகையிலும் நியாயமானதன்று. இவன் செய்திருக்கும் குற்றம் உறுதியாக நிரூபணமாகியிருக்கும் பட்சத்தில், வழக்கமான நமது கோர்ட் நடைமுறைப்படி அதிக காலம் விசாரணைக்காக இழுத்தடிக்காமல், உடனடியாக கடுமையானத் தண்டனை வழங்கியே தீர வேண்டும்.
அதுவே மற்ற மாணவர்களுக்கும் ஒரு பெரும் பாடமாகி, இது போன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கு இயலும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ்,  கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! தமிழில் இவரது கவிதை, கட்டுரை தொகுப்புகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)


Monday, 30 October 2017

அரசியல் கட்டுரை.

IE tamil e journal இல் பிரசுரமாகியுள்ள எனது அரசியல் அலசல் கட்டுரை.
கமல்ஹாசன் - ரஜினிகாந்த் ஆகிய இருவரில் யாருக்கு அரசியல் வாய்க்கும்? அரசியல் தகுதிகள் யாரிடம் இருக்கின்றன? என…
IETAMIL.COM

கமல. செல்வராஜ்
தமிழகம் நல்ல அரசியல் தலைமைகளின்றித் தள்ளாடும் நேரமிது. தமிழகத்திலுள்ள அரசியல் ஆர்வமிக்க இளைஞர்கள் மற்றும் தூய்மையான அரசியலை நாடும் நடுத்தர முதியவர்கள், நல்ல நிழல் தரும் அரசியல் ஆலமரத்தைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றனர்.
எனவே தமிழகத்திற்கு மாற்று அரசியல் கட்சியும், பன்முகத் தன்மை கொண்ட மாற்றுத் தலைமையும் தேவைப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மாற்று அரசியல் கட்சி தொடங்குவது நீயா? இல்லை நானா? என்ற போட்டியில் மீண்டும் இரண்டு பிரபல சினிமா நடிகர்கள் அரசியல் களம் இறங்கியுள்ளனர். அவர்கள்தான் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்.
இவர்களில் ரஜினிகாந்த் ஓரளவிற்கு தமிழகத்திலுள்ள மக்களின் மனநிலையை பதம் பார்த்து விட்டு, தனியாக அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்ற முடிவோடு ஒதுங்கி விட்டார் என்றே தோன்றுகிறது. அது அவருக்கும் தமிழகத்திற்கும் நல்லதாகக் கூட இருக்கலாம்.
 kamal haasan,rajini kanth, kamala.selvaraj, tamilnadu politics
முனைவர் கமல.செல்வராஜ்
இன்னொருவர் கமல்ஹாசன். தமிழக திரையுலகில் சிவாஜிகணேசனுக்கு அடுத்து நடிப்பில் தன்னை மிஞ்சும் அளவிற்கு எவரும் இல்லை என்பதை நிரூபித்தவர். தான் இவ்வளவு நாள் நடித்துள்ள சினிமாக்கள் மூலமோ, பொது நிகழ்வுகள் மூலமோ, இதுவரை எவ்வித அரசியல் வாடையும் காட்டாமல் இருந்தவர்.
அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கமல் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணமோ, எதிர்பார்ப்போ கடுகளவுக்கும் இருந்ததில்லை என்பது திண்ணம். தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாக்கி அரசியல் களத்தில் புகுந்து, தமிழகத்தை ஆட்சி செய்யலாம் என்ற அவா அவரை ஆட்கொண்டுள்ளது.
அதற்காக அவர் முதல் முதலில் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தமிழக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாகக் குறை கூறி சற்று சீண்டிப் பார்திருப்பதுதான்.
அதோடு கேரள மாநில முதல்வரை சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தியிருப்பதும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவாலைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பதும் அவர் அரசியலுக்கு புதுவரவாக வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கமல் அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்பு, இதற்கு முன் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த இருபெரும் நடிகர்களின் வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்க்க வேண்டும். அவர்கள்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும்.
இவர்களில் எம்.ஜி.ஆர். தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்தவரல்ல. மாறாக அவரது குணத்தால் மக்களைக் கவர்ந்தவர். அதனால் அவர் அரசியலில் புகுந்த உடனே மிகச் சுலபமாக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவதற்கு முடிந்தது.
ஆனால் சிவாஜிகணேசன் அப்படியல்ல, அவர் நடிப்பில் தன்னிகரற்றுத் திகழ்ந்தார். ஆனால் மக்களோடு ஒன்றிணைந்து பழகுவதிலும் செயல்படுவதிலும் சற்று ஒதுங்கியே இருந்தவர். அதனால் அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் எதையும் சாதிக்க முடியவில்லை. பின்பு தனிக்கட்சி ஆரம்பித்த போதும் எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நாடறிந்த உண்மை.
அதுபோலவேதான் கமலும் நடிப்பில் பெரும் புள்ளியாக இருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எந்த அளவிற்கு அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார் என்பது ஒரு கேள்விக் குறியே ஆகும்.
ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து, அவர் அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவருக்கு இரண்டு மிகப் பெரியக் காரணிகள் வலுவாக இருக்க வேண்டும். ஒன்று அவர்களின் ரசிகர் மன்றங்கள் மிகவும் வலுவானதாகவும், அர்ப்பணிப்பு தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். இரண்டு பொதுமக்கள் மத்தியில் நடிப்பையும் கடந்த ஒரு அன்னோன்னியமான நடைமுறை பழக்க வழக்கம் இருக்க வேண்டும். இவையிரண்டும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.
கமலைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரணிகளும் வலுவாக உள்ளனவா? என்றால் அதன் பதில் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கும் ரசிகர் மன்றங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ரஜினிக்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்காக ஆத்மார்த்தமாக உயிரையே தியாகம் செய்யும் அளவில் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் கமலைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் வலுவான ரசிகர்கள் இருகின்றார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் எதற்காகவும் தங்களை அர்ப்பணம் செய்யும் ரசிகர்கள் இருப்பார்களா என்றால் அது சற்று ஏமாற்றம் அளிப்பதாகத்தான் இருக்கும்.
இதே நிலைதான் பொதுமக்கள் மத்தியிலும் கமலுக்கு இருக்கிறது. ரஜினியென்றால் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை, அவர்களை அறியாமலே, அவர் மீது ஒரு பிரியம் உடையவர்களாகவே காணப்படுகின்றனர். இப்படியான ஒரு பிடிப்பு கமலிடம் பொதுமக்களுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் ஏமாற்றமே.
இத்தனை ஆண்டுகளில் பொதுமக்களின் எந்தப் பிரச்னைக்காக கமல் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்? அல்லது பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் தமிழகத்தில் என்னென்ன சமூக செயல்பாடுகளை நடத்தி வருகிறார் என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பமாட்டார்களா? இதற்கெல்லாம் கமல் என்னப் பதில் கூறப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒருவேளை தமிழகத்திலிருக்கும் தனது ரசிகர் மன்றங்களை வைத்து, அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என கமல் நினைத்து விட்டால் அதுவும் முன்பு போல் அவருக்குக் கை கொடுக்காது. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள், முன்பு போல் முழுமையாக ரசிகர் மன்றங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.
அதற்குக் காரணம் முன்பு சினிமாவும் ரசிகர் மன்றங்களும் மட்டும்தான் இளைஞர்களின் பொழுது போக்காக இருந்தன. தற்போது தகவல் தொழில் நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் இளைஞர்கள் அவற்றின் மூலம் தங்களின் பொழுதைப் போக்கிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்களே தவிர ரசிகர் மன்றங்களில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தை ஆட்சி செய்யலாம் எனக் கனவு காண்பது, எட்டாத பழத்திற்கு விடப்படும் கொட்டாவிதான். இதை காலம் உணர்த்தும்.
(கட்டுரையாளர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! சமூக கேடுகளை சாடும் கவிதை, கட்டுரை தொகுப்புகளின் ஆசிரியர்! பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

Friday, 27 October 2017

வாழ்வாங்கு வாழ்ந்தோருக்கு வந்தனம்...!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அம்பலக்கடையை சார்ந்த எழத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் எழுதியுள்ள பிறப்பு வாழ்க்கை இறப்பு என்னும் நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
என்பது வள்ளுவன் வாக்கு. இவ்வாக்கின் உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மிக உன்னத நிலையை அடைவார்கள் என்பது திண்ணம்.
இறைவன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது அவரின் சாயலில் படைப்பார் என்பது திருவிவிலியக் கூற்று.
இவ்வாறு இறைவனின் சாயலில் படைக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் மாக்களை ஒத்த வாழ்க்கையை வாழ்ந்து எவ்வித அடையாளமுமின்றி மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றனர். ஒரு சிலர் மட்டும் மேன்மைப் பொருந்திய வாழ்க்கை வாழ்ந்து என்றும் மங்காத வரலாறாக மாறுகின்றனர்.
மேன்மைப் பொருந்திய வாழ்கை வாழ்வோரின் வாழ்வும், கீர்த்தியும் அவர்களின் மறைவிற்குப்பின், இவ்வையகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். கூடவே, பிற்காலச் சமுதாயத்திற்கு அவர்கள் வழிகாட்டிகளாகவும் திகழ்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அவ்வகையில் இந்தியாவிலிருந்து தொடங்கி இத்தேசம் முழுவதிலுமுள்ள மிகச் சிறந்த கிறிஸ்தவத் தத்துவ வித்தகர்களின் வாழ்க்கையை தனது அறிவிற்கும் மிகுந்த தேடலுக்கும் எட்டிய வகையில் பிறப்பு வாழ்க்கை இறப்பு என்னும் புத்தகமாக ஆக்கியளித்துள்ளார் எழுத்தாளர் திரு. சி. வின்சென்ட் அவர்கள்.
எழுத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் இதற்கு முன்பு விவிலியம் மற்றும் கிறிஸ்தவம் சார்ந்த ஏழு புத்தகங்களை எழுதிப் பிரசுரித்த அனுபவம் பெற்றவர்.
அவ்வேழு புத்தகங்களும் கிறிஸ்தவ மேதாவிகள், கல்வியாளர்கள், பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்ததோடு, எட்டாவதாக இந்நூலையும் எழுதுவதற்கான உந்துதலையும் உருவாக்கியுள்ளன.
அவருக்குக் கிறிஸ்தவம் மீதிருக்கும் மிகத் துல்லியமான நம்பிக்கையும், பரந்துபட்ட வாசிப்பும், ஆழமான அறிவும் இருநான்கு புத்தகங்களுக்கு அதிபதியாக்கியுள்ளது.
ஆரம்பக் காலத்தில் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கிய அவரது எழுத்துப் பணி, இன்று அவரை நாலிரு புத்தகங்களின் பிதாமகனாக மாற்றியுள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, கற்றறிந்த பெரியவர்களைக் கூட வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.
இந்நூல் அன்று முதல் இன்று வரை கிறிஸ்தவத்திற்காகவும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களை உலகம் முழுவதும் எடுத்தியம்புவதற்காகவும் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தியாகச் சீலர்களின் வாழ்க்கையை பறைசாற்றுவதாக உள்ளது.
தொடர்ந்து வாசிப்பையும் எழுத்தையும் இரு விளிகளாக் கொண்டுள்ள எழுத்தாளர் சி. வின்செனட் அவர்களின் வாழ்க்கையும், நாளைய கிறிஸ்தவ மாமனிதர்கள் வரிசையில் ஒரு வரலாறாக மாறும் என்பது உறுதி.
அதனால் இதுவரை அவரோடு கைகோத்து, அவரது படைப்புகளுக்கு பேராதரவும் பெரும் உதவியும் செய்து வந்துள்ள அனைவரும் தொடர்ந்து, அவருக்கு ஆதரவுக் கரங்களை நீட்டி, மென்மேலும் அவரது இப்புனிதப் பயணம் மேன்மையுற ஊன்று கோலாயிருப்போம் என உறுதியளிப்போம்.
நூலைப் பெறுவதற்குத் தொடர்வு கொள்ளவும்...
சி. வின்சென்ட்
9751519114

Wednesday, 9 August 2017

விடுதலைப் போராட்டமும் படைப்பாளிகளும்

விடுதலைப் போராட்டமும் படைப்பாளிகளும்
                                
  
நீர்வளம், நிலவளம், தொழில் வளம் என எத்தன வளங்களுண்டோ
அத்தனை வளங்களும் கொட்டிக் கிடந்தது இந்தியப் பெரும் நாட்டில். இதனை
என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

என்னும் மருதகாசியின் பாடல் வரிகள் மூலம் நம்மால் நன்குணர்வதற்கு இயலும்.
     
  விவசாயமும், விளைப் பொருட்களும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு சான்றாதாரங்களாகத் திகழ்ந்தன என்பதற்கு
             “மாடுகள் கட்டிப் போர் அடித்தால்
             மாளாது செந்நெல் என்று யானைகள்
             கட்டிப் போரடித்தத் தமிழகம்
என்னும் பாடல் வரிகள் மேலும் இதற்குச் சான்று பகிர்ந்து நிற்கின்றன.
     இலக்கியங்கள் ஒரு நாட்டின் வளத்தையும், அந்நாட்டு மக்களின் வாழ்வியல் பிரதிப்பலிப்புகளையும் எடுத்தியம்புவதோடு மட்டும் நின்று விடவில்லை. அந்நாட்டில் எழும் அரசியல் மாற்றங்களையும் சமூகச்  சவால்களையும் எதிர் கொள்வதிலும் எடுத்தியம்புவதிலும் பெரும் பங்காற்றியுள்ளன.
     அவ்வகையில் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், அரசியல், சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் ஆகியவைப் பற்றியும் அடையாளப் படுத்துவதற்கு இலக்கியம் தலைசிறந்த ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.
பெண்களுக்குப் பேரழகும் நாட்டிற்கு பெரும் செல்வமும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதற்கிணங்க, அத்தனை வளங்களையும், செல்வச் செழிப்பையும் கண்ட அயல் நாட்டினர் இந்தியாவின் மீது பெரும் மோகம் கொண்டனர்.
     அவர்களின் தந்திரமும் புத்தி சாதுர்ணியமும் நம் நாட்டு சிற்றரசர்களின் சிந்தையைச் சிதைத்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி அடிமைப் படுத்துவதற்கு வழிகோலின. அதன் விளைவு சுமார் இருநூறுக்கும் மேலான ஆண்டுகள், அன்னியர்களின் ஆட்சியில் அடிமைகளாய் நம்மவர்கள் மண்டியிட்டனர்.
     மண்டியிட்டவர்கள் மாண்டுபோன பின்னர் உயிர் பெற்ற வீரமும் தீரமும் கொண்ட இளயப் பாரதப் பிரம்மாக்களிடையே கொளுந்து விட்டெரிந்தது சுதந்திர நெருப்பு.
     அதன் வெளிப்பாடு, சுதந்திரப் போராட்டங்களாக வெடித்தன. ஆற்றல் மிக்கப் போராளிகளின் எழுச்சி மிக்க தீப்பொறிப் பேச்சுகளும், வாள் முனைகளையே தோற்றுவிக்கும் பேனாமுனை எழுத்துகளும், சத்தமின்றி சாதிக்கும் சத்தியாக்கிரங்களும் அன்னிய ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தன. கூடவே நம் நாட்டை விட்டே வெளியேறவும் வைத்தன.
     இப்போராட்டங்களில் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் வேகத்தையும் தூண்டி விடுவதற்குக் பெரும் காரணமாக இருந்தது பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளேயாகும். அப் படைப்புகள், வீரியமிக்க கவிதைகளாகவும், உணர்ச்சி மிக்க கட்டுரைகளாகவும், ஆற்றல் மிக்க கதைகளாகவும் வடிவம் பெற்றன.
     அப்படிப்பட்டப் படைப்பாளர்களையும் அவர்கள் தம் படைப்புகளையும்  நினைவேற்றுவது இந்தச் சுதந்திரத்தின விழாவின் பெரும் பேறாகும். நமது இளையச் சமுதாயம் சுதந்திரத்திரப் போராட்டத்தின் எவ்விதத் தாக்கத்தையும் அறியாமல், அதன் முக்கியத்துவத்தை உணராமல், தற்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுவிட்சமான வாழ்கையைப் பெரிதாகக் கருதுகின்றனர்.
     அதனால் ஆண்டுக்கு ஆண்டு, நாளுக்கு நாள் இன்றைய இளம் தலைமுறையினரிடையே தேசப்பற்றின்மையும் தேசத்தலைவர்களை மதிக்கும் பண்பாடின்மையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
     அதனால்தான் கல்வி நிறுவனங்களிலிருந்து, திரையரங்குகள் வரை  தேசியக் கீதத்தை இசைப்பதற்கும், தேசியக் கொடியை மதிப்பதற்கும் நீதிமன்றங்கள் உத்தரவுப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்பட்டிருக்கிறோம்.
     இன்றைய இளையச் சமுதாயத்தினரும் சுதந்திரத்தின் வலியை உணர வேண்டும் என்பதற்காக இதோ ஒரு படைப்பாளி இப்படியொரு உணர்ச்சிப் பூர்வமானப் பாடலைப் படைத்துள்ளார்.  
சும்மாவா வந்தது?
சுதந்திரம் என்பது
சும்மாவா வந்தது?

எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை
                                             
                                                                                                 (சும்மாவா)
ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சுவார் பெரியோர்
மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்
இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு
இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை
                                                                                                       (சும்மாவா)
                                                               
போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்
பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்
அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க
தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை
     (சும்மாவா)
     
 இப்பாடலின் பொருளை ஒவ்வொரு இளைஞர்களும் தங்களின் இதயங்களில் இதமாகப் பதியம் செய்ய வேண்டும்.
     தமிழகம் முழுவதிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களும் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். அவர்களில் குமரிமாவட்டத்தைச் சார்தவர்களின் பங்களிப்பும் பார் போற்றும் வண்ணம் இருந்தது. அவர்களில் வீரன் செண்பகராமனின் பங்களிப்பானது படிப்போரைப் பரவசமடையச் செய்வதாகும்.
     திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் பெயரும் புகழும் மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலையே பேரறிவும், பெரும் ஆற்றலும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டிருந்தது.
     அதனால் வீரத்தோடும் தீரத்தோடும் வளர்ந்தார். தனது பதினேழாவது வயதில் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு தானாகவே அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்து கொண்டே இந்தியாவில் நடக்கும் அன்னிய நாட்டினரின் கொடூரச் செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.
     அவர் அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் தன் தாய் நாட்டு மக்கள் அந்நியரால் அடிமைப்படுத்தப் படுவதை, அவரால் சிறிதளவும் பொறுத்துக் கொள்ள இயலவில்லைஅதனால் அவரிடம் எழுந்த சுதந்திர வேட்கையானது அன்னிய நாட்டினரை நடுநடுங்க வைத்தது.
     அனைவரையும் வசீகரிக்கும் பேச்சாற்றலும் படிப்போரின் உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த அவர் சுயமாகவே பத்திரிகை நடத்தி, அதில் எழுச்சியூட்டும் படைப்புகளை வெளியிட்டு அனைவரையும் சுதந்திரப் போராட்டத்திற்கு நேராகத் திசைதிருப்பினார்.
     இவர் ஜெர்மனியில் இருந்ததால், இவருக்கும் அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த வில்லியம் கெய்சர் என்பவருக்கும் இடையே நெருக்கமானத் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஜெர்மனியின் துணையோடுதான் ஆங்கிலையர்கள், இந்தியாவில் ஆட்சியும் அராஜகமும் நடத்துகிறார்கள் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சமானது.
     எனவே ஜெர்மனியில் இருந்து கொண்டே இந்திய விடுதலைக்காகப் போராட்டம் நடத்துவதற்காகத் தீவிரமாகத் திட்டமிட்டார். அதன் பொருட்டு ஜெர்மனியில் வசித்து வந்த இந்தியர்களை ஒன்று திரட்டி INDIAN NATIONAL VOLUNTEERS என்ற அமைப்பை இவராகவே உருவாக்கினார்.
     அதோடு மட்டும் நின்று விடாமல்ஜய் ஹிந்த்” (தாய் நாட்டை வணங்குவோம்) என்ற வீர, தீரக் கோஷத்தை உருவாக்கி அனைவராலும் வீர ஆவேஷத்தோடு முழக்கமிடச் செய்தார். இவரதுஜய் ஹிந்த்கோஷமும் பத்திரிகையில் பிரசுரித்தப் படைப்புகளும் இந்தியாவில் வசித்து வந்த சுபாஷ்சந்திர போஸ் போன்ற ஆயிரக்கணக்கான இந்திய சுதந்திர வீறு கொண்ட  இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்குள் மிக வேகமாகக் களம் இறங்குவதற்கு வழிகோலின.
     ஜெர்மனியில் கெய்சர் அதிபராக இருந்தது வரை செண்பகராமன் பிள்ளை எவ்வித தொல்லையும் இல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பல்வேறு வழிகளில் உதவி வந்தார்.
    ஆனால் அங்கு கெய்சர் அதிபர் பதவியிலிருந்து விலகி அடால்ஃப் ஹிட்லர் அதிபராக ஆன பின்பு இவருக்குப் பல்வேறு தொல்லைகள் இழைக்கப்பட்ட. ஹிட்லர் ஒரு சா்வாதிகாரியாகச் செயல்பட்டார். எப்போதும் இந்தியாவையும் இந்தியர்களையும் தரக்குறைவாகப் பேசுவதையே தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.
      ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் பிரிட்டீசாருக்கு அடிமையாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார்கள்இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே " என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார் ஹிட்லர்.
            அதிபர் ஹிட்லரின் இந்த இழிச்சொல் செண்பகராமன் பிள்ளையை மிகவும் கோபாவேஷத்திற்கு ள்ளாக்கியது. அதனால் ஹிட்லருக்கு நேராகவே எதிர்த்துத் திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புப் கோர வைத்தார்.
     இதனை தனது மனதிற்குள் வஞ்சனையாக வைத்திருந்த ஹிட்லர்.
அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி அவரது ஆதரவாளர்களை வைத்து  நஞ்சைக் கலக்கச் செய்தார். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது.
      அந்த நஞ்சிலும் அவர் இறக்காததை அறிந்த கருணையற்ற ஹிட்லர்செண்பகராமன், தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் ஊசி மூலம் விஷத்தை செலுத்தி சிறுது சிறிதாக அவரை மரணமடையச் செய்தார்.
     தனது தாய் நாட்டு சுதந்திரத்திற்காக அயல் நாட்டிலிருந்து இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த அந்த மாவீரன் தனது மாசற்ற மனதிற்குள் அளவற்ற ஆசை ஒன்று வைத்திருந்தான்.
     அந்நிய நாட்டில் வைத்து தனது உயிர் பிரிந்து, உடல் எரியூட்டப் பட்டாலும், என்றைக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறதோ அதன் பிறகு  அந்தச் சாம்பலை தான் வளர்ந்த மண்ணான திருவனந்தப்புரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைத்து விட்டு, மீதியை வயல் வெளியில் தூவ வேண்டும் என தனது மனைவியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்
     தனது கணவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது மனைவி மணிப்பூரைச் சார்ந்த ஜான்சி முப்பத்தியிரண்டு ஆண்டுகள் அவரின் சாம்பலைக் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். அதன் பிறகு அவரின் விருப்பப்படியே அவரின் சாம்பலைக் கரமனை ஆற்றிலும் வயல் வெளிகளிலும் தூவியுள்ளார்.      
     தியாகத்திற்கும் தேசப் பற்றிற்கும் இதைவிட தலைசிறந்த ஒரு மாமனிதரை சான்றாக்குவதற்கு இயலுமா என்பது கேள்விக்குறியே. எனவே இவரைப் போன்றத் தீயாகத் தீபங்களை என்றும் மனதில் நிலைநிறுத்தி அவருக்கு உரிய மரியாதைச் செலுத்துவது இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயக் கடமையாகும்.
     இந்தியாவில் வெள்ளையர்கள் புகுந்து, இங்குள்ள மக்களை அடிமைகளாக்கி, செல்வங்களைக் கொள்ளையடித்து, அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டபொழுதும், இங்கிருந்த பெரும்பாலான மக்கள் அவற்றையெல்லாம் எதிர்க்கும் சக்தியற்றவர்களாக கண்மூடி, வாய் பொத்தி மௌனிகளாகவே வாழ்ந்து வந்தனர்.
     ஒரு சிலர் மட்டும் தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து, பாரத அன்னையை வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்னும் நோக்கில் வெள்ளையனுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியும் போராட்டக்கணைத் தொடுத்தும் வந்தனர்.
     ஆனால் அவை எதுவும் வெள்ளையனுக்கு எவ்வைகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவோ, எதற்கும் தடையாக இருக்கவோ செய்யவில்லை. அதனால் அவர்களி்ன் அனைத்து அராஜங்களும் தங்கு தடையின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக் கொண்டே இருந்தன.
     இந்நிலையில் தான் எங்கிருந்தோ ஒருவன்,
        அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
        உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
       
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
என்னும் அனல் பறக்கும் இடிமுழக்கக் கவிதையோடும்,
     
வந்தே மாதரம் ஜய
      வந்தே மாதரம்
என்னும் வீர தீரக் கோஷத்தோடும், கொள்ளையனாம் வெள்ளையனை எதிர்த்து சுதந்திரப் போராட்டக் களத்தில் சிங்கமென சீறிப்பாய்ந்து வந்தார்.
     அவர்தான் முறுக்கு மீசையும் கம்பீரமான தலைப்பாகையும், வீறு நடையும், கணீர் கணீர் குரலும் கொண்ட எட்டையப்புரத்துச் சீறிப்பாயும் சிங்கமெனத் திகழ்ந்த சுப்ரமணியப் பாரதி.
     ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்றக் கவிஞர். பத்திரிகைத் துறையில் முத்திரைப் பதித்த பதிப்பாசிரியர், பள்ளிகூடத்தில் சிலகாலம் ஆசிரியர் பணி, தேசப்பற்று, தெய்வப் பற்று இவை இரண்டையும் இரு விளிகளாகக் கொண்டவர். தேச விடுதலையோடு மட்டும் நின்று விடாமல், பெண் விடுதலை, சமத்துவ சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை ஆகியவற்றிற்காகவும் அயராது பாடுபட்டு, அவற்றில் முழுமையாக வெற்றியும் பெற்றவர்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் 
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் 
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள் 
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?
என ஆங்கிலேயருக்கு நேராக கவிதையாலே வினா எழுப்பி கதிகலங்க வைத்தார்.
     இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில், இவரது வருகைக்குப் பிறகுதான், அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சத்தமின்றி நடந்து கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் காட்டுத்தீ போல் பற்றி எரியத் தொடங்கியது. அதனால் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம் இருந்த மக்கள் உணரத் தொடங்கினார்கள்.
     முறுக்கு மீசைக்காரனின் துடுக்கானக் கவிதை வரிகள், படிப்போரின் உதிரத்தை சுடேற்றும் கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகள் வாயிலாக பாரத தேசம் முழுவதும் பரவியது. படித்தவர்கள் பரவசமடைந்தார்கள். வெள்ளைக்காரனின் சூட்சுமங்களை உணர்ந்து கொண்டார்கள்.
     அதுவரை சுதந்திர உணர்வும், தேசப் பற்றும் இல்லாமலிருந்த ஒவ்வொரு இந்திய இளைஞனின் நெஞ்சிலும் சுதந்திரப் போராட்டத்தின் நெருப்புக் கனல் பற்றி எரியத் தொடங்கியது. இது வெள்ளையனின் உள்ளத்தில் கோபக்கனலை மூட்டியது. அதன் விளைவு, ஆங்கிலைய சிப்பாய்கள் பாரதியை கைது செய்து சிறையிலடைக்கச் சுற்றித் திரிந்தார்கள்.
     அது அவர்களுக்கு எளிதில் ஈடேறவில்லை. அதனால் பாரதி நடத்தி வந்த மற்றும் அவர் பணியாற்றி வந்த அனைத்துப் பத்திரிகைகளுக்கும் கடுமையான நெருக்கடிக் கொடுத்து அவற்றை வெளிவராமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
        குடிப்பதற்குக் கஞ்சியும் படுப்பதற்கு இடமும் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த போதும் சுதந்திரப் போராட்டத்தின் வலிமை, கடுகளவுக்கும் பாரதியை விட்டு அகலவேயில்லைஆனால் பறங்கியனின் சிப்பாய்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது என்ற வருத்தம் அவரை ஆட்கொண்டது.
    அதனால் தமிழகத்திலிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்று, அங்கு வெள்ளையனின் சிப்பாய்களின் கண்ணில் படாமல் சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தம் பாரதிக்கு ஏற்பட்டது.
     எவ்வளவுதான் நெருக்கடிகளும் இன்னல்களும் தனக்கு நேர்ந்த போதும் ஆங்கிலேயனை எதிர்ப்பதிலிருந்து எள்ளளவும் அவர் பின்வாங்கவே இல்லை.
          என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
          என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
          என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
          என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
          அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே!”

என சாதா நேரமும் அன்னை பாரதத்தின் விடுதலைப் பற்றியச் சிந்தனையை மட்டுமே தனது சிந்தைக்குள் ஏற்றி தீராத கனவுகளோடு பாரதி பாரதத் தேசம் முழுவதும் வலம் வந்தார்.
      ஒருவர் தான் முன்னெடுத்துச் செல்லும் காரியத்தில் சிறிதளவேனும் இன்னல்களோ, தடங்கல்களோ ஏற்பட்டால், அக்காரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல் சோர்ந்து போய் இடையில் விட்டு விட்டுச் செல்வார்.
     ஆனால் பாரதியைப் பொறுத்த வரையில் கடைசி வரை சுதந்திரப் போராட்டத்தில் அவருக்கு எவ்விதச் சோர்வும் ஏற்படவில்லை. ஆங்கிலையர்கள் இந்தியாவிற்குச் சுதந்திரம் தருவார்கள் என்ற எண்ணம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு தலைவரிடத்திலும் இருந்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை.
     ஆனால் பாரதியோ, சுதந்திரம் கிடைப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே, சுதந்திரம் கிடைத்தது போன்று தீர்க்கத் தரிசனமாகக் கூறிவிட்டார். அதனை,
     ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே;
     ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
     எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு நாம்
      எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;
      சங்குகொண் டேவெற்றி ஊதுவோமே இதைத்
      தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.”
என்று தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு உறுதியாகவும், திடமாகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவே மிகப் பெரிய சான்றாகத் திகழ்கிறது.
     இந்த அளவிற்கு பெற்ற பொன்னாடு மீது அன்பும் நம்பிக்கையும்  கொண்டிருந்த பாரதியாரால், இந்தியாவின் சுதந்திரக் காற்றை அனுபவிப்பதற்கு இயலவில்லை. அதற்கு முன்பு அவரது மூச்சுக்காற்று நின்று போனது.
     ஆயினும் அவரது சுதந்திரக் கனவு முழுமையாக நிறைவேறியிருப்பதை எண்ணிப் பார்க்கும் போது, அந்த மகாகவி மீது மட்டற்ற மதிப்பும் மரியாதையும் அனைவருக்கும் ஏற்படுகிறது. அதுவே நாம் அந்தத் தேசியக் கவிக்குச் செய்யும் கைமாறாகும்.
     சுதந்திரக் காலகட்டத்தில் தோன்றி வளர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும், அவரது அதீதமான அறிவும், ஆற்றலும், தீர்க்கத் தரிசனமான பார்வையும், பேச்சும், எழுத்தும் இவ்வுலகம் உள்ளளவும் அழியா பொக்கிஷமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
          “கத்தி யின்றி ரத்த மின்றி
               யுத்த மொன்று வருகுது
          சத்தி யத்தின் நித்தி யத்தை
           நம்பும் யாரும் சேருவீர்
     தமிழகத்தில் இப்பாடல் வரிகளைக் கேட்காத காதுகளும் இருக்காது, இதனை ரசிக்காத மனிதர்களும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமானது இப்பாடல் வரிகள்.
     இந்தப் பாடல் வரிகளின் பிதாமகன் யார் என்பதை அறிவதற்கும், யாருக்காக எழுதப் பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும்   அனைவருக்கும் அவா இருக்கும். அவர்தான் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
     இது யாருக்காக எழுதப்பட்டது என்றால் இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் உற்பத்தியாகும் உப்புக்கு வரி விதித்தனர். அக்கொடியச் செயலை எதிர்த்து காந்தியடிகள் தண்டியில் கால் நடையாகச் சென்று உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம்  நடத்தினார்.
     அப்போது அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தச் சுதந்திரப் போராட்ட வீரராகிய நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் காந்தியடிகளின் செயலை வியந்து பாராட்டி  இயற்றப் பட்டதே இப்பாடலாகும். யார் இந்த இராமலிங்கம் பிள்ளை?
   “தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு

என்னும் வரிகளால் தமிழர்களின் தன்மானத்தை அனைவருக்கும் உணர்த்தியவர். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இளம் வயதிலையே தன்னையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
     தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைசிறந்த ஓவியர். ஆழமும் அர்த்தமும் மிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். தனது நாணயமான பேச்சினாலும், சிந்தையினாலும், ஆற்றல் மிக்கச் செய்கையாலும் இந்தியத் திருநாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
     இவரிடத்தில் எந்த அளவிற்கு நாட்டுப் பற்று இருந்ததோ அதே அளவிற்குத் தமிழ் மொழிப்பற்றும் இருந்தது. இதனை,
             “தமிழன் என்று சொல்லடா
             தலைநிமிர்ந்து நில்லடா
என்னும் கவிதை வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
     சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அதோடு பல்வேறு இலக்கிய நூல்களை இயற்றி, அவற்றின் மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.
     இதனால் இவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே அங்கிருந்த கைதிகளுக்கு திருக்குறளைக் கற்றுக் கொடுத்தார். மட்டுமின்றி சிறையில் இருந்து கொண்டே ஏராளமான இலக்கிய நூல்களையும் படைத்துள்ளார். அவற்றில் மலைக் கள்ளன் என்னும் நாவல் பெரும் புகழ் பெற்றது.
     சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டும் இவரது தேசத் தொண்டு நின்று விடவில்லை. இளைஞர்களோடு மிகவும் நெருங்கிப் பழகும் மனப் போக்கையும் கொண்டிருந்தார். அதனால் இளைஞர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. கூடவே விசாயிகள் பற்றியும் பல்வேறு பாடல்கள் புனைந்துள்ளார் என்பது பெருமாக்குரியது.
 இவரது;
             “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
       கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
என்னும் பாடலும் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பிரபலமானதாகும்.

தரணிப் போற்றும் கவிஞராக, அனைவரும் விரும்பும் நாவலாசிரியராக, எவருக்கும் அஞ்சாத விடுதலைப் போராட்ட வீரராக, கேட்போர் ரசிக்கும்  பாடலாசிரியராக, காண்போர் பாராட்டும் ஓவியராக, சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்த நாமக்கல் கவிஞர், தமது 84-வது வயதில், 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24 இல் இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்தார்.
     என்றாலும் அவர் எக்காலமும் மாணவர் மத்தியில் மறையாத மாமனிதராக வாழ வேண்டும் என்பதற்காக அவரது பாடலும் வாழ்க்கை வரலாறும் அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. இதுவே அவருக்கு நம்மால் செய்ய இயன்ற மாபெரும் மரியாதை.
            விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களின் வாழ்க்கையை இத்தேசத்திற்காக அற்பணம் செய்தவர்கள் ஏராளம், தாராளம்.
            அவர்களில், தங்களின் போராட்டத்தை இலக்கியப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிலராகவே இருக்க முடியும். அப்படி இலக்கியப் படைப்புகளான கவிதை, கட்டுரை, கதை போன்ற படைப்புகள் நேரடியாகவே மக்களின் உள்ளங்களைத் தொட்டு அவர்களையும் உணர்ச்சிப் பூர்வத்தோடு சுதந்திரப் போராட்டத்திற்குள் இழுத்து வந்துள்ளது.
            அதோடு மட்டுமின்றி அவர்களின் படைப்புகள் இவ்வுலகம் உள்ளளவும் உயிரோட்டத்துடன் நிலைத்து நிற்கும். அவர்களின் வீரமும், தியாகமும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் உள்ளத்திலும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.
            ஆங்கிலேயர்களை இம்மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றி அகற்றுவதற்குத் தங்களின் இன்னுயிர், அரும் பெரும் உறவுகள், எண்ணிலடங்காச் சொத்து சுகங்கள் அனைத்தையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அவர்கள் செய்த  தியாகத்திற்கு ஈடுச் செய்வதற்கு இனி எவராலும் இயலாது என்பது நாடறிந்த உண்மை.
            எனினும் இந்திய மண்ணில் இன்று, எவ்வித இடர்பாடுகளும் இன்றி இன்ப மயமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினர் கட்டாயமாக நமக்காக, தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த அந்தப் புண்ணியப் புருஷர்களை இது போன்ற சுதந்திரத் தினத்திலாவது நினைவு கூர்ந்து, அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கற்றிந்து, அவர்கள் காட்டிய தேசப் பற்றையும், தியாக உணர்வையும் நமது வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ்வோம் என்ற சபதத்தை எடுப்போம்.
                 
ஜெய் ஹிந்த்
              வந்தே மாதரம்.  
  
இக்கட்டுரை 09-08-2017 அன்று நாகர்கோலில் அகில இந்தியா வானொலியில் ஒலிபரப்ப்பட்டது.