விடுதலைப் போராட்டமும் படைப்பாளிகளும்
நீர்வளம், நிலவளம், தொழில் வளம் என எத்தன வளங்களுண்டோ
அத்தனை வளங்களும் கொட்டிக் கிடந்தது இந்தியப் பெரும் நாட்டில். இதனை
அத்தனை வளங்களும் கொட்டிக் கிடந்தது இந்தியப் பெரும் நாட்டில். இதனை
“என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”
என்னும் மருதகாசியின் பாடல் வரிகள் மூலம் நம்மால் நன்குணர்வதற்கு இயலும்.
விவசாயமும், விளைப் பொருட்களும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு சான்றாதாரங்களாகத் திகழ்ந்தன என்பதற்கு
“மாடுகள் கட்டிப் போர் அடித்தால்
மாளாது செந்நெல் என்று யானைகள்
கட்டிப் போரடித்தத் தமிழகம்”
என்னும் பாடல் வரிகள் மேலும் இதற்குச் சான்று பகிர்ந்து நிற்கின்றன.
இலக்கியங்கள் ஒரு நாட்டின் வளத்தையும், அந்நாட்டு மக்களின் வாழ்வியல் பிரதிப்பலிப்புகளையும் எடுத்தியம்புவதோடு மட்டும் நின்று விடவில்லை. அந்நாட்டில் எழும் அரசியல் மாற்றங்களையும் சமூகச் சவால்களையும் எதிர் கொள்வதிலும் எடுத்தியம்புவதிலும் பெரும் பங்காற்றியுள்ளன.
அவ்வகையில் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், அரசியல், சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் ஆகியவைப் பற்றியும் அடையாளப் படுத்துவதற்கு இலக்கியம் தலைசிறந்த ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.
பெண்களுக்குப் பேரழகும் நாட்டிற்கு பெரும் செல்வமும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதற்கிணங்க, அத்தனை வளங்களையும், செல்வச் செழிப்பையும் கண்ட அயல் நாட்டினர் இந்தியாவின் மீது பெரும் மோகம் கொண்டனர்.
அவர்களின் தந்திரமும் புத்தி சாதுர்ணியமும் நம் நாட்டு சிற்றரசர்களின் சிந்தையைச் சிதைத்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி அடிமைப் படுத்துவதற்கு வழிகோலின. அதன் விளைவு சுமார் இருநூறுக்கும் மேலான ஆண்டுகள், அன்னியர்களின் ஆட்சியில் அடிமைகளாய் நம்மவர்கள் மண்டியிட்டனர்.
மண்டியிட்டவர்கள் மாண்டுபோன பின்னர் உயிர் பெற்ற வீரமும் தீரமும் கொண்ட இளயப் பாரதப் பிரம்மாக்களிடையே கொளுந்து விட்டெரிந்தது சுதந்திர நெருப்பு.
அதன் வெளிப்பாடு, சுதந்திரப் போராட்டங்களாக வெடித்தன. ஆற்றல் மிக்கப் போராளிகளின் எழுச்சி மிக்க தீப்பொறிப் பேச்சுகளும், வாள் முனைகளையே தோற்றுவிக்கும் பேனாமுனை எழுத்துகளும், சத்தமின்றி சாதிக்கும் சத்தியாக்கிரங்களும் அன்னிய ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தன. கூடவே நம் நாட்டை விட்டே வெளியேறவும் வைத்தன.
இப்போராட்டங்களில் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் வேகத்தையும் தூண்டி விடுவதற்குக் பெரும் காரணமாக இருந்தது பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளேயாகும். அப் படைப்புகள், வீரியமிக்க கவிதைகளாகவும், உணர்ச்சி மிக்க கட்டுரைகளாகவும், ஆற்றல் மிக்க கதைகளாகவும் வடிவம் பெற்றன.
அப்படிப்பட்டப் படைப்பாளர்களையும் அவர்கள் தம் படைப்புகளையும்
நினைவேற்றுவது இந்தச் சுதந்திரத்தின விழாவின் பெரும் பேறாகும். நமது இளையச் சமுதாயம் சுதந்திரத்திரப் போராட்டத்தின் எவ்விதத் தாக்கத்தையும் அறியாமல், அதன் முக்கியத்துவத்தை உணராமல், தற்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுவிட்சமான வாழ்கையைப் பெரிதாகக் கருதுகின்றனர்.
அதனால் ஆண்டுக்கு ஆண்டு, நாளுக்கு நாள் இன்றைய இளம் தலைமுறையினரிடையே தேசப்பற்றின்மையும் தேசத்தலைவர்களை மதிக்கும் பண்பாடின்மையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
அதனால்தான் கல்வி நிறுவனங்களிலிருந்து, திரையரங்குகள் வரை தேசியக் கீதத்தை இசைப்பதற்கும், தேசியக் கொடியை மதிப்பதற்கும் நீதிமன்றங்கள் உத்தரவுப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்பட்டிருக்கிறோம்.
இன்றைய இளையச் சமுதாயத்தினரும் சுதந்திரத்தின் வலியை உணர வேண்டும் என்பதற்காக இதோ ஒரு படைப்பாளி இப்படியொரு உணர்ச்சிப் பூர்வமானப் பாடலைப் படைத்துள்ளார்.
சும்மாவா வந்தது?
சுதந்திரம் என்பது
சும்மாவா வந்தது?
எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை
(சும்மாவா)
ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சுவார் பெரியோர்
மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்
இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு
இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)
போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்
பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்
அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க
தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)
இப்பாடலின் பொருளை ஒவ்வொரு இளைஞர்களும் தங்களின் இதயங்களில் இதமாகப் பதியம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களும் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். அவர்களில் குமரிமாவட்டத்தைச் சார்தவர்களின் பங்களிப்பும் பார் போற்றும் வண்ணம் இருந்தது. அவர்களில் வீரன் செண்பகராமனின் பங்களிப்பானது படிப்போரைப் பரவசமடையச் செய்வதாகும்.
திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் பெயரும் புகழும் மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலையே பேரறிவும், பெரும் ஆற்றலும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டிருந்தது.
அதனால் வீரத்தோடும் தீரத்தோடும் வளர்ந்தார். தனது பதினேழாவது வயதில் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு தானாகவே அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்து கொண்டே இந்தியாவில் நடக்கும் அன்னிய நாட்டினரின் கொடூரச் செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.
அவர் அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் தன் தாய் நாட்டு மக்கள் அந்நியரால் அடிமைப்படுத்தப் படுவதை, அவரால் சிறிதளவும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் அவரிடம் எழுந்த சுதந்திர வேட்கையானது அன்னிய நாட்டினரை நடுநடுங்க வைத்தது.
அனைவரையும் வசீகரிக்கும் பேச்சாற்றலும் படிப்போரின் உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த அவர் சுயமாகவே பத்திரிகை நடத்தி, அதில் எழுச்சியூட்டும் படைப்புகளை வெளியிட்டு அனைவரையும் சுதந்திரப் போராட்டத்திற்கு நேராகத் திசைதிருப்பினார்.
இவர் ஜெர்மனியில் இருந்ததால், இவருக்கும் அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த வில்லியம் கெய்சர் என்பவருக்கும் இடையே நெருக்கமானத் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஜெர்மனியின் துணையோடுதான் ஆங்கிலையர்கள், இந்தியாவில் ஆட்சியும் அராஜகமும் நடத்துகிறார்கள் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சமானது.
எனவே ஜெர்மனியில் இருந்து கொண்டே இந்திய விடுதலைக்காகப் போராட்டம் நடத்துவதற்காகத் தீவிரமாகத் திட்டமிட்டார். அதன் பொருட்டு ஜெர்மனியில் வசித்து வந்த இந்தியர்களை ஒன்று திரட்டி INDIAN
NATIONAL VOLUNTEERS என்ற அமைப்பை இவராகவே உருவாக்கினார்.
அதோடு மட்டும் நின்று விடாமல் “ஜய் ஹிந்த்” (தாய் நாட்டை வணங்குவோம்) என்ற வீர, தீரக் கோஷத்தை உருவாக்கி அனைவராலும் வீர ஆவேஷத்தோடு முழக்கமிடச் செய்தார். இவரது “ஜய் ஹிந்த்” கோஷமும் பத்திரிகையில் பிரசுரித்தப் படைப்புகளும் இந்தியாவில் வசித்து வந்த சுபாஷ்சந்திர போஸ் போன்ற ஆயிரக்கணக்கான இந்திய சுதந்திர வீறு கொண்ட இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்குள் மிக வேகமாகக் களம் இறங்குவதற்கு வழிகோலின.
ஜெர்மனியில் கெய்சர் அதிபராக இருந்தது வரை செண்பகராமன் பிள்ளை எவ்வித தொல்லையும் இல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பல்வேறு வழிகளில் உதவி வந்தார்.
ஆனால் அங்கு கெய்சர் அதிபர் பதவியிலிருந்து விலகி அடால்ஃப் ஹிட்லர்
அதிபராக
ஆன பின்பு
இவருக்குப் பல்வேறு தொல்லைகள் இழைக்கப்பட்டன. ஹிட்லர் ஒரு சா்வாதிகாரியாகச் செயல்பட்டார். எப்போதும் இந்தியாவையும் இந்தியர்களையும் தரக்குறைவாகப் பேசுவதையே தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் பிரிட்டீசாருக்கு அடிமையாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே " என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார் ஹிட்லர்.
அதிபர்
ஹிட்லரின் இந்த இழிச்சொல் செண்பகராமன் பிள்ளையை மிகவும் கோபாவேஷத்திற்கு உள்ளாக்கியது.
அதனால்
ஹிட்லருக்கு நேராகவே எதிர்த்துத் திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புப் கோர வைத்தார்.
இதனை
தனது
மனதிற்குள் வஞ்சனையாக வைத்திருந்த ஹிட்லர்.
அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி அவரது ஆதரவாளர்களை
வைத்து நஞ்சைக் கலக்கச் செய்தார். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது.
அந்த நஞ்சிலும் அவர் இறக்காததை அறிந்த
கருணையற்ற ஹிட்லர், செண்பகராமன்,
தீவிர சிகிச்சைப் பெற்று வந்த
மருத்துவமனையில் ஊசி மூலம் விஷத்தை செலுத்தி சிறுது சிறிதாக அவரை மரணமடையச்
செய்தார்.
தனது தாய் நாட்டு சுதந்திரத்திற்காக அயல்
நாட்டிலிருந்து இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த அந்த மாவீரன் தனது மாசற்ற
மனதிற்குள் அளவற்ற ஆசை ஒன்று வைத்திருந்தான்.
அந்நிய நாட்டில் வைத்து தனது உயிர் பிரிந்து, உடல் எரியூட்டப் பட்டாலும், என்றைக்கு இந்தியா சுதந்திரம்
அடைகிறதோ அதன் பிறகு அந்தச் சாம்பலை தான்
வளர்ந்த மண்ணான திருவனந்தப்புரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைத்து விட்டு, மீதியை வயல் வெளியில் தூவ வேண்டும்
என தனது மனைவியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.
தனது கணவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது மனைவி மணிப்பூரைச் சார்ந்த
ஜான்சி முப்பத்தியிரண்டு ஆண்டுகள் அவரின் சாம்பலைக் பாதுகாத்து
வைத்திருந்திருக்கிறார். அதன்
பிறகு அவரின் விருப்பப்படியே அவரின் சாம்பலைக் கரமனை ஆற்றிலும் வயல் வெளிகளிலும்
தூவியுள்ளார்.
தியாகத்திற்கும் தேசப் பற்றிற்கும் இதைவிட தலைசிறந்த ஒரு மாமனிதரை
சான்றாக்குவதற்கு இயலுமா என்பது கேள்விக்குறியே.
எனவே இவரைப் போன்றத் தீயாகத்
தீபங்களை என்றும் மனதில் நிலைநிறுத்தி அவருக்கு உரிய மரியாதைச் செலுத்துவது இன்றைய
இளைய சமுதாயத்தின் தலையாயக் கடமையாகும்.
இந்தியாவில் வெள்ளையர்கள் புகுந்து, இங்குள்ள மக்களை அடிமைகளாக்கி, செல்வங்களைக் கொள்ளையடித்து, அராஜகத்தைக் கட்டவிழ்த்து
விட்டபொழுதும், இங்கிருந்த
பெரும்பாலான மக்கள் அவற்றையெல்லாம் எதிர்க்கும் சக்தியற்றவர்களாக கண்மூடி, வாய் பொத்தி மௌனிகளாகவே வாழ்ந்து
வந்தனர்.
ஒரு சிலர் மட்டும் தேசத்தில் அங்கொன்றும்
இங்கொன்றுமாக இருந்து, பாரத அன்னையை
வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்னும் நோக்கில்
வெள்ளையனுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியும் போராட்டக்கணைத் தொடுத்தும் வந்தனர்.
ஆனால் அவை எதுவும் வெள்ளையனுக்கு
எவ்வைகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவோ, எதற்கும் தடையாக இருக்கவோ செய்யவில்லை. அதனால் அவர்களி்ன் அனைத்து
அராஜங்களும் தங்கு தடையின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்
கொண்டே இருந்தன.
இந்நிலையில் தான் எங்கிருந்தோ ஒருவன்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
என்னும் அனல் பறக்கும் இடிமுழக்கக் கவிதையோடும்,
வந்தே மாதரம் ஜய
வந்தே மாதரம்
என்னும் வீர தீரக் கோஷத்தோடும், கொள்ளையனாம் வெள்ளையனை எதிர்த்து
சுதந்திரப் போராட்டக் களத்தில் சிங்கமென சீறிப்பாய்ந்து வந்தார்.
அவர்தான்
முறுக்கு மீசையும் கம்பீரமான தலைப்பாகையும், வீறு நடையும், கணீர் கணீர் குரலும் கொண்ட
எட்டையப்புரத்துச் சீறிப்பாயும் சிங்கமெனத் திகழ்ந்த சுப்ரமணியப் பாரதி.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்றக் கவிஞர். பத்திரிகைத் துறையில் முத்திரைப்
பதித்த பதிப்பாசிரியர், பள்ளிகூடத்தில் சிலகாலம் ஆசிரியர் பணி, தேசப்பற்று, தெய்வப் பற்று இவை இரண்டையும் இரு
விளிகளாகக் கொண்டவர். தேச விடுதலையோடு மட்டும் நின்று விடாமல், பெண் விடுதலை, சமத்துவ சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை
ஆகியவற்றிற்காகவும் அயராது பாடுபட்டு, அவற்றில் முழுமையாக வெற்றியும் பெற்றவர்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?
என ஆங்கிலேயருக்கு நேராக கவிதையாலே வினா
எழுப்பி கதிகலங்க வைத்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில், இவரது வருகைக்குப் பிறகுதான், அதுவரை
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சத்தமின்றி நடந்து கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம்
காட்டுத்தீ போல் பற்றி எரியத் தொடங்கியது. அதனால் போராட்டத்தின் முக்கியத்துவத்தை
இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம் இருந்த மக்கள் உணரத் தொடங்கினார்கள்.
முறுக்கு மீசைக்காரனின் துடுக்கானக் கவிதை வரிகள், படிப்போரின்
உதிரத்தை சுடேற்றும் கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகள் வாயிலாக பாரத தேசம்
முழுவதும் பரவியது. படித்தவர்கள்
பரவசமடைந்தார்கள். வெள்ளைக்காரனின்
சூட்சுமங்களை உணர்ந்து கொண்டார்கள்.
அதுவரை சுதந்திர உணர்வும், தேசப் பற்றும் இல்லாமலிருந்த ஒவ்வொரு
இந்திய இளைஞனின் நெஞ்சிலும் சுதந்திரப் போராட்டத்தின் நெருப்புக் கனல் பற்றி
எரியத் தொடங்கியது. இது வெள்ளையனின்
உள்ளத்தில் கோபக்கனலை மூட்டியது. அதன் விளைவு, ஆங்கிலைய
சிப்பாய்கள் பாரதியை கைது செய்து சிறையிலடைக்கச் சுற்றித் திரிந்தார்கள்.
அது அவர்களுக்கு எளிதில் ஈடேறவில்லை. அதனால் பாரதி நடத்தி வந்த மற்றும் அவர்
பணியாற்றி வந்த அனைத்துப் பத்திரிகைகளுக்கும் கடுமையான நெருக்கடிக் கொடுத்து
அவற்றை வெளிவராமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
குடிப்பதற்குக்
கஞ்சியும் படுப்பதற்கு இடமும் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த
போதும் சுதந்திரப் போராட்டத்தின் வலிமை, கடுகளவுக்கும் பாரதியை விட்டு அகலவேயில்லை.
ஆனால் பறங்கியனின் சிப்பாய்களால் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப் பட்டால், தொடர்ந்து
போராட்டம் நடத்த முடியாது என்ற வருத்தம் அவரை ஆட்கொண்டது.
அதனால் தமிழகத்திலிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்று, அங்கு
வெள்ளையனின் சிப்பாய்களின் கண்ணில் படாமல் சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ
வேண்டிய நிர்பந்தம் பாரதிக்கு ஏற்பட்டது.
எவ்வளவுதான் நெருக்கடிகளும் இன்னல்களும் தனக்கு நேர்ந்த போதும் ஆங்கிலேயனை
எதிர்ப்பதிலிருந்து எள்ளளவும் அவர் பின்வாங்கவே இல்லை.
“என்று தணியும் இந்தச்
சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே!”
என சாதா நேரமும்
அன்னை பாரதத்தின் விடுதலைப் பற்றியச் சிந்தனையை மட்டுமே தனது சிந்தைக்குள் ஏற்றி
தீராத கனவுகளோடு பாரதி பாரதத் தேசம் முழுவதும் வலம் வந்தார்.
ஒருவர் தான் முன்னெடுத்துச் செல்லும்
காரியத்தில் சிறிதளவேனும் இன்னல்களோ, தடங்கல்களோ ஏற்பட்டால், அக்காரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல் சோர்ந்து போய் இடையில்
விட்டு விட்டுச் செல்வார்.
ஆனால் பாரதியைப் பொறுத்த வரையில் கடைசி வரை
சுதந்திரப் போராட்டத்தில் அவருக்கு எவ்விதச் சோர்வும் ஏற்படவில்லை. ஆங்கிலையர்கள் இந்தியாவிற்குச் சுதந்திரம் தருவார்கள் என்ற எண்ணம் சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு தலைவரிடத்திலும் இருந்திருப்பதற்கு
வாய்ப்பேயில்லை.
ஆனால் பாரதியோ, சுதந்திரம் கிடைப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே, சுதந்திரம் கிடைத்தது போன்று தீர்க்கத் தரிசனமாகக் கூறிவிட்டார். அதனை,
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்
டோமென்று
எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு –நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;
சங்குகொண் டேவெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.”
என்று தான் கொண்ட
கொள்கையில் எவ்வளவு உறுதியாகவும், திடமாகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவே மிகப் பெரிய சான்றாகத்
திகழ்கிறது.
இந்த அளவிற்கு பெற்ற பொன்னாடு மீது அன்பும்
நம்பிக்கையும் கொண்டிருந்த பாரதியாரால், இந்தியாவின் சுதந்திரக் காற்றை அனுபவிப்பதற்கு இயலவில்லை. அதற்கு முன்பு அவரது மூச்சுக்காற்று நின்று போனது.
ஆயினும் அவரது சுதந்திரக் கனவு முழுமையாக
நிறைவேறியிருப்பதை எண்ணிப் பார்க்கும் போது, அந்த மகாகவி மீது மட்டற்ற மதிப்பும் மரியாதையும் அனைவருக்கும் ஏற்படுகிறது. அதுவே நாம் அந்தத் தேசியக் கவிக்குச் செய்யும் கைமாறாகும்.
சுதந்திரக் காலகட்டத்தில் தோன்றி வளர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும், அவரது அதீதமான அறிவும், ஆற்றலும், தீர்க்கத்
தரிசனமான பார்வையும், பேச்சும், எழுத்தும்
இவ்வுலகம் உள்ளளவும் அழியா பொக்கிஷமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
“கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்”
தமிழகத்தில்
இப்பாடல் வரிகளைக் கேட்காத காதுகளும் இருக்காது, இதனை
ரசிக்காத மனிதர்களும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமானது இப்பாடல் வரிகள்.
இந்தப் பாடல் வரிகளின் பிதாமகன் யார் என்பதை
அறிவதற்கும்,
யாருக்காக எழுதப் பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து
கொள்வதற்கும் அனைவருக்கும் அவா இருக்கும். அவர்தான்
நாமக்கல் கவிஞர் வெ.
இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
இது யாருக்காக எழுதப்பட்டது என்றால்
இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில்
உற்பத்தியாகும் உப்புக்கு வரி விதித்தனர். அக்கொடியச் செயலை எதிர்த்து காந்தியடிகள் தண்டியில் கால்
நடையாகச் சென்று உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம்
நடத்தினார்.
அப்போது அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தச் சுதந்திரப் போராட்ட வீரராகிய
நாமக்கல் கவிஞர் வே.
இராமலிங்கம் பிள்ளை அவர்கள் காந்தியடிகளின் செயலை வியந்து
பாராட்டி இயற்றப் பட்டதே இப்பாடலாகும். யார் இந்த
இராமலிங்கம் பிள்ளை?
“தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு”
என்னும் வரிகளால் தமிழர்களின் தன்மானத்தை அனைவருக்கும்
உணர்த்தியவர். சுதந்திரப் போராட்டத்தில்
காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இளம் வயதிலையே தன்னையும் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடுத்திக் கொண்டவர்.
தனக்கு
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைசிறந்த ஓவியர். ஆழமும் அர்த்தமும் மிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். தனது நாணயமான பேச்சினாலும், சிந்தையினாலும், ஆற்றல் மிக்கச் செய்கையாலும் இந்தியத் திருநாட்டிற்காகத்
தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரிடத்தில்
எந்த அளவிற்கு நாட்டுப் பற்று இருந்ததோ அதே அளவிற்குத் தமிழ் மொழிப்பற்றும்
இருந்தது. இதனை,
“தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா”
என்னும் கவிதை வரிகள் மூலம் அறிந்து
கொள்ளலாம்.
சுதந்திரப்
போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில்
ஈடுபட்டார். அதோடு பல்வேறு
இலக்கிய நூல்களை இயற்றி, அவற்றின் மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.
இதனால் இவர் கைது செய்யப்பட்டு வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே அங்கிருந்த கைதிகளுக்கு
திருக்குறளைக் கற்றுக் கொடுத்தார். மட்டுமின்றி சிறையில் இருந்து கொண்டே ஏராளமான இலக்கிய
நூல்களையும் படைத்துள்ளார். அவற்றில் மலைக் கள்ளன் என்னும் நாவல் பெரும் புகழ் பெற்றது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு
மட்டும் இவரது தேசத் தொண்டு நின்று விடவில்லை. இளைஞர்களோடு மிகவும் நெருங்கிப் பழகும் மனப் போக்கையும்
கொண்டிருந்தார். அதனால் இளைஞர்கள்
மத்தியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. கூடவே விசாயிகள் பற்றியும் பல்வேறு பாடல்கள் புனைந்துள்ளார்
என்பது பெருமாக்குரியது.
இவரது;
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
என்னும் பாடலும் அனைத்துத்
தரப்பினர் மத்தியிலும் பிரபலமானதாகும்.
தரணிப் போற்றும் கவிஞராக, அனைவரும் விரும்பும் நாவலாசிரியராக, எவருக்கும் அஞ்சாத விடுதலைப் போராட்ட வீரராக, கேட்போர் ரசிக்கும் பாடலாசிரியராக, காண்போர் பாராட்டும் ஓவியராக, சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்த நாமக்கல் கவிஞர், தமது
84-வது வயதில், 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24 இல் இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்தார்.
என்றாலும் அவர் எக்காலமும் மாணவர்
மத்தியில் மறையாத மாமனிதராக வாழ வேண்டும் என்பதற்காக அவரது
பாடலும் வாழ்க்கை வரலாறும் அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. இதுவே
அவருக்கு நம்மால் செய்ய இயன்ற மாபெரும் மரியாதை.
விடுதலைப்
போராட்டத்தில் களம் இறங்கி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு
தங்களின் வாழ்க்கையை இத்தேசத்திற்காக அற்பணம் செய்தவர்கள் ஏராளம், தாராளம்.
அவர்களில், தங்களின்
போராட்டத்தை இலக்கியப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிலராகவே இருக்க
முடியும்.
அப்படி
இலக்கியப் படைப்புகளான கவிதை, கட்டுரை, கதை போன்ற
படைப்புகள் நேரடியாகவே மக்களின் உள்ளங்களைத் தொட்டு அவர்களையும் உணர்ச்சிப்
பூர்வத்தோடு சுதந்திரப் போராட்டத்திற்குள் இழுத்து வந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி
அவர்களின் படைப்புகள் இவ்வுலகம் உள்ளளவும் உயிரோட்டத்துடன் நிலைத்து நிற்கும். அவர்களின்
வீரமும்,
தியாகமும்
என்றென்றும் ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் உள்ளத்திலும் பிரதிபலித்துக் கொண்டே
இருக்கும் என்பது திண்ணம்.
ஆங்கிலேயர்களை
இம்மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றி அகற்றுவதற்குத் தங்களின் இன்னுயிர், அரும்
பெரும் உறவுகள்,
எண்ணிலடங்காச்
சொத்து சுகங்கள் அனைத்தையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்தவர்கள்
எண்ணிலடங்காதவர்கள். அவர்கள் செய்த தியாகத்திற்கு ஈடுச் செய்வதற்கு இனி எவராலும்
இயலாது என்பது நாடறிந்த உண்மை.
எனினும் இந்திய
மண்ணில் இன்று,
எவ்வித
இடர்பாடுகளும் இன்றி இன்ப மயமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இளைய
சமுதாயத்தினர் கட்டாயமாக நமக்காக, தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த
அந்தப் புண்ணியப் புருஷர்களை இது போன்ற சுதந்திரத் தினத்திலாவது நினைவு கூர்ந்து, அவர்களின்
வாழ்க்கை வரலாறுகளை கற்றிந்து, அவர்கள் காட்டிய தேசப் பற்றையும், தியாக
உணர்வையும் நமது வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ்வோம் என்ற சபதத்தை எடுப்போம்.
ஜெய்
ஹிந்த்
வந்தே மாதரம். இக்கட்டுரை 09-08-2017 அன்று நாகர்கோலில் அகில இந்தியா வானொலியில் ஒலிபரப்ப்பட்டது.
No comments:
Post a Comment