வாழ்வாங்கு வாழ்ந்தோருக்கு வந்தனம்...!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அம்பலக்கடையை சார்ந்த எழத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் எழுதியுள்ள பிறப்பு வாழ்க்கை இறப்பு என்னும் நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
செய்தொழில் வேற்றுமை யான்".
என்பது வள்ளுவன் வாக்கு. இவ்வாக்கின் உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மிக உன்னத நிலையை அடைவார்கள் என்பது திண்ணம்.
இறைவன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது அவரின் சாயலில் படைப்பார் என்பது திருவிவிலியக் கூற்று.
இவ்வாறு இறைவனின் சாயலில் படைக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் மாக்களை ஒத்த வாழ்க்கையை வாழ்ந்து எவ்வித அடையாளமுமின்றி மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றனர். ஒரு சிலர் மட்டும் மேன்மைப் பொருந்திய வாழ்க்கை வாழ்ந்து என்றும் மங்காத வரலாறாக மாறுகின்றனர்.
மேன்மைப் பொருந்திய வாழ்கை வாழ்வோரின் வாழ்வும், கீர்த்தியும் அவர்களின் மறைவிற்குப்பின், இவ்வையகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். கூடவே, பிற்காலச் சமுதாயத்திற்கு அவர்கள் வழிகாட்டிகளாகவும் திகழ்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அவ்வகையில் இந்தியாவிலிருந்து தொடங்கி இத்தேசம் முழுவதிலுமுள்ள மிகச் சிறந்த கிறிஸ்தவத் தத்துவ வித்தகர்களின் வாழ்க்கையை தனது அறிவிற்கும் மிகுந்த தேடலுக்கும் எட்டிய வகையில் பிறப்பு வாழ்க்கை இறப்பு என்னும் புத்தகமாக ஆக்கியளித்துள்ளார் எழுத்தாளர் திரு. சி. வின்சென்ட் அவர்கள்.
எழுத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் இதற்கு முன்பு விவிலியம் மற்றும் கிறிஸ்தவம் சார்ந்த ஏழு புத்தகங்களை எழுதிப் பிரசுரித்த அனுபவம் பெற்றவர்.
அவ்வேழு புத்தகங்களும் கிறிஸ்தவ மேதாவிகள், கல்வியாளர்கள், பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்ததோடு, எட்டாவதாக இந்நூலையும் எழுதுவதற்கான உந்துதலையும் உருவாக்கியுள்ளன.
அவருக்குக் கிறிஸ்தவம் மீதிருக்கும் மிகத் துல்லியமான நம்பிக்கையும், பரந்துபட்ட வாசிப்பும், ஆழமான அறிவும் இருநான்கு புத்தகங்களுக்கு அதிபதியாக்கியுள்ளது.
ஆரம்பக் காலத்தில் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கிய அவரது எழுத்துப் பணி, இன்று அவரை நாலிரு புத்தகங்களின் பிதாமகனாக மாற்றியுள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, கற்றறிந்த பெரியவர்களைக் கூட வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.
இந்நூல் அன்று முதல் இன்று வரை கிறிஸ்தவத்திற்காகவும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களை உலகம் முழுவதும் எடுத்தியம்புவதற்காகவும் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தியாகச் சீலர்களின் வாழ்க்கையை பறைசாற்றுவதாக உள்ளது.
தொடர்ந்து வாசிப்பையும் எழுத்தையும் இரு விளிகளாக் கொண்டுள்ள எழுத்தாளர் சி. வின்செனட் அவர்களின் வாழ்க்கையும், நாளைய கிறிஸ்தவ மாமனிதர்கள் வரிசையில் ஒரு வரலாறாக மாறும் என்பது உறுதி.
அதனால் இதுவரை அவரோடு கைகோத்து, அவரது படைப்புகளுக்கு பேராதரவும் பெரும் உதவியும் செய்து வந்துள்ள அனைவரும் தொடர்ந்து, அவருக்கு ஆதரவுக் கரங்களை நீட்டி, மென்மேலும் அவரது இப்புனிதப் பயணம் மேன்மையுற ஊன்று கோலாயிருப்போம் என உறுதியளிப்போம்.
நூலைப் பெறுவதற்குத் தொடர்வு கொள்ளவும்...
சி. வின்சென்ட்
9751519114
9751519114
No comments:
Post a Comment