பண்பாட்டுக் கல்வியைப் பள்ளிகளில் புகட்டுவோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம். இவர்கள் நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளங்கள்.
பண்பாடு, கலாச்சாரம், தர்மம், ஆன்மீகம், நீதி, நியாயம், சமதர்மம் ஆகிய
அடையாளங்களை வாழ்வியல் கூறுகளாகக் கொண்டு வாழ்ந்துச் சிறப்பித்தவர்கள் நம்
மூதாதையர்கள். மண்ணுற்குள் புதையுண்டுப்
போன சிந்துசமவெளி நாகரிகத்திலிருந்துத் தொடங்கி இன்றுவரை நம் நாட்டின் மேன்மைக்கு
ஊன்றுகோலாக இருப்பவை நம்நாட்டின் பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.
ஈன்றெடுத்தப் பெற்றோருக்கு அடுத்தபடியாக அறிவை ஊட்டிய குருவுக்கும் கலையைக்
கற்றுக் கொடுக்கும் ஆசானுக்கும் அதிக மதிப்பும் மரியாதையும் வழங்கி வருவது நம்
பாரதத் தேசத்தில் மட்டும்தான். இந்த உண்மையை நம் நாட்டு ஆதிகாலப்
புராணங்களிலிருந்து தெளிவுப் படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதில் பாலூட்டுவது போன்றும் உணவூட்டுவதுப்
போன்றும் இந்தப் பண்பாட்டு அடையாளங்களையும் பெற்றோர்கள் தவறாமல் ஊட்டி வளர்த்தனர்.
இதனால்தான், இன்றும் நம் நாட்டில் கூட்டுக்குடும்ப முறையும் ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கலாச்சாரப் பண்பாட்டு முறையும் உயிரோட்டத்துடன் நிலைத்திருக்கின்றன. இவற்றைப் பார்த்து மேல்நாட்டினர் நம்மை
மெச்சுகின்றனர். கூடவே அவர்களும் நம்
நாட்டுக் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்றி
வருகின்றனர்.
பாரததேசம் உருவாகியதிலிருந்து இதுவரை உயிரோட்டமாக இருந்து வந்த குடும்ப
வாழ்வியல் முறைகளும் கல்வி, கலாச்சார முறைகளும் சமீபகாலமாக சற்றே சறுக்கல்களைச்
சந்தித்துக் கொண்டே வருகின்றன.நம்
நாட்டில் பல்கிப் பெருகி வரும் எவ்வித கட்டுப்பாடுமற்ற தகவல் தொடர்வுச்
சாதனங்களினால் இதுவரைப் பேணிக்காத்து வந்த பண்பாட்டுக் கூறுகள் சீரழிக்கப்பட்டு,
சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பல்வேறு சம்பவங்களைச் சான்றாதாரங்களாக எடுத்தியம்ப இயலும்.
நாள் தோறும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் சில செய்திகள் நம்
உதிரத்தையே உறைய வைக்கும் நிகழ்வுகளாக உள்ளன.
திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் குடும்பப்
பெண்கள், குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு விட்டு வேறொரு இளைஞனுடன் ஓடிப்
போவதும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனக் கூறிக் கொண்டு, அவளைச் சொந்தக் கணவனே
கொலை செய்வதும் நம் நாட்டில் வாடிக்கையாகி விட்டன.
இதுபோலவே பெற்று, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோர் வயதாகும் போது அவர்களைப்
பேணிக்காக்கும் பொறுப்பு மிக்க பிள்ளைகள், அவர்கள் மீது எவ்வித அக்கறையும்
கொள்ளாமல், அவர்களை அனாதைகள் போல் அலைந்துத் திரிய விடுவது அல்லது முதியோர்
இல்லங்களில் சேர்த்து விட்டு தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதும்
வாடிக்கையாகி விட்டன.
இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலேச் சென்றுப் பெற்றோருக்கு அடுத்த
படியாக மதிப்பளித்துப் போற்றித் துதிக்க வேண்டிய ஆசிரியர்களை மதிக்காதது மட்டுமல்ல வகுப்பறைக்குள்ளே
சரமாரியாகக் குத்திக் கொலைச் செய்யும் அளவுக்கு மாணவர் சமுதாயம் மாறிவிட்டது. இது வேதனையிலும் வேதனையான விஷயம். இந்த நிகழ்வு, இந்தியாவின் ஒட்டு மொத்த பண்பாட்டையும்
கேள்விக் குறியாக்கியுள்ளது. உலக நாடுகளே,
பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்போன இந்தியாவிலா? இப்படியொரு சம்பவம்? என வியக்கும் வண்ணம் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. இந்த அவமானச் செயலுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதைக் கல்வியாளர்கள் நன்கு ஆய்ந்தறிந்து
விடை காண வேண்டும்.
பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு இப்படியொருக் கொடூரச் செயலைச்
செய்வதற்குரியத் துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது என்றால் இதன் பொறுப்பை ஏற்பவர்கள்
யார்? அந்த மாணவனின் பெற்றோரா? இல்லை ஆசிரியர்களா? இவை இரண்டுமல்ல நம் நாட்டிலுள்ள கல்வி முறையா? இல்லை இவை மூன்றையும் தாண்டி நம் நாட்டு சட்ட
திட்டங்களா?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, அவர்கள் வெறுமனே
கல்வியறிவைப் பெறுவதற்கு மட்டுமல்ல. அறிவு
வளர்ச்சியோடு அந்தந்த வயது, வளர்ச்சிக்கு ஏற்றச் செயல்பாடுகளையும் நம் நாட்டு
பண்பாட்டு, கலாச்சார முறைகளையும் படித்து, அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டு
நடப்பதற்கே ஆகும்.
ஆனால், நம் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி முறையும்
சட்டதிட்டங்களும் கல்வியின் ஒட்டுமொத்த தன்மைகளையும் குறிக்கோள்களையும் மறந்தும்
மறுத்தும் மறைத்தும் விட்டு மாணவர்களைச் சிறந்த மனிதர்களாக்குவதை விடுத்து பெரும்
மாக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.
மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை வாழ்வியல் கல்வியையும்
நம் நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும் ஆரம்ப வகுப்பிலிருந்தே அவர்களுக்குச் சிறுக
சிறுக கற்பித்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் பள்ளியில் படிக்கும் போது பெற்றோர்களின் அருமைப் பெருமைகளையும்
ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். இவற்றோடு மட்டும் நின்று விடாமல் நம் பாரத
தேசத்தின் மாண்புகள் என்ன என்பதையும் நன்குணர வேண்டும்.
“ பெற்றோரைப் பேண வேண்டும் பெரியோரை மதிக்க
வேண்டும் நம் நாட்டின் அருமைப் பெருமைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்றெல்லாம் மாணவர்களுக்கு உறுதிமொழியாகச்
சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது, அவற்றை எப்படியெல்லாம் நடைமுறைப் படுத்த
வேண்டும் என்பதையும் உணர்த்திக் கொடுக்க வேண்டும். அவற்றிற்குப் பொருத்தமான பாட முறைகளும் பாடத்
திட்டங்களும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும்.
மனித மாண்புகள் என்ன என்பதையும் நாம் வாழும் தேசத்தின் பண்பாட்டுக் கூறுகள்
என்ன என்பதையும் அவன் உணர்ந்து கொள்ளும் விதத்திலான பாடக் கூறுகள் வேண்டும்.
மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்; எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றத் தான்தோன்றித் தனமான
வாழ்க்கையைத் தவிர்த்து மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும், எவற்றைச் செய்யலாம்,
எவற்றைச் செய்யலாகாது என்றத் தத்துவக் கூறுகளை மாணவர்களுக்குப் பள்ளிப் பாடத்தின்
மூலமாகக் கற்பித்துக் கொடுக்க
வேண்டும். அம்முறைகளைப் பின்பற்றி அவர்கள்
வாழ்வதற்கான வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மனிதர்கள் செய்யும் மேன்மையானச் செயல்களுக்கு என்னென்னச் சிறப்புகள் உண்டு; அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் அநீதிகளுக்கும்
என்னென்ன விதமான தண்டனைகள் உண்டு என்பதையும் அவனுக்குப் பாடத்திட்டம் வாயிலாகப்
புகட்ட வேண்டும். பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் பள்ளியிலோ அல்லது வகுப்பறைகளிலோச் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளுக்கு நியாயமான, ஆனால், அதிகப் பாதிப்பு
ஏற்படாத விதத்திலானத் தண்டனையைப் பள்ளி ஆசிரியர் அல்லது தலைமையாசிரியர் வழங்க
வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் தாங்கள் செய்த சிறு சிறு தவறுகளை உணர்ந்து
மென்மேலும் அதுபோன்றத் தவறுகளைச் செய்யாமல் திருந்திக் கொள்வார்கள்.
ஆனால், தற்போது நமது அரசு புதுமையானச் சட்டங்களை இயற்றி வைத்து மாணவர்கள் எப்படிப்பட்ட தவறுகளைச் செய்தாலும்
அவற்றிற்குத் தண்டனைக் கொடுக்காமல் அவர்களைத் தாஜாப் பண்ணி அவர்களுக்காக
ஆசிரியர்கள் கூஜா தூக்க வேண்டும் என்ற முறையிலானச் சட்டத்தை இயற்றி வைத்துள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், மாணவர்கள் தவறு செய்தால் அது குற்றமில்லை; ஆனால், தவறு செய்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால்
அது பெரும் குற்றமாகி, ஆசிரியர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவர்களை
ஜெயிலில் அடைக்கும் அநியாயமான நிலைமை உருவாகியுள்ளது.இவை
ஒருபுறம் இருக்க, மறுபுறம், முன்காலங்களில் பிள்ளைகள் ஏதேனும் தவறுகள் செய்தால்
ஆசிரியர்கள் அதனைக் கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோச் செய்தால் அதனைப் பெற்றோர்களும்
ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று நிலைமை நேர் மாறாகத் திரும்பி விட்டது. பிள்ளைகள் தவறு செய்தால் அதனைப் பெற்றோர்களும்
தண்டிப்பதில்லை; ஆசிரியர்கள் தண்டித்தால் அதைப் பெற்றோர்கள் பொறுத்துக்
கொள்வதுமில்லை. இது பிள்ளைகளுக்குப்
பெரும் இளக்காரமாக இருக்கிறது. கூடவே,
மீண்டும் மீண்டும் அவர்களைத் தவறுச் செய்யத் தூண்டுகிறது.
இப்படி பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் செய்யும் தவறுகளுக்குப் போதிய தண்டனை
வழங்காததால் அது அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிகளில் படிக்கச்
செல்லும் போது மாணவர்களுக்குள்ளே ராக்கிங், ஈவ்டீச்சிங் போன்ற வன்செயல்களைச்
செய்யத் துண்டுகிறது. இதனையும் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டு கண்ணில்லா
குருடர்களாகவும் வாயில்லா ஊமைகளாகவும் மாற வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட இழிநிலைகளை நம் நாட்டிலிருந்து அகற்றி, பள்ளிப்
பருவத்திலிருந்து மாணவர்களை நல்ல பண்பாடும் சிறந்த குணாதிசையங்களும் உடையவர்களாக
வார்த்தெடுக்க வேண்டும். அதற்குப் பள்ளிகளில் வாழ்வியல் சார்ந்தப் பழங்காலப் பண்பாடுகளையும் நாட்டுப்பற்றை வளர்க்கும்
விதத்தில் அளிக்கப்பட்ட கலாச்சாரக் கல்விகளையும் மாணவர்களுக்குக் கற்பித்துக்
கொடுக்க வேண்டும்.அவற்றிற்கு
இயைந்த வகையிலான கல்வி முறைகளைப் பாடதிட்டங்களில் உருவாக்க வேண்டும். அதோடு, தவறு செய்யும் மாணவர்களுக்குத் தண்டனை
வழங்கும் முறையையும் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்க வேண்டும். என்றால் மட்டுமே எதிர் காலத்தில் ஒரு சிறப்பான சீரிய
முறையிலான இளம் சமுதாயத்தை வார்த்தெடுத்து இத்தேசத்தின் வரலாற்றுப் பண்பாட்டுக்
கூறுகளையும் நாகரீகக் கலாச்சார மேன்மையையும் கட்டிக் காக்க இயலும்.சமுதாய நண்பன் மார்ச் 2012
இதழில் பிரசுரமானது.
No comments:
Post a Comment