விழுதுகளே விழிப்புடன் எழுதுங்கள்...
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இவ்விரு தேர்வுகளையும் எழுதுவதற்கு லட்சக்கணக்கான இளம் விழுதுகள் தயாராக இருக்கின்றனர். இவர்களில் பலரும் இத்தேர்வை எப்படி எழுதுவது? இத்தேர்வின் முடிவுகள் எதிர்காலத்தில் தங்கள் வாழ்கையில் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பன பற்றிய எவ்வித தெளிவான சிந்தனையும் இல்லாமலே இருப்பார்கள்.
ஒருவேளை, ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இவற்றைப் பற்றி தெளிவான விளக்கங்களையும் விளைவுகளையும் எடுத்தியம்பியிருந்தாலும் மாணவர்கள் அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை தற்கால மாணவர்கள் விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் மட்டுமே கருதுகின்றனர். இந்தச் சிந்தனைப் போக்கு எதிர்கால மாணவ சமுதாயத்தை மிக ஆபத்தான நிலைக்குக் கொண்டுச் செல்லும்.
எனவே, சமுதாய நண்பன் மூலம் இதுவரையிலும் நான் எழுதி வரும் கட்டுரைகளுக்கு முற்றிலும் மாறுபட்டுத் தற்போது தேர்வு எழுதுவதற்குத் தயாராக இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்காக இக்கட்டுரையை எழுதுகிறேன்.
அருமை மாணவர்களே,
“வாய்த்தது நம் தமக்கு ஈதோர் வாழ்க்கை போற்றிடுமின்” என்பது ஆன்றோர் அருள் மொழி. எவருக்கும் கிடைப்பதற்கு அரிதான மனிதப் பிறவியானது இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படிக் கிடைத்துள்ள இந்த அளப்பரிய வாழ்க்கையை நாம் வீணடிக்கக்கூடாது; விளையாட்டாகவும் கருதக்கூடாது. இவ் வாழ்க்கையைக் கிடைப்பதற்கரிய வாழ்க்கையாகக் கருதி பெருமைக் கொள்ள வேண்டும். மேன்மைப் படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி இப்படியொரு பிறவி தந்தமைக்காக எண்ணிலா நன்றி சொல்ல வேண்டும். இப்பிறவியைப் போற்றித் துதித்துப் புழகாங்கிதம் கொள்ள வேண்டும்.
இதற்காக நாம் என்னச் செய்ய வேண்டும்? என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய மிக முக்கியமானத் தருணம் இதுவாகும். நம் இந்திய தேசத்தின் எதிர்காலத் தலையெழுத்து வகுப்பறைகளில் நிர்ணைக்கப்படுகிறது என்பது கல்வியாளர் ஒருவரது கருத்து. என்னைப் பொறுத்தவரை இத்தேசத்தின் நலமும் வளமும் மாணவச் செல்வங்களான உங்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் உறுதிச் செய்யப்படுகிறது என்று ஆணித்தரமாகச் சொல்வேன்.
வீடுகளில் உங்களைச் சீராட்டி வளர்க்கும் பெற்றோருக்கும் பள்ளிகளில் அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கும் உங்கள் மீது இமயத்தளவு நம்பிக்கை இருக்கலாம். நீங்கள் எழுதும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்து உயர் படிப்புக்குச் செல்ல வேண்டும் என்பனவெல்லாம் அவர்களின் அவாவாக இருக்கலாம். இந்த அவா நியாயமானது. அவர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது உங்களின் தலையாயக் கடமையாகும். அதற்கு நீங்கள் என்னச் செய்யப் போகிறீர்கள்? என்பதுதான் என் கேள்வி.
இத்தருணத்தில் நீங்கள் ஒன்றை மட்டும் மனதில் திடப்படுத்திக் கொள்ளுங்கள். அது வேறு ஒன்றுமில்லை, எதிர் காலத்தில் நீங்கள் யாராக இருக்க வேண்டும்? உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்? என்பதை இப்போதே திடப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் யாருடைய விருப்பும் வெறுப்பும் இருக்க வேண்டாம்; நீங்களே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அப்படி நீங்கள் எடுக்கும் முடிவை ஒரு விதையாக உங்கள் உள்ளத்தில் மிக ஆழமாகப் பதித்து வையுங்கள். உங்கள் எண்ணங்களால் தினமும் அந்த விதைக்கு நீரூற்றுங்கள்; சிந்தையால் தினமும் வளமிடுங்கள்.
இடைவிடாது நாள்தோறும் சிந்தையாலும் எண்ணங்களாலும் மனதை ஒருமுகப்படுத்தி அந்த விதையை வளர விடுங்கள். அந்த விதை நாளைக்கு விருட்சமாகும்; பூத்துக் குலுங்கி, காயாகி, கனியாகி உங்களை மகிழ்விக்கும் கூடவே வாழ வைக்கும்.
இதனைச் சிந்தனைச் செய்வது அனைவருக்கும் எளிது. ஆனால், நடைமுறைப் படுத்துவதற்குப் பல்வேறு சிரமங்கள் உண்டு என்பது உண்மை. அந்தச் சிரமங்களையெல்லாம் தகர்த்தெறிந்து சிந்தைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியை நீங்கள் தற்போது எழுதப்போகும் தேர்விலிருந்துத் தொடங்க வேண்டும்.
நீங்கள் தற்போது எழுதப் போகும் இவ்விருத் தேர்வுகளில் எதுவானாலும் அதுவே உங்கள் வாழ்க்கையில் மிகப் பலமான அஸ்திவாரம். இத்தேர்வின் முடிவும் மதிப்பெண்ணும் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகின்றன என்பது உறுதி.
முதலில் உங்கள் வலிமை மீதும் உங்கள் மீதும் திடம் கொள்ளுங்கள். உங்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் நல்ல மதிப்பெண் பெற இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு, நான் வெற்றி பெறுவேன்; நான் வாழ்ந்துக் காட்டுவேன் என்பதைத் தாரக மந்திரமாக மனதுக்குள்ளே ஒலித்துக் கொண்டே இருங்கள்.
பெற்றோர், ஆசிரியர் யாருடையத் தூண்டுதலும் இல்லாமல் நீங்கள் சுயமாகவே தினமும் அதிகாலையில் எழுந்து, அமைதியான இடத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்திப் படியுங்கள். அதற்காகத் தூக்கத்திற்கும் விளையாட்டிற்கும் அறவே விடை கொடுக்க வேண்டாம். ஓரளவிற்கு அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். இல்லையேல் உடல் நிலை ஒத்துழைக்காது.
தேர்வு முடியும் வரை தொலைக்காட்சிப் பார்பதற்கும் செல்போனில் அதிகமாகப் பேசுவதற்கும் சுத்தமாக விடை கொடுங்கள். கூடவே, வீட்டில் கம்பியூட்டர், இன்டர்நெட் வசதியிருந்தால் அவற்றில் விளையாடுவதையும் விலக்கி வையுங்கள். இவை அனைத்தையும் யாருடைய வற்புறுத்தலினாலும் செய்யாமல் உங்கள் சுயக்கட்டுப்பாட்டினால் செய்யுங்கள்.
உங்களோடு மனம் ஒத்த நண்பர்கள் இருந்தால் அவர்கள் ஒன்றிரண்டு பேரோடு சேர்ந்திருந்து கலந்துரையாடிப் படித்தால் அது மிகப் பெரும் பலனைத் தரும் என்றே நம்புகின்றேன்.
பெரும்பாலான மாணவர்கள், ஆசிரியர்கள் அன்றன்று கற்பிக்கும் பாடங்களை உடனுக்குடன் படிக்காமல் காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டேப் போவர்கள். எல்லாம் கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மமதையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இப்போது, ஓர் அச்ச உணர்வு அண்டிக் கொள்ளும். தேர்வுக்கு இனி கொஞ்சம் நாள்கள் மட்டும்தான் இருக்கிறது; அதற்குள் அத்தனைப் பாடங்களையும் எப்படி படித்து முடிப்பது என்ற ஐயப்பாடு. நீங்கள் இப்பொழுதும் கவலைப்பட வேண்டாம். “துணிந்தவனுக்குத் தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை” என்பதற்கு இணங்க இதுவரை உங்களுக்கு இருந்த அசட்டுத் தனங்களையெல்லாம் நீக்கி வைத்து விட்டு துணிந்து புத்தகங்களைப் புரட்டுங்கள் உங்களாலும் வெற்றிக் கொள்ள இயலும். அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது சிந்தையை இனியும் அலைபாய விடாமல் இருந்தால் போதும்; ஒரே மாதத்தில் அத்தனைப் பாடங்களையும் உங்களாலும் அசை போட முடியும்; துணிச்சலுடன் எழுதுங்கள். துவண்டு விடாதீர்கள்; நீங்களும் துலங்குவீர்கள்.
உங்களை, உங்கள் திறமையை வெளியுலகிற்குக் கொண்டு வருவதற்கான அரும் பெரும் சந்தர்ப்பம்தான் இத்தேர்வு. இதில் நீங்கள் சமர்த்துகளாக மாறி விட்டீர்களென்றால் வாழ்க்கை முழுவதும் நீங்கள் ஹீரோக்களாக இருப்பீர்கள். இதனால், நீங்கள் படித்த பள்ளி, அதன் ஆசிரியர்கள், உங்கள் பெற்றோர், உற்றார், உறவினர் ஆகிய அனைவரும் பெருமைப் பெறுவார்கள்.
பிப்ரவரி 2012 சமுதாய நண்பன் மாத இதழில் பிரசுரமானது. நன்றி.
No comments:
Post a Comment