இந்தியாவிற்குத் தேவை இரும்பு மனிதர்கள்.
இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள்,அனைவரும் சகோதர, சகோதரிகள். ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரேக் கொள்கை, எங்கும் எல்லோருக்கும் சமதர்மம். இதுதான் சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம். இந்திய தேசத்தின் கொள்கை கோட்பாடும் அதுதான்.
காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கம் அதன் பொருட்டு அதிகரிக்கும் தேவைகள் என பல்வேறுப் பிரச்சனைகள் உருவாகவே, ஒன்றுபட்ட இந்தியாவை பல மாநிலங்களாகப் பிரித்தனர் அன்றைய ஆட்சியாளர்களும் அரசியல் வல்லுநர்களும்.
அந்தப் பிரிவினையும் எதன் அடிப்படையில் ஏற்பட்டதென்றால் நில அடிப்படையில் ஏற்படாமல் மொழி அடிப்படையில் ஏற்பட்டது. அன்றைய அரசியல் தலைவர்கள் எவ்வித உள்நோக்கமோ அல்லது மாறுபட்ட சிந்தனையோ இல்லாமல் இந்த மாநிலங்களைப் பிரித்தனர்.
அதன் மூலம் மக்களுக்கு மாநில வாரியான ஆட்சி, அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டன. அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் வசதிக்கும் வாய்ப்புக்கும் தேவைக்கும் ஏற்ப எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறும் கட்சிகள் ஆட்சி அமைத்து தன்னாட்சி மாநிலங்களாகத் திகழ்ந்து வந்தன. என்றாலும், மத்திய அரசின் நேரடி கண்காணிப்பும் சில குறிப்பிட்ட அதிகாரமும் மாநில அரசுகள் மீது இருந்து கொண்டுதான் இருந்தன.
மாநில அரசுகள் ஏதேனும் விஷயத்தில் வழி தவறவோ அல்லது தேச நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடவோ செய்தால் அதனைக் கண்டித்து நெறிப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தது. முன்பெல்லாம் மத்திய அரசு வழங்கும் அறிவுரைகளையும் வழி காட்டுதல்களையும் மாநில அரசுகள் தவறாமல் அப்படியே கேட்டும் நடைமுறைப்படுத்தியும் வந்தன.
ஆனால், சமீபகாலமாக இந்த நடைமுறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேச நலனுக்கு அல்லது பிற மாநில அரசுகளுக்கு பாதகம் ஏற்படும் வண்ணம் ஏதேனும் ஒரு மாநில அரசு நடந்து கொண்டால், அந்த அரசை நெறிபடுத்த மத்திய அரசு வழங்கும் அறிவுரைகளையோ அல்லது நெறிமுறைகளையோ ஏந்த மாநில அரசுகளும் கண்டு கொள்வதில்லை. அவற்றை ஏற்றுக் கொள்வதுமில்லை.
சில நேரங்களில் மத்திய அரசின் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்த்து நின்று மாநில அரசுகள் செயல் படுகின்றன. கூடவே, நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் தொடர்கின்றன. இதனால், மத்திய அரசு மாநில அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திக்குமுக்காடிப் போகின்றது.
மாநில அரசுகள் மத்திய அரசை அணுசரித்தோ அல்லது பணிந்தோ செயல்படாமல் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இதனால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே பெரும் குழப்பங்களும் கலகங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்தக் குழப்பங்களும் கலகங்களும் உள்நாட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், உள்நாட்டுக்குள்ளையே ஒரு மாநிலத்திலுள்ள மக்கள் இன்னொரு மாநிலத்தில் அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் கட்டாயத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இந்த நடைமுறை இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்த மாறுபட்ட நடைமுறைகளுக்குச் சான்றாகப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டுவதற்கு இயலும். மத்திய அரசு தமிழகத்தில் நிறுவியுள்ள அணுமின் நிலையத்தைத் திறந்துச் செயல்பட வைப்பதற்குத் தமிழக அரசுப் போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது,
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முல்லைப் பெரியார் அணை மற்றும் தண்ணீர் பிரச்சனை, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடி , அத்திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் இடையூறு செய்வது, கர்நாடக மாநிலத்தில் காவிரியிலிருந்துத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அளவு தண்ணீரை வழங்குவதற்கு மறுப்பது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு புதிய மாநிலத்தைப் பிரிப்பதற்காகச் செய்யும் போராட்டங்கள்,கலகங்கள், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு மறுப்பது என பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.
இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் தலையாயக் கடமையாகும். ஆண்டாண்டு காலமாக நடைபெறும் இப்பிரச்சனைகளுக்கு எவ்வித நிரந்தர தீர்வுகளையும் ஏற்படுத்தாமல் மத்திய அரசு ஒரு பொம்மை போல் கைகட்டி, வாய் பொத்தி மொளனம் சாதித்து வருவது வேடிக்கையானது.
இரு மாநிலங்களுக்கு இடையே கொள்கை முரண்களோ, ஒப்பந்த மறுப்புகளோ ஏற்படும் போது அந்த இரு மாநிலங்களில் ஆளும் அரசுகள் அல்லது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த முரண்பாடுகளுக்கு முறையான, திடமான, தீர்க்கமான முடிவெடுத்து இரு மாநிலங்களுக்கு இடையேயும் சுமூக நட்புறவை ஏற்படுத்த வேண்டியது ஆளும் மத்திய அரசின் தவிக்க முடியாத பொறுப்புணர்ச்சியாகும்.
ஒரு வேளை மத்திய அரசு ஏற்படுத்தும் சுமூக முடிவுக்கு மாநில அரசுகள் முரண்பட்டு நின்றால் அந்த அரசுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவோ அல்லது அந்த அரசையே பதவி நீக்கம் செய்யவோ வேண்டிய முழு அதிகாரமும் மத்திய அரசிற்கு உண்டு.
இந்த அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தாமல் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளைக்கூட பூதாகரமாக்க விட்டு அவை கலவரங்களாக வெடித்து குழப்பங்களாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிப்பது எந்த வகையில் நியாயமானதாகும்?
அந்த வகையில் தற்போது தமிழக – கேரள அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் இருமாநில அரசுகளும் தங்களுக்குள் ஒங்வொரு நியாயத்தைக் கூறிக்கொண்டு “தான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு” என்ற பழமொழிக்கு ஏற்ப சொல்லாலும் செயலாலும் தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பிரச்சனைச் சம்பந்தமாக நிபுணர் குழு அந்த அணையை ஆய்வுச் செய்து அதன் உறுதிப்பாடு, பயன்பாடு,காலப்பழக்கம் போன்றவைப் பற்றிய தெளிவான அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றமும் இந்த அணை பிரச்சனைப் பற்றிய தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.
இவ்விரு அடிப்படை ஆதாரங்களையும் சாதகமாக வைத்துக் கொண்டு மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்து சுமூகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை மத்திய அரசு எடுக்கும் நியாயமான முடிவுக்கு ஏதேனும் ஒரு மாநில அரசு மாறுபட்டு, முரண்பட்டு போகுமேயாயின் அந்த அரசை கலைப்பதற்குக்கூட மத்திய அரசு தயங்கக் கூடாது.
அண்டை மாநிலமான கேரளத்தில் தமிழக மக்கள் அம்மாநில தலைநகரமான திருவனந்தபுரம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்து உள்ளனர். அது போலவே கேரள மாநில மக்கள் குமரிமாவட்டம் தொடங்கி தலைநகராம் சென்னை வரை வியாபித்துள்ளனர்.
இப்படி, இரு மாநிலங்களிலும் தமிழ், மலையாள மக்கள் பரஸ்பரம் வியாபித்து சகோதரர்கள் போல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒர் அணைப் பிரச்சனையைப் பூதாகரமாக்கி இரு மாநில மக்களையும் ஒருவருக்கொருவர் மோத விட்டு ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் சிறைபிடிப்பு, முற்றுகை, மலையாளிகளையும் தமிழர்களையும் விரட்டியடிப்பு என கலவர பூமியாக்கி குழப்பத்திற்கு மேல் குழப்பம் நடந்து கொண்டிருக்கும் போது மத்தியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் பாவித்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இவ்விரு மாநிலங்களுக்கிடையே எழுந்துள்ள ஒரு சிறியப் பிரச்சனைக்கு தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயல வில்லை எனில் இந்த அரசே, மாநில அரசுகளைக் கலைப்பதை விட்டுவிட்டு தானாகவே மத்திய அரசைக் கலைத்து விடலாம்.
சுயமாக முடிவெடுக்கும் திறனும் தான் எடுத்த முடிவை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நடைமுறைப் படுத்தும் சக்தியும் வாய்ந்த தலைவர்கள் மத்திய அரசில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்தால் மத்திய அரசின் தீர்க்கமான, நியாயமான கொள்கையை அல்லது தீர்மானத்தை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அந்த அரசுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் வல்லமை வாய்ந்தத் தலைவர்கள்தான் இந்தியாவிற்கு இப்போது தேவையாக உள்ளனர்.
இவ்விரும்புக் கரம் படைத்தத் தலைவர்கள் மத்தியில் ஆட்சி செய்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. மாநில அரசுகளிலும் இரும்புக் கரம் படைத்தத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே மாநிலங்களில் ஏற்படும் தீவிரவாத மற்றும் பயங்கரவாதங்களைக்கூட அடக்கியாள முடியும்.
இந்தியாவில் இரும்பு மனிதராக இருந்த சர்தார்வல்லவாய்பட்டேலுக்குப்
பிறகு இன்னும் அவர் போல் ஓர் இரும்பு மனிதர் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட இரும்பு மனிதர்களின் தேவை இப்போது இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட இரும்பு மனிதர்கள் தோன்றினால் மட்டுமே இனி இந்தியாவை பல்வேறு கலகங்களிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் காப்பாற்ற இயலும்.
நன்றி: சமுதாய நண்பன் - ஜனவரி 2012.
No comments:
Post a Comment