Sunday, 19 February 2012

மீண்டும் வேண்டாம் கற்கால வாழ்க்கை.


             மீண்டும் வேண்டாம் கற்கால வாழ்க்கை

     இப்பூவுலகில் மனித பிறவி என்பது இறைவனின் அளப்பரியக் கொடை.  சிரித்தல்... சிந்தித்தல்... பகுத்தறிதல்...செயல்படுதல்... முன்னேறுதல்... இவை அனைத்தும் இறைவன் மனிதப் பிறவிக்குக் கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்கள்.
     இந்த வரப்பிரசாதங்களைக் கொண்டுதான் அன்று காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று நாடு, நகரங்களிலும் மாடமாளிகைகளிலும் வாழ்கின்றான்.  அன்று இலைகளையும் தளைகளையும் உடுத்த மனிதன் இன்று,  பட்டாடைகளைக் கட்டி மகிழ்கின்றான்.  அன்று கட்டிச் சோறுடன் கால் கடுக்க நடந்த மனிதன் இன்று விமானங்களில் மின்னல் வேகத்தில் நாடுவிட்டு நாடு பயணிக்கின்றான்.  அன்று விண்ணைக் கண்டு வியந்து நின்ற மனிதன் இன்று, அங்குச் சென்று விளையாடவும் செய்கிறான்.  அன்று கல்லை உரசி நெருப்பை உருவாக்கிய மனிதன் இன்று வெள்ளத்திலிருந்தும் காற்றிலிருந்தும் சூரிய சக்தியிலிருந்தும் மின்சாரத்தைக் கண்டுபிடித்து இரவையும் பகலாக்கி  இன்புற்று வாழ்கின்றான்.  இப்படி, அடுக்கிக் கொண்டேப் போனால் ஆயிரமாயிரம் விஷயங்களை அடையாளம் காட்டலாம்.
     இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் மனிதனின் அதீதமான அறிவின் ஆற்றல் இன்றி வேறு என்னவென்று இயம்ப  இயலும்.  இந்த மாற்றங்கள், இவ்வையகத்தில் வரும் என்பதை அன்றே நம் நாட்டு ஞானிகள் உணர்ந்துள்ளனர்.  அதனால்தான் பாட்டுக்கொரு பாரதிகூட
                    வானையளப் போம்கடல் மீனையளப்பேம்
                     சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
                     சந்தி தெருபெருக்கும் சாத்திரம் கற்போம்    
என்று அன்றே உரைத்திட்டான்.  அவன் உரைத்தவை அனைத்தும் அப்படியே பலித்து விட்டன.
     இவையனைத்தும் ஒருபுறம் இப்படியிருக்க, மறுபுறம் இதுவரை கடவுளால் மட்டுமே கையாளப்பட்ட படைப்பின் ரகசியத்தைக் கூட இன்று மனிதன் கையகப்படுத்தி விட்டான். அதன் விளைவு இன்று டெஸ்டீயூப் [சோதனைக் குழாய்] குழந்தைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன.  இத்தனை விந்தைகளுக்கும் சொந்தக்காரன் மனிதன். இதனை யாரேனும் மறுக்க முடியுமா?
     உலகம் தோன்றிய அன்றிலிருந்து இன்று  வரைப் படிப்படியாக இத்தனை வளர்ச்சியைக் கண்டுள்ள மனிதர்களில் சிலர் இன்றும்  அறிவீலிகளாக இருப்பது வியப்பிற்குரியது.
     நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப நாளுக்கு நாள் புதிய புதிய கண்டு பிடிப்புகளும் விஞ்ஞான விந்தைகளும் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.  இவற்றை ஏற்றுக் கொள்வதும் பயனுடையதாக்கிக் கொள்வதும் மனிதனின் கடமையாகும்.  இவற்றையெல்லாம் பயன்படுத்த மாட்டோம் இவையனைத்தும் மனிதனுக்குத்  தீங்கு விளைவிப்பவை என ஒதுக்கி விடுவது மனிதனின் மடமையாகும்.  கூடவே மனிதன் நவீன காலத்தை விட்டு பின்நோக்கி மீண்டும் கற்காலத்தை நோக்கியே  செல்கிறான் என்பதற்கு அடையாளமாகும்.
     கொடும் காற்றும் அடைமழையும் பொங்கி எழும் பூகம்பமும் சரிந்து விழும் மலையும் சீறியெழும் கடலும் இயற்கையாய் எழும் அபாயங்கள். இவை நாள் தோறும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும்.  இவற்றால் உண்டாகும் உயிர்ச் சேதங்களும் பொருள் நாசங்களும் அளவிடற்கரியன.  இவற்றைகூட ஓரளவுக்கு முன் கூட்டியே ஆய்ந்தறிந்து அவற்றின் ஆபத்துகளை உணர்ந்து மக்களை எச்சரித்து அபாயங்களிலிருந்து விலக்கி நிறுத்த எத்தணக்கின்றனர் விஞ்ஞானிகள். நூறு சதவீதம் இல்லையென்றாலும் பத்து சதவீதமாவது தற்காத்துக் கொள்ளும் சக்தி இன்றைய அறிவியல்  கண்டுபிடிப்புகளுக்கு உண்டு என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
     இப்படி, மனிதனின் அறிவுத் திறனும் அறிவியியல் வல்லமையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உந்து சக்திகளாக இருக்கும் போது அய்யய்யோ... இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது... இவை அனைத்தும் நம்மை பயமுறுத்த வரும் பூச்சாண்டிகள்... என்று சிறுபிள்ளைத் தனமாக அப்பாவி மக்களை அச்சுறுத்தி, அவர்களை இவற்றிற்கு எதிராக போர் தொடுக்கவும் போராட்டம் நடத்தவும் தூண்டி விடுவது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்பதை உணர வேண்டும்.
     அப்படிப்பட்ட ஒரு பூச்சாண்டியைத்தான் இன்றுக் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏவி விட்டுள்ளனர் சில அதி அபூர்வ புத்திசாலிகள். ஏன் இந்தப் பூச்சாண்டி? எதற்கு இந்த ஆவேசம்? யார் இதற்கு மூல காரணம்? என்பதை எல்லாம் ஆய்ந்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அந்த அளவுக்கு அவகாசமும் கொடுக்கக் கூடாது.
     கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தீர்த்தோம் என்பதல்ல முக்கியம்; ஆயிரக்கணக்கான அறிவியல் வல்லுநர்களின் ஆய்வு மூலதனம் முடக்கப்படுகிறதே என்பதுதான் வேதனை.  லட்சக்கணக்கான விஞ்ஞானிகளின் மூளை முடமாக்கப்படுகிறதே என்பதுதான் கோபம். இந்த நாட்டின் முதுகெலும்பான தொழிற்சாலைகளின் மூடு விழாவிற்கு வித்திடுகிறார்களே என்பதில்தான் ஆவேசம்.
     இவ்வளவு அறிவும் ஆற்றலும் கொண்டு இயற்கையைக் கூட கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும் விஞ்ஞானிகள், தாங்களாக உருவாக்கும் ஓர் அணு ஆலையைப் பாதுகாப்பாக கட்டமாட்டார்களா? எப்படி அதன் மூலம் கேடு விழைவிப்பதற்கு எண்ணுவார்கள்.  அப்படி கேடு விளைவிக்க எண்ணுவார்களே ஆயின் அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் நாட்டு மக்களை விட அந்த அணு உலையின் உள்ளே வேலைச் செய்யும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளாகத்தானே இருக்க முடியும்.  இதனை ஏன் இந்த அதிபுத்திசாலிகளான போராளிகள் சிந்திக்கவில்லை.
     கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏதும் அறியா அப்பாவி மக்களை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு  வேண்டாம் என்பார்களா?  மின்சாரத்தால் இயங்கும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் கற்கால மக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்களா? அவர்கள் தங்களின் வீடுகளில் வரவேற்பு அறை முதல் கழிவறை வரை ஏர்கண்டிஷன் வசதி செய்துள்ளனர்.  பயணிக்கும் காரிலிருந்து படுத்துறங்கும் அறை வரையிலும் குளுகுளுவென்றே இருக்கும்.  ஏன் அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கூட மின்விசறியும், ஒலி பெருக்கியும் பயன்படுத்துகிறார்களே இவை எப்படி இயங்குகின்றன? மின்சாரம் இல்லாமல் வெறும் தண்ணீரில் அல்லது காற்றினாலா இயக்குகிறார்கள்?
     அவர்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு அடுத்தவர்கள் எதுவும் அனுபவிக்காமல் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணும் இவர்களுக்குச்  சரியான பாடம் புகட்ட வேண்டும்.  அதற்கு  நாட்டு மக்களை விட அரசாங்கமே நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
     ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களின் ஒட்டு மொத்த பாதுகாவலாகத் திகழ வேண்டியது  அந்நாட்டு அரசாங்கத்தின் கண்ணியமிகுக் கடமையாகும். அந்த வகையில் மக்களின் வசதி, வாய்ப்புக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் மனப்பூர்வமாகவோ அல்லது பிறரின் தூண்டுதலினாலோ முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்றால் அதனை முடிவுக்குக் கொண்டு வந்து தீட்டிய திட்டங்களை திடமாகச் சொயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
     அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அரசு நிறுவியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்துச் செயல்பட வழிவகைச் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக அரசைச் சார்ந்ததாகும்.  போராட்டக்காரர்களின் முழுப் பின்னணியையும் துருவி ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அணுமின் நிலையத்தை செயல்படச் செய்ய வேண்டும்.  இது தமிழக அரசின் தயையாயக் கடமையாகும்.
     ஒரு வேளை தமிழக அரசு, தமிழக மக்களின் ஓட்டு வங்கிக்காக, தற்போது நடந்து வரும் சமூக விரோதிகளின் தூண்டுதலால் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தோ அல்லது மொளம் சாதித்தோ கைகட்டி, வாய் பொத்தி இருக்குமேயாயின், மத்திய அரசு நேரடியாக களத்தில் குதித்து தனது இரும்புக் கரத்தைக் கொண்டு இப்போராட்டத்திற்கு முடி கட்ட வேண்டும்.
     அதற்காக, ஒரே நாளில் கூடங்குளத்தில் இராணுவ வீரர்களை அனுப்பி அப்படியே போராட்டக்கார்களை அள்ளி எடுத்து அப்புறப்படுத்தி விட்டு அணுமின் நிலையத்தை செயல்பட வைக்க வேண்டும்.  இதைச் செய்வதற்கு மத்திய அரசும் தயக்கம் காட்டுமே ஆயின் தற்போது இந்தப் போராட்டக்காரர்களுக்குப் பின்துணை வகித்துக் கொண்டிருக்கும் அன்னிய சக்திகள் மிக சுலபமாக நம் நாட்டிற்குள் ஊடுருவி விடுவர்.  அதோடு நம் நாட்டை மூண்டும் அடிமைப்படுத்தி விடுவார்கள்.
     எனவே, போராட்டக்காரர்கள் மீண்டும் நம் நாட்டை கற்காலத்திற்கு இட்டுச் செல்லாமல் போராட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும், இல்லையேல் மத்திய அரசு நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி அன்னிய தீய சக்திகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி மீண்டும் நம்மை அடிமையாக்காமல் காக்க வேண்டும்.
                       நன்றி: சமுதாய நண்பன் டிசம்பர். 2011.



      .
         

No comments:

Post a Comment