இனியொரு சுதந்திரம் வேண்டும் சுகமாய் வாழ...
நீண்ட நெடிய காலம் ஓயாத போராட்டம்...எண்ணற்ற உயிர் தியாகம்...வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்... இப்படி, எண்ணிலடங்கா துயரங்களையும் துன்பங்களையும் அனுபவித்து, நம் முன்னோர்களால் பெற்றுத்தரப்பட்டதுதான் நாம் இன்று சுவாசித்து வரும் சுதந்திரக் காற்று.
சாதிகளை மறந்து, மத, இன, மொழி ஆகிய அத்தனை வேற்றுமைகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு நாம் அனைவரும் இந்தியர், நம் நாடு இந்திய என்ற தாரக மந்திரம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தையாலும் செயலாலும் ஒன்றாகவே இருந்தனர் நம் முன்னோர்கள். அதன் விளைவு,சர்வ சக்தி வாய்ந்த வெள்ளையனே ஆட்டம் கண்டு ஓட்டம் பிடித்தான்.
நீர் வளம், நில வளம், மலை வளம், கடல் வளம் ஆகிய அனைத்து வளங்களையும் ஒருங்கேப் பெற்றது நம் இந்திய தேசம். செல்வம் செழித்து, பொன்னும் பொருளும் மலிந்து, அன்பும் அறனும் தழைத்தோங்கி அமைதிக்கு அடையாளமாகத் திகழ்ந்தது இப்பூமி. தெய்வ பக்தியும் தேச பக்தியும் அக்கால மக்களின் இரு விழிகளாக இருந்தன. எனவேதான், இப்பூமியை ‘புண்ணிய பூமி’ எனப் போற்றிப் புகழ்ந்தனர் நம் மூதாதையர். அறிவியல் கண்டுப் பிடிப்புகளிலும் தொழில் துறை வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் கல்வி அறிவிலும் ஆன்மீகத் துறையிலும் எந்த நாடும் நம்மை அண்ட முடியாத நிலைக்கு முன்னேறி உள்ளோம்.
இந்த வளர்ச்சியையும் உயர்ச்சியையும் பார்த்து அண்டை நாடுகளும் வளர்ந்த நாடுகளும் நம் நாட்டின் மீது போர் செய்வதற்கும் போட்டி போடுவதற்கும் அஞ்சுகின்றன.
இத்தனைப் பொருமைக்கும் சிறப்புக்கும் உரிய நம் இந்திய தேசத்தின் நிலையை இந்த சுதந்திர தினத்தில் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
அண்டை நாடுகள் கூட நம்மோடு போட்டிப் போடுவதற்கு அஞ்சும் இக்காலகட்டத்தில் நம் நாட்டுக்குள்ளே எழுந்திருக்கும் பிரச்னைகளுக்கு அளவே இல்லை. அதனால், நம் நாடு நித்தம் நித்தம் சந்தித்து வரும் சவால்களுக்கு ஓர் எல்லையே இல்லை.
அக்காலத்தில் ஆட்சி மற்றும் நிர்வாக வசதிக்காக நம் முன்னோர்கள் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்த நாட்டைப் பலபல மாநிலங்களாகப் பரித்தனர். அதன் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களின் தேவைகள் தன்னிறைவோடு செயல்படுத்தப்பட்டு வந்தன. அப்போதொல்லாம் எந்த ஒரு மாநிலத்திற்குள்ளும் அல்லது ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையில் எவ்விதமானப் பிரச்னைகளும் எழுந்ததில்லை.
ஆனால், இன்று நிலைமை நேர் மாறாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை விட பன் மடங்குப் பிரச்னை இந்திய நாட்டிற்குள் எழுந்துள்ளது. அன்னிய நாடுகளிலிருந்து வரும் சவால்களை விட பன் மடங்குச் சவால்கள் நம் நாட்டிற்கு உள்ளிருந்தே வருகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ளத் தண்ணீர்ப் பிரச்னையிலிருந்துத் தொடங்கி, அந்தந்த மாநிலங்களுக்கிடையே எழுந்துள்ளப் பிரிவினைப் பிரச்சினை வரைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ, எப்படி நடக்குமோ என்ற ஐயப்பாட்டோடுதான் நாம் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளோம்.
இந்தியத் திருநாட்டிற்குள்ளிருக்கும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசியல் சட்சிகளிடையே பிரிவினைவாதம் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தீவிரவாதம் தீவிரமாகச் செயல்படுகின்றது. இதனால் அம்மாநிலங்களில் துப்பாக்கிச் சூடுகளும் வெடி குண்டு விபத்துகளும் பொழுது போக்கு நிகழ்சிகளாகவே மாறி விட்டன. தினம் தினம் அநியாயமாக உயிரிழக்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.
தீவிரவாதிகளின் ரயில் தகர்ப்பிற்கும் மாவோஸ்டுகளின் விமான கடத்தலுக்கும் என்னத் தீர்வு என்பதைக் கண்டுபிடிப்பதற்குத் தெரியாத சிந்தனைச் சக்தியற்ற அரசியல்வாதிகளின் ஆட்சியும் அனைத்துத் தொழில் நுட்பங்களும் அறிவும் ஆற்றலும் இருந்தும் சுதந்திரகாச் செயல்பட முடி.யாமல், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகி ‘கோமோ’ நிலையில் இருக்கும் பாதுகாப்பு படைகளும் நம் நாட்டின் சாபக்கேடுகளாக மாறியுள்ளன.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற எண்ணத்தோடுச் செயல்படுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் மக்களால் தேர்ந்தொடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களையும் மறந்து நாட்டையும் மறந்து, தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் மட்டுமே நினைத்து கோடி கோடியான கொள்ளையிலும் லஞ்ச, ஊழலிலும் மூழ்கி நம் நாட்டையே அன்னியனுக்கு அடகு வைப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் தயாராகின்றனர். இப்படிப் பட்டவர்களைத் தட்டிக் கேட்க நாதியில்லை, தண்டிப்பதற்குத் தகுதியான அரசும் இல்லை.
எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்நாட்டில் இருக்கும் மக்கள் தங்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராட்டம் நடத்துவதும் புரட்சி ஏற்படுத்துவதும் இயல்பானதும் வழக்கமானதும்தான். இதிலொன்றும் வியப்போ, ஆச்சரியமோ இல்லை. அந்தப் போராட்டங்கள் மற்றும் புரட்சிகளின் தன்மை அறிந்து, உணர்ந்து அந்தந்த நாட்டு அரசுகள் செயல்பட வேண்டும். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் வீரியத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நடவடிக்கைகள் எடுத்து தீர்வுகளை உருவாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கடமையாகும்.
ஆனால், நம் நாட்டின் தலைவிதி மாறிக்கிடக்கிறது. நாட்டின் அல்லது நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, உணர்ந்து அதனை உடனுக்குடன் பூர்த்திச் செய்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய, மாநில அரசுகள் மக்களால் எழுப்பப்படும் எந்தப் பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வோ அல்லது நிரந்தர முடிவோ எடுப்பதில்லை. பிரச்னைகளை வளர விட்டு, போராட்டங்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதனால், நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேச் சென்றால் உயிரோடு அல்லது நிம்மதியோடு வீட்டுக்குத் திரும்புவார்களா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. எங்குப் பார்த்தாலும் கலவரம், குண்டு வெடிப்பு, கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், தீவிரவாதம் என இந்தியாவே ஒரு கொடிய கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.
இவற்றை எல்லாம் கண்ணுறும் போது நம் நாட்டிற்கு உடனடியாக இன்னொரு சுதந்திரப் போர் தேவைப்படுகிறது. அது அன்னியனிடமிருந்து நாட்டிற்குத் சுதந்திரம் வாங்குவதற்கு அல்ல சொந்த நாட்டில் மக்கள் சுகமாக வாழ வழி வகுப்பதற்காகும்.
நன்றி சமுதாய நண்பன் செப்டம்பர் 2011.
No comments:
Post a Comment