சமச்சீர்க் கல்விக்கு சமாதி கட்டாதீர்.
டாக்டர். கமல. செல்வராஜ்.
“ எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்
பாடியவன் பாட்டைக் கெடுத்தான்” என்பது நம் நாட்டில் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவர் மத்தியிலும் அன்றிலிருந்து இன்று வரை நிலவி வரும் ஒரு பழமொழி.
இப்பழமொழிக்குள்ளே ஆயிரம் அர்த்தங்கள் அடங்கிக் கிடக்கின்றன என்பதை அறிவுடையோர் அறிவர். இப்பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ தற்பொழுது தமிழகத்தில், கல்வித்துறையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள சமச்சீர்க் கல்வி மீது எழுந்துள்ள விவாதத்திற்கு நூறு சதவீதம் பொருத்தமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடப்பது இயல்பு. இந்த ஒவ்வொரு ஐந்தாண்டுத் தேர்தலிலும் தமிழகத்தில் மிகப் பெரிய மாநில கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மாறி மறி ஆட்சிக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சில துறைகளில் முந்தைய அரசு கொண்டு வந்திருக்கும் சில சட்ட திட்டங்களை மாற்றியமைப்பது அல்லது இல்லாமல் ஆக்குவதென்பது வடிக்கையாகவே இருக்கும்.
இவற்றில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அ. தி.மு.க கட்சி எப்போதொல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் வருவது வேடிக்கையானது. இக் கல்வித்துறை மாற்றமானது பாடபுத்தகத்திலிருந்துப் பாடப் பகுதிகளை மாற்றுவதிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களைப் பழிவாங்குவது வரை நடக்கும்.
அவ்வகையில் இம்முறை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சியமைத்த உடனையே வழக்கம் போல் கல்வித்துறையில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. அதுதான், முந்தய தி.மு.க. அரசு, தமிழகத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்த சமச்சீர்க் கல்வியை ரத்து செய்ததாகும்.
சமச்சீர் கல்வி என்பது தமிழகத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஒரே விதமான கல்வி என்பதாகும். இதில் எம்முறையில் பயிலும் பள்ளிகளிலும் பாடத்திட்டமென்பது ஒன்றுபோல் இருக்கும். இம்முறையினால் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிலிருந்து, வசதி வாய்ப்புப் படைத்தக் குடும்பத்தில் பிறந்து மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவர் வரை ஒரே பாடதிட்டத்தைப் படிப்பது என்பதாகும்.
இத்திட்டத்தினால் வசதி வாய்ப்புப் படைத்தவர்களுக்கு ஒரு விதமானக் கல்வி, ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னொரு விதமானக் கல்வி என்றப் பாகுப்பாடு நீங்கி அனைவருக்கும் ஒரே விதமான கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏற்படும். இதனைக் கல்வித்துறையின் ஒரு புரட்சி என்றேக் கூறலாம். இக்கல்வி முறையினால் அனைத்து மாணவர்களிடமும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க முடியும் என்பது கல்வி வல்லுநர்களின் அசைக்க முடியாத கருத்தாகும்
மேலும், இக்கல்வி முறையினால் உயர் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுதும் போது அனைத்துத் தரப்பு மாணவர்களும் ஒரே விதமாக வெற்றி பெறுவதற்கு இயலும். பழைய கல்வி முறையில் அப்படியல்ல மெட்ரிக்குலேஷன் போன்ற ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று உயர் படிப்புகளில் சேருவதற்கு இயலும். அவர்கள் மட்டுமே உயர்ந்தப் பதவிகளையும் வகிக்க முடியும்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தப் பிள்ளைகளுக்கும் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கும் உயர் கல்வி என்பதும் உயர் பதவி என்பதும் கானல் நீராகவே இருக்கும். போட்டித் தேர்வுகளில் இவர்களை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் பின்னுக்குத் தள்ளி விடுவர். இதனால் கல்வித்துறையில் ஓர் ஏற்றத்தாழ்வு காலாகாலமாக இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் புரட்சிகரமான கல்வி முறையை தமிழகத்தில் முந்தய தி.மு.க அரசு அறிமுகம் செய்த போது அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது வந்த புதிய அரசு இந்தப் புரட்சிகரமான கல்வித்திட்டத்தை ரத்து செய்ததின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் அதிருப்தியையும் ஆட்சேபத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.
. மட்டுமின்றி இத்திட்டத்தை ரத்துச் செய்ததின் மூலம் வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துச் செயல்படும் நாளிலிருந்து பதினைந்து நாட்கள் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்படித்திறந்தப் பின்பும் பள்ளிகளில் எந்தப் பாடத்தைக் கற்பிப்பது என்ற திட்டமிடப்பட்ட பாடத்திட்டமில்லை. எனவே, எந்தப் பாடத்தைக் கற்பிப்பது, எப்படி கற்பிப்பது என்றக் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், ஒன்றாம் வகுப்பு மாணவர்களிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை பள்ளிக் கூடங்களில் விளையாட்டுப் பிள்ளைகளைப் போன்று எதுவும் படிக்காமல் சென்று வருகின்றனர். அவர்களின் காலமும் விரையமாகி படிப்பும் பாழ்பட்டுப் போகிறது என்பதுதான் வேதனையான உண்மை.
சமச்சீர்க் கல்வியை ஏன் இந்த அரசு ரத்து செய்துள்ளது என்ற வினாவிற்கு அவர்கள் அளிக்கும் ஒரே பதில் இக்கல்வி முறையில் பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்பதாகும். இது அவர்கள் வெளிப்படையாக கூறும் கருத்தாக இருந்தாலும் அதன் உள் நோக்கம் அதுவல்ல என்பது பச்சிளம் குழந்தைகளுக்க்கும் புரியும். அது வேறொன்றுமல்ல முந்தைய தி.மு.க. அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதுதான்.
ஒரு வேளை இந்த அரசு கூறுவது போல் இக்கல்வி முறையில் தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்றால் இந்த ஓராண்டுக் காலத்திற்கு மட்டும் இம்முறையைத் தொடர்ந்து விட்டு, அடுத்தக் கல்வியாண்டு முதல் தலைசிறந்தக் கல்வியாளர்களைக் கொண்டு புதியப் பாடத்திட்டத்தை வடிவமைத்துத் தரமானக் கல்வியை வழங்கியிருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால் அது நாகரிகமாகவும் அறிவு பூர்வமாகவும் இருந்திருக்கும். அப்படியின்றி ஒட்டு மொத்தமாகவே இந்தக் கல்வி முறையை ரத்துச் செய்வதென்பது முந்தய அரசு மீது தற்போதைய புதிய அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை நேரடியாக வெளிக் கொணர்வதாகவே உள்ளது. ஓர் அரசு, முந்தைய அரசு மீது காழ்ப்புணர்ச்சிக் கொள்வதொன்றும் புதிய விஷயமல்ல. அது இயல்பானது... இயற்கையானது... ஆனால், அந்தக் காழ்ப்புணர்ச்சி ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் விதத்திலோ அல்லது நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் விதத்திலோ அமைந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
ஆனால், தற்போதைய அரசுக் கல்வித் துறையின் மீது எடுத்திருக்கும் நிலைபாடானது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்தமான அடிப்படைத் தேவையான அறிவு வளர்ச்சியின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் கல்வித்துறையை ஒரே அடியாகக் குழித்தோண்டிப் புதைத்திருப்பதாகும்.
இப்பிரச்னைக்கு உடனடியாக இந்த அரசு ஒரு தீர்வைக் கொண்டு வந்து பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல் பயில்வதற்கு வழிகோல வேண்டும். இல்லையேல் இது மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் ஒரு புரட்சியாக வெடித்து விடும். அந்தப் புரட்சி பெரிய போராட்டங்களாகி இந்த ஆட்சிக்கு ஆபத்தாக அமையும். கூடவே இந்த அரசுக்கே மக்கள் சமாதி கட்டி விடுவார்கள் என்பதில் ஐயமேதும் இல்லை.
நன்றி : சமுதாய நண்பன் ஜூலை 2011.
No comments:
Post a Comment