அன்னதானங்களுக்கு விடை கொடுப்போம்
அறிவு தானங்களுக்கு வழி வகுப்போம்...
“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”.
இது எட்டையபுர கவிஞரின் வெட்ட வெளிச்சமான அறிவு சார்ந்த அறிவுரை.
ஆயிரக்கணக்கான அன்னச் சத்திரங்களையோ அல்லது பதினாயிரக்கணக்கான ஆலயங்களையோ எழுப்புவதினால் ஒருவருக்கு எவ்விதமான புண்ணியங்களும் வந்துச் சேரப் போவதில்லை. இவற்றைவிட எழுத்தறிவில்லாமல் இருக்கும் ஓர் ஏழைக்கு எழுதப் படிக்க ஒருவர் வழிகோலுவாரேயாயின் அதுவே, அவருக்குக் கோடிக்கணக்கானப் புண்ணியங்களை ஈட்டிக் கொடுக்கும் என்பது புண்ணியவாளரான பாரதியின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஓர் அன்னச் சத்திரம் அமைத்து ஒருவருக்கு அல்லது பலருக்கு அன்ன தானம் செய்தால் அது அவருக்கு ஒரு நேரப் பசியைப் போக்குவதற்கு மட்டுமே உதவும். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து அதில் பலருக்கு கல்வி என்னும் அறிவுப் பாலை ஊட்டினால் அதனால் இந்த நாடே சுவிட்சம் பெறும். இக்கருத்தை எதிர்மறையாக வலியுறுத்துகிறார் பாரதியார்.
இன்று தமிழகத்தில் பெரிய பெரிய ஆலயங்கள் தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்து, அதற்கானத் தீர்மானத்தையும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து ஆலயங்களை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் இந்து அறநிலையத்துறை என்ற ஒரு தனிப்பிரிவு உள்ளது. இதற்க்காக ஓர் அமச்சரும் அமச்சகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலயங்கள் வாயிலாக தமிழகத்தையே மிகவும் சுபிச்சமாக வழிநடத்திச் செல்வதற்கான வருமானங்களும் வருகின்றன.
இவற்றில் சில கோயில்களில் நாள் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வந்தாலும் பல கோயில்களில் தினமும் சரியாகவும் முறையாகவும் ஒரு வேளை பூஜை கூட நடக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆலயங்களில் தினமும் ஒரு வேளையாவது பூஜை கர்மங்கள் நடத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஏனென்றால், ஓர் ஊரில் ஓர் ஆலயம் இருக்கிறதென்றால் அந்தக் கோயிலின் நித்திய பூஜை உட்பட அனைத்துச் செலவுகளுக்குமான வருமானத்திற்கு வழிவகை இருக்கும். அப்படி இருந்தும் பெரும்பாலான அலயங்களில் ஒரு வேளைப் பூஜை கூட நடைபெறாமல் இருப்பது வேதனையிலும் வேதனை.
இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஆலயங்களில் பணிபுரியும் பூஜாரிகள் உட்பட அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் அரசு வழங்கும் ஊதியம் என்பது சாதாரண ஒரு பிச்சைக்காரனுக்கு தினம் கிடைக்கும் வருமானத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் அரசு நிர்வகிக்கும் ஆலயங்களில் உள்ள ஊழியர்கள் படும் அவஸ்தைக்கும் வேதனைக்கும் ஓர் அளவே இல்லை.
இந்நிலையில்தான் அரசு பெரிய பெரிய கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த அன்னதான திட்டம் மூலம் அங்கு வரும் பக்தர்களுக்குத் தானதர்மம் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் உயரிய நோக்கம் என யாரேனும் எண்ணி விட்டீர்கள் என்றால் அது அவர்களின் அறிவீனம் என்று எந்த முட்டாளாலும் ஊகிக்க முடியும்.
பெரிய பெரிய கோயில்களில் சுற்றுலா வரும் பயணிகள் அல்லது பக்தர்களுக்கு எதற்கு அன்னதானம்? பல ஆயிரம் ரூபாயைச் செலவழித்து பல மையில் தூரம் பயணித்து ஆலயங்களுக்கு வரும் பயணிகள் ஒரு நேர அன்னதானத்தை நம்பியா அந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்? இல்லை அந்த ஊரில் இருக்கும் பக்தர்களுக்குத்தான் இந்த அன்னதானத் திட்டமென்றால் தினமும் கோயில் வந்து அன்னதானத்தை உண்டுதான் வயிறு நிரப்பும் அல்லது வாழ்க்கை நடத்தும் பக்தர்கள் எத்தனை பேர் உள்ளனர்?
ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பியே வாழ்க்கை நடத்தும் அளவிலோ அல்லது வயிறு நிரப்பும் நிலையிலோ ஓர் ஊர் சார்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்றால் அங்கு அந்த மக்களை நிரந்தரப் பிச்சைக்காரர்கள் ஆக்காமலும் அந்த ஊரை, அரசின் அன்னதானத்தை அண்டிப் பிழைக்கும் ஊராக்காமலும் இருக்க அந்த ஊரில் இருக்கும் ஆலயத்தை எவ்வித தயவும் தாட்சண்ணியமும் பார்க்காமல் இடித்துத் தள்ளிவிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு நித்தம் செலவாகும் தொகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தால் அந்த ஊர் மக்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசு வழங்கும் ஒரு வேளை எச்சில் சாப்பாட்டிற்குப் பதில் மூன்று வேளை வயிராற நிம்மதியான சாப்பாட்டை உண்டு மகிழ்வார்கள். அதுவே, இந்த அரசிற்கு பெரும் ஆசீர்வாதமாக அமையும்; கூடவே அந்த ஊரும் வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும்.
இதைத் தவிர்த்து, இந்த அரசு பக்தர்கள் மீது கொண்ட கருணையால் அல்லது சுற்றுலா பயணிகள் மீது கொண்ட பாசத்தால் இந்த அன்னதான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது என்று கருதுவதாக இருந்தால் அது அறிவீனமாகும். இத்திட்டத்திற்கென்று வரவு செலவுக் கணக்கு எழுத வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது. அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கோடி கோடியாய் கொள்ளையடித்து அரசு மற்றும் அதிகாரிகளின் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளலாம். இதற்காக மட்டும்தான் இந்த அரசு வேறு எந்த உருப்படியான திட்டத்திற்கும் முன்னுரிமைக் கொடுக்காமல் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதியில் கூட கூறப்படாத ஒரு திட்டத்தைச் சட்டசபையில் நிறைவேற்றி அதை உடனடியாக நிறைவேற்றி உள்ளது. இதனை அறிவுடையோர் அனைவரும் நன்கு அறிவர்.
பாரதியின் கூற்றான அன்னசத்திரமும் ஆலயமும் அமைப்பதை விட ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது பள்ளிக் கூடங்களைக் கட்டுவதாகும். அரசு, ஆலயங்களில் அன்னதானம் வழங்குவதின் மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவாகின்றன என்பது நாடறிந்த உண்மை.
இன்று, தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் அல்லது அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களின் நிலை என்பது மிகவும் பரிதாபக்கரமாக உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் போதிய கட்டட வசதியில்லை. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் மர நிழலில் தஞ்சமடைந்து பாடம் படிக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது. மட்டுமின்றி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை வசதியின்றித் தவிக்கின்றனர். அரசுப் பள்ளிக் கூடங்களில் வரும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு போதிய ஆசிரியர்கள்கூட இல்லை என்பது உண்மை.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததினால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நிலை பாழ்பட்டுப் போகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க விடுவதற்கு பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா கண்டுக் கொண்டிருக்கின்றன. இதனைப் பார்த்துத் தமிழக அரசு ஒரு புறம் மொளனமும் மறுபுறம் மகிழ்ச்சியும் அடைகின்றது.
ஏனென்றால், தமிழக அரசுக்கு நன்றாகப் புரிகிறது; மக்களின் அறிவு வளர்சிக்கான பள்ளிக் கூடங்கள் அல்லது கல்வி நிலையங்கள் கட்டினால் அதிலிருந்து, அரசுக்கு கோடி கோடியாய் கொள்ளையடிக்க இயலாது. இதனால், அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித பயனும் இல்லை. பிறகு ஏன் நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிப் பற்றியோ அல்லது அதற்கான ஸ்தாபனங்கள் பற்றியோ கவலைப்பட வேண்டும்?
எனவே, இன்றைய காலகட்டத்தில் அரசு ஏழைப் பக்தர்களின் பசியைப் போக்குவதற்காகத்தான் இந்த அன்னதான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதற்குத் தற்போது தமிழக அரசு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் இலவச அரிசியே போதுமானது. அதைத் தவிர்த்து கோயில்களிலும் கோயில்களிலும் அன்னதானத்தை வழங்குவது அரசிற்கு கொள்ளை லாபம் அல்லது ஊழல் செய்வதற்கு வசதியாக மக்களை கோழைகளாக்குவதற்கான சுலப வழிமுறையாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பண்டையக் காலங்களைப் போன்று தற்போது கோயில்களில் அன்னதானம் உண்பதை அவ்வளவு கொளரவமாகப் பக்தர்கள் அல்லது பொது மக்கள் கருதுவதில்லை. அதை இழிவாகவும் குறைவாகவும் நினைக்கும் மனநிலையில் இருக்கும் மக்களும் உள்ளனர்.
எனவே, உண்மையிலையே தமிழக மக்கள் மீதும் தமிழகத்தின் மீதும் இந்த அரசுக்கு அக்கரை இருந்தால் கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுவிட்டு அந்தத் தொகையை ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியின்றித் தவிக்கும் கோயில்களின் வழிபாட்டிற்கோ அல்லது கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மைப்படுத்தலாம்.
கூடவே, தமிழகத்தில் அழிந்து வரும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இப்பணத்தைச் செலவிட்டு தமிழக மக்களின் அறிவு வளர்ச்சிக்குச் சீரிய வழிவகுக்கலாம்.
நன்றி சமுதாய நண்பன் அக்டோபர் 2011
No comments:
Post a Comment