Tuesday, 26 April 2011

கல்விக்குப் பாதகம் செய்வோருக்குப் பாடம் புகட்டுவோம்.


   ஒரு ஜனநாயக நாட்டின் மிகவும் பலம் எனக் கருதப்படுவது அந்நாட்டின்
கல்வி வளர்ச்சியே ஆகும். எவ்வளவுதான் செல்வம் ஒரு நாட்டில் இருந்தாலும் அந்தச் செல்வத்தை நேர்மையான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி நாட்டை மேலும் மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அந்நாட்டில் இருக்கும் மக்கள் அத்தனை பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
      அப்படி, ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் மிகுந்த கல்வி வளம்  பெற்றவர்களாக வேண்டுமென்றால் அதன் மொத்தப்பொறுப்பும் அந்நாட்டை ஆட்சி செய்யும் அரசின் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் அல்லது பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அதில் அதிக பட்சமான நிதி கல்வித்துறைக்காக ஒதுக்க வேண்டும். அந்நிதி முழுவதும் அந்நாட்டு சிறுவர்களின் அல்லது கல்வி நிறுவனங்களின் திட்டமிட்ட வளர்சிக்காக ஒதுக்க வேண்டும். என்றால் மட்டுமே அந்நாடு நாளுக்கு நாள்,  ஆண்டுக்கு ஆண்டு அறிவு வளர்ச்சிப் பெற்றுத் தொழில்துறை, வணிகத்துறை, பொருளாதாரத்துறை என நாட்டின் முதுகெலும்பான அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பெற்று உன்னத நிலையை அடையும்.
     ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டைப் பொறுத்தவரை அது நேர் எதிராகவே அமைந்து விட்டது. நம் நாட்டை ஆட்சி செய்பவர்கள் நாட்டின் வளர்ச்சி பற்றியோ, கல்வியின் முக்கியத்துவம் பற்றியோ, சிறிதும் சிந்திக்காமல், தங்களை அதிகார சிம்மாசனத்தில் அமரவைக்கும் ஓட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். அதற்காகப் பாமர மக்களைக் கவரும் விதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் துணை நில்லாத இலவசப் பொருள்கள் வாரி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
அப்பாவி மக்களும், தங்களின் எதிர்கால சந்ததியினர் பற்றியோ, நாட்டின்
 உயர்ச்சி பற்றியோ இம்மியளவும் சிந்திக்காமல் தற்பொழுது  அல்ப       ஆசைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் கிடைக்கும் ஒன்றிற்கும் உதவாத இலவச சாமான்களுக்காக ஓட்டுகளைக் கொடுத்து விடுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது.
     தமிழகத்தில் இரண்டு வலுவான மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
     இவ்விரு கட்சிகளும் அட்சிக்கு வரத் தொடங்கியக் காலம் முதல் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பது கேள்விக் குறியாகவும் கல்வித்துறை கேலிக்கூத்தாகவும் மாறி விட்டன. வீடுகள் தோறும் அடுக்களைச் சாமான்கள் இலவசமாகக் கொடுக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாகக் கொடுப்போம் என வாக்குறுதிக் கொடுக்கின்றனர்.
     அரசுப் பள்ளிகளில் படிக்கும் +2 மணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்திருக்கும் இந்த அரசியல் கட்சிகள் சிறிதளவேனும் இன்றைய அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பற்றி சிந்தித்திருக்கின்றார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
     அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிப்பதற்கு போதிய கட்டட வசதிகள் இல்லை. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மர நிழலிலும் வெட்ட வெளிகளிலும் இருந்து கல்வி கற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது இன்றும் நீடித்துக் கொண்டே இருக்கின்றது.
     இதனால், மாணவர்களுக்கு போதிய, தரமான கல்வி கிடைப்பதில்லை. எனவேதான், இன்று அரசுப் பள்ளிகளில் படிப்படியாக மாணவர் எண்ணிக்கைக் குறைந்து நாளுக்கு நாள் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி, மெல்ல மெல்ல அரசுப் பள்ளிகள் நசிந்து மூடுவிழா காண்பதினால் தனியார் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
     இப்படி, அரசுப் பள்ளிகள் நலிந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பெருகும் போது இந்த நாட்டிலுள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களிலுள்ள
குழந்தைகள் எப்படி தனியார் அல்லது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வி கற்பதற்கு இயலும்? எவ்வளவுக்கு எவ்வளவு அரசுப் பள்ளிகள் நலிவடைகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு இந்நாட்டிலுள்ள ஏழை,
 எளிய மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பும் குறைந்துக் கொண்டே வரும். நாளடைவில் கல்வி என்பது பண்டை காலத்தில் இருந்தது போல் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் மட்டுமே என்றாகி விடும். சாதாரண மக்களுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடும்.
     அப்படியொரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் தமிழகத்தில் மாறி மாறி வரும் கழக ஆட்சிகளையேச் சாரும். இவர்கள் ஏழை மக்களுக்கு இலவசங்களையும் சலுகைகளையும் வழங்குகிறோம் என மேலோட்டமாகக் கூறிக்கொண்டு ஏழைகளின் குரல்வளையை நெரிப்பதை யாரும் அறிகிலார்.
     அப்பாவிகளின் ஓட்டை வாங்க பள்ளி சத்துணவில் தினமும் ஒரு முட்டை +1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கூடவே தற்போது இலவச லேப்டாப்’ என இலவசங்களை அள்ளி வழங்கும் இவர்கள் ஏன் கூரை இல்லாம் இருக்கும் அரசுப் பள்ளிகள் பற்றியும் ஆசிரியரே இல்லாமல் கல்வி இழந்து தவிக்கும் மாணவர்கள் பற்றியும் சிந்திக்கவில்லை.
     தமிழகத்தில் ஒரு காலத்தில் வறுமையும் பசியும் தாண்டவமாடியது. அப்போது மக்கள் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியின்றி தவித்தனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்குப் படிக்கச் செல்லாமல் பெற்றோர்களுடன் வேலைக்குச் செல்லவோ அல்லது வெட்டியாக வீட்டில் இருக்கவோ செய்தனர். இதனைக் கண்டு வருத்தமுற்ற அன்றைய முதல்வர் காமராஜர் எப்படியாவது இந்தக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்ட வேண்டும் என்ற ஏகச் சிந்தையில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
     அதன் பிறகுத் தழிழகத்தில் அட்சிக்கு வந்த இரு கழகக் கட்சிகளும் தங்களின் சுய லாபத்திற்காக மக்களிடமிருந்து ஓட்டுப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமென்றாக்கி அதன் பிறகு ஒவ்வொரு அரசும் மாறிமாறி ஆட்சிக்கு வரும் போது வாரத்திற்கு ஒரு முட்டை, இரண்டு முட்டை எனப் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் கவனம் செலுத்தி மாணவர்களின் கல்வியை முட்டை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
     இன்று, தமிழகத்தில் கல்வியின் நிலை களங்கப்படுத்தப் பட்டுள்ளது. இவர்கள் மாறிமாறி தங்கள் தேர்தல் அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நாம் அனைவரும் ஏகோபித்தக் குரலோடு வரவேற்போம். அதே வேளையில் இந்த மாணவர்கள் அந்த லேப்டாப்பை’ சுயமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியறிவை அரசுப் பள்ளிகளில் கொடுக்க வேண்டும். மேலும், அந்த லேப்டாப்பை பயன்படுத்தி அவன் ஏதேனும் தொழில் துறையில் முன்னேறுவதற்கான தொழில் சார்ந்த வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என்றால், மட்டுமே இந்த லேப்டாப்பினால் மாணவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கும் பயனுண்டு.
     இதைத் தவிர்த்து வெறுமனே மாணவர்களுக்கு லேப்டாப் மட்டும் வழங்குவதின் நோக்கம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியையோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டோ இருக்காது; அதற்கு மாறாக இந்த லேப்டாப்புகளை உற்பத்திச் செய்யும் கம்பியூட்டர் கம்பெனிகளிலிருந்து கோடி கோடியாகப் பணத்தை வாங்கிக் குவித்து தானும் தான் சார்ந்த குடும்ப அங்கங்களும் வளமும் நலமும் பெறுவதற்கான ஒரே முயற்சியாகத்தான் இருக்க முடியும்.
     உலகம் முழுவதும் உள்ள கல்வி முறையிலும் கற்பித்தல் முறையிலும் இன்று பல்வேறு விதமான நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அவை, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் சுய முன்னேற்றத்திற்கும் பல்வேறு முறைகளில் துணை நிற்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் கூட தனியார் கல்வி நிறுவனங்களும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் பழைய கற்பித்தல் முறைகளை மாற்றி விட்டு முழுக்க முழுக்க கணணி முறையில் கற்பிக்கும் ஸ்மார்ட் கிளாஸ் கற்பித்தல் உத்தியைப்  பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
     இந்நிலையில், தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களை மர நிழலிலும் வெட்ட வெளியிலும் வைத்துக்  கற்பித்தால் அவர்களின் மனநிலையும் அறிவுத்திறனும் எந்த அளவிற்கு மேம்பட்டிருக்கும் என்பதை நடுநிலைச் சிந்தனையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
     எனவே, தமிழகத்தில் இனிமேலும் ஆட்சிக்கு வரும் அரசுகள் மக்களுக்கு அடுக்களைப் பொருள்களை இலவசமாக வாரிவாரி வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் உயர்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் கல்வி நிலையங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
     அதற்காக, அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டும். போதியக் கட்டட வசதி, ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நவீன கற்பித்தல் உத்தியான ஸ்மார்ட் கிளாஸ் முறையை அரசுப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தி முழுக்க முழுக்க தரமானக் கல்வியை வழங்க வேண்டும்.
     இவற்றால் மட்டுமே வளமான தமிழகத்தையும் வலுவான இந்தியாவையும் எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதை அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அரசு உணர வேண்டும்
                               நன்றி:  சமுதாய நண்பன் ஏப்ரல் 2011.
.

              
                                  
                       
    



























                                                          .   .

1 comment:

  1. சிறப்பான பதிவாக இருக்கின்றது, உங்கள் கட்டுரை..
    இப்போவெல்லாம் அரசாங்கம் மதுக்கடையையும், தனியார் கல்விக் கூடத்தையும் நடத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க ஊழியர்களும் அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பினால் போதும். அரசுப் பள்ளிகளில் தானாகவே உயரும்..

    ReplyDelete