Sunday, 10 April 2011

தேர்தலில் தேர்ந்தெடுப்போம் தியாகிகளை



தேர்தலில் தேர்ந்தெடுப்போம் தியாகிகளை

     ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது இந்திய ஜனநாயகம் நம்மை சுய பரிசோதனைச் செய்துக் கொள்வதற்கான ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது.   அந்தச் சுயபரிசோதனையின் மூலம், நாம் கடந்த ஐந்தாண்டுகளில் வாழ்தோம? இல்லை வீழ்தோமா? என்பதை மிக நுணுக்கமாக சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும்.
     இந்த ஐந்து ஆண்டுகளில் நம்மை நாம் சுய பரிசோதனைச் செய்துப்பார்க்கும் போது நாம் வாழ்ந்திருந்தால் இங்கே வாழ்வது நாமல்ல நம் நாடு;  நாம் வீழ்திருந்தால் அந்த வீழ்ச்சி நமக்கல்ல நம் தேசத்திற்காகும்.
              ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாழ்வையும் வீழ்வையும் தீர்மானிப்பது நம் ஓட்டுரிமை மட்டுமே. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் உரிமை என்பது ஓட்டுரிமைதான். இதனை சரியான முறையில், நேர்மையான வழியில், தகுதியான ஒருவருக்கு அளித்திருக்கிறோமா? என்பதைத்தான் இப்பொழுது பரிசோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
     நாம் ஓட்டளித்திருக்கும் அல்லது ஓட்டளிக்கப் போகும் ஒருவரது தகுதியையும் திறமையையும் ஒரு தராசுக்கோலில் வைத்து எடை போட்டுப் பார்ப்பதற்கு இயலாது. அதே நேரத்தில் தகுதியையும் திறமையையும் ஒழுக்க நெறியையும் அதோடு அவரது கடந்தகால செயல்பாடுகளிலிருந்து தெரிந்து, புரிந்துக் கொள்ள இயலும். அதை வைத்து நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டும். அவருக்கு மட்டுமே ஓட்டளிக்கவும் வேண்டும்.
     ஆனால் கடந்த சில ஐந்தாண்டுகளாக நம் நாட்டில் மத்திய, மாநில தேர்தல்கள் நடக்கும் போது நம் நாட்டுக் குடி மக்கள் தாங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தவறி விடுகின்றனர் என்றே கருத முடிகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் நம் நாட்டில் நடந்திருக்கும் சில அருவருப்பான அசம்பாவிதங்களே அதற்கு அடிப்படைச் சான்றாதாரங்களாக அமைந்துள்ளன.
     அந்த ஆதாரங்கள் லஞ்சத்தில் தொடங்கி ஊழலில் தொடர்ந்து கொலை,கொள்ளைகளெனப் பெருகி நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்கிப் போட்டுள்ளன. அதோடு, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகவும் ஒழுங்கீனர்களாகவும் மாறி இன்று சிறைச்சாலைகளில் கைதிகளாக உள்ளனர்
     இத்தகுத் தீயச் செயல்களால் நம் நாட்டின் முன்னேற்றம் முடங்கிப் போனது என்பதல்ல முக்கியம் இப்படிப் பட்டவர்களுக்கு ஓட்டளித்த நாம் அவமானத்தாலும் அசிங்கியத்தாலும் முடமாகிப் போயுள்ளோம் என்பதுதான் பரிதாபம். இப்படிப்பட்ட அவமானங்களிலிருந்தும் அசிங்கியங்களிலிருந்தும் நம்மை நாம் விடுவித்துக் கொள்வதற்காக மீண்டும் நமக்கு ஓர் அருமையான சந்தர்பம் கிடைத்துள்ளது. அதுதான் 2011 ஏப்ரலில் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்.
     இத்தேர்தலில் நம் நாடு முடங்கிப் போகவோ அல்லது நாம் முடங்கிப்போகவோ செய்யலாகாது. இப்பொழுது நாம் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இப்பொழுதும் நாம் விழித்துக் கொள்ள தவறிவிட்டால் அது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதல்ல நம் வருங்கால சந்ததியினரை ஏமாற்றுகிறோம் என்பது நிஜமாகும்.
     நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம் நம் சந்ததியினரை எப்படி வாழ வைக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
     தேர்தல் காலங்களில் நம்மை ஏமாளிகளாக்க அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மிகப் பெரிய வித்தை ஒன்றே ஒன்றுதான். அது தேர்தல் அறிக்கையில் மெகா இலவசத் திட்டங்களை அறிவிப்பதுதான். கூடவே சில சலுகைகளையும் அறிவித்து விடுகின்றனர். இவற்றைப் பார்க்கும் போது வாக்காளர்களாகிய நாமும் பரவசப்பட்டுப் போகின்றோம். அதனால் கண்மூடிக் கொண்டு இலவசத் திட்டங்களுக்காக ஓட்டுகளை அள்ளியள்ளி வழங்குகின்றோம். அதன் பிறகு நாம் பாழ்பட்டுப் போவதை எவரும் அறியிலோம்.
    முதறிஞ்ஞர் இராஜாஜீ, கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களெல்லாம் முதலமைச்சர்களாக இருந்து ஆட்சி செய்த தமிழகம். அப்பொழுதுதெல்லாம் அவர்கள் இலவசங்களைக் காட்டி மக்களை  மயங்க வைத்து ஓட்டுகளைப் பெறவும் இல்லை நாட்டை குட்டிச்சுவராக்கவும் இல்லை. அப்படி ஏதேனும் இலவசத் திட்டங்களை அறிவித்திருந்தாலும் அவை மக்களின் அறிவு வளர்ச்சி சார்ந்த கல்விக்காக மட்டுமே இருந்திருக்கின்றது.
     ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.அனாவசியமான அடுக்களைச் சாமான்களிலிருந்து ஆடம்பரமான பள்ளியறை சாமான்கள் வரை இலவசம்...இலவசம்... என்றாகி விட்டது.
     அன்றெல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறியிக்கையில் விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயப் பெருக்கத்திற்காகவும்  எத்தனை அணைகளைக் கட்டப் போகிறோம் போக்கு வரத்து வசதிக்காக எத்தனைப் பாலங்களைக் கட்டப் போகிறோம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக எத்தனை பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொடங்குவோம், மக்களின் ஆரோக்கியத்தைப் பேண எத்தனை மருத்துவமனைகள் எங்கெங்குக் கட்டப்படும் எத்தனைச் சாலைகள் உருவாக்கப்படும் எங்கெல்லாம்  அரசுத் தொழிற்சாலைகள் உருவாகும் எந்தெந்த வழித்தடங்களில் புதிதாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் தேவைக்காக எத்தனைக் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றெல்லாம் மக்கள் நலனை மட்டுமேக் கருத்தில் கொண்டுத் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டப்பட்டன.
     அதனால். அக்காலங்களில் ஆட்சி செய்தவர்களின் பெயர்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவர்களின் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களோ அல்லது அவர்களின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சகாக்களோ லஞ்சம் பெற்றமைக்கு அல்லது ஊழல் செய்தமைக்காக இல்லை வருவாய்க்கு அதிகமாகச் சொத்துக் குவித்தமைக்காக அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கீன செயலுக்காக கைது செய்யப்படவும் இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.
     ஆனால், இன்றிருக்கும் நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம். இன்று மந்திரியாக இருப்பவர் நாளை மத்தியச் சிறையில் கைதியாக இருக்கிறார். இன்று ஓலைக் குடிசையில் ஓட்டாண்டியாக வாழ்ந்தவர் அரசியல் செல்வாக்கால் தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதியாகி நாளை பல மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரராகி பல கோடி சொத்துக்களின் அதிபதியாகி விடுகிறார். இப்படிப்பட்ட அவலங்களுக்கு யார் காரணம்? என ஆய்ந்துப் பார்த்தால் அவை அத்தனைக்கும் காரணம் வாக்காளர்களே என்பது நிஜமாகும்.
     நாம் ஓட்டுப் போடும் போது அந்த வேட்பாளர் எப்படிப்பட்டவர், அவரின் கல்வித் தகுதியென்ன, அவரது நடைமுறைச் செயல்கள் என்னஇவை அனைத்திற்கும் மேலாக அவரது குணாதிசையங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம்  எள்ளளவும் கவலைப்படாமல்  அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி, தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்களையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறது என்பதை மட்டும் கருத்தில் கொண்டு ஓட்டளித்து விடுகிறோம். இதுதான் நாம் செய்யும் அடிப்படைத் தவறாகி விடுகின்றது.
          மேலும் நம்மில் பெரும்பாலானவர்களும் தேர்தலில் ஓட்டுப்போடச் செல்லாமல் இராமன் ஜெயித்தாலும் இராவணன் ஜெயித்தாலும் எனக்கொருக் கவலையில்லை என்ற தவறான மன நிலையில் இருந்து விடுகிறோம். இதனால், ஒருவேளை நல்லவர்களாக... வல்லவர்களாக...தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அதிக ஓட்டு கிடைக்காமல் அவர்கள் தோல்வியுறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
     எனவே, இனி நாம் விழித்துக்கொள்வோம். இப்பொழுது நடைபெற இருக்கின்ற தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டியது .யாருக்கு என்பதைத் தீர்க்கமாக தீர்மானிப்போம்.
     நம் நாட்டின் வரிப்பணம் என்பது நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானதாகும். அந்தப் பணம் இந்நாட்டின் முதலீடாக அமைய வேண்டும். அந்த முதலீட்டினால் நாட்டில் கல்விச்சாலைகள் மலிய வேண்டும், தொழிற்சாலைகள் பெருக வேண்டும். அணைக்கட்டுகள் உயர வேண்டும். இவற்றால் இந்நாட்டிலிருந்து பசியும் பட்டிணியும் பறந்தோட வேண்டும். கொலையும், கொள்ளையும் ஒழுங்கீனங்களும் இல்லவே இல்லையென்றாக வேண்டும். அன்பும், அமைதியும் அனைவரின் உள்ளத்திலும் ஊற்றுப் பெருக்காக வேண்டும்.
     இதற்கு நாம் ஓவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்பதை எண்ணித்துணிய வேண்டும். அதற்காக நாம் துணிந்து விட்டோம். எழுந்துப் போவோம் வாக்குச் சாவடிக்கு. முதலில் நாம் ஓட்டுப்போடுவோம் பின்னர் நம்மைச் சார்ந்தவர்களை ஓட்டுப்போட வைப்போம்.இதனால் ஓட்டுப் போடாதவர்ளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
     அடுத்து யாருக்கு ஓட்டுப் போடுவது என்பைத் தீர்மானிப்போம். அதற்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை கூர்ந்துக் கவனிப்போம். இலவசங்கள் இல்லாத அனாவசிய சலுகைகளை அறிவிக்காத நாட்டு நலனில் அக்கரை கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டியுள்ள கட்சிக்கு மட்டுமே வாக்ச்களிப்போம்.
     வேட்பாளர்களைப் பொறுத்தவரை நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி நாம் நன்குத் தெரிந்திருக்க வேண்டும். அவரின் கல்வித்தகுதி, செயல்பாடுகள், குணாதிசயங்கள் ஆகியவைப் பற்றிய தெளிவானப் பார்வை நமக்கு இருக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கும் ஆட்படாமல் சாதி, சமய, இன, மொழி கூடவே உறவு முறைகளைக் கூடத் தாண்டி நம் வாக்குகள் யாருக்கு என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
     என்றால், மட்டுமே நம் நாட்டை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள இயலும். இதை நமக்காகச் செய்யவில்லை என்றாலும் நம் பிற்காலச் சந்ததியினருக்காகச் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.    

.

































 .













                                         .



2 comments:

  1. மை போட்டு தேடினாலும் விரல் விட்டு எண்ணும் அளவுகே கிடைப்பார்கள் நாட்டை ஆளும் வல்லமையும் மனமும் படைத்த தியாகிகள். நல்லவர்களை தேர்ந்தெடுக்க நம்மால் முடியாது, ஆனால் கண்டிப்பாக கெட்டவர்களை தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம். கட்சி, மதம், ஜாதி, இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து நடுநிலையாளராக பாருங்கள், வெகு சில தொகுதிகளிலே மட்டுமே தென்படுவார்கள் நீங்கள் சொன்ன தியாகிகள்.

    அரசியல்வாதியில் நம்பிக்கை போய்விட்டதென காட்ட இந்திய மக்களுக்கு இப்போது ஒரே ஒரு வழிதான். 49 O (49 ஒ). எத்தனை பேர் இதை தேர்ந்தெடுப்போம் சாக்கடை அரசியல்வாதியிடம் எதிப்பை காட்ட.

    வாழ்க ஜன நாயகம்... வளர்க தியாகிகள்...

    நிஜி சுபாஷ், சென்னை

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் 24591 பேர் 49 ஒ - க்கு ஓட்டு போட்டுள்ளனர். மக்களிடையே இதன் அவசியம் தெரிய வர ஆரம்பித்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்...

    சாக்கடை அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்...

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=225444

    ReplyDelete