Thursday, 29 December 2011

உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரட்டும்


           உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரட்டும்...
     தமிழகத்தில் சட்டமன்றத்திற்கானப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசு அமைந்த உடன் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப் படுமா? என்ற ஓர் அச்சப்பாடு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பொது மக்களிடமும் இருந்து வந்தது.  இந்த ஐயப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு புதிய ஆட்சியமைந்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதிய அரசு முடிவு செய்து, தேர்தலையும் நடத்தி முடித்தது.
     தமிழகம் முழுவதும் நடந்தத் தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களோ, அச்சப்பாடுகளோ இன்றி எதிர் பார்த்ததை விட மிகமிக அமைதியாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இவ்வளவு அமைதியாக தேர்தல் நடைபெறுவதற்குத் தேர்தல் ஆணையம் எடுத்த மிக சாதுர்ணியமான நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது அரசு மேற்கொண்ட நடைமுறையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றமைக்காக தமிழக மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சபாஷ் கூறிக் கொள்ளலாம்.  இத்தேர்தல் தமிழக மக்களின் அறிவுடைமைக்கு மிகுந்தச் சான்றுப் பகர்வதாக இருந்தது. 
     அதிலும் விசேஷமாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் எவரும் சிந்தைச் செய்யா வண்ணம் ஒவ்வொரு கட்சிகளும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்தனியே நின்றுத் தேர்தலைச் சந்தித்து தங்கள் சுய பலத்தை நிரூபித்துள்ளன.  இது சற்றும் எதிர்பாரத விதமாகவோ அல்லது  ஏமாற்றுத் தனமாக நடந்ததாகவோ இருக்கலாம்.  என்றாலும், மக்களுக்கிடையே தங்களுக்கிருக்கும் செல்வாக்கை நிருபிக்க ஒவ்வொரு அரசியல் சட்சிகளும் கூட்டணி இல்லை என்றாலும் தன்னந்தனியே தேர்தலைச் சந்தித்தது பாராட்டுக்குரியதே ஆகும்.
     எது எப்படி நடந்தாலும் தமிழகம் முழுவதும் சிற்றூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்து மாநகராட்சிப் பெருந் தலைவர் பதவி வரை மிக அதிக இடங்களில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் பிரதிநிதிகளே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சிப் பிரதிநிதிகளே பெரும்பான்மை வெற்றி பெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாயிருப்பது வரவேற்கத்தக்கதே ஆகும்.
     எனெனில், அரசிடமிருந்து உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியானது எவ்வித பாரபட்சமும் இன்றி நேரடியாகவே கிடைத்து விடும்.  இதன் மூலம் ஆளும் சட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சிகளில் அதிக வளர்ச்சிப் பணிகள் நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
     கூடவே, உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில். கோடீஸ்வரன் முதல் குடிசை வாழ் மக்கள் வரை தங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி மேலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழ்கள் பெறுவதற்கானப் பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது என அனைத்திற்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது.  இதனால், சில அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரங்களை விட அதிகமான அதிகாரம் ஊராட்சிப் பிரதிநிதிகளிடம் உள்ளன.
     ஓர் அரசு அதிகாரி தனதுக் கடமைக்காத்தான் மக்கள் பணியாற்றுவார்.  ஆனால், ஓர் உள்ளாட்சிப் பிரதிநிதி என்பவர் அப்படியல்ல.  அவர் எப்பொழுதுமே அந்தந்த ஊரிலுள்ள மக்களோடு மக்களாக வாழக் கூடியவர்.  அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நேரடியாக மக்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும்.  அதனால், அவர் தனதுக் கடமைக்காக மட்டும் பணியாற்றக் கூடாது.  அந்தந்த ஊர் மக்களின் முழு உரிமையையும் பெற்றுத்தரும் விதத்தில் பொறுப்புணர்ச்சியோடு கிராம மக்களின் உயர்ச்சியையும் மேன்மையையும் சிந்தையில் கொண்டு மிகவும் சீரிய முறையில் தன்னலமின்றி செயலாற்ற வேண்டும்.
     இந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் இன்னொரு வினோதமும் நடந்துள்ளது. அது வேறொன்றும் இல்லை; ஆளும் கட்சிக்கு அடுத்த படியாக பெரும்பாலான உள்ளாட்சிகளில் கட்சி அல்லது இயக்கங்கள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட எவ்வித கட்சியோ அல்லது இயக்கங்களோ சாராமல் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்கள் பெருவரியாக வெற்றி பெற்றுள்ளனர்.  இதன் மூலம் பொது மக்கள் கட்சி அல்லது சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்தில் நடுநிலையோடு செயல்படுபவர்களை அங்கீகரித்து ஆதரவு அளித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.  இது ஓர் ஆரோக்கியமான விஷயமாகும்.
     இப்படி இயக்கங்களைச் சாராமலோ அல்லது அரசியல் கட்சிகளைச் சாராமலோ சுயசார்புடன் நின்று வெற்றி பெற்றவர்களால் மக்களுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்கு இயலும்.  ஏனென்றால் ,அவர்களை எந்த அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களோ கட்டுப்படுத்தாது.  அவர்கள் விரும்பியதை விரும்பியவாறே நேரடியாக மக்களுக்குச் செய்வதற்கு இயலும்.
     நம் நாட்டில் நிலவிலுள்ள பஞ்சாயத்துராஜ் திட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதற்கு அதிக நிதி ஒதுக்கப் படுகிறது. இந்த நிதியைக் கொண்டு பத்து அல்லது 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஊராட்சியையும் தன்னிறைவுப் பெற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு இயலும்.  மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிதியோடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு உட்பட்ட எம்.எல்.ஏ தொகுதி, எம்.பி. தொகுதி நிதிகளையும் அவர்களிடமிருந்து முயற்சி செய்து ஒத்துழைத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு, செய்தால் உள்ளாட்சி அமைப்புகளை மிகவும் விரைவாக குறுகிய கால அளவிற்குள் தன்னிறைவுப் பெற்ற உள்ளாட்சிகளாக மாற்றலாம்.  உள்ளாட்சிகளைப் பொறுத்த வரை மக்கள் அதிகம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்க வேண்டும் சேதமில்லாத சாலை வசதி இருக்க வேண்டும் ஓரளவிற்கு தெரு விளக்கு வசதி இருக்க வேண்டும் நிறைவான போக்கு வரத்து வசதி வேண்டும் அவ்வளவுதான். இவ்வளவையும் செய்து விட்டாலே ஓர் உள்ளாட்சி தன்னிறைவு பெற்றதாக மாறி விடும்.
     இவற்றுடன், மக்கள் அவர்களின் தனிப்பட்டத் தேவைகளான ரேஷன் கார்ட் பெறுதல், முதியோர், விதவை, ஆதரவற்றோர் பென்ஷன் பெறுதல் சில முக்கிய சான்றிதழ்கள் பெறுதல் ஆகியவற்றிற்காக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அடிக்கடி அணுகுவார்கள்.  அவர்களின் அந்தச் சேவைகளையும் எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி இன்முகத்துடன் அவர்களுடன் பேசி, பழகி அதிகாரிகளை அணுகி அதிக சிரமப்படுத்தாமல் பெற்றுத் தந்தால் யாராக இருந்தாலும் முழு திருப்தியடைவார்கள். கூடவே உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். அவர்களின் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பிரதிநிதிகளுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
     இப்படிப்பட்ட நல் எண்ணம் உள்ளாட்சிப் பிரதிகளாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கும் அனைவர் மனதிலும் எழ வேண்டும். என்றால் மட்டுமே உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரச் செய்து அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடிக்க இயலும்.
     இவற்றையெல்லாம் தவிர்த்து, எப்படியோ மக்களை ஏமாற்றி தற்பொழுது வெற்றி பெற்று விட்டோம்.  இனி ஐந்து ஆண்டுகள் நானே ராசா.. நானே மந்திரி... என்னை யாரும் அசைக்க முடியாது என்ற அகங்காரத்திலும் ஆணவத்திலும் மக்கள் பிரதிநிதிகள் நடந்து விட்டால் அது இந்த சமுதாயத்திற்குப் பெரும் தீங்கு விளைவித்ததாகவே மாறிவிடும்.
     மேலும், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் உள்ளாட்சிப் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் பெரும் தொகையை முழுமையாக அந்தந்தக் காரியங்களுக்காகவே செலவழிக்க வேண்டும்.  கான்டிராக்டர்கள் மூலம் வேலைகள் செய்யும் போது அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு கமிஷன் பெறுவதற்காகக் கண்மூடி விட்டால் கான்டிராக்டர்கள் மொத்தமாகவே உங்களுக்கு முடிவுக் கட்டி விடுவார்கள்.   அதுபோலவே உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள அதிகாரிகளும் பணியாளர்களும் கூட கான்டிராக்டர்களிடம் கமிஷன் பெறுவதில்தான் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவார்கள்.  அவர்களுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாதகமாகச் செயல்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த ஊராட்சிகளையே விலைக்கு வாங்கி விடுவார்கள்.
     எனவே, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கான்டிராக்டர்களிடம் கமிஷன் பெற்று வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் வேலைகளுக்காக அரசு மூலம் ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்து, பெரும் தொகையை கொள்ளையடித்து தன் குடும்பத்தை வாழ வைக்கலாம் என்றோ கருதக் கூடாது.
     அப்படிக் கருதிவிட்டால், இன்றைய மக்கள் அவ்வளவு அறிவிலிகள் அல்லர் என்பதை நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும்.  அவர்கள் அனைத்து விஷயங்களிலும் நல்ல விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.  நீங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருந்தாலும் உங்களையும் கேள்வி கேட்கும் அதிகாரமும் அறிவும் சாதாரணப் பொது மக்களிடமும் உள்ளது, அந்த அடிப்படையில் பொது மக்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்து உங்களுக்குத் தண்டனை வழங்கி பாடம் புகட்டி விடுவார்கள்.
     இதற்குச் சான்றாகத்தான் இன்று மாநில கட்சிகளிலிருந்து தேசிய கட்சிகள் வரையுள்ள தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும்  சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பது. ஐந்து ஆண்டுகாலம் அனுபவிக்க வேண்டிய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து லஞ்சத்திலும் ஊழலிலும் உருண்டவர்கள் இன்று வெட்கமும் மானமும் கெட்டு, சூடு, சுரணையற்று தன்மானத்தை இழந்து நடைப் பிணங்களாக சிறைக்குள்ளே வெந்து தணிகிறார்கள்.  அப்படிப் பட்டவர்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் கடந்தப் பொதுத் தேர்தலிலும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சரியான, முழுமையானப் பாடத்தைப் புகட்டி விட்டார்கள்.
     இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இந்த ஐந்தாண்டுக் காலம் தங்களின் உள்ளாட்சிகளில் நேர்மையாக, முறையாக, திறமையாகச் செயல்பட்டு உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரச் செய்ய வேண்டும்.
                       நன்றி: சமுதாய நண்பன் நவம்பர் 2011.    
  




















 











  

Tuesday, 22 November 2011

அன்னதானங்களுக்கு விடை கொடுப்போம்...

                          அன்னதானங்களுக்கு விடை கொடுப்போம்
          அறிவு தானங்களுக்கு வழி வகுப்போம்...
    
             அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
                   ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
              பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
                    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
              அன்ன யாவினும் புண்ணியம் கோடி
                     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”.

     இது எட்டையபுர கவிஞரின் வெட்ட வெளிச்சமான அறிவு சார்ந்த அறிவுரை.
     ஆயிரக்கணக்கான அன்னச் சத்திரங்களையோ அல்லது பதினாயிரக்கணக்கான ஆலயங்களையோ எழுப்புவதினால் ஒருவருக்கு எவ்விதமான புண்ணியங்களும் வந்துச் சேரப் போவதில்லை. இவற்றைவிட எழுத்தறிவில்லாமல் இருக்கும் ஓர் ஏழைக்கு எழுதப் படிக்க ஒருவர் வழிகோலுவாரேயாயின் அதுவே, அவருக்குக் கோடிக்கணக்கானப் புண்ணியங்களை ஈட்டிக் கொடுக்கும் என்பது புண்ணியவாளரான பாரதியின் அசைக்க முடியாத நம்பிக்கை.
     ஓர் அன்னச் சத்திரம் அமைத்து ஒருவருக்கு அல்லது பலருக்கு அன்ன தானம் செய்தால் அது அவருக்கு ஒரு நேரப் பசியைப் போக்குவதற்கு மட்டுமே உதவும்.  ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து அதில் பலருக்கு கல்வி என்னும் அறிவுப் பாலை ஊட்டினால் அதனால் இந்த நாடே சுவிட்சம் பெறும்.  இக்கருத்தை எதிர்மறையாக வலியுறுத்துகிறார் பாரதியார்.
     இன்று தமிழகத்தில் பெரிய பெரிய ஆலயங்கள் தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்து, அதற்கானத் தீர்மானத்தையும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.
     தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து ஆலயங்களை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் இந்து அறநிலையத்துறை என்ற ஒரு தனிப்பிரிவு உள்ளது. இதற்க்காக ஓர் அமச்சரும் அமச்சகவும் செயல்பட்டு வருகின்றன.  இந்த ஆலயங்கள் வாயிலாக தமிழகத்தையே மிகவும் சுபிச்சமாக வழிநடத்திச் செல்வதற்கான வருமானங்களும் வருகின்றன.
     இவற்றில் சில கோயில்களில் நாள் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வந்தாலும் பல கோயில்களில் தினமும் சரியாகவும் முறையாகவும் ஒரு வேளை பூஜை கூட நடக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.  அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆலயங்களில் தினமும் ஒரு வேளையாவது பூஜை கர்மங்கள் நடத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.  ஏனென்றால், ஓர் ஊரில் ஓர் ஆலயம் இருக்கிறதென்றால் அந்தக் கோயிலின் நித்திய பூஜை உட்பட அனைத்துச் செலவுகளுக்குமான வருமானத்திற்கு வழிவகை இருக்கும். அப்படி இருந்தும் பெரும்பாலான அலயங்களில் ஒரு வேளைப் பூஜை கூட நடைபெறாமல் இருப்பது வேதனையிலும் வேதனை.
     இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஆலயங்களில் பணிபுரியும் பூஜாரிகள் உட்பட அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் அரசு வழங்கும் ஊதியம் என்பது சாதாரண ஒரு பிச்சைக்காரனுக்கு தினம் கிடைக்கும் வருமானத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளது.  இதனால் அரசு நிர்வகிக்கும் ஆலயங்களில் உள்ள ஊழியர்கள் படும் அவஸ்தைக்கும் வேதனைக்கும் ஓர் அளவே இல்லை.
     இந்நிலையில்தான் அரசு பெரிய பெரிய கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.  இந்த அன்னதான திட்டம் மூலம் அங்கு வரும் பக்தர்களுக்குத் தானதர்மம் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் உயரிய நோக்கம் என யாரேனும் எண்ணி விட்டீர்கள் என்றால் அது அவர்களின் அறிவீனம் என்று எந்த முட்டாளாலும் ஊகிக்க முடியும்.
     பெரிய பெரிய கோயில்களில் சுற்றுலா வரும் பயணிகள் அல்லது பக்தர்களுக்கு எதற்கு அன்னதானம்? பல ஆயிரம் ரூபாயைச் செலவழித்து பல மையில் தூரம் பயணித்து ஆலயங்களுக்கு வரும் பயணிகள் ஒரு நேர அன்னதானத்தை நம்பியா அந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்? இல்லை அந்த ஊரில் இருக்கும் பக்தர்களுக்குத்தான் இந்த அன்னதானத் திட்டமென்றால் தினமும் கோயில் வந்து அன்னதானத்தை உண்டுதான் வயிறு நிரப்பும் அல்லது வாழ்க்கை நடத்தும் பக்தர்கள் எத்தனை பேர் உள்ளனர்?
     ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பியே வாழ்க்கை நடத்தும் அளவிலோ அல்லது வயிறு நிரப்பும் நிலையிலோ ஓர் ஊர் சார்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்றால் அங்கு அந்த மக்களை நிரந்தரப் பிச்சைக்காரர்கள் ஆக்காமலும் அந்த ஊரை, அரசின் அன்னதானத்தை அண்டிப் பிழைக்கும் ஊராக்காமலும் இருக்க அந்த ஊரில் இருக்கும் ஆலயத்தை எவ்வித தயவும் தாட்சண்ணியமும் பார்க்காமல் இடித்துத் தள்ளிவிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு நித்தம் செலவாகும் தொகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தால் அந்த ஊர் மக்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசு வழங்கும் ஒரு வேளை எச்சில் சாப்பாட்டிற்குப் பதில் மூன்று வேளை வயிராற நிம்மதியான சாப்பாட்டை உண்டு மகிழ்வார்கள்.  அதுவே, இந்த அரசிற்கு பெரும் ஆசீர்வாதமாக அமையும்; கூடவே அந்த ஊரும் வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும்.
     இதைத் தவிர்த்து, இந்த அரசு பக்தர்கள் மீது கொண்ட கருணையால் அல்லது சுற்றுலா பயணிகள் மீது கொண்ட பாசத்தால் இந்த அன்னதான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது என்று கருதுவதாக இருந்தால் அது அறிவீனமாகும்.  இத்திட்டத்திற்கென்று வரவு செலவுக் கணக்கு எழுத வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது.  அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கோடி கோடியாய் கொள்ளையடித்து அரசு மற்றும் அதிகாரிகளின் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளலாம்.  இதற்காக மட்டும்தான் இந்த அரசு வேறு எந்த உருப்படியான திட்டத்திற்கும் முன்னுரிமைக் கொடுக்காமல் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதியில் கூட கூறப்படாத ஒரு திட்டத்தைச் சட்டசபையில் நிறைவேற்றி அதை உடனடியாக நிறைவேற்றி உள்ளது.  இதனை அறிவுடையோர் அனைவரும் நன்கு அறிவர்.
     பாரதியின் கூற்றான அன்னசத்திரமும் ஆலயமும் அமைப்பதை விட ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது பள்ளிக் கூடங்களைக் கட்டுவதாகும்.  அரசு, ஆலயங்களில் அன்னதானம் வழங்குவதின் மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவாகின்றன என்பது நாடறிந்த உண்மை.
     இன்று, தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் அல்லது அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களின் நிலை என்பது மிகவும் பரிதாபக்கரமாக உள்ளது.
     தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் போதிய கட்டட வசதியில்லை.  இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் மர நிழலில் தஞ்சமடைந்து பாடம் படிக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது. மட்டுமின்றி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை வசதியின்றித் தவிக்கின்றனர்.  அரசுப் பள்ளிக் கூடங்களில் வரும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு போதிய ஆசிரியர்கள்கூட இல்லை என்பது உண்மை.
     அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததினால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நிலை பாழ்பட்டுப் போகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க விடுவதற்கு பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.  எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றது.  இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா கண்டுக் கொண்டிருக்கின்றன.  இதனைப் பார்த்துத் தமிழக அரசு ஒரு புறம் மொளனமும் மறுபுறம் மகிழ்ச்சியும் அடைகின்றது.
     ஏனென்றால், தமிழக அரசுக்கு நன்றாகப் புரிகிறது; மக்களின் அறிவு வளர்சிக்கான பள்ளிக் கூடங்கள் அல்லது கல்வி நிலையங்கள் கட்டினால் அதிலிருந்து, அரசுக்கு கோடி கோடியாய் கொள்ளையடிக்க இயலாது.  இதனால், அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித பயனும் இல்லை.  பிறகு ஏன் நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிப் பற்றியோ அல்லது அதற்கான ஸ்தாபனங்கள் பற்றியோ கவலைப்பட வேண்டும்?
     எனவே, இன்றைய காலகட்டத்தில் அரசு ஏழைப் பக்தர்களின் பசியைப் போக்குவதற்காகத்தான் இந்த அன்னதான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதற்குத் தற்போது தமிழக அரசு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் இலவச அரிசியே போதுமானது.  அதைத் தவிர்த்து கோயில்களிலும் கோயில்களிலும் அன்னதானத்தை வழங்குவது அரசிற்கு கொள்ளை லாபம் அல்லது ஊழல் செய்வதற்கு வசதியாக மக்களை கோழைகளாக்குவதற்கான சுலப வழிமுறையாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
     பண்டையக் காலங்களைப் போன்று தற்போது கோயில்களில் அன்னதானம் உண்பதை அவ்வளவு கொளரவமாகப் பக்தர்கள் அல்லது பொது மக்கள் கருதுவதில்லை. அதை இழிவாகவும் குறைவாகவும் நினைக்கும் மனநிலையில் இருக்கும் மக்களும் உள்ளனர்.
     எனவே, உண்மையிலையே தமிழக மக்கள் மீதும் தமிழகத்தின் மீதும் இந்த அரசுக்கு அக்கரை இருந்தால் கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுவிட்டு அந்தத் தொகையை ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியின்றித் தவிக்கும் கோயில்களின் வழிபாட்டிற்கோ அல்லது கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மைப்படுத்தலாம்.
     கூடவே, தமிழகத்தில் அழிந்து வரும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இப்பணத்தைச் செலவிட்டு தமிழக மக்களின் அறிவு வளர்ச்சிக்குச் சீரிய வழிவகுக்கலாம்.
                                 நன்றி சமுதாய நண்பன் அக்டோபர் 2011  



            


Saturday, 5 November 2011


                இனியொரு சுதந்திரம் வேண்டும் சுகமாய் வாழ...

     நீண்ட நெடிய காலம் ஓயாத போராட்டம்...எண்ணற்ற உயிர் தியாகம்...வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்... இப்படி, எண்ணிலடங்கா துயரங்களையும் துன்பங்களையும் அனுபவித்து, நம் முன்னோர்களால் பெற்றுத்தரப்பட்டதுதான் நாம் இன்று சுவாசித்து  வரும் சுதந்திரக் காற்று.
      சாதிகளை மறந்து, மத, இன, மொழி ஆகிய அத்தனை வேற்றுமைகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு நாம் அனைவரும் இந்தியர், நம் நாடு இந்திய என்ற தாரக மந்திரம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தையாலும் செயலாலும் ஒன்றாகவே இருந்தனர் நம் முன்னோர்கள். அதன் விளைவு,சர்வ சக்தி வாய்ந்த வெள்ளையனே ஆட்டம் கண்டு ஓட்டம் பிடித்தான்.
     நீர் வளம், நில வளம், மலை வளம், கடல் வளம் ஆகிய அனைத்து வளங்களையும் ஒருங்கேப் பெற்றது நம் இந்திய தேசம். செல்வம் செழித்து, பொன்னும் பொருளும் மலிந்து, அன்பும் அறனும் தழைத்தோங்கி அமைதிக்கு அடையாளமாகத் திகழ்ந்தது இப்பூமி.  தெய்வ பக்தியும் தேச பக்தியும் அக்கால மக்களின் இரு விழிகளாக இருந்தன. எனவேதான், இப்பூமியை புண்ணிய பூமி எனப் போற்றிப் புகழ்ந்தனர் நம் மூதாதையர். அறிவியல் கண்டுப் பிடிப்புகளிலும் தொழில் துறை வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் கல்வி அறிவிலும் ஆன்மீகத் துறையிலும் எந்த நாடும் நம்மை அண்ட முடியாத நிலைக்கு முன்னேறி உள்ளோம்.
     இந்த வளர்ச்சியையும் உயர்ச்சியையும் பார்த்து அண்டை நாடுகளும் வளர்ந்த நாடுகளும் நம் நாட்டின் மீது போர் செய்வதற்கும் போட்டி போடுவதற்கும் அஞ்சுகின்றன.
     இத்தனைப் பொருமைக்கும் சிறப்புக்கும் உரிய நம் இந்திய தேசத்தின் நிலையை இந்த சுதந்திர தினத்தில் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
     அண்டை நாடுகள் கூட நம்மோடு போட்டிப் போடுவதற்கு அஞ்சும் இக்காலகட்டத்தில் நம் நாட்டுக்குள்ளே எழுந்திருக்கும் பிரச்னைகளுக்கு அளவே இல்லை. அதனால், நம் நாடு நித்தம் நித்தம் சந்தித்து வரும் சவால்களுக்கு ஓர் எல்லையே இல்லை.
     அக்காலத்தில் ஆட்சி மற்றும் நிர்வாக வசதிக்காக நம் முன்னோர்கள் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்த நாட்டைப் பலபல மாநிலங்களாகப் பரித்தனர்.  அதன் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களின் தேவைகள் தன்னிறைவோடு செயல்படுத்தப்பட்டு வந்தன. அப்போதொல்லாம் எந்த ஒரு மாநிலத்திற்குள்ளும் அல்லது ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையில் எவ்விதமானப் பிரச்னைகளும் எழுந்ததில்லை.
     ஆனால், இன்று நிலைமை நேர் மாறாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை விட பன் மடங்குப் பிரச்னை இந்திய நாட்டிற்குள் எழுந்துள்ளது. அன்னிய நாடுகளிலிருந்து வரும் சவால்களை விட பன் மடங்குச் சவால்கள் நம் நாட்டிற்கு உள்ளிருந்தே வருகின்றன.  இரு மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ளத் தண்ணீர்ப் பிரச்னையிலிருந்துத் தொடங்கி, அந்தந்த மாநிலங்களுக்கிடையே எழுந்துள்ளப் பிரிவினைப் பிரச்சினை வரைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ, எப்படி நடக்குமோ என்ற ஐயப்பாட்டோடுதான் நாம் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளோம்.
     இந்தியத் திருநாட்டிற்குள்ளிருக்கும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசியல் சட்சிகளிடையே பிரிவினைவாதம் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தீவிரவாதம் தீவிரமாகச் செயல்படுகின்றது. இதனால் அம்மாநிலங்களில் துப்பாக்கிச் சூடுகளும் வெடி குண்டு  விபத்துகளும் பொழுது போக்கு நிகழ்சிகளாகவே மாறி விட்டன. தினம் தினம் அநியாயமாக உயிரிழக்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.
     தீவிரவாதிகளின் ரயில் தகர்ப்பிற்கும் மாவோஸ்டுகளின் விமான கடத்தலுக்கும் என்னத் தீர்வு என்பதைக் கண்டுபிடிப்பதற்குத் தெரியாத சிந்தனைச் சக்தியற்ற அரசியல்வாதிகளின் ஆட்சியும் அனைத்துத் தொழில் நுட்பங்களும் அறிவும் ஆற்றலும் இருந்தும் சுதந்திரகாச் செயல்பட முடி.யாமல், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகி கோமோ நிலையில் இருக்கும் பாதுகாப்பு படைகளும் நம் நாட்டின் சாபக்கேடுகளாக மாறியுள்ளன.
     மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எண்ணத்தோடுச் செயல்படுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் மக்களால் தேர்ந்தொடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களையும் மறந்து நாட்டையும் மறந்து, தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் மட்டுமே நினைத்து கோடி கோடியான கொள்ளையிலும் லஞ்ச, ஊழலிலும் மூழ்கி நம் நாட்டையே அன்னியனுக்கு அடகு வைப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் தயாராகின்றனர்.  இப்படிப் பட்டவர்களைத் தட்டிக் கேட்க நாதியில்லை, தண்டிப்பதற்குத் தகுதியான அரசும் இல்லை.
     எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்நாட்டில் இருக்கும் மக்கள் தங்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராட்டம் நடத்துவதும் புரட்சி ஏற்படுத்துவதும் இயல்பானதும் வழக்கமானதும்தான்.  இதிலொன்றும் வியப்போ, ஆச்சரியமோ இல்லை. அந்தப் போராட்டங்கள் மற்றும் புரட்சிகளின் தன்மை அறிந்து, உணர்ந்து அந்தந்த நாட்டு அரசுகள் செயல்பட வேண்டும்.  போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் வீரியத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நடவடிக்கைகள் எடுத்து தீர்வுகளை உருவாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கடமையாகும்.
     ஆனால், நம் நாட்டின் தலைவிதி மாறிக்கிடக்கிறது.  நாட்டின் அல்லது நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, உணர்ந்து அதனை உடனுக்குடன் பூர்த்திச் செய்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய, மாநில அரசுகள் மக்களால் எழுப்பப்படும் எந்தப் பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வோ அல்லது நிரந்தர முடிவோ எடுப்பதில்லை.  பிரச்னைகளை வளர விட்டு, போராட்டங்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதனால், நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
     நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேச் சென்றால் உயிரோடு அல்லது நிம்மதியோடு வீட்டுக்குத் திரும்புவார்களா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.  எங்குப் பார்த்தாலும் கலவரம், குண்டு வெடிப்பு, கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், தீவிரவாதம் என இந்தியாவே ஒரு கொடிய கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.
     இவற்றை எல்லாம் கண்ணுறும் போது நம் நாட்டிற்கு உடனடியாக இன்னொரு சுதந்திரப் போர் தேவைப்படுகிறது.  அது அன்னியனிடமிருந்து நாட்டிற்குத் சுதந்திரம் வாங்குவதற்கு அல்ல சொந்த நாட்டில் மக்கள் சுகமாக வாழ வழி வகுப்பதற்காகும்.
                                நன்றி சமுதாய நண்பன் செப்டம்பர் 2011.
      
                     

Sunday, 23 October 2011

சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டாதீர்


             சமச்சீர்க் கல்விக்கு சமாதி கட்டாதீர்.
                                டாக்டர். கமல. செல்வராஜ்.
    
              எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்
                பாடியவன் பாட்டைக் கெடுத்தான்  என்பது நம் நாட்டில் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவர் மத்தியிலும் அன்றிலிருந்து இன்று வரை நிலவி வரும் ஒரு பழமொழி.
     இப்பழமொழிக்குள்ளே ஆயிரம் அர்த்தங்கள் அடங்கிக் கிடக்கின்றன என்பதை அறிவுடையோர் அறிவர். இப்பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ தற்பொழுது தமிழகத்தில், கல்வித்துறையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள சமச்சீர்க் கல்வி மீது எழுந்துள்ள விவாதத்திற்கு நூறு சதவீதம் பொருத்தமாக அமைந்துள்ளது.
     தமிழகத்தில் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடப்பது இயல்பு. இந்த ஒவ்வொரு ஐந்தாண்டுத் தேர்தலிலும் தமிழகத்தில் மிகப் பெரிய மாநில கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மாறி மறி ஆட்சிக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
       இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சில துறைகளில் முந்தைய அரசு கொண்டு வந்திருக்கும் சில சட்ட திட்டங்களை மாற்றியமைப்பது அல்லது இல்லாமல் ஆக்குவதென்பது வடிக்கையாகவே இருக்கும்.
     இவற்றில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அ. தி.மு.க கட்சி எப்போதொல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் வருவது வேடிக்கையானது. இக் கல்வித்துறை மாற்றமானது பாடபுத்தகத்திலிருந்துப் பாடப் பகுதிகளை மாற்றுவதிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களைப்  பழிவாங்குவது வரை நடக்கும்.
     அவ்வகையில் இம்முறை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சியமைத்த உடனையே வழக்கம் போல் கல்வித்துறையில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. அதுதான், முந்தய தி.மு.க. அரசு, தமிழகத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்த சமச்சீர்க் கல்வியை ரத்து செய்ததாகும்.
     சமச்சீர் கல்வி என்பது  தமிழகத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஒரே விதமான கல்வி என்பதாகும். இதில் எம்முறையில் பயிலும் பள்ளிகளிலும் பாடத்திட்டமென்பது ஒன்றுபோல் இருக்கும். இம்முறையினால் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிலிருந்து, வசதி வாய்ப்புப் படைத்தக் குடும்பத்தில் பிறந்து மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவர் வரை ஒரே பாடதிட்டத்தைப் படிப்பது என்பதாகும்.
    இத்திட்டத்தினால் வசதி வாய்ப்புப் படைத்தவர்களுக்கு ஒரு விதமானக் கல்வி, ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னொரு விதமானக் கல்வி என்றப் பாகுப்பாடு  நீங்கி அனைவருக்கும் ஒரே விதமான கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.  இதனைக் கல்வித்துறையின் ஒரு புரட்சி என்றேக் கூறலாம். இக்கல்வி முறையினால் அனைத்து மாணவர்களிடமும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க முடியும் என்பது கல்வி வல்லுநர்களின் அசைக்க முடியாத கருத்தாகும்
     மேலும், இக்கல்வி முறையினால் உயர் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுதும் போது அனைத்துத் தரப்பு மாணவர்களும் ஒரே விதமாக வெற்றி பெறுவதற்கு இயலும்.  பழைய கல்வி முறையில் அப்படியல்ல மெட்ரிக்குலேஷன் போன்ற ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று உயர் படிப்புகளில் சேருவதற்கு இயலும். அவர்கள் மட்டுமே உயர்ந்தப் பதவிகளையும் வகிக்க முடியும்.
     நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தப் பிள்ளைகளுக்கும் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கும் உயர் கல்வி என்பதும் உயர் பதவி என்பதும் கானல் நீராகவே இருக்கும். போட்டித் தேர்வுகளில் இவர்களை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் பின்னுக்குத் தள்ளி விடுவர். இதனால் கல்வித்துறையில் ஓர் ஏற்றத்தாழ்வு காலாகாலமாக இருந்து கொண்டே இருக்கிறது.  
     இந்தப் புரட்சிகரமான கல்வி முறையை தமிழகத்தில் முந்தய தி.மு.க அரசு அறிமுகம் செய்த போது அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது வந்த புதிய அரசு இந்தப் புரட்சிகரமான கல்வித்திட்டத்தை ரத்து செய்ததின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் அதிருப்தியையும் ஆட்சேபத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.
.     மட்டுமின்றி இத்திட்டத்தை ரத்துச் செய்ததின் மூலம் வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துச் செயல்படும் நாளிலிருந்து பதினைந்து நாட்கள் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்படித்திறந்தப் பின்பும் பள்ளிகளில் எந்தப் பாடத்தைக் கற்பிப்பது என்ற திட்டமிடப்பட்ட பாடத்திட்டமில்லை.  எனவே, எந்தப் பாடத்தைக் கற்பிப்பது, எப்படி கற்பிப்பது என்றக் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், ஒன்றாம் வகுப்பு மாணவர்களிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை பள்ளிக் கூடங்களில் விளையாட்டுப் பிள்ளைகளைப் போன்று எதுவும் படிக்காமல் சென்று வருகின்றனர்.  அவர்களின் காலமும் விரையமாகி படிப்பும் பாழ்பட்டுப் போகிறது என்பதுதான் வேதனையான உண்மை.
     சமச்சீர்க் கல்வியை ஏன் இந்த அரசு  ரத்து செய்துள்ளது என்ற வினாவிற்கு அவர்கள் அளிக்கும் ஒரே பதில் இக்கல்வி முறையில் பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்பதாகும்.  இது அவர்கள் வெளிப்படையாக கூறும் கருத்தாக இருந்தாலும் அதன் உள் நோக்கம் அதுவல்ல என்பது பச்சிளம் குழந்தைகளுக்க்கும் புரியும். அது வேறொன்றுமல்ல முந்தைய தி.மு.க. அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதுதான்.
     ஒரு வேளை இந்த அரசு கூறுவது போல் இக்கல்வி முறையில் தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்றால் இந்த ஓராண்டுக் காலத்திற்கு மட்டும் இம்முறையைத் தொடர்ந்து விட்டு, அடுத்தக் கல்வியாண்டு முதல் தலைசிறந்தக் கல்வியாளர்களைக் கொண்டு புதியப் பாடத்திட்டத்தை வடிவமைத்துத் தரமானக் கல்வியை வழங்கியிருக்கலாம்.
     அப்படிச் செய்திருந்தால் அது நாகரிகமாகவும் அறிவு பூர்வமாகவும் இருந்திருக்கும்.  அப்படியின்றி ஒட்டு மொத்தமாகவே இந்தக் கல்வி முறையை ரத்துச் செய்வதென்பது முந்தய அரசு மீது தற்போதைய புதிய அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை நேரடியாக வெளிக் கொணர்வதாகவே உள்ளது.  ஓர் அரசு,  முந்தைய அரசு மீது காழ்ப்புணர்ச்சிக் கொள்வதொன்றும் புதிய விஷயமல்ல.  அது இயல்பானது... இயற்கையானது... ஆனால், அந்தக் காழ்ப்புணர்ச்சி ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் விதத்திலோ அல்லது நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும்  விதத்திலோ அமைந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
     ஆனால், தற்போதைய அரசுக் கல்வித் துறையின் மீது எடுத்திருக்கும் நிலைபாடானது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்தமான அடிப்படைத் தேவையான அறிவு வளர்ச்சியின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் கல்வித்துறையை ஒரே அடியாகக் குழித்தோண்டிப் புதைத்திருப்பதாகும்.  
இப்பிரச்னைக்கு உடனடியாக இந்த அரசு ஒரு தீர்வைக் கொண்டு வந்து பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல் பயில்வதற்கு வழிகோல வேண்டும்.  இல்லையேல் இது மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் ஒரு புரட்சியாக வெடித்து விடும்.  அந்தப் புரட்சி பெரிய போராட்டங்களாகி இந்த ஆட்சிக்கு ஆபத்தாக அமையும்.  கூடவே இந்த அரசுக்கே மக்கள் சமாதி கட்டி விடுவார்கள் என்பதில் ஐயமேதும் இல்லை.
                              நன்றி :  சமுதாய நண்பன் ஜூலை 2011.                
              
  

Monday, 17 October 2011

ஓட்டுப் போடுவோம் வாங்க...


                   
               
                   ஓட்டுப் போடுவோம் வாங்க...
       
                ஓட்டுரிமை ஓட்டுரிமை நம்முரிமை      
                என்றுச் சொல்லுவோம்
                ஓட்டளிக்க ஒன்றாகக்
                கூடிச் செல்லுவோம்
               

                வறியவரை முதியவரை
                அழைத்துச் செல்லுவோம்
                நம்ம நாட்டிலுள்ள அனைவரையும்
                ஓட்டுப்போடச் சொல்லுவோம்

                ஜாதி மதம் பரர்க்காம
                காசு பணம் வாங்காம
                நாட்டு நலம் காத்திடவே - நாம்
                ஒன்றாகக்கூடிச் சென்று
                ஓட்டுப் போடுவோம்
       
                ஜனநாயகத்தைக் காத்திடவே
                ஓட்டுப் போடுவோம்
                நம்ம நாட்டிலுள்ள
                நல்லவர்கள் ஆட்சி செய்ய
                ஓட்டுப் போடுவோம்.
                
                சுதந்திரத்தைப் பேணிடவே
                ஓட்டுப் போடுவோம் – நாம்
                சுதந்திரமாய் வாழ்ந்திடவே
                ஓட்டுப் போடுவோம்.                        

.
              
              
             

Friday, 22 July 2011

அறப்பணிக்கு அறிவுடையோர் வேண்டும்.



             அறப்பணிக்கு அறிவுடையோர் வேண்டும்
                                     டாக்டர். கமல.செல்வராஜ்.

     தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இவ்விருத் தேர்வு முடிவுகளிலும் 85 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் வெற்றி பெற்றிருந்தனர்.
     அதோடு, அவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதமும் மிகவும் உச்ச நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு மாணவர் எஸ்.எஸ்.எல்.சி அல்லது பிளஸ் டூ தேர்வு எழுதி வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. அப்படி வெற்றி பெற்றாலும் அவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும், ஆனால், வெற்றி பெறுபவர்கள் மிகுந்த அறிவுத்திறன் படைத்தவர்களாகவே இருந்தனர்.
     தற்போது, அந்நிலை முற்றிலும் மாறி தேர்வு விகிதமும் மதிப்பெண் விகிதமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன. முன்பெல்லாம், ஒரு பள்ளிக் கூடத்தில் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் நூறு சதவீதம் வெற்றி பெறுவதும் ஒவ்வொருப் பாடத்திற்கும் நூற்றுக்கு நூறு அல்லது இரு நூறுக்கு இருநூறு மதிப்பெண் பெறுவதென்பதும் கானல் நீராகவே இருந்தது.
     இவற்றையெல்லாம் பொய்யாக்கிக் கொண்டு, தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளில் தேர்வெழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நூறு சதவீத வெற்றியை ஈட்டுகின்றனர். அது போலவே ஒவ்வொருப் பாடத்திற்கும் அவற்றிற்கு வழங்கப்படும் முழு மதிப்பெண்களையும் பெற்றுப் பெருமைச் சேர்க்கின்றனர்.
     குறிப்பாக மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு முழு மதிப்பெண் பெறுவது இதுவரைக் குதிரைக் கொம்பாகவே இருந்தது. மொழிப்பாடங்களுக்கு எப்படிதான் சரியான விடை எழுதினாலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி ஒரு மதிப்பெண்ணாவது குறைத்து வழங்கவதுதான் மொழியாசிரியர்களிடையே இந்நாள் வரை இருந்து வந்த வழக்கம். தற்போது இந்த நடைமுறை வழக்கங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குக் கூட முழு மதிப்பெண்ணும் பெற்று புதுமைப் படைத்துள்ளனர் அறிவுசார்  மாணவ, மணிகள்.
     இவற்றில், என்ன வினோதம் என்றால், மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் பாட வாரியாக முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியரைப் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கண்டு அவர்களின் உயர் படிப்பு மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவைப் பற்றிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் செய்கின்றனர்.
     அவர்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் அனைவரும் தங்களின் எதிர்கால லட்சியம் கலெக்டராவது, இஞ்ஞினியராவது, டாக்டராவது அல்லது விஞ்ஞானியாவது என்றுதான் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட, இவர்களையெல்லாம் வர்த்தெடுக்கும் ஆசிரியராக வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதில்லை இதற்கு என்னக் காரணம் என்பதை மிகவும் தெளிவாக ஆய்ந்து நோக்க வேண்டும்.
     ஏனென்றால், இந்தத் தேசத்தையே மிகவும் சக்தியுடன் கட்டிக் காக்க வேண்டியவர்கள் கலெக்டர்களோ,மருத்துவர்களோ, இஞ்ஞினியர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்லர். அதற்கான முழுப் பொறுப்பும் திறனும் படைத்தவர்கள் ஆசிரியர்களே ஆவர். மற்றவர்களெல்லாம் ஓர் அங்கங்கள் மட்டுமே. இவ்வளவு உன்னதத் தன்மை வாய்ந்ததும் புனிதத்தன்மை வாய்ந்ததுமான ஆசிரியர்ப் பணியை ஏன் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர் விரும்பவில்லை என்பதுதான் கேள்விக்குறி.
     ஒரு காலத்தில் குருகுலக் கல்வியிலிருந்துத் தொடங்கி நவீன காலம் வரை அசிரியர் சமூகத்தின் மற்றும் ஆசிரியர் பணியின் மதிப்பும் மரியாதையும் மிகவும் உன்னத நிலையில் இருந்து வந்தது. அப்போது, மிகச் சிறந்த அறிவாளிகளும் பண்பாளர்களும் மட்டுமே ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி ஏற்று வந்தனர். அதனால், ஆசிரியர்கள் இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். அவர்கள் உருவாக்கும் மாணவர்களும் தலைசிறந்த அறிவாளிகளாகவும் போற்றி வணங்கும் பண்பாளர்களாகவும் திகழ்ந்தனர்.
     இப்படிப்பட்ட அறிவாளிகளிடமும் ஒழுக்கச் சீலர்களிடமும் கல்வி கற்று வந்த மாணவர்கள் அரசுத் துறை அதிகாரிகளாகவும் பிறத் துறைச் சார்ந்த வல்லுநர்களாகவும் தூய்மையான அரசியல்வாதிகளாகவும் வளர்ந்து, உயர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லச் செயல்களை மட்டுமே  செய்து வந்தனர். தீயச் செயல்களைச் சிந்தையாலும் செய்யாதவர்களாக இருந்தனர்.
     ஆனால், தற்போது ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்கு அரசு நிர்ணைத்திருக்கும் குறைந்த பட்ச மதிப்பெண், வயது வரம்பு மற்றும் பிறத் தகுதிகளைப் பார்க்கும் போது, பிற அனைத்துத்துறைப் படிப்பிற்கும் உள்ள தகுதி மற்றும் மதிப்பெண்களை விட மிகவும் மோசமான நிலையிலையே உள்ளது.  ஒரு மாணவர் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெறும் குறைந்த பட்ச மதிப்பெண்ணிலிருந்து ஒரு சிறிய சதவீத மதிப்பெண் அதிகமாகப் பெற்றிருந்தாலே அவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்குத் தகுதிப் பெற்று விடுகின்றனர். அதோடு, வயது வரம்பும் இல்லையென்றாகி விட்டது. 
     நிலைமை இப்படி இருப்பதினால்தான் சிறந்த அறிவும் நல்ல தகுதியும் திறமையும் பெற்றிருக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஆசிரியர்  பயிற்சிப் பெறுவதற்கும் ஆசிரியர் பணி செய்வதற்கும் ஆர்வம் காட்டாமல் பிறப் படிப்புகளுக்கும் வேலைகளுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
     இதனால், ஆசிரியர் பயிற்சிப் பெற வரும் மாணவர்களின் கல்வித்தரமும் அறிவுத் திறனும் ஒழுக்கச் சீலமும் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. இப்படிப்பட்டவர்களிடம் கல்வி கற்றுப் பல்வேறுத்துறை அதிகாரிகளாகவும் அரசுப் பணியாளர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் வருபவர்கள் சமூக விரோத செயல்களான லஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் ஆகியச் செயல்களில் ஈடுபட்டு தங்களின் மதிப்பையும் மரியாதையையும் இழந்து கூடவே இத்தேசத்தின் வளர்ச்சியையும் கெடுத்து மொத்தத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்களாக மாறுகின்றனர்.
     இந்நிலை ஒரு புறம் இப்படி இருக்க, இன்னொரு புறம் ஆசிரியர் பயிற்சி முடித்து, அப்பணிக்கு வருபவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம், கெளரவம், பிறச் சலுகைகள் அனைத்துமே பிறத்துறைச் சார்ந்த அரசுப் பணியாளர்களை விட மிகவும் குறைவாகவே உள்ளன.
     இந்நிலைகளையெல்லாம் அடியோடு மாற்றி விட்டு ஆசிரியர் பணியைத் இத்தேசத்தின் மிக உன்னதப் பணியாக மாற்றியாக வேண்டும். கூடவே, ஆசிரியர்களைத் தலைசிறந்த அறிவாளிகளாகவும் சமூகத்தில் ஈடிணையில்லா அந்தஸ்துக்கு உரியவர்களாகவும் மாற்றியாக வேண்டும்.
     அப்பொழுதுதான், தற்போது இத்தேசம் முழுக்க புரையோடிப்போய் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் லஞ்சம், ஊழல், ஒழங்கீனம் ஆகியத் தேசத்திற்கு ஒவ்வாத தீயச் செயல்களையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமின்றி அகழ்ந்தெடுத்து அகற்ற முடியும். அதற்காக அரசு தானாக முன்வந்து ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்குத் தற்போதிருக்கும் நடைமுறைகளையெல்லாம் அகற்றி விட்டு புதிய ஆக்கபூர்வமான நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
     புதிய நடைமுறைகளில் ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்குக் குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சதவீதம் என்றாக்க வேண்டும். கூடவே வயது வரம்பும் 25 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதோடு, ஏதேனும் ஒரு முறையில் இவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு நடத்தினால் கூட நல்லதாகவே இருக்கும்.
     மேலும், ஆசிரியர் பயிற்சி முடித்த ஒரு சில வருடங்களுக்குள் வேலை வாய்ப்பு என்ற உத்தரவாதம் இருக்க வேண்டும். அதற்காகத் தேவையானவர்களை மட்டும் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்துப் பயிற்சியளிக்க வேண்டும். அதோடு, பிற கெளரவமான பணியில் இருப்பவர்களுக்கு வழங்குவது போல் ஊதியம், சமூக அந்தஸ்து மற்றும் கெளரவம் போன்றவை ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டும்.
     இவற்றுடன், தற்பொழுது ஆசிரியர்கள் தான்தோன்றித் தனமாக சங்கங்கள் அமைத்து எதற்கெடுத்தாலும் போராட்டங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையை முற்றிலுமாக அகற்றி விட்டு ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். அதன் மூலம் ஆசிரியர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி ஆசிரியர்களை நாகரிகமான முறையில் வழிநடத்த வேண்டும். மேலும், மாணவர்களிடம் நடைமுறைக்கு ஒவ்வாத முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்தினால் ஆசிரியர் பயிற்சிக்கு மகத்துவம் கூடும். கல்வியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் ஆசிரியர்   பணியை நாடி வருவர். இதன் மூலம் ஆசிரியர் பணியை  உலகின் உன்னதப் பணியாக்கி அனைவரையும் உத்தமர்களாக்கலாம்.
                       நன்றி:  சமுதாய நண்பன் ஜூன் – 2011.
.