வீரத்தின் விளை நிலம் அஹல்யாபாய்.
முனைவர் கமல. செல்வராஜ்.
அழைக்க: 9443559841
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முப்பது ஆண்டுகள் மகாராணியாக, மாவீரத்துடன் மல்வாவை ஆட்சி புரிந்த வீரத்தின் விளை நிலம் அஹல்யாபாய் பற்றிய இப்புத்தகம் ஓர் அற்புதம்.
ஒரு நீண்ட நெடிய வரலாற்றை, படிப்போருக்குப் பரவசமூட்டும், கரும்புச்சாறாக்கித் தந்திருக்கும் இந்நூலாசிரியர் முனைவர் பெ. சாந்தி அவர்களின் படைப்பாற்றல் பாராட்டுக்குரியது.
அக்கால மரபில், பக்குவமாகாப் பருவத்தில் மணம் முடித்து, இரு மழலைகளின் தாயாகி, வாழ்க்கை நிறைவுறும் முன்பே கைமையானவள் அஹல்யாபாய். இளமையில் விதவையானால் கொண்டவனின் சிதையிலேறி உயிர் நீர்ப்பதுவே அக்கால முறை.
ஆனால், தன்னுள்ளிருந்த அறிவாற்றலையும் வீரதீரத்தையும், கொண்டவன் உறவுகள் உணர்தமையால், அவளை சிதையேறுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, அரியணையேற வைத்தனர். இது அக்காலத்தில் அஹல்யாவிற்கு மட்டுமே கிடைத்தப் பெரும்பேறு.
மகாராணியானாலும், அமச்சர்களின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டு, அரண்மனைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், தன் நாட்டை எதிர்த்து வந்தோரிடம், நேருக்குநேர் நின்று போரிட்டு வெற்றி வாகைச் சூடியப் பெருமை அவளின் வீரத்தின் மகிமை. நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும், உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்கும் பொறுமையே, அவள் ஆட்சியின் பெருமை.
இப்படி வீரமும், விவேகமும், தியாகமும் நிறைந்த மகத்தான மகாராணியின் வரலாற்றை, பொருத்தமான அழகியப் புகைப்படங்களுடன், எளிமையும் இனிமையும் ததும்பப் படிப்போர் இதயத்திற்கு இதமாக்கித் தந்துள்ள முனைவர் பெ. சாந்தியின் படைப்பாற்றல் அபாரமானது.
கல்வித்துறையில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றிருக்கும் இவர், அத்துறை சார்ந்த அனுபவங்களையும், எண்ணங்களையும் எண்ணிலா நூல்களாக்கி, படைப்புத் துறையில் கலங்கரை விளக்காய்த் திகழ்வார் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
21-09-2024.
(இது வீர மங்கை இராணி அஹல்யாபாய் என்னும் நூலின் அணிந்துரை.)
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9500128304
Facebo
No comments:
Post a Comment