Friday, 20 September 2024

பொக்கிஷத் தேடல்.

                                      பொக்கிஷத் தேடல்.

இஃது ஓர் அறிவுக் கலவை.
ஒரு படைப்பாளியாவதற்குப் படிப்பு, பட்டம், பதவி இவை எதுவும் தேவையில்லை; ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர் இந்நூலாசிரியர் செ. வின்சென்ட் அவர்கள்.
அது போலவே, ஒரு நூலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற நெறிமுறையின்றி, எப்படியும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்கும் இவரே முன்மாதிரியாவார்.
பொக்கிஷத் தேடல் என்பது இவரின் பதிமூன்றாவது நூல். இவற்றில் முதல் இரண்டு மூன்று நுல்களைத் தவிரப் பிற அனைத்து நூல்களுக்கும் அடியேன் அணிந்துரை ஆக்கியுள்ளேன்.
அவற்றில் ஒரு நூலுக்குக் கூட, ‘நீங்கள் இதைதான் எழுத வேண்டும்; இப்படித்தான் எழுத வேண்டும்’ என அவருக்குக் கட்டளையிட்டதோ, கட்டுப்படுத்தியோ இல்லை.
ஏனென்றால், அவருக்குள், எழுத வேண்டும் என்ற உந்துசக்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குள் பிறரின் மேதாவித்தனம் புகுந்து விட்டால், அந்த ஆதிக்கத்தின் உத்வேகம் குறைந்து, அவரின் முயற்சி முற்று பெற்றிடும்.
அதனால், அவர் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என முனைகிறாரோ, அதை அப்படியே எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவதையே கரிசனமாகச் செய்துள்ளேன். அதனால், அவர் இத்தனை நூல்களை எழுதி, இன்று தமிழக அரசிடமிருந்து தமிழறிஞர்களுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்று எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.
அதனடிப்படையில் பொக்கிஷத் தேடல் என்னும் இந்நூலுக்குள் என்ன பொக்கிஷம் இருக்கிறது? எனத் தேடாதீர்கள். அன்னாரின் வாழ்நாளின் அனுபவத்தில் கண்டது, கேட்டது, பார்த்தது, படித்தது, அனுபவித்தது என அனைத்தையும் அவியல், பொரியல், துவயலாக்கித் தந்துள்ளார். அவற்றில் எவை வாசகர்களாகிய உங்களுக்குப் புதுமையாகப் புலப்படுகிறதோ, அதைப் பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இவர் திருவிவிலியக் கருத்துக்கள் மீது தீராக் காதல் கொண்டவர். அக்கருத்துக்களை மேன்மைப்படுத்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம். அவற்றினூடே வள்ளலாரையும் பட்டணத்தாரையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கூடவே சபரிமலை ஐயப்பனின் சொரூபத்தையும் கடைசியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் மங்கள வீடுகளின் அடையாளமாகத் திகழ்ந்திருந்த சளை மரமும், மாடு கட்டி தேங்காய் அரைப்பதற்குப் பயன்படுத்திய அரவைச் செக்கும், இன்று அடையாளமின்றி அழிந்துபோயின. அவற்றை அறியாத, காணாத இன்றைய இளம் தலைமுறையினர் இந்நூலைப் படித்தால், அவர்களுக்கு, அவை புதையலாகவே புலப்படலாம். அதுபோலவே, வியாபாரத் தரகர்கள் தங்களுக்குள் பயன்படுத்தி வந்த, பிறருக்குப் புரியாத இரகசிய எண்களும் புதையலாகலாம்.
மேலும் நவீன காலத்தில் பல்கிப் பெருகி வரும் போதைப் பழக்கமும், அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகளும், படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் போலி பட்டங்களும், தினசரிகளில் தினம் தோறும் வெளியாகும் கொலை, கொள்ளை, பலாத்காரங்களும் இந்நூலின் கருப்பொருள்களாகி, மொத்தத்தில் இந்நூல் ஓர் அறிவுக் கலவையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இவ்வறிவுக் கலவைக்கு வாசகர்கள் பேராதரவு நல்கினால், இந்நூலாசிரியரின் அறிவுத் தேடல் இன்னும் தொடர்ந்து,.. படர்ந்து… விரிந்து… மேலும் பலப் பொக்கிஷங்கள் புலரும் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்
அழைக்க: 9443559841
அணுக:drkamalaru@gmail.com
அருமனை.
19-08-2024.
(இஃது எழுத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் எழுதிய பொக்கிஷத் தேடல் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய அணிந்துரை.)
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9751519114
May be an image of text
All re

No comments:

Post a Comment