Saturday, 16 December 2023

என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

                                 என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

புரட்சியில் மலரும் மறுமலர்ச்சி.
தன் இளம் வயது முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரபலமான தமிழ் இலக்கியவாதிகளுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டவர் கவிஞர் கருங்கல் கி கண்ணன் அவர்கள். அதன் வெளிப்பாடு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் அவருக்கு அதீதமான காதல் இயல்பாகவே உருவாகி விட்டது.
அக்காதல் இன்று இவரை ஒரு பெரும் கவிஞராக்கியுள்ளது. அத்தோடு, பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிக் கலப்பில்லாமல் தூயத்தமிழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கில் தமிழன்னை தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பு இன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனது கிளையைப் பரப்பி, பல ஆயிரக்கணக்கானத் தீவிர தமிழ்ப் பற்றாளர்களைச் சேர்த்துப் படர்ந்து பந்தலித்த ஓர் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இதோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்தில் தமிழன்னைக்குப் பிரமாண்டமான தமிழன்னை ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஊணின்றி… துயிலின்றி… ஓய்வின்றி… அதிதீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது எண்ணம் மிக விரைவில் ஈடேறும் என்பது திண்ணம்.
அவருக்குள்ளே நிரம்பி… தழும்பி… நிறைந்து… நிற்கும் கவித்துவம் ஒவ்வொரு நாளும் முகநூலில் கவிதையாக பிரசவமெடுக்கும். சில அற்புதமானக் கவிதைகள் பல முன்னணி பாடகர்களால் பாடப்பட்டு, அவை ஒலி நாடாவாக வெளிவந்துள்ளன. அந்தப் பாடல்கள் கேட்போரை பரவசமடையச் செய்யும்.
இந்நிலையில், இதுவரை அவர் எழுதியுள்ள கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து 'என் உயிர் தமிழுக்கே' என்னும் எளிமையும் இனிமையும் நிரம்பிய இக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
சமுதாயத்தில் மக்களிடையே அன்றாட வாழ்வியலில் நடைபெறும் நிகழ்வுகளையும் அவர்களின் உளவியலையும் மிக உன்னிப்பாக உற்று நோக்கி, அவற்றையே கவிதையின் கருப்பொருளாக்கியுள்ளார். அதனால் இவரது கவிதைகளில் ஆசை, ஆதங்கம், கோபம், தாகம், வேகம், வெறுப்பு ஏக்கம், வருத்தம், அன்பு, ஆன்மீகம், எழுச்சி, தத்துவம், தன்னம்பிக்கை என அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கலாம்.
என்றாலும் நூலின் ஆதி முதல் அந்தம் வரையிலும் தமிழ் மொழியின் மீது இவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அபார நம்பிக்கை இழையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்திடலாம். அதற்குச் சான்றாக
'எனது தமிழ்த் தொண்டு
என் பிறப்பின் நோக்கம் என்னும்' வரிகள் விளங்குகின்றன.
தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பேச்சுக்குப் பேச்சு மூச்சுக்கு மூச்சு தமிழ்… தமிழ்… என முழக்கமிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் தமிழ் மொழி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை கவிஞரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. இதனை
'உலகம் முழுதும் வாழ்கின்றோம்
வாழும் நாட்டில் வீழ்கின்றோம்' என்னும் வரிகளால் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
இது போன்று கண்ணனின் கவிதை நூல் முழுக்க தமிழ் கனல் பற்றி எரிவதைப் படிப்பவர்கள் அனைவராலும் உணர முடியும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அண்டி வருவோருக்கு அருள்பாலிக்கும் மண்டைக்காட்டுப் பகவதியம்மனின் அருள் தனக்குள்ளே புகுந்து தமிழன்னைக்குப் பணியாற்றிட பணித்திருப்பதாகவும், தமிழ் சித்தர்களின் ஞானமும் யோகமும் தனக்குள்ளேயிருத்து தமிழுக்கு, தமிழன்னை திருக்கோயில் எழுப்பிட உந்துவதாக உணர்ந்துள்ள கவிஞர் கருங்கல் கண்ணன் வருங்காலத்தில் தமிழகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களின் வரிசையில், தமிழன்னைக்கு ஆலயம் எழுப்பியவர் என்ற பெருமையில் முதன்மையானவராக திகழ்வார் என்பது திண்ணம். அவரது இந்தக் கன்னிக் கவிதை நூலை இருகரம் நீட்டி வரவேற்போம்.
தமிழன்னை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் விலை: ரூ. 130.
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9442077246
என்றும் சிநேகங்களுடன்…
அருமனை.
17-08-2022.
முனைவர் கமல. செல்வராஜ்.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person, monument, temple and text
All reactions

மாணவர் மாண்புகள் நூல் உள்ளோட்டம்.

                      மாணவர் மாண்புகள்.

நூல் உள்ளோட்டம்.
முனைவர் கமல. செல்வராஜ்
“ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு கல்வி வளர்ச்சியை அடியொற்றி அமைந்துள்ளது” என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை.
இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி அனைவரின் அடிப்படை உரிமை என்றே கருதப்படுகிறது. ஆண், பெண் பாலினப் பாகுபாடின்றி, அனைவருக்கும் பொதுவானதாக, கவ்விக் கற்பிக்கப்படுகிறது.
கல்வியென்பது வெறுமனேப் படித்துப் பட்டங்கள் பெற்று, உயர் பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதற்காக மட்டும் அமைந்து விடக்கூடாது. அது மனிதன், வளமான மாண்புகளோடு வாழ்வதற்கான வழிகாட்டு நெறிமுறையாக அமைய வேண்டும்.
அந்த வகையில் இந்திய அரசாங்கம், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக National Council of Educational Research and Training (NCERT) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பு பள்ளிக்கல்விக்கானப் பாடப்புத்தகங்கள் தயாரித்தல் உட்பட பள்ளிக்கல்விக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச் செய்யும் ஓர் அங்கமாக விளங்குகிறது.
இவ்வமைப்பின் ஆய்வின்படி, மாணவர்கள் 16 வயதிற்குள் கல்வியின் மூலம் 83 விழுமியங்களை அடைய வேண்டும் என வரையறுத்துள்ளது. அந்த விழுமியங்களை அடியொற்றி, இந்நூலாசிரியர், இந்நூலைப் படைத்தளித்துள்ளார். இது இக்கால மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக உள்ளது.
கற்றல், கற்பித்தலில் நீண்ட, நெடிய அறிவாற்றலின் தெளிந்த நீரோடை. எழுத்துலகில் சமுதாயத்திற்குப் பயனுள்ளப் பத்துப் புத்தகங்களைப் படைத்துள்ளவர். இலக்கியத்தில் ஈடிணையற்ற ஈடுபாடு, இளைஞர்களின் முன்னேற்றத்தில் முழுமையாக தன்னை அற்பணித்தவர் என இந்நூலாசிரியர் கப்பியறை முனைவர் வ. இராயப்பன் அவர்களின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பயன்படும்.
சாதாரணமாக இப்படியொரு முயற்சியெடுப்பதற்கு, எவரின் மனமும் திடம் கொள்ளாது. ஏனென்றால், 83 விழுமியங்களுக்கும் பொருத்தமான, நேர்த்தியானக் கருத்துருவை ஆய்ந்தறிந்து, அவற்றை விளக்கியுரைப்பது அசாதாரணமானது. எனினும் இவரின் ஆழமான அறிவாற்றலும், தீராத்தேடல் வேட்கையும் இந்நூலை முழுமையாக வெற்றியடையச் செய்திருக்கின்றன.
ஒவ்வொரு விழுமியத்திற்கும் துல்லியமான, பொய்யாமொழியொன்றை நுழைவாயிலாக்கி, இறுவாயிலில், ஈடிணையற்ற, பல்துறை வித்தகர்களின் அப்பழுக்கற்ற வாழ்வியல் கூறுகளைப் படம்பிடித்து, மாணவர் மனதில் பசுமரத்தாணியாகப் பதியம் செய்துள்ளார்.
கூடவே, பல்சமயப் புனித நூல்களின் கருத்துகளும், காப்பிய, இலக்கிய, இதிகாச நூல்களின் வாழ்வியல் கோட்பாடுகளும் சான்றாதரங்களாக எடுத்தியம்பியிருக்கும் விதம் வியப்பிற்குரியது.
இன்றைய நவயுகத்தில், மலிந்துள்ள தகவல் தொழில் நுட்பத்திலும், மதிமயக்கும் போதையிலும் சிக்குண்டுப் பரிதவித்து, கற்பிக்கும் ஆசிரியர்களை, வகுப்பறையில் வம்புக்கிழுத்து, ஆபாசத்தால் அபிஷேகம் செய்யும் மாணவர்களின் உளவியலை உள்வாங்கி, அவற்றிலிருந்து, அவர்களை விடுவித்து, எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக்க நூலாசிரியர் எடுத்திருக்கும் முயற்சி அளப்பரியது.
நூலாசிரியரின் தாய்மொழியாம் செந்தமிழில் இயற்றியிருக்கும் இந்நூல், தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் பார்வையில்பட்டு, ஆங்கிலம் உட்பட இத்தேசத்தின் அனைத்து மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, நாளைய மாணவர் சமுதாயம் வளமான வாழ்வியல் விழுமியங்கள் நிறைந்ததாக மாற இந்நூல் வழிகோலூம் என்பது திண்ணம்.
சென்னை காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் 236 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ. 270 ஆகும். நூலை பெற்று கொள்வதற்கு நூலாசிரியரை 8903179137 என்னும் கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person and text that says 'காவ்யா மாணவர் மாண்புகள் கப்பியறை வ. இராயப்பன்'
All reacti