என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.
Saturday, 16 December 2023
என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.
மாணவர் மாண்புகள் நூல் உள்ளோட்டம்.
மாணவர் மாண்புகள்.
Wednesday, 27 September 2023
சரலூர் ஜெகன் - பிரதமரின் மனதின் குரலில் இடம் பிடிப்பாரா இந்த மாமனிதர்.
இவரது தன்னலமற்ற சேவைக்கான அங்கீகாரம் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதந்தோறும் நடத்தும் மங்கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் வரவேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/55Ks13AQVUowbb9BbN7f.jpg)
Saraloor Jagan
முனைவர் கமல. செவ்வராஜ்
இம்மண்ணில் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மறைந்தோம்… என்றில்லாமல், மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.
அந்த வகையில் தனது அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் 103 முறை ரத்ததானம் செய்து, இரண்டு தலைமுறையினரின் நினைவில் நீங்கா இடம்பிடித்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் குருதிக்கொடையாளி என்னும் பட்டப்பெயருடன் பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், நாம் அனைவரும் நம்பியாக வேண்டும். பேராபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போருக்கு, தன் உடலின் உதிரத்தை தானமாகக் கொடுத்துப் பிறர் உயிர்க்காத்து வரும் சரலூர் த. ஜெகன் என்னும் உத்தமர் தான் அவர்.
ரத்தம் என்று கேட்டாலே மயக்கம் போட்டு விழுந்து விடுபவர்கள் மத்தியில் எப்படி உங்களால் இவ்வளவு முறை ரத்ததானம் செய்ய முடிந்தது என்று கேட்ட போது, “எனது 21 ஆம் வயதில், ஒரு ஏழைப்பெண்மணிக்குப் பிரசவத்தின் போது கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. நான் உடனே அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று, அப்பெண்மணிக்கு உதிரம் கொடுத்து உதவினேன். இப்படித்தான் முதல் முதலில் எனது ரத்ததானம் தொடங்கியது.
அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல், மிகவும் ஆபத்தான நிலையில் ரத்தம் தேவைபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவி வருகிறேன்.
ஒருமுறை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓர் இளம் பெண்ணிற்குப் பிரசவத்தின் போது ஆபரேஷன் செய்ய வேண்டும், அதற்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என என்னை அழைத்தார்கள். நான் ஆஸ்பத்திரியில் சென்ற போது அந்த இளம் பெண்ணின் தாய் என்னிடம் ஓடி வந்து “ஐயா எனது பிரசவத்திற்கும் நீங்கள் தான் ரத்தம் தந்து உதவினீங்க, இப்ப எனது மகள் பிரசவத்திற்கும் ரத்தம் தருவதற்கு நீங்க தான் வந்திருக்கீங்க என அழுது கொண்டே கூறினார்கள்.
இப்படி ஒரே குடும்பத்தில் இரண்டு தலைமுறைக்கு ரத்ததானம் செய்ததை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என தனது ரத்த தானத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்து நம்மை மெய்சிலிர்க்க வைத்தார் அவர்.
ரத்ததானத்துடன் மட்டும் நின்று விடாமல், கடந்த பல ஆண்டுகளாக தினமும் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிவரை, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசு பள்ளி வாளாகங்கள், ரோட்டோர நிழலகங்கள், கழிவுநீர் ஒடைகள், குளங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல் போன்ற சமூகச்சேவையும் தன்னந்தனியே தளராது செய்து வருகிறார்.
பள்ளி வளாகம், சாலையோரம், பொது இடங்கள் ஆகியவற்றில் ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளைத் தனது சொந்த செலவில் நட்டுப் பராமரித்து வருகிறார். சாலையோரங்கள், நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், குடிகாரர்கள் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் வீசியெறியும் பாட்டில்களைப் பொறுக்கித் தூய்மை செய்தல் ஆகிய அரியப்பணிகளையும் இடைவிடாது செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
கொடிய கொரோனா பெரும் தொற்று அனைவரையும் வீட்டிற்குள் முடக்கிய நேரத்தில், ஒருநாள் கூட இவர் வீட்டில் முடங்காமல், ஊரிலுள்ள சில நல்லுள்ளங்களின் உதவியோடு, பொருள்களை வாங்கி, தமது வீட்டில் வைத்து சமைத்து, சாலையோரத்தில் யாசகம் செய்துகொண்டிருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித்திரிந்தவர்கள், பராமரிப்பதற்கு ஆளின்றி தனிமையில் வாடிய முதியவர்கள் ஆகியோருக்கு தினமும் இருவேளை உணவளித்து, இரத்ததானத்தோடு, அன்னதானமும் செய்த அற்புத மனிதர்.
இளமையில் வறுமை துரத்தியதால், பத்தாம் வகுப்புக்கு மேல் படித்துப் பட்டம் பெற இயலாத இவர், இன்று கவிஞர், நாவலாசிரியர், மேடைப்பேச்சாளர், சினிமா வசனகர்த்தா, நடிகர், சமூகச்சேவகர் என்னும் பன்முக ஆளுமையோடு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே இரத்ததான விழிப்புணர்வு, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவற்றுடன் கவிதை, புதினம், கட்டுரை என பத்திற்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளைப் படைத்து வெளியிட்டு, இலக்கியப் பங்களிப்பாற்றியுள்ளதற்காக, தமிழக அரசு, இவருக்குச் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அதோடு, இதுவரை பல்வேறு சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இவரது இடைவிடாத அளப்பரியச் சமூக, இலக்கியச் சேவையைப் பாராட்டி அறுபதிற்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ளன.
சரலூர் த.ஜெகனால் எவ்வித ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமுமின்றி நடத்தப்பட்டு வந்த சமூகச்சேவை, அவரது ஊரைத்தாண்டி, ஊடகங்கள் வாயிலாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் பார்வையிலும் பட்டுள்ளது. அவர் தமது சமூக வலைதளத்தில் “அறியப்படாத அதிசய மனிதர்கள்” என்னும் தலைப்பில் “இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சமூக சேவகர் மதிப்பிற்குரிய ஐயா திரு சரலூர் ஜெகன் அவர்கள்” என ஒரு பதிவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இது தனது சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார் ஜெகன் அவர்கள்.
இவரது தன்னலமற்ற சேவைக்கான அங்கீகாரம் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதந்தோறும் நடத்தும் மங்கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் வரவேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.
திக்குத் தெரியாமல் தான்தோன்றித்தனமாகத் திசைமாறிச் செல்லும் இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தக் குருதி கொடையாளிக்கு நாமும் தலைவணங்குவோம்.
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை
கன்னியாகுமரி மாவட்டம்.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 27-09-2023 அன்று ietamil இணைய இதழில் பிரசுரமானது)
Wednesday, 30 August 2023
உறவுகளை உணர்த்தும் திருவோணம்.
உறவுகளை உணர்த்தும் திருவோணம்.
Monday, 14 August 2023
பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்.
பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்: அவசியம் இல்லாத அவசரம் ஏன்?

கட்டுரையாளர்: முனைவர் கமல. செல்வராஜ்
தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் கல்வித் துறை ‘எடுப்பார் கைப்பிள்ளை’ யாகி, பல்வேறு கேலிக்கூத்துக்கு ஆளாவது வழக்கம். இதனை நிரூபிக்கும் வண்ணம் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக் கலைக் கழகங்களிலும் பொது பாடத்திட்டம் என்ற அறிவிப்பு.
மத்திய அரசு 2020 இல் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, அதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. அதனை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நடைமுறை படுத்தாததோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்திற்கென்று மாநிலக் கல்விக்கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே மிகப்பெரியப் பனிப்போராகியுள்ளது.
திடீரென இப்படியொரு அறிவிப்பை பல்கலைக் கழகங்களில் திணித்ததற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின்(யு.ஜி.சி) ஆலோசனையோ, அனுமதியோ பெறாமல் மாநில அரசு, தான்தோன்றித்தனமாக இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது, எதிர்காலத்தில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வழிவகுக்கும் என்கின்றனர் உயர்கல்வித் துறையை சார்ந்த கல்வியாளர்கள்.
யார் காரணம்?
1986 இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, உயர்கல்வி மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த அமைப்பு சரிவரச் செயல்படாமல் நீண்ட நெடுங்காலமாகச் செயலிழந்திருந்துள்ளது. கடந்த 2021 இல் மீண்டும் அம்மன்றம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த மன்றம் தான் ஓராண்டு காலத்திற்குள், பொது பாடத்திட்டத்திற்கான 301 பாடங்களை அவசரக் கோலத்தில் உருவாக்கி, இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.
இம்மன்றம், பாடதிட்டம் தயாரிப்பில் 922 பேராசிரியர்களை ஈடுபடுத்தி, 870 கூட்டங்களை நடத்தி, பாடதிட்டத்தை தயாரித்துள்ளதாக உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த போராசிரியர்கள் எந்தெந்த துறையைச் சார்ந்தவர்கள், கூட்டம் நடந்த விவரங்கள் பற்றியத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூட்டம் நடந்தது தங்களுக்குத் தெரியாது என்று பெரும்பாலானப் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். மட்டுமின்றி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களிடமும் எவ்வித ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை என அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக் கழகங்களால் மட்டுமே மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதத்தில், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி, கல்வியை வளப்படுத்த முடியும். இந்நிலையில் ஒரே பாடத்திட்டம் என்பது, தனியார் பல்கலைக் கழகங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்கின்றனர் தனியார் பல்கலைக் கழக நிர்வாகிகள்.
‘சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தன்னாட்சி அந்தஸ்துடன், தனித்தனிப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கின்றன. இதனால் புதிய பாடங்களைக் கற்ற பட்டதாரிகள் உருவாவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே பாடதிட்டம் என்ற நடவடிக்கை, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் செயல்’ என அண்ணா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கும் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எப்படி சாத்தியமாக்கலாம்?
தமிழக அரசின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் அனைத்து மருத்துவப் படிப்புக்களையும் உள்ளடக்கி டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், அனைத்து பொறியியல் படிப்புகளையும் ஒன்றிணைத்து, அண்ணா பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், பி.எட். படிப்புகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து ஒரே ஓர் பல்கலைக் கழகம் மட்டும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களிடமும் நீண்ட நெடிய விவாதமும் கருத்துக் கேட்பும் நடத்த வேண்டும்.
நவீன தொழில் நுட்பம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றை ஒன்றிரண்டு ஆண்டுகள் நன்கு அலசி ஆய்ந்து, தேவையான, தரமான பாடங்களைத் தேர்வுச் செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி அவசரக் கோலத்தில் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமற்றதாகவே இருக்கும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர். பல்வேறு கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றி வருபவர். அழைக்க: (9443559841); கருத்துக்களை அனுப்ப: (drkamalaru@gmail.com)
(இக்கட்டுரை 14-08-2023 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)