Saturday, 16 December 2023

என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

                                 என் உயிர் தமிழுக்கே... நூல் உள்ளோட்டம்.

புரட்சியில் மலரும் மறுமலர்ச்சி.
தன் இளம் வயது முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரபலமான தமிழ் இலக்கியவாதிகளுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டவர் கவிஞர் கருங்கல் கி கண்ணன் அவர்கள். அதன் வெளிப்பாடு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் அவருக்கு அதீதமான காதல் இயல்பாகவே உருவாகி விட்டது.
அக்காதல் இன்று இவரை ஒரு பெரும் கவிஞராக்கியுள்ளது. அத்தோடு, பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிக் கலப்பில்லாமல் தூயத்தமிழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கில் தமிழன்னை தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பு இன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனது கிளையைப் பரப்பி, பல ஆயிரக்கணக்கானத் தீவிர தமிழ்ப் பற்றாளர்களைச் சேர்த்துப் படர்ந்து பந்தலித்த ஓர் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இதோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்தில் தமிழன்னைக்குப் பிரமாண்டமான தமிழன்னை ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஊணின்றி… துயிலின்றி… ஓய்வின்றி… அதிதீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது எண்ணம் மிக விரைவில் ஈடேறும் என்பது திண்ணம்.
அவருக்குள்ளே நிரம்பி… தழும்பி… நிறைந்து… நிற்கும் கவித்துவம் ஒவ்வொரு நாளும் முகநூலில் கவிதையாக பிரசவமெடுக்கும். சில அற்புதமானக் கவிதைகள் பல முன்னணி பாடகர்களால் பாடப்பட்டு, அவை ஒலி நாடாவாக வெளிவந்துள்ளன. அந்தப் பாடல்கள் கேட்போரை பரவசமடையச் செய்யும்.
இந்நிலையில், இதுவரை அவர் எழுதியுள்ள கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து 'என் உயிர் தமிழுக்கே' என்னும் எளிமையும் இனிமையும் நிரம்பிய இக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
சமுதாயத்தில் மக்களிடையே அன்றாட வாழ்வியலில் நடைபெறும் நிகழ்வுகளையும் அவர்களின் உளவியலையும் மிக உன்னிப்பாக உற்று நோக்கி, அவற்றையே கவிதையின் கருப்பொருளாக்கியுள்ளார். அதனால் இவரது கவிதைகளில் ஆசை, ஆதங்கம், கோபம், தாகம், வேகம், வெறுப்பு ஏக்கம், வருத்தம், அன்பு, ஆன்மீகம், எழுச்சி, தத்துவம், தன்னம்பிக்கை என அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கலாம்.
என்றாலும் நூலின் ஆதி முதல் அந்தம் வரையிலும் தமிழ் மொழியின் மீது இவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அபார நம்பிக்கை இழையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்திடலாம். அதற்குச் சான்றாக
'எனது தமிழ்த் தொண்டு
என் பிறப்பின் நோக்கம் என்னும்' வரிகள் விளங்குகின்றன.
தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பேச்சுக்குப் பேச்சு மூச்சுக்கு மூச்சு தமிழ்… தமிழ்… என முழக்கமிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் தமிழ் மொழி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை கவிஞரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. இதனை
'உலகம் முழுதும் வாழ்கின்றோம்
வாழும் நாட்டில் வீழ்கின்றோம்' என்னும் வரிகளால் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
இது போன்று கண்ணனின் கவிதை நூல் முழுக்க தமிழ் கனல் பற்றி எரிவதைப் படிப்பவர்கள் அனைவராலும் உணர முடியும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அண்டி வருவோருக்கு அருள்பாலிக்கும் மண்டைக்காட்டுப் பகவதியம்மனின் அருள் தனக்குள்ளே புகுந்து தமிழன்னைக்குப் பணியாற்றிட பணித்திருப்பதாகவும், தமிழ் சித்தர்களின் ஞானமும் யோகமும் தனக்குள்ளேயிருத்து தமிழுக்கு, தமிழன்னை திருக்கோயில் எழுப்பிட உந்துவதாக உணர்ந்துள்ள கவிஞர் கருங்கல் கண்ணன் வருங்காலத்தில் தமிழகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களின் வரிசையில், தமிழன்னைக்கு ஆலயம் எழுப்பியவர் என்ற பெருமையில் முதன்மையானவராக திகழ்வார் என்பது திண்ணம். அவரது இந்தக் கன்னிக் கவிதை நூலை இருகரம் நீட்டி வரவேற்போம்.
தமிழன்னை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் விலை: ரூ. 130.
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9442077246
என்றும் சிநேகங்களுடன்…
அருமனை.
17-08-2022.
முனைவர் கமல. செல்வராஜ்.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person, monument, temple and text
All reactions

மாணவர் மாண்புகள் நூல் உள்ளோட்டம்.

                      மாணவர் மாண்புகள்.

நூல் உள்ளோட்டம்.
முனைவர் கமல. செல்வராஜ்
“ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு கல்வி வளர்ச்சியை அடியொற்றி அமைந்துள்ளது” என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை.
இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி அனைவரின் அடிப்படை உரிமை என்றே கருதப்படுகிறது. ஆண், பெண் பாலினப் பாகுபாடின்றி, அனைவருக்கும் பொதுவானதாக, கவ்விக் கற்பிக்கப்படுகிறது.
கல்வியென்பது வெறுமனேப் படித்துப் பட்டங்கள் பெற்று, உயர் பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதற்காக மட்டும் அமைந்து விடக்கூடாது. அது மனிதன், வளமான மாண்புகளோடு வாழ்வதற்கான வழிகாட்டு நெறிமுறையாக அமைய வேண்டும்.
அந்த வகையில் இந்திய அரசாங்கம், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக National Council of Educational Research and Training (NCERT) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பு பள்ளிக்கல்விக்கானப் பாடப்புத்தகங்கள் தயாரித்தல் உட்பட பள்ளிக்கல்விக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச் செய்யும் ஓர் அங்கமாக விளங்குகிறது.
இவ்வமைப்பின் ஆய்வின்படி, மாணவர்கள் 16 வயதிற்குள் கல்வியின் மூலம் 83 விழுமியங்களை அடைய வேண்டும் என வரையறுத்துள்ளது. அந்த விழுமியங்களை அடியொற்றி, இந்நூலாசிரியர், இந்நூலைப் படைத்தளித்துள்ளார். இது இக்கால மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக உள்ளது.
கற்றல், கற்பித்தலில் நீண்ட, நெடிய அறிவாற்றலின் தெளிந்த நீரோடை. எழுத்துலகில் சமுதாயத்திற்குப் பயனுள்ளப் பத்துப் புத்தகங்களைப் படைத்துள்ளவர். இலக்கியத்தில் ஈடிணையற்ற ஈடுபாடு, இளைஞர்களின் முன்னேற்றத்தில் முழுமையாக தன்னை அற்பணித்தவர் என இந்நூலாசிரியர் கப்பியறை முனைவர் வ. இராயப்பன் அவர்களின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பயன்படும்.
சாதாரணமாக இப்படியொரு முயற்சியெடுப்பதற்கு, எவரின் மனமும் திடம் கொள்ளாது. ஏனென்றால், 83 விழுமியங்களுக்கும் பொருத்தமான, நேர்த்தியானக் கருத்துருவை ஆய்ந்தறிந்து, அவற்றை விளக்கியுரைப்பது அசாதாரணமானது. எனினும் இவரின் ஆழமான அறிவாற்றலும், தீராத்தேடல் வேட்கையும் இந்நூலை முழுமையாக வெற்றியடையச் செய்திருக்கின்றன.
ஒவ்வொரு விழுமியத்திற்கும் துல்லியமான, பொய்யாமொழியொன்றை நுழைவாயிலாக்கி, இறுவாயிலில், ஈடிணையற்ற, பல்துறை வித்தகர்களின் அப்பழுக்கற்ற வாழ்வியல் கூறுகளைப் படம்பிடித்து, மாணவர் மனதில் பசுமரத்தாணியாகப் பதியம் செய்துள்ளார்.
கூடவே, பல்சமயப் புனித நூல்களின் கருத்துகளும், காப்பிய, இலக்கிய, இதிகாச நூல்களின் வாழ்வியல் கோட்பாடுகளும் சான்றாதரங்களாக எடுத்தியம்பியிருக்கும் விதம் வியப்பிற்குரியது.
இன்றைய நவயுகத்தில், மலிந்துள்ள தகவல் தொழில் நுட்பத்திலும், மதிமயக்கும் போதையிலும் சிக்குண்டுப் பரிதவித்து, கற்பிக்கும் ஆசிரியர்களை, வகுப்பறையில் வம்புக்கிழுத்து, ஆபாசத்தால் அபிஷேகம் செய்யும் மாணவர்களின் உளவியலை உள்வாங்கி, அவற்றிலிருந்து, அவர்களை விடுவித்து, எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக்க நூலாசிரியர் எடுத்திருக்கும் முயற்சி அளப்பரியது.
நூலாசிரியரின் தாய்மொழியாம் செந்தமிழில் இயற்றியிருக்கும் இந்நூல், தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் பார்வையில்பட்டு, ஆங்கிலம் உட்பட இத்தேசத்தின் அனைத்து மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, நாளைய மாணவர் சமுதாயம் வளமான வாழ்வியல் விழுமியங்கள் நிறைந்ததாக மாற இந்நூல் வழிகோலூம் என்பது திண்ணம்.
சென்னை காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் 236 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ. 270 ஆகும். நூலை பெற்று கொள்வதற்கு நூலாசிரியரை 8903179137 என்னும் கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
May be an image of 1 person and text that says 'காவ்யா மாணவர் மாண்புகள் கப்பியறை வ. இராயப்பன்'
All reacti

Wednesday, 27 September 2023

 சரலூர் ஜெகன் - பிரதமரின் மனதின் குரலில் இடம் பிடிப்பாரா இந்த மாமனிதர்.

இவரது தன்னலமற்ற சேவைக்கான அங்கீகாரம் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதந்தோறும் நடத்தும் மங்கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் வரவேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.

author-imagesaraloor jagan

Saraloor Jagan

முனைவர் கமல. செவ்வராஜ்    

இம்மண்ணில் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மறைந்தோம்… என்றில்லாமல்மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.

அந்த வகையில் தனது அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் 103 முறை ரத்ததானம் செய்துஇரண்டு தலைமுறையினரின் நினைவில் நீங்கா இடம்பிடித்துகன்னியாகுமரி மாவட்டத்தின் குருதிக்கொடையாளி என்னும் பட்டப்பெயருடன் பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம்நாம் அனைவரும் நம்பியாக வேண்டும். பேராபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போருக்குதன் உடலின் உதிரத்தை தானமாகக் கொடுத்துப் பிறர் உயிர்க்காத்து வரும்  சரலூர் த. ஜெகன் என்னும் உத்தமர் தான் அவர்.

saraloor jagan

ரத்தம் என்று கேட்டாலே மயக்கம் போட்டு விழுந்து விடுபவர்கள் மத்தியில் எப்படி உங்களால் இவ்வளவு முறை ரத்ததானம் செய்ய முடிந்தது என்று கேட்ட போது, “எனது 21 ஆம் வயதில்ஒரு ஏழைப்பெண்மணிக்குப் பிரசவத்தின் போது கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுமிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும்அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. நான் உடனே அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றுஅப்பெண்மணிக்கு உதிரம் கொடுத்து உதவினேன். இப்படித்தான் முதல் முதலில் எனது ரத்ததானம் தொடங்கியது.

அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல்மிகவும் ஆபத்தான நிலையில் ரத்தம் தேவைபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவி வருகிறேன்.

saraloor jagan

saraloor jagan

ஒருமுறை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓர் இளம் பெண்ணிற்குப் பிரசவத்தின் போது ஆபரேஷன் செய்ய வேண்டும்அதற்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என என்னை அழைத்தார்கள். நான் ஆஸ்பத்திரியில் சென்ற போது அந்த இளம் பெண்ணின் தாய் என்னிடம் ஓடி வந்து ஐயா எனது பிரசவத்திற்கும் நீங்கள் தான் ரத்தம் தந்து உதவினீங்கஇப்ப எனது மகள் பிரசவத்திற்கும் ரத்தம் தருவதற்கு நீங்க தான் வந்திருக்கீங்க என அழுது கொண்டே கூறினார்கள்.

இப்படி ஒரே குடும்பத்தில் இரண்டு  தலைமுறைக்கு ரத்ததானம் செய்ததை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என தனது ரத்த தானத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்து நம்மை மெய்சிலிர்க்க வைத்தார் அவர்.

ரத்ததானத்துடன் மட்டும் நின்று விடாமல்கடந்த பல ஆண்டுகளாக தினமும் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிவரைநாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசு பள்ளி வாளாகங்கள்,  ரோட்டோர நிழலகங்கள்கழிவுநீர் ஒடைகள்குளங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல் போன்ற சமூகச்சேவையும் தன்னந்தனியே தளராது செய்து வருகிறார்.

பள்ளி வளாகம்சாலையோரம்பொது இடங்கள் ஆகியவற்றில்  ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளைத் தனது சொந்த செலவில் நட்டுப் பராமரித்து வருகிறார். சாலையோரங்கள்நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்குடிகாரர்கள் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் வீசியெறியும் பாட்டில்களைப் பொறுக்கித் தூய்மை செய்தல் ஆகிய அரியப்பணிகளையும் இடைவிடாது செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

saraloor jagan

saraloor jagan

கொடிய கொரோனா பெரும் தொற்று அனைவரையும் வீட்டிற்குள் முடக்கிய நேரத்தில்ஒருநாள் கூட இவர் வீட்டில் முடங்காமல்ஊரிலுள்ள சில நல்லுள்ளங்களின் உதவியோடுபொருள்களை வாங்கிதமது வீட்டில் வைத்து சமைத்துசாலையோரத்தில் யாசகம் செய்துகொண்டிருந்தவர்கள்மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித்திரிந்தவர்கள்பராமரிப்பதற்கு ஆளின்றி தனிமையில் வாடிய முதியவர்கள் ஆகியோருக்கு தினமும் இருவேளை உணவளித்துஇரத்ததானத்தோடுஅன்னதானமும் செய்த அற்புத மனிதர்.

இளமையில் வறுமை துரத்தியதால்பத்தாம் வகுப்புக்கு மேல் படித்துப் பட்டம் பெற இயலாத இவர்இன்று கவிஞர்நாவலாசிரியர்மேடைப்பேச்சாளர்சினிமா வசனகர்த்தாநடிகர்சமூகச்சேவகர் என்னும் பன்முக ஆளுமையோடு தமிழகம் முழுவதும் பள்ளிகல்லூரிகளில் மாணவர்களிடையே இரத்ததான விழிப்புணர்வுபோதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவற்றுடன் கவிதைபுதினம்கட்டுரை என பத்திற்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளைப் படைத்து வெளியிட்டுஇலக்கியப் பங்களிப்பாற்றியுள்ளதற்காகதமிழக அரசுஇவருக்குச் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அதோடுஇதுவரை பல்வேறு சமூக அமைப்புகள்தொண்டு நிறுவனங்கள்இவரது இடைவிடாத அளப்பரியச் சமூகஇலக்கியச் சேவையைப் பாராட்டி அறுபதிற்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கிஊக்கப்படுத்தியுள்ளன.

saraloor jagan

சரலூர் த.ஜெகனால் எவ்வித ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமுமின்றி நடத்தப்பட்டு வந்த சமூகச்சேவைஅவரது ஊரைத்தாண்டிஊடகங்கள் வாயிலாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் பார்வையிலும் பட்டுள்ளது. அவர் தமது சமூக வலைதளத்தில் அறியப்படாத அதிசய மனிதர்கள்” என்னும் தலைப்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சமூக சேவகர்  மதிப்பிற்குரிய ஐயா திரு சரலூர் ஜெகன் அவர்கள்” என ஒரு பதிவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இது தனது சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார் ஜெகன் அவர்கள்.

இவரது தன்னலமற்ற சேவைக்கான அங்கீகாரம் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதந்தோறும் நடத்தும் மங்கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் வரவேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.   

திக்குத் தெரியாமல் தான்தோன்றித்தனமாகத் திசைமாறிச் செல்லும் இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தக் குருதி கொடையாளிக்கு நாமும் தலைவணங்குவோம்.

                                                                                                                                                 முனைவர் கமல. செல்வராஜ் 

அருமனை

கன்னியாகுமரி மாவட்டம்.

அழைக்க: 9443559841

அணுக: drkamalaru@gmail.com

(இக்கட்டுரை 27-09-2023 அன்று ietamil இணைய இதழில் பிரசுரமானது)


Wednesday, 30 August 2023

உறவுகளை உணர்த்தும் திருவோணம்.

                               உறவுகளை உணர்த்தும் திருவோணம்.

ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர்.
தெருவெல்லாம் பூக்கோலம், வீடெல்லாம் மகிழ்ச்சியின் ஆரவாரம் இதுவே கேரள மாநிலத்தின் இன்றைய அடையாளம். அதுவே திருவோணப் பண்டிகையின் அற்புதம்.
மாவேலி மன்னன் நாடாண்ட காலத்தில் செங்கோலாட்சி தழைத்தோங்கி, மாதம் மும்மாரிப் பொழிந்து, வயல்வெளி செழித்து, வருமானம் பெருகி, மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர். இதனால் அந்நாட்டில் கொள்வாரும் இலர் கொடுப்பாரும் இலர் என்னும் நிலை நிலவியது.
மட்டுமின்றி மக்களிடையே எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமின்றி அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழ்ந்தனர் என்பதை “மாவேலி மன்னன் நாடு வாணிடும்கால் மனுஷரெல்லாம் ஒண்ணுபோலே” என்னும் மலையாளப் பாடல் வரிகளால் உணர முடிகிறது. இதனால் மக்கள் மன்னனைப் போற்றி புகழ்ந்தனர்.
இது மாவேலியின் மனதிற்குள் ஒருவித மமதையை ஏற்படுத்தி, இனி தேவலோகத்தையும் ஆள வேண்டும் எனும் பேராசையை உருவாக்கி, அவரின் அழிவுக்கு வித்திட்டது.
மாவேலியால் தங்களுக்கு ஆபத்து விளையும் எனக் கருதிய தேவர்கள், அபயம் வேண்டி மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவரும் அண்டி வந்தோருக்கு அடைக்கலம் கொடுப்பது தன் கருமம் எனக் கருதி, வாமன அவதாரம் பூண்டு மண்ணுலகு வந்து மாவேலியிடம், தனக்கு யாகசாலை அமைக்க மூன்றடி மண் மட்டும் வேண்டி நின்றார்.
மூன்றடி மண்ணுக்குள் மர்மம் இருக்கிறது என்ற சூச்சுமத்தை அறியாத மவேலி, எல்லாம் உணர்ந்த தன் குரு சுக்கிராச்சாரியரின் அறிவுரையையும் மீறி, மூன்றடி மண்ணை தாரைவார்த்தார் வாமனனுக்கு. மறுநிமிடம் எல்லாம் மாறிவிட்டது. இரண்டடியில் வானமும் பூமியும் அளந்த வாமனன் மூன்றாவது அடிக்கு கண்சிமிட்டி நிற்க, தலைதாழ்த்தி நின்றார் மாவேலி.
பாதாளம் செல்வது உறுதியென உணர்ந்தவர், வரமொன்று வேண்டினார் மகாவிஷ்ணுவிடம். ‘ஆண்டுக்கொரு முறை நாட்டுக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும், அனுமதி அளித்தருளும்’ என யாசித்து நின்றார் ஆணவம் அடக்கி. ‘அப்படியே ஆகட்டும்’ என்றார் அவரும். அதன் பிறகு ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர் என்பது தான் திருவோணப்பண்டிகையின் ஐதீகம்.
திருவோணப்பண்டிகையின் ஐதீகம் இப்படி ஒருபுறம் இருக்க, இன்றையக் காலகட்டத்தில், கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, உறவுகள் அனைத்தும் உடைந்து சின்னாபின்னமாகியிகும் நிலையில், இந்த திருவோணப் பண்டிகை உறவுகளை இணைக்கும் ஓர் அற்புதமான பண்டிகையாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
பொதுவாக கேரள மாநிலத்திலுள்ள மக்கள், பெருவாரியாக வெளிநாடுகளில் சென்று தங்கள் வாழ்வாதரத்தை பெருக்கிக் கொண்டிருப்பது கண்கூடு. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருவோணப்பண்டிகையை கொண்டாடும் பொழுது அனைத்து மக்களும் எவ்வித சிரமமும் பார்க்காமல் தங்கள் சொந்த இடத்திற்கு வந்து, குடும்பத்துடன் கூடியிருப்பதை, வாழ்க்கையின் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
அவர்களின் கொண்டாட்டம், அவரவர் வீட்டோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பத்து நாள்களும் பண்ட பலகாரங்களுடன் உறவுகளையும் நாடிச் சென்று, அவர்களையும் உற்சாகப்படுத்தி, சொந்த பந்தங்களைப் பலப்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக்கியுள்ளனர்.
எனவே திருவோணப்பண்டிகையானது, வெறும் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… என்னும் நிலையோடு மட்டும் நின்று விடாமல், சிதைந்து வரும் உறவு முறைகளை மீட்டுருவாக்கம் செய்து, கட்டிக்காக்கும் அற்புதமான உறவுகளின் உற்சாகத் திருவிழாகவும் திகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
ஆண்டுதோறும் மாவேலியை வரவேற்போம்! மனெல்லாம் மகிழ்ந்திருப்போம்!!
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
(இக்கட்டுரை 29-08-2023 ietamil இணைய வழி இதழில் பிரசுரமானது)

இலக்கிய உரை

YOUTUBE

இலக்கியத்தில் கல்வி

YOUTUBE

Monday, 14 August 2023

பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்.

 

பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்: அவசியம் இல்லாத அவசரம் ஏன்?



கட்டுரையாளர்: முனைவர் கமல. செல்வராஜ்

     தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் கல்வித் துறை ‘எடுப்பார் கைப்பிள்ளை’ யாகி, பல்வேறு கேலிக்கூத்துக்கு ஆளாவது வழக்கம். இதனை நிரூபிக்கும் வண்ணம் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக் கலைக் கழகங்களிலும் பொது பாடத்திட்டம் என்ற அறிவிப்பு.

     மத்திய அரசு 2020 இல் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, அதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. அதனை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நடைமுறை படுத்தாததோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்திற்கென்று மாநிலக் கல்விக்கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே மிகப்பெரியப் பனிப்போராகியுள்ளது.

     இந்நிலையில் தமிழக அரசு, மிகவும் அவசரக் கோலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக்கழகங்களிலும் இந்தக் கல்வியாண்டு முதல் பொது பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.இதற்கான பாடத்திட்டங்கள் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளதா? அதனை யார் தயாரித்தார்கள்? எப்பொழுது தயாரித்தார்கள்? அதற்கான கருத்துக் கேட்பு நடந்ததா? கல்வியாளர்களிடமோ, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களிடமோ கலந்தாலோசிக்கப் பட்டதா? என்பவையெல்லாம் பரம ரகசியமாகவேயுள்ளன.

திடீரென இப்படியொரு அறிவிப்பை பல்கலைக் கழகங்களில் திணித்ததற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின்(யு.ஜி.சி) ஆலோசனையோ, அனுமதியோ பெறாமல் மாநில அரசு, தான்தோன்றித்தனமாக இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது, எதிர்காலத்தில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வழிவகுக்கும் என்கின்றனர் உயர்கல்வித் துறையை சார்ந்த கல்வியாளர்கள்.

யார் காரணம்?

1986 இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, உயர்கல்வி மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த அமைப்பு சரிவரச் செயல்படாமல் நீண்ட நெடுங்காலமாகச் செயலிழந்திருந்துள்ளது. கடந்த 2021 இல் மீண்டும் அம்மன்றம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த மன்றம் தான் ஓராண்டு காலத்திற்குள், பொது பாடத்திட்டத்திற்கான 301 பாடங்களை அவசரக் கோலத்தில் உருவாக்கி, இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.

இம்மன்றம், பாடதிட்டம் தயாரிப்பில் 922 பேராசிரியர்களை ஈடுபடுத்தி, 870 கூட்டங்களை நடத்தி, பாடதிட்டத்தை தயாரித்துள்ளதாக உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த போராசிரியர்கள் எந்தெந்த துறையைச் சார்ந்தவர்கள், கூட்டம் நடந்த விவரங்கள் பற்றியத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூட்டம் நடந்தது தங்களுக்குத் தெரியாது என்று பெரும்பாலானப் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். மட்டுமின்றி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களிடமும் எவ்வித ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை என அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தற்போதுள்ள தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக் கழகங்களால் மட்டுமே மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதத்தில், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி, கல்வியை வளப்படுத்த முடியும். இந்நிலையில் ஒரே பாடத்திட்டம் என்பது, தனியார் பல்கலைக் கழகங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்கின்றனர் தனியார் பல்கலைக் கழக நிர்வாகிகள்.

‘சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தன்னாட்சி அந்தஸ்துடன், தனித்தனிப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கின்றன. இதனால் புதிய பாடங்களைக் கற்ற பட்டதாரிகள் உருவாவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே பாடதிட்டம் என்ற நடவடிக்கை, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் செயல்’ என அண்ணா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கும் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எப்படி சாத்தியமாக்கலாம்?

தமிழக அரசின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் அனைத்து மருத்துவப் படிப்புக்களையும் உள்ளடக்கி டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், அனைத்து பொறியியல் படிப்புகளையும் ஒன்றிணைத்து, அண்ணா பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், பி.எட். படிப்புகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து ஒரே ஓர் பல்கலைக் கழகம் மட்டும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களிடமும் நீண்ட நெடிய விவாதமும் கருத்துக் கேட்பும் நடத்த வேண்டும்.

நவீன தொழில் நுட்பம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றை ஒன்றிரண்டு ஆண்டுகள் நன்கு அலசி ஆய்ந்து, தேவையான, தரமான பாடங்களைத் தேர்வுச் செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி அவசரக் கோலத்தில் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமற்றதாகவே இருக்கும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர். பல்வேறு கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றி வருபவர். அழைக்க: (9443559841); கருத்துக்களை அனுப்ப: (drkamalaru@gmail.com)

(இக்கட்டுரை 14-08-2023 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)