Monday, 29 June 2020

தேவை பயமுறுத்தல் அல்ல, விழிப்புணர்வு.

தேவை பயமுறுத்தல் அல்ல, விழிப்புணர்வு


முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிக்கு, அவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட, நோயாளிக்குக் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகளே, அவருக்கு தன்னம்பிக்கையை அளித்து பாதி நோயைக் குணப்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. அதைப் போன்று இந்த நேரத்தில் கொரோனா பற்றிய அச்ச உணர்வை அதிகமாக மக்கள் மனதில் விதைக்காமல், அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வைக் கொடுத்து, அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது இருட்டுக்கடை அல்வா. நூறு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது தலைமுறையாக அந்தக் கடையை நடத்தி வந்தவர் ஹரிசிங் அவர்கள். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்டப் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், தன்னால், இனி தனது கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், தனது வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், தன்னிடம் அல்வா வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதே ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பையும், மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தால் மரணம் நிச்சயம் என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். அதைப்போன்று வீட்டிலுள்ள ஒருவருக்கு அல்லது ஓர் இடத்திலுள்ள ஒருவருக்கு இந்தத் தொற்று வந்தால் அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவும் என்ற ஒரு தவறானத் தகவலைப் பரப்பி மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றனர்.
ஆனால், உண்மை அதுவன்று. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றுப் பாதித்தவர்களில் பத்து சதவீதம் பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டுமே இறப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று நம்பிக்கையோடு கூறுகின்றார்கள். இந்த உண்மை நிலை இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லப்படவில்லை.
இதனை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வாக முழுமையாக எடுத்துச் சென்றால், இதுவரை மக்கள் மத்தியில் கொரோனா மரணம் பற்றி தொற்றிக் கொண்டிருக்கும் அச்சம் நீங்கி, இது போன்ற தற்கொலைகள் நடக்காமல் தடுப்பதற்கு முடியும்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றையும் மீறி முதியவர்கள் கூட இந்த நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக, கேரள மாநிலத்தில் 93 வயதான முதியவரும், 88 வயதான அவரது மனைவியும், இத்தாலியில் வசிக்கும் தங்களின் பிள்ளைகளைச் சந்தித்து விட்டு கொரோனா தொற்றுடன் வந்துள்ளனர். ஆனால், கொரோனா சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்து, இப்போது நலமுடன் உள்ளனர். இதற்கும் சவால் விடும் வகையில் கர்நாடக மாநிலத்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதியாகி, பெங்களூரு, அரசு ஆஸ்பத்திரியில் ஒன்பது நாள்கள் சிகிச்சைப் பெற்று நல்ல முறையில் குணமடைந்து, அனைவரையும் ஆச்சரியமூட்டும் விதத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
அந்த மூதாட்டி தான் குணமடைந்ததைப் பற்றிக் கூறும் போது, “நான் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்குக் காரணம், நான் மன தைரியத்துடன் இருந்து, டாக்டர்கள் அளித்த மருந்துகளை அவர்களின் அறிவுரைப்படி எடுத்துக் கொண்டேன்” என மிகவும் ஐஸ்வர்யமானப் புன்னகைத் ததும்பும் முகத்துடன் கூறியுள்ளார். இதைப் போன்ற தன்னம்பிக்கையூட்டும் விழிப்புணர்வுதான் இபோதைக்கு மக்களுக்கு மிகவும் அவசியமாக வேண்டியுள்ளது.
மேலும், இதற்கு முன் இத்தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போது, அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவி, அந்த சுற்றுவட்டாரத்தையே அழித்து விடும் என்ற பீதி மக்கள் மத்தியில் இருந்தது. அதால்தான், சென்னையில் டாக்டர் சைமன் இறந்த பிறகு இரண்டுக் கல்லறைத் தோட்டத்திலும் அவரை அடக்கம் செய்ய விடாமல் மக்கள் பெரும் பிரச்னைகளைக் கிளப்பினார்கள். மட்டுமின்றி சொந்தப் பிள்ளைகள் கூட தங்களின் தந்தையின் உடலை வாங்கி புதைப்பதற்குப் பயப்பட்டார்கள். ஆனால், இப்பொழுது தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை, அவர்களின் உறவினர்களே பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய முன்வருகிறார்கள்.
ஆரம்பத்தில் ஒருவர் இந்தத் தொற்றினால் இறந்து போனால் அவர்களின் உறவினர்களுக்குக் கூட, அதாவது திருமணமான ஒருவர் இறந்து போனால், அவரது மனைவி, மக்களுக்குக் கூட அவரைக்காட்டாமல் சுகாதாரப் பணியாளர்கள் எடுத்துச் சென்று புதைத்து வந்தார்கள். ஆனால், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொற்றினால் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடலை அடக்கம் செய்வதற்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, அவரின் உற்றார் உறவினர்கள் சிலரைப் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர். அந்த நெஞ்சை உருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவையெல்லாம் உரியப் பாதுகாப்புடன் செய்யப்படுவதால் மக்களுக்குள்ளேயிருந்த கொரோனா பற்றிய அச்ச உணர்வுகளைப் போக்கி, அவர்களிடத்தில் ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இவற்றையெல்லாம் விட மக்களிடையே தற்போது தொற்றிக் கொண்டிருக்கும் ஓர் அச்ச உணர்வு என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ சென்றால் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்பதுதான். இதுவும் மக்களைப் பயங்கரமாகப் பீதியடையச் செய்துள்ளது. எனவே மக்களின் இந்த அச்சத்தை நீக்குவதற்கு, இத்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள், அரசு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை, சிகிச்சைப் பெற்றால் அதன் மொத்தச் செலவையும் அந்தந்தப் பாதிப்பாளர்களின் வருமானத்தின் அடிப்படையில் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதிலும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்களைத் தங்க வைக்கும் இடங்களிலுள்ள மக்கள் அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி பொது இடங்களில் தனிமைப்படுத்தும் போது அந்த இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லாமல் இருக்கின்றன. அங்கு அவர்கள் இரண்டு வாரங்களைக் கடத்துவதென்பது கொரோனாவை விடக்கொடுமையாக உள்ளது. இது தனிமைப்படுத்தப் படுவோருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், தனிமைப்படுத்துபவர்களை, அவரவர்களின் வீட்டிலுள்ள வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, அந்தந்த பகுதியிலுள்ள சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பில், அவரவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலாம். இதனால், வீணாகப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கவும் முடியும் கூடவே தனிமைப்படுத்தப்படுவோரின் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.
இவற்றுடன் ஓர் இடத்தில் ஒருவருக்குத் தொற்று வந்தால், அவரை அங்கிருந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு, அந்தச் சுற்றுவட்டாரத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் வரை சீல் வைத்து, அந்தப் பகுதிக்குள் எவரையும் நுழைய விடாமலும், உள்ளே இருப்பவர்களை வெளியே விடாலும் பெரும் கெடுபிடிக் காட்டுவதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை எற்படுத்துவதோடு பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கெடுபிடிகளே சில நேரங்களில் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.
எனவே கொரோனா பற்றிய இந்த அச்ச உணர்வுகளில் இருந்தெல்லாம் மாறி, மக்கள் ஒரு இயல்பான மனநிலைக்கு வருவதற்கும் அவர்களை அவர்களாகவே சுயமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இன்னும் அதிகமான விழிப்புணர்வுகளைக் கொடுப்பதற்கு, அரசும், சுகாதாரத்துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தவிர்த்து, அச்ச உணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.c
(இக்கட்டுரை 29-06-2020 அன்று ஐ.இ. தமிழ் இணைய இதழில் பிரசுரமானது)

Friday, 26 June 2020

இனிப்பைக் கசப்பாக்கியக் கொரோனா||CORONO SUICIDE || Dr KAMALA SELVARAJ SPEECH

அறப்பணியில் இருந்து தெருப்பணிக்கு வந்த ஆசிரியர்கள்

அறப்பணியில் இருந்து தெருப்பணிக்கு வந்த ஆசிரியர்கள்


June 24, 2020 


முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஆனா… ஆவன்னா… தொண்டை வலிக்கக் கத்தினோம். கல்லையும் கடவுளாக்கினோம்… மண்ணையும் பொன்னாக்கினோம்… மனிதத்தை மட்டுமே மார்க்கமாக விதைத்தோம்… வகுப்பறை ஒன்றையே சரணாகதியென்று நினைத்தோம்… ஆயிரமோ, பதினாயிரமோ கிடைத்ததைக் கொண்டு திருப்தியானோம்… ஆனால் இன்று…
இது ஏதோ தெருப்போக்கனின் புலம்பலென்று நினைக்காதீர்கள். அறப்பணியாம் ஆசிரியர்ப் பணியை சிரமேற்கொண்ட ஆசிரியர்களின் ஆதங்கம்… அனாதையாக்கப்பட்டவர்களின் ஏக்கம்… கேட்பாரற்றுக் கிடப்போரின் வேகம்…
ஆம், தனியார் பள்ளிகளில் மாதம் மூவாயிரத்திலிருந்து அதிக பட்சமாக எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு வறுமையை வெளியே காட்டாமல் நாணயத்துடன் வாழ்க்கைய நகர்த்திக் கொண்டிருந்த லட்சோப லட்சம் ஆசிரியர்களின் ஆவேசக் குரல் தான் இது.

மார்ச் மாதம் பள்ளியின் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் போது, யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்காமல், நம் நாட்டில் குடியேறியது கொடியக் கொரோனா. நாளை பொழுது விடிவதற்குள் வந்து நின்றது லாக்டவுன். முதலில் ஒரு நாள்… அடுத்தது ஒரு வாரம்… தொடந்து இரண்டு வாரம்… இப்படி லாக்டவுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்தது. ஆனாலும் இரண்டு மாதங்கள் கடந்து எல்லா வேலைகளும் கொஞ்சம் சொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டன. அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதங்கள் மூன்று கடந்த பிறகும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. தனியார் பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சம்பளமும் இல்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் செய்யும் வேலையோ மிக அதிகம். கிடைக்கும் சம்பளமோ மிகக் குறைவு. ஆரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும் போது தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களி்ன் சம்பளம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசத்திற்கு நிகராகும்.
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு காசு கூட சேதாரமின்றி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மாதங்கள் மூன்று தாண்டியப் பிறகும் ஒரு காசு கூட சம்பளம் இல்லாமல் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, என்ன செய்வது? எப்படிக் குடும்பத்தை நடத்துவது? என அறியாமல் திகைத்து, திக்குமுக்காடியுள்ளனர். இதே நிலைதான் அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களுக்கும்.
பள்ளி நிர்வாகத்திடம், சம்பளம் கேட்டால் ‘மாணவர்கள் பீஸ் கட்டாமல் நாங்கள் எப்படிச் சம்பளம் தரமுடியும் எனக் கேட்கின்றார்கள்.’ அவர்களின் அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனேன்றால் அரசு, ‘மாணவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகள் திறக்கும் வரை கல்விக் கட்டணம் எதுவும் கேட்கவோ, வாங்கவோ கூடாது’ எனக் கராறாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தனியார்ப் பள்ளிகள், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும், பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்கவும் தயக்கம் காட்டுகின்றனர். அப்படிக் கேட்டாலும் பெற்றோர்கள் அரசின் அறிவிப்பைக் சுட்டிக்காட்டி, பள்ளி நிர்வாகத்தைப் பயமுறுத்துகின்றனர்.
ஆனால் அரசு, தனியார்ப் பள்ளியாசிரியர்களைக் குறித்துக் கடுகளவிற்கும் கவலைப்படவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இப்படி அரசு நடந்து கொள்வது “ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும்” என ஊருக்குள் கூறும் பழமொழியை ஒத்துள்ளது என்கின்றார்கள் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.
நிலைமை இப்படியிருக்கத் தற்பொழுது தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாட்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலைச் செய்யும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில ஆசிரியைகள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஸ்டோர்களிலும் சேல்ஸ் கேர்ல்ஸ்சாகப் பணியாற்றுகின்றார்கள். சிலர் இட்லி கடைகள் நடத்துகின்றார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பிரபலமானப் பள்ளியில் நல்ல செல்வாக்குடன் முதல்வர் பணியாற்றி வந்த ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி, தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் வைத்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். வேறு சிலரோ தங்களின் ஊர்களிலேயே கூலி வேலை கூடச் செய்கின்றனர்.
“எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் சார். ஆனால், பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த நான், இப்ப ரோடு வேலை செய்வதை, நான் படிச்சுக் கொடுத்தப் பசங்களும், அவங்க பெற்றோரும் பார்க்கும் போது, அவர்களைப் பார்த்து நான் தலைகுனிஞ்சு நிற்க வேண்டியிருக்கு அல்லது முகத்தைத் திருப்பி வைச்சிட்டு நிக்க வேண்டி வருது. அத நினச்சுப் பாக்கும்போதுதான் நெஞ்சு வெடிச்சிரும் போலிருக்கு” என 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண்ணள்ளும் வேலை செய்யும் ஓர் ஆசிரியர் கூறிய போது, அவர்களின் முன் நம்ம நெஞ்சு வெடிச்சிரும் போல் இருந்தது.
இப்படித் தனியார்ப் பள்ளிகளில் வேலை செய்து விட்டு, தற்போது வேறுவேறு வேலைகள் செய்து வரும் ஒவ்வொரு ஆசிரியரின் மன நிலையும் உள்ளது என்பது நெஞ்சை உலுக்கும் உண்மை. உலக வரலாற்றில், மாணவர்களுக்கு ஆறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
எனவே மத்திய, மாநில அரசுகள், அனைத்து மாநிலங்களிலும் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளி, கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு, பள்ளிகள் மீண்டும் திறந்து செயல்படும் வரை விவாரண நிதி வழங்க வேண்டும். மேலும், அடுத்து, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது, தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றும், முழுமையானக் கல்வித் தகுதியுடைய, அதிக அனுபவம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி முன்னுரிமை வழங்க வேண்டும்.
கூடவே தமிழக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்பதை மாற்றி பழையது போல் 58 என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். என்றால் மட்டுமே இது போல் காலாகாலமாக தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருசிலருக்காவது, அவர்களின் ஓய்வு வயதிற்கு முன்பு சில ஆண்டுகாலமாவது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இதுவே இந்த ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.
( இக்கட்டுரை ietamil E Journal இல் 24-6-2020 அன்று பிரசுரமானது.)
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை. அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com

Sunday, 21 June 2020

இதயங்களை இணைக்காத இணைய வழிக்கல்வி


இதயங்களை இணைக்காத இணைய வழிக்கல்வி



முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
எனது நினைவு சரியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பித்த ஒரு சில நாள்களுக்குள், அக்கல்லூரியிலிருந்து என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். நானும் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன்.
அங்கு என்னிடம் முதலில் எதிர்காலக் கல்வி என்னும் தலைப்பில் அரை மணி நேரத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றார்கள். நான் அதற்குச் சம்மதம் தெரிவித்து, எழுதுதத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்தேன். என் மனதில் என்ன தோன்றியதோ என்னவோ, அந்தக் கட்டுரையை இப்படித் தொடர்ந்தேன்… “இனி பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் தாண்டும் போது கல்வியில் பெரும் மாற்றங்கள் வரும். மாணவர்கள் கற்பதற்கு, இப்பொழுது உள்ளது போன்று பெரிய பெரியக் கட்டடங்கள் தேவைப்படாது. விசாலமான வகுப்பறைகளுக்கும் அவசியம் இருக்காது. மாணவர்கள் வீட்டில் இருப்பார்கள். ஆசிரியர்கள் அவரவர் இல்லத்தில் இருந்தோ அல்லது அவர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்தோ கம்பியூட்டர் மூலம் கற்றுக் கொடுப்பார்கள். அவற்றை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்வார்கள்” என முன்னுரை, முடிவுரையுடன் ஒரு மூன்று பக்கத்திற்கு எழுதிக் கொடுத்தேன்.
அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடந்தது. முடிவை பிறகு எனக்கு அறிவிக்கலாம் என்று சொன்னார்கள். நானும் ஆமாம் சாமி போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன்.
என்ன ஆச்சரியம் பாருங்கள் சரியாகப் பதினைந்து ஆண்டுகள் கடந்த உடன், நான் அன்று எழுதியது எப்படி நிஜமாகி விட்டது? இன்று பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார்கள். மாதங்கள் கடந்த பிறகும் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்வதற்கு முடியவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவதற்கு இருந்த ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள தேர்வுகள் அனைத்தும் நடத்தாமல் ரத்து செய்து விட்டு, ஆல் பாஸ் என அறிவித்துவிட்டார்கள்.
கல்லூரித் தேர்வுகளை என்ன செய்வது என்பது பற்றி அரசும் கல்வியாளர்களும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரையிலும் அடுத்த மாதம்(ஜூலை) பள்ளிக் கல்லூரிகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்களும் பெற்றோர்களும் இருந்தார்கள். தற்பொழுது கொரோனாவின் தாக்கத்தைப் பார்க்கும் போது, அடுத்தக் கல்வியாண்டிலாவது பள்ளிக் கல்லூரிகள் திறக்குமா? என்ற ஏக்கத்திற்குள் அனைவரும் வந்து விட்டார்கள்.
இந்நிலையில் தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் அனைத்தும் இணைய வழிக்கற்பித்தலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. முதலில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் +2 மாணவர்களுக்கென்று ஆரம்பித்த இந்த இணையவழிக் கற்பித்தல், தற்பொழுது பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதை உணர்ந்தவுடன் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு வரை ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கியுள்ளார்கள். கூடவே கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து தொடங்கி, இஞ்ஞினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் வரை ஆன்லைன் கற்பித்தலை நடத்தி வருகின்றன.
இப்பொழுது ஆசிரியர்கள் தங்களின் வீடுகளில் அல்லது அவர்கள் பணியாற்றும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஆன்லைன் மூலம் கற்பிக்கின்றார்கள். மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து பாடங்களைக் கற்கின்றார்கள். “கற்றல், கற்பித்தல் செயல்பாடு என்பது இரண்டு இதயங்களுக்கு இடையே நடக்கும் ஓர் இணைப்பு பாலமாகும்” என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால், இந்த ஆன்லைன் கற்பித்தலினால் எந்த இதயங்களும் இணைக்கப்படுவதில்லை. மாறாக இதயங்களைப் பிரித்துப் போடுகின்றன.
இம்முறைக் கற்பித்தலினால் மாணவர்களும் ஆசிரியர்களும் முகத்திற்கு முகம் நேரடியாகப் பார்ப்பதற்கு முடியாது. அவரவர்களின் கருத்துகளை நேரடியான உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு இயலாது. மாணவர்களின் மனநிலை, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு முடியாது. இது வெறும் உயிரோட்டம் இல்லாத ஓர் இயந்திரமயமானச் செயல்பாடேயன்றி எவ்வகையிலும் ஓர் ஆக்கப்பூர்வமான கற்றல் கற்பித்தலே அல்ல.
மட்டுமின்றி எல். கே.ஜி, யு.கே.ஜி போன்ற சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு, செல்போன் மூலம் பாடம் நடத்துவதினால், செல்போனிலுள்ளக் கதிரியக்கங்கள், குழந்தைகளின் மிகவும் இலகுவான மண்டை ஓடுகள் மூலம் அவர்களின் மூளையை கடுமையாகத் தாக்கும். அதோடு ஸ்மார்ட் போனின் மிகவும் அருகில் இருந்து பாடங்களைப் படிப்பதினாலும் காதில் ஹெட்போன் வைத்துப் பாடங்களைக் கேட்பதினால் பல மாதங்கள் செல்லும் போது கண், காது ஆகியன மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என மூளை நரம்பியல் மருத்துவர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக அரசும் கல்வித் துறையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைந்தது எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கக் கூடாது. அதோடு பெற்றோரும், ஆசிரியர்கள் இந்த வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை ஊக்கப்படுத்தக் கூடாது.
எது எப்படியானாலும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தக் கொடியக் கொரோனாவினால், உலகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில், கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது இந்தியாவைப் பொறுத்த வரை தற்போதைக்கு மிகவும் அபத்தமானதாகும். ஆனால், காலப்போக்கில் இணையவழிக் கல்வி அல்லது கற்றல் கற்பித்தல் முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிடும்.
அதற்கு முன்னோட்டமாகத் தான் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு (நெட்) மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு (சிலெட்) ஆகியத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதற்குத் தொடங்கியுள்ளனர். பிற்காலத்தில் இத்தேர்வு முறை அனைத்து வகையான தேர்வுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம். கூடவே ஆன்லைன் கற்றல், கற்பித்தல் முறை என்பது தேசம் முழுக்க நடைமுறைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பொழுது பள்ளி, கல்லூரிகளுக்கு இப்பொழுது உள்ளது போன்ற பெரிய பெரிய கட்டடங்களுக்கும், அளவுக்கு அதிகமான ஆசிரியர்களுக்கும் தேவையே இருக்காது.
இப்பொழுது உங்கள் அனைவருக்குள்ளும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும். நான் நேர்முகத் தேர்விற்குச் சென்ற, அந்த கல்லூரியில் எனக்கு வேலை தந்தார்களா? இல்லையா? என்று. நீங்களே நினைத்துப் பாருங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொருக் கருத்தை முன் வைத்தால் யாராவது, ஒன்றும் வேண்டாம் நீங்களாக இருந்தால் கூட வேலை தருவீர்களா? அதுதான் அன்று நடந்தது. ஆனால் இப்பொழுது அப்படி ஒரு தேர்வு நடந்து, நான் இப்படியொரு பதில் எழுதினால் கண்டிப்பாக எனக்கு வேலை தருவார்கள் என்பது உறுதி.
(இக்கட்டுரை ஐ.இ. தமிழ் இணைய இதழில் 20-6-2020 அன்று பிரசுரமானது.)
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை. அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com

Friday, 12 June 2020

‘ஆல் பாஸ்’ அறிவிப்பு அவசியமா?



முனைவர் கமல. செல்வராஜ்
தலையில் வளர்ந்த பேனுக்குப் பயந்து, தலை மயிருக்குத் தீ வைத்தக் கதை” என ஊர்புறங்களில் ஒரு பழமொழி கூறுவார்கள் அந்த நிலைதான் தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வை ரத்துச் செய்து விட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்னும் அரசின் அறிவிப்பு உணர்த்தியுள்ளது.
தமிழகத்தின் ஒரு சாபக்கேடு என்றால் அது கல்வித்துறையை, “எடுப்பார் கைப்பிள்ளைப்” போல் நடத்தப்படுவதாகும். அது பாடத்திட்டங்கள் உருவாக்குவதிலிருந்து, தேர்வுகள் நடத்துவது, முடிவுகள் வெளியிடுவது, விடுமுறைகள் அறிவிப்பது வரை எவ்வித முன்கருதலும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில்தான் இருக்கும். அதற்குப் பல உதாரணங்களை அடுக்கியடுக்கிக் கூற முடியும். என்றாலும் தற்பொழுது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எடுத்திருக்கும் முடிவானது அதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

கொரோனாவின் தாக்கம் இன்று முடியுமா? நாளை முடியுமா? இல்லை என்று முடியும்? என்ற முடிவான முடிவை யாராலும் அறிதியிட்டுக் கூறுவதற்கு முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் சுமார் இரண்டரை மாதங்கள் அனுபவித்த லாக்டவுனால், கொரோனா என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்து கொண்டு, அதன்படி தங்களின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பழகிக் கொண்டுள்ளார்கள்.
அதனால் மக்களின் இயல்பான வாழ்க்கையை இனியும் முடக்கிப்போட்டு வேடிக்கைப் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பொதுவாக எடுத்து வந்தபோது அனைத்தும் ஒரளவுக்கு முறையாகவே நடந்து வந்தன. ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளின் விருப்பப்படி நடவடிக்கை எடுக்க அனுமதியளித்ததிலிருந்து, எல்லாம் தான்தோன்றித்தனமாகவே நடக்கின்றன. இதனால் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில் இரண்டுமுறை மாற்றி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, இம்மாதம் 15 ஆம் தேதி நடத்துவதற்கான 90 சதவீத முன்னேற்பாடுகளும் நடந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குத் தயாராக இருந்த நிலையில், தற்பொழுது திடீரென ரத்துச் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆல் பாஸ் என்று அறிவித்ததோடு மட்டும் நின்று விடாமல், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மார்க்கும், மாணவர்களின் வருகையின் அடிப்படையில் 20 சதவீத மார்க்கும் கணக்கிடப்படும் என்றும் அதிபுத்திசாலித்தனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்களின் விடைதாள் எப்படித் திருத்தப்படும் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமானதாகும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு அதிக மார்க் கொடுத்தால், அவர்கள் பிறகு நன்றாகப் படித்துப் பொதுத்தேர்வுக்கு நல்ல மார்க் வாங்க மாட்டார்கள் என்ற தவறான உளவியல் கோட்பாட்டை அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கடைபிடித்து வருகின்றனர். அதனால் இந்த இரண்டு தேர்வுகளின் விடைத்தாளைத் திருத்தும் போதும், எவ்வளவு சரியாக மாணவர்கள் விடை எழுதியிருந்தாலும் மிகக் குறைவான மார்க்குதான் வழங்குவார்கள்.
அதனால் இந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மார்க் வழங்குவது எந்த வகையில் நியாமாகும் என்பது இப்படியொரு முடிவெடுத்த அதிமேதாவிகளுக்குத்தான் வெளிச்சம்.
அடுத்து மாணவர்களின் வருகையின் அடிப்படையில் 20 சதவீத மார்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குக் கட்டணம் கட்டுவதற்கு முன்பு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்த முடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகைப் பதிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியிருப்பார்கள். அப்பொழுது எல்லா மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருகை இக்கத்தானே செய்யும். அதன் பிறகு எப்படி வருகையை வைத்து 20 சதவீத மார்க் போடுவது?
பொதுவாக தனியார் பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் எல்லா நாளும் வருகைப் பதிவு செய்யப்படும் என்பது பரம ரகசியம். அப்படியென்றால் இம்முறையும் எப்படிச் சாத்தியமாகும்? என்பதும் புரியாத புதிராகவேயுள்ளது.
தேர்வு ரத்து செய்ததால் ஒரு பிரிவு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நாள் முழுக்க ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல், விளையாடாமல், தூங்காமல் கண்விழித்திருந்து படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் என நினைத்து படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவி புரிந்த பெற்றோருக்கும் இது இம்மியளவுக்கும் மகிழ்சியளிக்காது. மாறாக வாழ்நாள் முழுவதும் இது வேதனையளிக்கும் நிகழ்வாகவே இருக்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் +1 மீதியுள்ளத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதும் கல்லூரி மாணவர்களும் ஏதேனும் விகிதாசாரத்தில் அவர்களின் தேர்வுகளும் ரத்துச் செய்யப்படாதா? என எதிர்பார்க்கின்றனர்.
எனவே பத்தாம் வகுப்பு தேர்வை வேண்டுமென்றால், கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்குத் தீரும் வரை நீண்ட நாளுக்கு தள்ளி வைத்திருக்கலாமே தவிர இப்படி ஒரேயடியாக ஆல் பாஸ் செய்திருப்பதும், இவ்விரு முறையில் மார்க் வழங்க இருப்பதும் எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
(ietamil E Journal Article)
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )


இறைவாழ்த்து || PRAYER SONG

Thursday, 11 June 2020

பிறந்த நாள் வாழ்த்து

           05.06-2018

 · 
திக்கெட்டும் புகழ் பரவ
திகட்டாத தரணியிலே
பாவலர்கள் நெஞ்சினிலே பாசமுடன் வீட்டிருக்கும்
 செந்தமிழ் சொல்ழளகர்
புண்ணகை பூக்கும் பேரறிஞர்
ஐயா கமல செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறேன்....
ஆனந்த் கந்தசாமி
சேலம்...
---------------------------------------------------------------
Robin Keyboardist to Kamala Selvaraj
June 5 2018 ·

0என் பார்வையில் நீங்கள்
ஒரு தமிழறும் அல்ல
மலையாளியும் அல்ல
நீங்கள் ஒரு இந்தியன்.
என் வாழ்க்கையில் நீங்கள் .
புரட்டிப்பாற்த்து புரிந்து கொள்ளவேண்டிய புனித புத்தகம் .
என் மனதில் நீங்கள்.
மறையாத சூரியன்..
Happy birthday my sweet sir.