இனிக்குமா இணையவழிக் கல்வி.
(இக்கட்டுரை தினமலர் மதுரைப் பதிப்பில் மே.20-2020 அன்று பிரசுரமானது.)
பாமரர்களாகியப் பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்த பயன்படாத கல்வி, அதை கல்வி என்று சொல்லுவது பொருந்துமா.. எத்தகையக் கல்வி தன்னம்பிக்கை தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும் படிச் செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்'
இது சுவாமி விவேகானந்தரின் கல்வி பற்றிய வீரமுழக்கம்.
ஆனால் இன்று கொடிய கொரோனாவால் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கல்வியின் மாற்றம் என்பது பாமர மக்களை வெகுத் தொலைவிற்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.நம் நாட்டில் இனி பள்ளிகள் முதல் பல்கலை வரை கல்வி நிலையங்கள் எப்படிச் செயல்படும் மாணவர்களின் படிப்பு எப்படி முன்னோக்கிச் செல்லும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில்இருந்து பல்கலைகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் நிலை வரை என்னவாகும் என்பதெல்லாம் கேள்வி.இந்தியாவில் முதல் முறையாக 13 நாள்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளும் மவுனமாக இருந்தனர். ஆனால் இரண்டாவது முறை மீண்டும் 15 நாள்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் உஷாராகி விட்டார்கள். ஆசிரியர்களைப் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைத்தார்கள், இணையதளம் மூலம் மாணவர்களுக்கு எப்படிப் பாடம் நடத்துவது என்பது பற்றி பயிற்சியளித்தார்கள், உடனே ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கவும் ஆசிரியர்களுக்கு ஆணையிட்டார்கள்.
ஆன்லைன் கற்பித்தல்
இப்பொழுது எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளிலிருந்து, பல்கலைகளில் ஆய்வு மாணவர்களுக்கு வரை ஆன்லைன் கற்பித்தல் படுஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. கற்பித்தலோடு மட்டும் நின்று விடவில்லை, ஹோம் ஒர்க் கொடுக்கின்றார்கள். அதை மாணவர்கள் செய்து ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அசைன்மென்ட், ப்ராஜக்ட் ஒர்க் போன்ற அனைத்துச் செயல்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் மூலம் தேர்வு, ரிசல்ட் நடக்கிறது.
கற்பித்தல் முறைகள்
இந்தக் கற்பித்தல் முறைகள் அனைத்தும் எப்படிச் சாத்தியமாகிறது. வாட்ஸ்ஆப், கூகுள்ஆப், சூம் சிஸ்டம், கான்பிரன்ஸ்கால் போன்வற்றைதான் இந்த ஆன்லைன் கற்பித்தலுக்குப் பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் வீட்டில் இருந்தாலும் வகுப்பறையில் இருப்பது போல் ஆசிரியர்களுடன் முகத்திற்கு முகம் பார்த்து பாடம் நடத்த முடியும்.
மாணவர்களின் முகம் பார்க்காமல் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து கொண்டு அவரவர்கள் கற்பிக்க வேண்டிய பாடத்தை, வீடியோ மூலம் கற்பித்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இப்படி எத்தனை எத்தனையோ முறைகளை ஆசிரியர்கள் கையாள முடியும்.
இலக்கியப் போட்டிகள்
ஆன்லைன் மூலம் கட்டுரை, கவிதை, கதை எழுதுவது, ஓவியம் வரைவது, வினாடிவினா எனப் பல்வேறு விதமான போட்டிகளையும் நடத்துகிறார்கள். நடுவர்கள் வீட்டில் இருந்தவாறே மதிப்பீடு செய்து பரிசும், சான்றிதழும் வழங்குகின்றார்கள். பெரும்பாலான பல்கலைகள் பேராசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் கற்பித்தலின் அடிப்படையில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசும் அதற்காக ஒரு குழு அமைத்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
அப்படி பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சில நாட்களேனும் மாணவர்கள் வீட்டில் இருந்து படித்தால் அவர்களின் புத்தகச் சுமையும், அலைச்சலும் குறைந்து போகும், தேர்வு பயமும் பறந்து போகும்.இந்தக் கல்வி வாய்ப்பு தற்பொழுது தனியார் சுயநிதி பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த நிறுவனங்களில் தான் அதற்கான வசதிகள் உள்ளன.அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. அரசும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை. அந்த மாணவர்கள் அப்பாவிகளாய் வீட்டிலிருந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஷிப்ட் முறை
தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கானத் தேர்வை ஜூனில் நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டை ஜூலையில் தொடங்கவும் ஆலோசித்து வருகிறது. ஆனால் நாட்டில் இன்னும் கொரோனாவின் சீற்றம் முற்றிலுமாகத் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறந்தால் நிச்சயமாகச் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது. அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் எல்லா பள்ளி, கல்லுாரிகளிலும் இல்லை.எனவே ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தும் நடைமுறையை அரசு கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போது அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த வேண்டி வரும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்பொழுது இலவச லேப்டாப் வழங்குவதற்கு பதில் ஸ்மார்ட் அலைபேசி வழங்கலாம். வருங்காலத்தில் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் வழிமுறைகள் பற்றியும் அரசு திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளால் நிறைய சாதகங்கள் இருந்தாலும், பாதகங்களையும் நாம் கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போகும். மாணவர்களை ஆசிரியர்களால் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ முடியாது.
அதனால் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டிருப்பது போன்று, நல்ல ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், ஊக்கமும், உறுதிப்பாடும் உடைய கல்வியை மாணவர்களுக்கு ஊட்டுவது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.கொரோனா வைரசினால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்வதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கல்வி முறையில் பயிலவும் பழகிக் கொள்வோம்.
-முனைவர் கமல. செல்வராஜ் கல்வியாளர்,
அருமனை: cell- 94435 59841
No comments:
Post a Comment