Sunday, 31 May 2020

எல்லாம் வந்து போகும்...


எல்லாம் வந்து போகும்...


May 28, 2020 

எல்லாம் வந்து போகும்
இயற்கையின் பெரும் சீற்றம்
புயலாய் பூகம்பமாய் வந்து போகும்…!
0
கடலின் கடும் கோபம்
சுனாமியாய் வந்து போகும்…
மாமலையும் சிலநேரம்
எரிமலையாகும்!
0
சுட்டெரிக்கும் சூரியன்
வறுமைத் தந்து போகும்…
கொட்டித் தீர்க்கும் பெருமழை
எல்லைத் தாண்டிப் போகும்!
0
கொள்ளை நோய்கள் பலபல
ஆதிமுதல் வந்து போயின…
அத்தனையும் மக்களை
கொத்து கொத்தாய் கொண்டுப் போயின!
0
எங்கிருந்தோ வந்தது
கொரோனா என்பது
எத்தனையோ உயிர்களைப்
பலிவாங்கிப் போகுதே…!
0
என்னதான் வந்தாலும்
வானமும் பூமியும் மனிதமும்
நின்று நிலைக்கும்
மற்றவையெல்லாம் வந்து போகும்…!
கவிஞர் கமல.செல்வராஜ்
அருமனை. அழைக்க 9443559841
(இக்கவிதை 28-05-2020 அன்று ஐ.இ. தமிழில் பிரசுரமானது.)

Saturday, 23 May 2020

ஐ.இ.தமிழ் முகநூல் நேரலை


ஐ.இ.தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 06:30 மணிக்கு நம்முடன் பேசுகிறார் கல்வியாளர் கமல. செல்வராஜ்!

கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்

IE Tamil Facebook Live Educationist munaivar Kamala Selvaraj : கொரோனா காலத்தில் ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் ஐ.இ. தமிழ் வாசகர்களை சந்தித்து பேசி வருகின்றனர் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்.
அந்த வரிசையில் இன்று நம்முடன் உரையாட உள்ளார் முனைவர்.கமல செல்வராஜ். இவர் இன்று கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்தும் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்தும் பேச உள்ளார்.
கல்வியாளராக இருக்கும் இவரிடம் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் கலைகளை எவ்வாறு ஆர்வத்துடன் கற்றுக் கொடுப்பது? அவர்களை எவ்வாறு பல்வேறு திறமைகளில் என்கேஜ்டாக வைத்திருப்பது என்பது குறித்தும் பேச உள்ளார். அவருடன் நேரலையில் நீங்கள் ஆலோசனை செய்து உங்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தெரிந்துகொள்ளலாம். அவருடன் உரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சரியாக இன்று மாலை 06:30 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Thursday, 21 May 2020

இனிக்குமா இணையவழிக் கல்வி.

இனிக்குமா இணையவழிக் கல்வி.
(இக்கட்டுரை தினமலர் மதுரைப் பதிப்பில் மே.20-2020 அன்று பிரசுரமானது.)
பாமரர்களாகியப் பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்த பயன்படாத கல்வி, அதை கல்வி என்று சொல்லுவது பொருந்துமா.. எத்தகையக் கல்வி தன்னம்பிக்கை தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும் படிச் செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்'
இது சுவாமி விவேகானந்தரின் கல்வி பற்றிய வீரமுழக்கம்.
ஆனால் இன்று கொடிய கொரோனாவால் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கல்வியின் மாற்றம் என்பது பாமர மக்களை வெகுத் தொலைவிற்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.நம் நாட்டில் இனி பள்ளிகள் முதல் பல்கலை வரை கல்வி நிலையங்கள் எப்படிச் செயல்படும் மாணவர்களின் படிப்பு எப்படி முன்னோக்கிச் செல்லும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில்இருந்து பல்கலைகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் நிலை வரை என்னவாகும் என்பதெல்லாம் கேள்வி.இந்தியாவில் முதல் முறையாக 13 நாள்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளும் மவுனமாக இருந்தனர். ஆனால் இரண்டாவது முறை மீண்டும் 15 நாள்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் உஷாராகி விட்டார்கள். ஆசிரியர்களைப் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைத்தார்கள், இணையதளம் மூலம் மாணவர்களுக்கு எப்படிப் பாடம் நடத்துவது என்பது பற்றி பயிற்சியளித்தார்கள், உடனே ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கவும் ஆசிரியர்களுக்கு ஆணையிட்டார்கள்.
ஆன்லைன் கற்பித்தல்
இப்பொழுது எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளிலிருந்து, பல்கலைகளில் ஆய்வு மாணவர்களுக்கு வரை ஆன்லைன் கற்பித்தல் படுஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. கற்பித்தலோடு மட்டும் நின்று விடவில்லை, ஹோம் ஒர்க் கொடுக்கின்றார்கள். அதை மாணவர்கள் செய்து ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அசைன்மென்ட், ப்ராஜக்ட் ஒர்க் போன்ற அனைத்துச் செயல்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் மூலம் தேர்வு, ரிசல்ட் நடக்கிறது.
கற்பித்தல் முறைகள்
இந்தக் கற்பித்தல் முறைகள் அனைத்தும் எப்படிச் சாத்தியமாகிறது. வாட்ஸ்ஆப், கூகுள்ஆப், சூம் சிஸ்டம், கான்பிரன்ஸ்கால் போன்வற்றைதான் இந்த ஆன்லைன் கற்பித்தலுக்குப் பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் வீட்டில் இருந்தாலும் வகுப்பறையில் இருப்பது போல் ஆசிரியர்களுடன் முகத்திற்கு முகம் பார்த்து பாடம் நடத்த முடியும்.
மாணவர்களின் முகம் பார்க்காமல் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து கொண்டு அவரவர்கள் கற்பிக்க வேண்டிய பாடத்தை, வீடியோ மூலம் கற்பித்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இப்படி எத்தனை எத்தனையோ முறைகளை ஆசிரியர்கள் கையாள முடியும்.
இலக்கியப் போட்டிகள்
ஆன்லைன் மூலம் கட்டுரை, கவிதை, கதை எழுதுவது, ஓவியம் வரைவது, வினாடிவினா எனப் பல்வேறு விதமான போட்டிகளையும் நடத்துகிறார்கள். நடுவர்கள் வீட்டில் இருந்தவாறே மதிப்பீடு செய்து பரிசும், சான்றிதழும் வழங்குகின்றார்கள். பெரும்பாலான பல்கலைகள் பேராசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் கற்பித்தலின் அடிப்படையில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசும் அதற்காக ஒரு குழு அமைத்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
அப்படி பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சில நாட்களேனும் மாணவர்கள் வீட்டில் இருந்து படித்தால் அவர்களின் புத்தகச் சுமையும், அலைச்சலும் குறைந்து போகும், தேர்வு பயமும் பறந்து போகும்.இந்தக் கல்வி வாய்ப்பு தற்பொழுது தனியார் சுயநிதி பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த நிறுவனங்களில் தான் அதற்கான வசதிகள் உள்ளன.அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. அரசும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை. அந்த மாணவர்கள் அப்பாவிகளாய் வீட்டிலிருந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஷிப்ட் முறை
தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கானத் தேர்வை ஜூனில் நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டை ஜூலையில் தொடங்கவும் ஆலோசித்து வருகிறது. ஆனால் நாட்டில் இன்னும் கொரோனாவின் சீற்றம் முற்றிலுமாகத் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறந்தால் நிச்சயமாகச் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது. அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் எல்லா பள்ளி, கல்லுாரிகளிலும் இல்லை.எனவே ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தும் நடைமுறையை அரசு கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போது அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த வேண்டி வரும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்பொழுது இலவச லேப்டாப் வழங்குவதற்கு பதில் ஸ்மார்ட் அலைபேசி வழங்கலாம். வருங்காலத்தில் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் வழிமுறைகள் பற்றியும் அரசு திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளால் நிறைய சாதகங்கள் இருந்தாலும், பாதகங்களையும் நாம் கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போகும். மாணவர்களை ஆசிரியர்களால் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ முடியாது.
அதனால் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டிருப்பது போன்று, நல்ல ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், ஊக்கமும், உறுதிப்பாடும் உடைய கல்வியை மாணவர்களுக்கு ஊட்டுவது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.கொரோனா வைரசினால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்வதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கல்வி முறையில் பயிலவும் பழகிக் கொள்வோம்.
-முனைவர் கமல. செல்வராஜ் கல்வியாளர்,
அருமனை: cell- 94435 59841


Thursday, 14 May 2020

ஓய்வு வயது அதிகரிப்பு: இளைஞர்களை நினைத்துப் பார்த்ததா அரசு?

ஓய்வு வயது அதிகரிப்பு: இளைஞர்களை நினைத்துப் பார்த்ததா அரசு?
(இக்கட்டுரை ietamil E Journal 10-05-2020 அன்று பிரசுரமானது.)
முனைவர் கமல.செல்வராஜ்,கட்டுரையாளர்
சாதாரணமாக ஊர்ப்புறங்களில் எவருக்கேனும் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீங்குத் தொடர்ந்து நடந்து விட்டதென்றால் “பாம்பு கொத்தினவன் தலையில் இடி விழுந்தது மாதிரி” என்னும் பழமொழியைக் கூறுவார்கள். அதே நிலை தான் இன்று தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் அரசிற்கு கொரோனா காலத்தில் என்ன தடுமாற்றம் நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. திடீரென எவருடைய வலுவானக் கோரிக்கையோ, போராட்டங்களோ இல்லாமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு ஊழியர்களின், பணி ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அவசர அவசரமாக ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கல்வித்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறைகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இருந்த சுமார் 40 ஆயிரம் பேர் மீண்டும் பணியில் தொடர்ந்து பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் பல பட்டங்களைப் படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காகக் காலம் காலமாகக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்று தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உட்பட சில சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இப்படி அரசு ஊழியர் சங்கங்களுக்குள்ளேயே இந்த விஷயத்தில் இருவேறு கருத்துகள் இருக்கும் போது, இந்த அரசு எதற்காக அல்லது யாருக்காக இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்பதுதான் புரியாதப் புதிராக உள்ளது.
கடந்த ஆண்டு அதாவது 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் புள்ளி விவரப்படி சுமார் 85 லட்சம் பேர் தங்களின் படிப்பைப் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றார்கள். இவர்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக மட்டும் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 35 லட்சம் போர் 24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள். சுமார் 13 லட்சம் பேர் 36 முதல் 57 வயதைத் தாண்டியவர்கள். சுமார் 10 ஆயிரம் பேர் 58 வயதைத் தாண்டியவர்கள்.
இது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நேர்முகப் புள்ளிவிவரம். இதையும்தாண்டி, நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒன்றரை கோடி இளைஞர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என ஓர் அமைப்புசார இயக்கத்தின் சமீபத்தியப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
இத்தனைக் கோடி இளைஞர்கள் பல லட்சம் பணத்தைச் செலவு செய்து படித்து முடித்துவிட்டு வேலையின்றி வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, இப்படியொரு சலுகை அரசு ஊழியர்களுக்குத் தேவையா? என்பதை இந்த அரசாங்கம் எண்ணிப் பார்த்திருக்கிறதா?
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் என்பது கானல்நீராக அல்லவா இருக்கிறது? இதனால் பல லட்சம் பணம் செலவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். படிப்பை முடித்த ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் எத்தனை ஆண்டுகளாக ஆசிரியர் கனவோடு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அரசு துளி அளவேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?
இன்றைக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த 10 லட்சம் பேரின் நிலைமை என்ன ஆயிருக்கும்? அதிலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, தனியார் பள்ளிகளில் ஒரு கடுகளவுக்கும் ஓய்வின்றி உழைக்கும் ஆசிர்யர்களுக்குக் கிடைக்கும் மாதச்சம்பளம் ஐயாயிரம், ஆறாயிரம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
தற்பொழுது கொரோனா வந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அடைத்திருக்கும் சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்து கொண்டு மாதா மாதம் ஒரு காசுகூடக் குறைவில்லாமலே சம்பளத்தை வங்கி வழியாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தும், பள்ளியில் சென்றும் ‘ஆன்லைன்’ மூலம் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, எத்தனைப் பள்ளி நிர்வாகம் முழுமையாகச் இரண்டு மாதமும் சம்பளம் வழங்கியிருக்கிறது என்பதையாவது இந்த ஆட்சியாளர்கள் ஆய்ந்து பார்த்துள்ளார்களா?
அரசாங்கத்தில் வேலையில் சேர்பவர்கள் இருபது வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் முப்பது வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் முப்பது, முப்பந்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகும் ஓய்வூதியம் கிடைக்கிறது. அவர்களால் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் மிக அந்தஸ்தான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை, தொடக்கம் முதல் ஓய்வு வரை செக்கிழுக்கும் மாட்டின் நிலைதான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்தே ஆகவேண்டும்.
எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் அரசு தேவையின்றி அவசர அவசரமாக இரண்டு முடிவுகளை எடுத்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளைத் திறந்ததற்கு நீதிமன்றம் தடைவிதித்து, அது திறந்த வேகத்திலேயே அடைக்கப்பட்டிருக்கிறது. அது போன்று அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டித்திருப்பதையும் அரசு மறு பரிசீலனைச் செய்து, இந்த ஆண்டு ஒய்வு பெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அந்த இடத்தில் உடனடியாகப் புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது போன்று வரும் காலங்களில் அரசு வேலையில் சேருபவர்களுக்கு, அவர்கள் எந்த வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் ஒருவருக்கு அதிகப்பட்சமாக இருபது ஆண்டுகள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற சட்டத்தையும் கொண்டு வரவேண்டும். அப்பொழுதுதான் நாட்டிலிருக்கும் படித்த அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு சில ஆண்டுகளாவது அரசாங்கத்தில் வேலை செய்வதற்கு முடியும். கூடவே நாட்டிலிருக்கும் வேலைவாய்ப்பு இன்மையையும் குறைப்பதற்கு முடியும் என்பதுதான் நிஜம்.
இல்லையேல் இப்பொழுது தமிழக இளைஞர்களுக்கு “பாம்பு கடித்தவன் தலையில் இடிவிழுந்தப்” பழமொழி எப்படிப் பொருந்துகிறதோ, அதைப் போன்று அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இந்த அரசுக்கும் பொருத்தமாக இருக்கும்.
முனைவர் கமல. செல்வராஜ், கட்டுரையாளர்
மின்னஞ்சல் முகவரி: drkamalaru@gmail.com பேச. 9443559841

Sunday, 3 May 2020

கொரோனா மரணம்: உடல் அடக்கத்திற்கு என்ன தீர்வு?

கொரோனா மரணம்: உடல் அடக்கத்திற்கு என்ன தீர்வு?
(இக்கட்டுரைietamil E journal இல் 01-03-2020 இல் பிரசுரமானது)
முனைவர் கமல. செல்வராஜ்
கொரோனா தாக்கி இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது பற்றிய ஒரு பெரும் சர்ச்சை தற்பொழுது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கானத் தீர்வு என்ன என்பைதைத்தான் இங்கு விவரிக்கப்படுகிறது. இந்தத் தீர்வுக்குத் தமிழக அரசு செவிமடுத்தால், இத்துடன் இப்பிரச்னை முற்றுப்புள்ளியாகும். இல்லையேல் இது தொடர்கதையாகும் என்பதுதான் உண்மை.
சென்னையில் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் சைமன், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு, கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசுக் கல்லறைத் தோட்டத்தில் புதைப்பதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்ததும் அப்பகுதியிலுள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அவரது உடலைக் கொண்டுச் சென்ற ஆம்புலன்ஸ் மீதும் மாநகராட்சி உழியர்கள் மீதும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அதன் பிறகு அவரது உடலை அங்கிருந்து, திருவேலங்காடு கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மக்கள் மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணிக்குப் பிறகு டாக்டரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.
போலீசார் 21 பேரைக் கைது செய்துள்ளனர். அதோடு 75 பேர் மீது கொலை முயற்சி உட்பட 9 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மத்திய அரசு உடனடியாக மந்திரி சபையை அவசரமாகக் கூட்டி மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தி அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அவசர சட்டம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு நடைமுறைப் படுத்தியுள்ளது.
அதோடு மட்டும் நின்று விடாமல், தமிழக அரசும் உடனடியாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும், அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பதுதான் அந்த அவசரச் சட்டம்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை அடக்குவதினால் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்காததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம்.
டாக்டர் சைமனின் உடல் அடக்கத்தில் இவ்வளவு பிரச்னைகளும் நடந்தப் பிறகும், அவரின் மனைவி ஆனந்தி, தனது கணவரின் விருப்பத்திற்கு இணங்க, அவரின் உடலை, திருவேலங்காடு கல்லறைத் தோட்டத்திலிருந்து தோண்டி எடுத்து, கீழ்பாக்கத்திலுள்ளக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். கணவரின் உடலைக் கீழ்ப்பாகம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
இவை டாக்டர் சைமனின் மரணம் குறித்து பல்வேறு விதமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த மாதிரியான பிரச்னைகள் தொடர்ந்து எழாமல் இருக்க வேண்டுமானால், இனி யாராவது, தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தால், அவர்கள் எந்த சாதி, சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழக அரசே அந்த உடலை ஏற்றெடுத்து, அதற்கென்று ஒரு மின்மயானத்தை(மின்சாரத்தில் எரிவூட்டுவது) உருவாக்கி அதில் வைத்து எரிவூட்ட வேண்டும். இந்த மின் எரிவூட்டும் நடைமுறை நம் அண்டை மாநிலமான கேரளாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தவிர்த்து மக்கள் மத்தியில் கொரோனா பற்றி இவ்வளவு பெரிய பீதியை உருவாக்கி வைத்து விட்டு, அதன் மூலம் இறந்தவர்களின் சடலத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடக்கம் செய்வதற்கு முற்பட்டால், எந்த மக்களும், எவ்வளவு பெரியச் சட்டங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எந்த அளவிற்கு மதித்து அமைதி காப்பார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். மக்களின் உணர்வுடன் போராடுவதைவிட மாற்று வழி சிறந்தது.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )