Thursday, 6 October 2016

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை ஒரு கண்ணோட்டம்.

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை ஒரு கண்ணோட்டம்.


     இந்திய அரசின் மனித வள மேம்பாட்டடுத்துறை அமைச்சகம் சார்பில் புதியக் கல்விக் கொள்கை 2016 தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கல்விக் கொள்கைப் பற்றி மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக 2.75 இலட்சம் கருத்தறியும் கூட்டங்களும், வலைதளங்கள் மூலம் 29 ஆ                  மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை ஒரு கண்ணோட்டம்.
யிரம் நபர்களிடம் கருத்துத்துரைகளும் பெறப்பட்டுள்ளன.
     மேனாள் அமச்சகச் செயலர் திரு. T.S.R. சுப்பிரமணியன் தலைமையில் ஐவர் கொண்ட குழு இப்பணியைத் திறம்படச் செய்துள்ளது. இக்கல்விக் கொள்கை இன்னும் முடிவு செய்யப்பட்டு அரசால் சட்டமாக்கப் படவில்லை. என்றாலும் இக்கல்விக் கொள்கைப் பற்றி பல்வேறு விதமான விவாதங்களும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் தெருவுக்குத் தெரு நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
     அதிகம் கல்வியாளர்கள் இல்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டும் கொண்டு இக்கல்விக் கொள்கைத் தயாரிக்கப் பட்டதாக போராட்டக்காரர்களால் ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு ஒரு வகையில் நியாமானது போல் இருக்கலாம்.
     ஆனால் வகுக்கப்பட்டிருக்கும் கல்விக் கொள்கையானது, உலகிலுள்ளத் தலைசிறந்தக் கல்வியாளர்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்டது போன்று, கல்வியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை அரசியலுக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் அப்பாற்பட்டு சிந்திக்கும் திறனுடைய அனைவராலும் ஒத்துக் கொள்ள இயலும்.
     ஏனென்றால் தொடக்க நிலையிலிருந்து தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து நிலைக் கல்வியையும் மிகவும் கண்ணும் கருத்துமாகக் கருத்தில் கொண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
     அதுபோலவே,  பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மலைவாழ், பழங்குடி மக்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள்                 எனச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு அவரவர் நலனுக்கு ஏற்ற விதத்தில் கொள்கைகள் வகுக்கப் பட்டுள்ளன.
     அறிவியல், ஆங்கிலம். கணிதம் ஆகிய மூன்றுப் பாடங்களுக்கும் தேசிய அளவிலும், சமூக அறிவியல் உட்பட பிறப் பாடங்கள் இரண்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பகுதியில் தேசிய அளவிலான பாடத்திட்டமும், இன்னொரு பகுதியில் மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் பாடதிட்டம் அமையும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது எவ்வித விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு கொள்கையாகும்.
     மேலும் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது வட்டார மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளப்படும் என்றக் கருத்தும் வரவேற்கத் தக்க அம்சமாகும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்புடையதே ஆகும்.
    ஆனால் மூன்றாவது மொழி சமஸ்கிருதம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இங்கு இந்தியாவின் தேசிய மொழியாம் இந்தி மொழி எங்கும் இடம் பெறாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
     இதற்குப் பதில் இந்தியை மூன்றாவது மொழியாகவும் சமஸ்கிருதத்தை விருப்ப மொழியாகவும் கொண்டிருக்க வேண்டும். அதோடு, தாய்மொழி, தேசிய மொழி, உலகமொழி என்னும் மும்மொழிக் கொள்கையை கண்டிப்பாக அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிப்பதற்கு வற்புறுத்தப் பட்டிருக்க வேண்டும்.
     பன்னாட்டுக் கல்விக்கு வழிவகைச் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள இருநூறு பல்கலைக் கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பல்கலைக் கழகங்களின், பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுபோல் அந்நாடுகளில் இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் தொடங்குவதற்கான இருவழிக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் எனவும் உரைக்கப்பட்டுள்ளது.
     பன்னாட்டுக் கல்விக் கொள்கையை, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றேயாகும். ஆனால் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள், கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்வது நம் நாட்டின் செயவீனங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அதை அவ்வாறே கடைபிடிக்கின்றனவா என்பதை அரசு கண்காணிக்கும் அதிகாரத்தை கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
     இக்கல்விக் கொள்கையில் கடுகளவும் ஏற்றுக் கொள்ள இயலாத ஓர் அம்சம் அடங்கியுள்ளது. அது, மிகுந்த முதலீடு காரணமாக அரசு புதிய கல்விநிறுவனங்கள் தொடங்குவது தவிர்க்கப்படும் எனவும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
     இது மிகவும் ஆபத்தான ஓர் அறிவிப்பாகும். ஏனென்றால் அரசு தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் தொடங்காமல் தனியாரை ஊக்கப்படுத்துவதல் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு கல்வியானது எட்டாகனியாகவே மாறிவிடும். இது எதிர்காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாக மாறும்.
     பள்ளிக் கூடங்களின் முறையான கல்வி நேரத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொழில் அடிப்படையிலான கல்வி அளிப்பதற்கு மத்திய கல்வி நிறுவனம் வழிவகைச் செய்யும் என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இதுவும் வரவேற்கத் தக்க அம்சமேயாகும்.
     இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, இது குலக்கல்வி முறையை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என விதாண்ட வாதத்தில் இறங்கியுள்ளனர். இது முற்றிலும் தவறானக் கருத்தேயாகும். இம்முறை ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாகவே இருக்கும் என்பது திண்ணம்.
     மேலும் பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணித்திறனை ஆய்ந்தறிந்து அதன் அடிப்படையில் அவர்களுக்குப் பணி உயர்வும் சம்பள உயர்வும் அறிவிக்கப்படும் என்ற முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இது நூறு சதவீதம் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
     ஒட்டுமொத்தத்தில் இக்கல்விக் கொள்கைகளை விருப்பு வொறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையோடு அணுகினால் ஏற்றுக் கொள்ளத்தக்க  அருமையான அம்சங்கள் ஏராளம் அடங்கியுள்ளன என்பதை அறிவுடைய  அனைவராலும் அறிந்து கொள்ள இயலும் என்பதே உண்மை.
                              முனைவர் கமல. செல்வராஜ்
                              முதல்வர், கிரேஸ் கல்வியியல் கல்லூரி.
                               படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.    

       

    

 
    

No comments:

Post a Comment