Saturday, 11 June 2016

ஊன்றுகோல்

                            ஊன்றுகோல்
                               

      இறைவனின் படைப்பில், மனிதப் படைப்பானது மிகவும் அற்புதமானது. உலகில் வாழும் உயிரினங்களில் ஆறறிவு படைத்தவர்கள் மனிதர்கள்.
    
      இம்மனிதனுக்கு மட்டும்தான் சிந்திக்கும் ஆற்றலையும் செயல்படும் திறனையும் இறைவன் அளித்துள்ளான். இவ்விரண்டுத் தன்மைகளும் ஒரு மனிதனுக்கு எந்நேரத்திலும் ஊன்றுகோல் போல் உறுதுணையாக இருக்கும். இவை இரண்டையும் செம்மையுற கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையின் உச்சத்தை அடைவது நிச்சயம். ஆனால் எத்தனைபேர் இதனை செம்மையுற கடைபிடிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.
    
      பெற்றோர்களாகட்டும் அல்லது அவர்களின் பிள்ளைகளாகட்டும் வாழ்க்கையின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்படுபவர்கள் எத்தனைபேர்? சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் அறிவையும் ஆற்றலையும் ஆய்ந்துணரும் தன்மையின்றி எதைஎதையோ சாதிக்க வேண்டும் என எத்தணிக்கின்றனர். அந்த எத்தணிப்பில் எண்ணியதை எட்டிப்பிடிக்க முடியாமல் போகும்போது, ஏமாந்து போகின்றனர்.
    
     அந்த ஏமாற்றத்திலிருந்து எழுந்து நிற்பதற்கு பெற்றோர்களும் முதியவர்களும் இளம் தலைமுறையினருக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையேல் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிப் போகும். அதற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது தற்போது வெளிவந்திருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.  


       தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த பின்னர்,
 பெற்றோர்களும் பிள்ளைகளும் தேர்வு முடிவுகளைப் பற்றி பொழுதெல்லாம் சிந்தையும் இரவெல்லாம் கனவுகளுமாய் நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

              
     10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்தவுடன் சில  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பல்வேறு விதமான அதட்டல்களையும் மிரட்டல்களையும் எதிர்பார்ப்புகளையும் கட்டவிழ்த்து விட்டுச் சதாநேரமும் பித்தலாட்டம் போல் பிணற்றிக் கொண்டேருப்பார்கள்.  நீ மட்டும் இந்தப் பரிட்சையில் ஜெயிக்கல உன்னைக் கொன்றேப் போட்டிருவேன். இப்படி ஒரு தரப்பு பெற்றோர்.  உனக்கு மெடிசின் படிக்கக் கூடிய அளவுக்கு மார்க் கிடைக்கல அப்புறம் இந்த வீட்டிலையே உன்னை வச்சிருக்க மாட்டேன் இப்படியென்று இன்னொரு தரப்புப் பெற்றோர்.

       இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டு வேறொருத் தரப்பு பெரும்பான்மை பெற்றோர், கடவுளே என் புள்ள இராப்பகலா குடிக்கக் கஞ்சியில்லாம, உடுக்கத் துணியில்லாம, தூங்க நேரம் கிடைக்காம கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சுப் படிச்சான், அவன் கண்டிப்பா இந்தப் பரிட்சையில ஜெயிப்பான்.  அப்படி ஜெயிச்சா எப்படி அவன மேல் படிப்பிற்கு விடுவது? என ஏங்கித் தவித்துப் புலம்பிக் கொண்டே இருப்பர்கள்.

       தேர்வில் வெற்றி பெற்றேத்தீர வேண்டும், இல்லையேல் கொன்றேவிடுவேன் என ஒரு தரப்பினரும், வெற்றி பெறுவது மட்டுமல்ல அதிக மதிப்பெண்ணும் வாங்க வேண்டும் இல்லையேல் வீட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என இன்னொருத் தரப்பும், கண்டிப்பா வெற்றி பெற்று விடுவார்கள் அப்படி வெற்றி பெற்றால், எப்படி மேலும் படிக்க வைப்பது என்று முன்னிரண்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொரு தரப்புமாக மூன்று தரப்பினர் தங்கள் எண்ண அலைகளையும் கற்பனைக் கனவுகளையும் சுமந்து கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.

       தங்கள் பிள்ளைகள் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் பெற்றோர்களிடையே இப்படி பல்வேறு விதமாக இருப்பது நியாயமானதேயாகும்.  ஆனால், அவை ஒருபோதும் தங்கள் பிள்ளைகளின் தகுதியையும் திறமையையும் மிக மிஞ்சியதாக இருக்கக் கூடாது.  அப்படியிருந்தால் அது மிகவும் ஆபத்தாகவும், விபரீதமாகவும் மாறிவிடும்.
    

       தேர்வு முடிந்த அன்றிலிருந்தே தொடங்கிய பெற்றோர்களின் இவ்வண்ணமான அதட்டலும் மிரட்டலும், பிள்ளைகளின் அடிமனதிற்குள் ஓர் ஆழமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.  அது, எப்பொழுதும் அவர்களை என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று துரத்திக் கொண்டேயிருக்கும்.  அதன் விளைவு, ஒருவேளை இப்படி அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் உட்பட்ட பிள்ளைகள், தேர்வில் தோற்றுப் போகவோ, மதிப்பெண் குறைவாக எடுக்கவோ செய்தால், உடனே அவர்களின் மனம், அவர்களைத் தற்கொலைச் செய்துக் கொள்வதற்குத் தூண்டுகிறது அல்லது யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு எங்கோ ஓடிப்போவதற்கு வழிவகுக்கிறது. அதை அப்படியே அரங்கேற்றியும் விடுகின்றனர்.

     இதுபோன்ற சம்பவங்கள், பிள்ளைகளுக்கு ஏதேனும் தோல்விகளோ, துயரங்களோ, துன்பங்களோ ஏற்படும்போது அவர்களுக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டியப் பெற்றோரே அவர்களுக்கு ஊனத்தை ஏற்படுத்துபவர்களாக அல்லவா உள்ளனர்?

       இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் நடக்கின்றன.  தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே,  இந்த அநீதித் தொடங்கி விடும்.  பெற்றோர் எதிர்பார்ப்பது போல் மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் சிலரும், தேர்வு முடிவு வெளியாகும் போது தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் பலரும் கொடிய தற்கொலைக்கு ஆளாகி தங்களின் இளம் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

    
       பத்து மாதம் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துச் செல்லமாய் வளர்த்து ஆளாக்கியப் பிள்ளைகளுக்கு ஏன் இப்படியொரு சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்?

       பள்ளியில் படித்து ஒரே அடியாக வெற்றி பெற்றால் மட்டும்தான் வாழ்க்கை உயர்வாக அமையுமா? இல்லை படித்து அதிக மதிப்பெண் வாங்கி டாக்டர், இஞ்ஞினியர், கலெக்டர் ஆனால் மட்டும்தான் வாழ்க்கை பெருமையுறுமா? இப்படிப்பட்ட அர்ப்பமான ஆசைகள் ஏன் பெற்றோர்களிடம் எழுகின்றன?

       சில பெற்றோர், என்ன நினைக்கின்றனர் என்றால், அவர்களால் படித்துப் பட்டம் பெறவோ, உயர்ந்த பதவிகள் வகிக்கவோ இயலவில்லை; அதனால், தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, மிக உயர்ந்த பதவியில் அமர வைத்து அழகு பார்க்க  வேண்டும்.  அதன் மூலம் அவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும் அபிமானமும் அடைய வேண்டும் என்பதுதான் அவர்களின் அதீத ஆவா.  அப்படி நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குள்ளே இருக்கும் திறமைகளையும் தகுதிகளையும் உய்த்துணர தவறிவிடுகின்றனர்.

       இப்படிப்பட்டப் பெற்றோர் ஒரு விஷயத்தை மிகத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து  அதிக மதிப்பெண் பெறுவதோ, அவர்களுக்குச் சற்றும் தொடர்வும், விருப்பமும் இல்லாதத் துறைகளில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, அவற்றை அவர்களால் படிக்க இயலாமல் தள்ளாடுவதைப் பார்த்து வேதனைக் கொள்வதோ அல்ல உங்கள் கடமை.

       இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, இறைவன் ஒவ்வொருக் குழந்தைகளையும் படைக்கும் போது, அவர்களுக்குள்ளே ஏதேனும் ஒரு திறமையை வைத்து, உங்களுக்கு வரப்பிரசாதமாக அக்குழந்தைகளைத் தருகிறார்.  அத்திறமைகளைக் கண்டுப்பிடித்து, அவற்றை என்னென்ன முறைகளில் வளர்த்தெடுப்பதற்கு உங்களால் உதவி புரிய முடியும் எனச் சிந்தித்து அவற்றிற்கான  உதவிகளை மட்டும் செய்துக் கொடுத்தால் போதும், அத்திறமையினால் அவர்கள் இவ்வையகத்தையே தன்வசமாக்கி விடுவார்கள்.  அதன் மூலம் நீங்களும் பெரும் மனநிறைவையும் பெருமையையும் அடைய முடியும்.  அவர்களும் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவார்கள்.

     இதற்கு நம் தேசத்தில் எத்தனை எத்தனையோபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்.  படிப்பே வராத ஒரு குழந்தையிடம் பாட்டு, நடனம், நடிப்பு, பேச்சு, எழுத்து, ஓவியம், விளையாட்டு, கலை, இலக்கியம், இசை என எண்ணிலடங்காத திறமைகள் அடங்கிக் கிடக்கின்றன.

     படிப்பே வராத மைக்கல் ஜாக்ஷ்ன் பாப்நடிகராகி இந்த உலகத்தையே தன்வசப்படுத்திய உண்மையை நாம் உணர வேண்டாமா? பட்டங்களே பெறாத பி.டி. உஷா விளையாட்டுத் துறையில் துலங்கி, இந்நாட்டின் தங்கமகள் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதை நாம் அறிய வேண்டாமா? பாடுவதற்கு மட்டுமே தெரிந்த கே. ஜே. யேசுதாஸ், எம்.எஸ். சுப்புலெட்சுமி போன்றோரை இத்தேசம் மதிக்கவில்லையா? பத்தாம் வகுப்பே தேறாத சச்சின் டென்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் கீர்த்திப் பெற்று, இன்று பாரதரத்னா விருதோடு உலகமே வியக்கும் வண்ணம் விளங்குவது எதனால் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
    
      சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது தந்தையின் உந்துதலால் செஸ் விளையாட்டில் உலகத்தையே தலைநிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்தைப் பார்த்து நாம் வியக்க வேண்டும் அல்லவா? இசை ஞானத்தால் இமையம் வரைப் புகழ் பெற்றுத் துலங்கும் இசைஞானி இளையராஜா, ஓவியத்தால் உலகையே தலைவணங்க வைத்த இரவிவர்மா, தனது பேச்சுத் திறத்தால் அகில உலகத்தையும் அடிபணியச் செய்த சுவாமி விவேகாந்தர், இவர்களெல்லாம் படிப்பு, பட்டம், பதவி இவற்றால் சாதித்து இவ்வுலகில் இன்றும், என்றும் நீடித்து நிலைத்திருக்கின்றார்களா? இல்லை தங்களின் தனித்திறத்தால் சாதனைகள் பலபுரிந்து இத்தரணியில் என்றும் சாகா வரம் பெற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா? என்பதை எண்ணிப் பார்ப்பதற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டவர்கள்.               

      இனி, மூன்றாவது நிலையில் இருக்கும் பெற்றோரின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்ப்போம்.  இவர்களின் பிள்ளைகள் கஷ்டப்பட்டு உழைத்து கூடவே படித்து வெற்றிக் கனியைத் தட்டி விட்டார்கள்.  இவர்களால் தொடர்ந்து மேல்படிப்பு படிக்க இயவில்லையே என்பதுதான் ஏக்கம்.  இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்கென்று பல்வேறு எளிமையான வழிமுறைகள் உள்ளன.

      நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி வெறும் பிள்ளைகளுக்கு அரசுக் கல்லூரிகளில் இலவசமாகப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் ஏராளம், தாராளம் உள்ளன.  இல்லை தனியார் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு வங்கிகள் மூலம் எளிமையாகக் கடன் பெற்று, எந்த ஓர் உயர் தொழில் நுட்ப கல்வியையும் சுயமாகக் கற்பதற்கு முடியும்.  அதுவும் இல்லையேல் இன்று பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகள் சுழற்சி முறை  கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளன.  அந்தக் கல்லுரிகளில் சேர்ந்துப் படித்தால், அவர்கள் ஒரு நாளின் காலை அல்லது மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று விட்டு மறு பாதி நேரத்தில் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கூட பட்டப் படிப்புகளையும், தொழிற் கல்வி படிப்புகளையும் படித்து முடிக்க இயலும்.


      இவை எதற்கும் வழியில்லை என்றால்கூட இன்று, அனைவரும் வீட்டிலிருந்தே படிக்கும் வண்ணம் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தொலை நொறிக் கல்வியை நடத்துகின்றன.  நமது பிள்ளைகள் சமர்த்துகளாக இருந்தால் அவர்கள் தினமும் வேலைக்குச் சென்று அதிலிருந்துக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுகூட உயர் படிப்புகளைப் படிக்க இயலும்.

     பிள்ளைகள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்னும் ஆசையுள்ள பெற்றோர்கள், அவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் போது மட்டும், அவர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது அதிகம் அக்கறை காட்டாமல், அவர்களின் ஆரம்பக் கல்வியிலிருந்தே கண்ணும் கருத்துமாக இருந்து படிப்பில் அவர்களின் முழுக் கவனத்தையும் செலுத்துவதற்கு வழிவகைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவர்களுக்கு படிப்பு மீது அதிக அக்கறை ஏற்பட்டு உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல்
படித்து நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்திருப்பார்கள்.

     படிப்பும் மதிப்பெண்ணும் மட்டும்தான் ஒரு பிள்ளையின் வாழ்வை வளமாக்குகிறது என்று எந்தப் பெற்றோரும் தவறுதலாகக் கருதிவிட வேண்டாம். நல்ல பண்பிருந்தால் அதும் அவர்களுக்குப் பஞ்ச பாண்டவர்களைப் போல் பாராளும் தகுதியைத் தந்துவிடும் என்பது திண்ணம்.

      எனவே, பொற்றோர்களே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் விருப்பு வெறுப்புகளையும் சுய கொளரவத்தையும் சமுதாய விழுமங்களையும் உங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் மட்டும் திணிப்பதற்கு விரும்பாதீர்கள்.  அப்படி நீங்கள் திணிப்பதற்கு முற்படும் போது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.  இதனால், வாழ்ந்து, வளர்ந்து, உயர வேண்டிய பிள்ளைகள் பிஞ்சுப் பருவத்திலையே தற்கொலை என்னும் கொடிய தீங்கிற்குள் புகுந்து விடுகின்றார்கள்.

      ஏன் நமது இச்சைகளுக்காகவும் சுயகொளரவத்திற்காகவும் நம் பிள்ளைகளை பலிகடாவாக்க வேண்டும்?  அவர்கள் விரும்பும் பாடத்தைப் படிக்கவும் அவர்களால் இயன்ற வேலையைச் செய்யவும் வழிவகைச் செய்வதுதானே பெற்றோராகிய உங்களது தலையாயக் கடமை.

      எனவே, தேர்வில் பிள்ளைகள் வெற்றி பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிக மதிப்பெண் வாங்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களைத் திட்டாமலும் மிரட்டாமலும், தட்டிக் கொடுத்து தூக்கி நிறுத்தி ஊன்றுகோல் போல் நின்று நல்லதொரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகைச் செய்வோம்.

(இக்கட்டுரை ஜூன் 10, 2016 அன்று நாகர்கோவில் அகில இந்தியா வானொலியில் ஒலிபரப்பப்பட்டது)  
                        
                                                                        


No comments:

Post a Comment