Sunday, 28 December 2014

சுந்தரபாண்டியன் புனைபுகள்

சுந்தரபாண்டியன் புனைபுகள்

                                  முனைவர் சு.மகேஷ்குமார்
    

         மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகத் திகழ்பவர் அருமைச் சகோதரர் முனைவர் சு. மகேஷ்குமார் அவர்கள்.  பேச்சு, பாட்டு, எழுத்து, ஆய்வு ஆகியவற்றில் இவர் கைதேர்ந்த கலைஞர்.

     இவர் முகத்தில் எப்பொழுதும் புன்னகைத் ததும்பும். நயமான பேச்சால் அனைவரையும் தன்வசமாக்கும் வல்லமை படைத்தவர். கடின உழைப்பிற்கு இவர் முன்னுதாரணமானவர். பேராசிரியர் பணியில் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு, அப்பணியை முழு மூச்சாய்ச் செய்துவருபர்.

     கவிதை, கட்டுரை என இருவேறு படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் செய்துவிட்டுத் தற்போது ஆய்வு நூலுக்குள் அடியெடுத்துவைத்துச், “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் மிக அற்புதமான ஆய்வு நூலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    யார் இந்தச் சுந்தரபாண்டியன் இலக்கியப் படைப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர். நூல் பதிப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதைப் பதிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டிப் பதிப்பகத் திலகமாகத் திகழ்பவர். படைப்பு, பதிப்பு இவை இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டவர். கல்லூரியில் பேராசிரியர் பணியைப் பெருமைமிகு பணியாகச் செய்துகாட்டியவர். நாட்டுப்புற இலக்கிய ஆய்வில் தன்னை முழுமையாகச் சமர்ப்பணம் செய்தவர். அதுபோலவே நாட்டுப்புற இலக்கியப் படைப்பிலும் பதிப்பிலும் தமக்கு நிகர் இத்தரணியில் எவரும் இலர் என நிருபித்தவர்.

     இவை அனைத்திற்கும் மேலாக “காவ்யா” என்னும் பதிப்பகத்தின் காவியத் தலைவனாகத் திகழ்ந்து எண்ணிலா அரும்பெரும் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களைத் தமிழ்த் தாய்க்குப் படையலாகப் பதித்தளித்தவர். இத்தகு பன்முகத்திறன் கொண்டவர்தான் இந்தச் சுந்தரபாண்டியன்.

     “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
     தோன்றலிற் தோன்றாமை நன்று.” என்னும் வள்ளுவத்திற்கிணங்கப் பிறவியின் பயனை இவ்வையகத்தில் புலப்படுத்தி நிற்கும் சுந்தரப்பாண்டியனாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தமிழ் இலக்கியத் தளத்தில் தடம் பதித்த படைப்புகள் பற்றியும் இவ்வாய்வு நூல் தெள்ளத் தெளிவாக ஆய்ந்துள்ளது.

     தொடர்ந்துவரும் இளம் ஆய்வளர்கள் இது போன்று ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றியோ, அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியோ ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இவ்வாய்வு நூல் ஒரு வழிகாட்டி நூலாகவே அமையும் என்பது திண்ணம். நூலாசிரியர் முனைவர் சு. மகேஷ்குமர் இதுபோல் ஏராளம்… தாராளம்…ஆய்வு நூல்களை ஆய்ந்தளித்துத் தமிழ் இலக்கியத் தடாகத்தில் மகத்துவம் பெற வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…

(சு. மகேஷ் குமார் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு, கிரேஸ் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார். இவரது “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய வாழ்த்துரை இது.)




       

No comments:

Post a Comment