Sunday, 28 December 2014

சுந்தரபாண்டியன் புனைபுகள்

சுந்தரபாண்டியன் புனைபுகள்

                                  முனைவர் சு.மகேஷ்குமார்
    

         மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகத் திகழ்பவர் அருமைச் சகோதரர் முனைவர் சு. மகேஷ்குமார் அவர்கள்.  பேச்சு, பாட்டு, எழுத்து, ஆய்வு ஆகியவற்றில் இவர் கைதேர்ந்த கலைஞர்.

     இவர் முகத்தில் எப்பொழுதும் புன்னகைத் ததும்பும். நயமான பேச்சால் அனைவரையும் தன்வசமாக்கும் வல்லமை படைத்தவர். கடின உழைப்பிற்கு இவர் முன்னுதாரணமானவர். பேராசிரியர் பணியில் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு, அப்பணியை முழு மூச்சாய்ச் செய்துவருபர்.

     கவிதை, கட்டுரை என இருவேறு படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் செய்துவிட்டுத் தற்போது ஆய்வு நூலுக்குள் அடியெடுத்துவைத்துச், “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் மிக அற்புதமான ஆய்வு நூலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    யார் இந்தச் சுந்தரபாண்டியன் இலக்கியப் படைப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர். நூல் பதிப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதைப் பதிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டிப் பதிப்பகத் திலகமாகத் திகழ்பவர். படைப்பு, பதிப்பு இவை இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டவர். கல்லூரியில் பேராசிரியர் பணியைப் பெருமைமிகு பணியாகச் செய்துகாட்டியவர். நாட்டுப்புற இலக்கிய ஆய்வில் தன்னை முழுமையாகச் சமர்ப்பணம் செய்தவர். அதுபோலவே நாட்டுப்புற இலக்கியப் படைப்பிலும் பதிப்பிலும் தமக்கு நிகர் இத்தரணியில் எவரும் இலர் என நிருபித்தவர்.

     இவை அனைத்திற்கும் மேலாக “காவ்யா” என்னும் பதிப்பகத்தின் காவியத் தலைவனாகத் திகழ்ந்து எண்ணிலா அரும்பெரும் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களைத் தமிழ்த் தாய்க்குப் படையலாகப் பதித்தளித்தவர். இத்தகு பன்முகத்திறன் கொண்டவர்தான் இந்தச் சுந்தரபாண்டியன்.

     “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
     தோன்றலிற் தோன்றாமை நன்று.” என்னும் வள்ளுவத்திற்கிணங்கப் பிறவியின் பயனை இவ்வையகத்தில் புலப்படுத்தி நிற்கும் சுந்தரப்பாண்டியனாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தமிழ் இலக்கியத் தளத்தில் தடம் பதித்த படைப்புகள் பற்றியும் இவ்வாய்வு நூல் தெள்ளத் தெளிவாக ஆய்ந்துள்ளது.

     தொடர்ந்துவரும் இளம் ஆய்வளர்கள் இது போன்று ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றியோ, அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியோ ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இவ்வாய்வு நூல் ஒரு வழிகாட்டி நூலாகவே அமையும் என்பது திண்ணம். நூலாசிரியர் முனைவர் சு. மகேஷ்குமர் இதுபோல் ஏராளம்… தாராளம்…ஆய்வு நூல்களை ஆய்ந்தளித்துத் தமிழ் இலக்கியத் தடாகத்தில் மகத்துவம் பெற வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…

(சு. மகேஷ் குமார் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு, கிரேஸ் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார். இவரது “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய வாழ்த்துரை இது.)




       

Friday, 5 December 2014

நியாயமா? இது நியாயமா?

                                               நியாயமா? இது நியாயமா?

     எனது நியாயமா? இது நியாயமா? என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் எழுதிய முன்னுரை.

வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு

     அருமைச் சகோதரர் முனைவர் கமல.செல்வராஜ் அவர்களுடன் எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு அதிகமான நெருங்கிய பழக்கம். சொந்தச் சகோதரர் போல அவ்வளவு பிரியமாக இருப்பார். சமூக அக்கறையுள்ள நல்ல கவிஞர்; கதையாளர். தம் கருத்துகளை வலியுறுத்தி விவாதம் செய்யும் வீறுமிக்க பேச்சாளர். மனத்தில் பட்டதை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகப் வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு. அவருடைய தொலைக்காட்சி விவாதங்கள் இரசிகர்களைச் சுட்டி இழுத்ததை நான் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்.

     சில ஆண்டுகளாக திரு. பி. எஸ். இராஜ் அவர்கள் தொண்டுணர்வோடு வெளியிட்டுவந்த சமூக அக்கறையுள்ள மாத இதழான சமுதாய நண்பனில் கமல் அவர்கள் தொடர்ந்து எழுதிய பல்வேறு சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கட்டுரைகள் இந்தத் தொகுப்பாக வெளிவருகின்றது. கல்வியின் நோக்கம், அதன் செயல்முறை, ஆசிரியர்கள், சமூகப் பண்பாடு, முதலிய பொருள்களில் அவர் எழுதிய சொல்லழகும் மொழியழகும் கொண்ட கட்டுரைகள் இவை.

     இக்கட்டுரையின் பொருள்களோடு வாசகர்கள் ஒன்றிப் போகவும் முரண்படவும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர் மனத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தும்  பதில் சொல்லத் தூண்டும். ஆசிரியரின் முதன்மையான நோக்கம் இது என்றே தோன்றுகிறது.

     முயன்று முனைவர் பட்டம் பெற்று, இன்று, ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகச் சிறப்புடன் பணியாற்றும் டாக்டர் கமல.செல்வராஜ் அவர்கள் தம் படைப்புகளைத் தொடர்ந்து சமூகத்திற்குத் தர வேண்டும் என மன நிறைவோடு வாழ்த்துகிறேன்.

     இந்நூல் சென்னையிலுள்ள பிரபல பதிப்பகமான  காவ்யா பதிப்பகத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விலை இருநூறு { ரூ.200 } நூல் கிடைக்கும் இடங்கள்

                  காவ்யா
                  16, இரண்டாம் குறுக்குத் தெரு,
                   டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்
                   சென்னை. போன்: 044-23726882.

கன்னியாகுமரி மாவட்டம்:    
                           1.ஸ்டார்புக்சென்டர்,                                                  நாகர்கோவில் (04652 233107)                                                      
                           2. சுதர்சன் புக் சென்டர்
                              நாகர்கோவில்(93675 10985)  
                         
                           3. முதற் சங்கு புக் சென்டர்
                               தக்கலை. (9442008269)                         
                          

                           4. பாபு ஸ்டோர், மார்த்தாண்டம். 
                              (9150311711)