நகையோடு
வேண்டுமா நட்புறவு ?
பெண்களுக்குத்
தேவை நகை. இது புன்னகையா? பொன்னகையா? என்பது ஒரு கேள்வி. இவற்றில் முன்னது முந்தி நின்றால், அது அவர்களுக்கு
அழகைத் தரும். பின்னயது முந்தி நின்றால் அழிவைத்
தரும்.
முன்பெல்லாம்
பொன்னகையானது பெண்களுக்கு ஓர் அடையாளப் பொருளாகவே இருந்து வந்தது. அது அவர்களுக்கு அவசியமானதாகவும் அழகாகவும் இருந்தது.
கூடவே அளவாகவும் இருந்தது.
ஆனால், இன்று
இது, பெண்களின் ஆடம்பரப் பொருளாகவும் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது. கூடவே ஆபத்துக்கும்
வழிவகுத்து விட்டது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி.
இப்பழமொழி இன்று நகை விஷயத்தில் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஏனென்றால்,
அளவுக்கு அதிகமாக அவர்கள் நகை அணிவதால் அதுவே, அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தருணத்தை
ஏற்படுத்துகின்றது.
பெண்கள்
அன்று நூலளவில் தாலியை அணிந்திருந்தார்கள்.
அது, அவர்களுக்குத் திருமணம் ஆனவர்கள் என்பதற்கு அடையாளமானது.
பிற்காலத்தில்
அது, கயிறளவாகி, தற்போது பத்து பவுன், இருபது பவுன் என எடை அதிகரித்து வடம் போலாகி அதுவே அவர்களுக்குக் கொலைக் கயிறாகி விட்டது.
நகை மீது
பெண்களும் மக்களும் ஏன் இவ்வளவு மோகம் கொள்கின்றனர் என்பது சற்றே சிந்தனைக்குரியது.
இந்த மோகமானது, இன்று நாட்டில் பல்வேறு குழப்பங்களுக்கும் திருப்பங்களுக்கும் வழிவகுத்துள்ளது
என்பது நிதர்சனமான உண்மை.
திருமணம்
என்றாலே, இன்று கிலோ கணக்கில் நகை அல்லது தங்கம் வேண்டுமென்ற மனநிலை மக்களிடையே உருவாகியுள்ளது.
சாதாரண குடும்பங்களில் நடக்கும் திருமணத்திற்கும் ஐம்பது பவுன் நகை, நூறு பவுன் நகை
என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
இதன் விளைவு,
நகையின் விலை வானளாவி நிற்கின்றது. தங்கம் பொரும்பான்மையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
பொருளாகும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்குத் தங்கத்தின் விலையேற்றமும்
ஒரு முக்கியக் காரணியாகும்.
இவ்வளவு
விலை உயர்ந்த பொருளை நூறு பவுன் அல்லது ஒரு கிலோ, இரண்டு கிலோ என திருமணத்தின் போது
வரதட்சணையாக கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் அதனை அப்படியேக் கொண்டு ஏதேனும் ஒரு வங்கி
லாக்கரில் வைத்து விடுகின்றனர். பல லட்சம் பணம் செலவழித்து வாங்கியப் பெருளை வங்கி
லாக்கரில் பாதுகாப்பாக வைப்பதற்குப் பல ஆயிரங்களைக் கொடுக்கின்றனர்.
இப்படி பலரும்
செய்வதின் மூலம் நாட்டில் பணத்தேக்கம் ஏற்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்றது.
இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
ஒருபுறம்
இது இப்படியிருக்க, மறுபுறம் பொன்னோ, பொருளோ இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொடுக்க
முடியாமல் எத்தனையோ குடும்பங்களில் எண்ணிலடங்காப் பெண்மணிகள் நாற்பது வயது ஐம்பது வயதாகியப்
பிறகும் திருமணம் என்பது கானல் நீராகி, முதிர் கன்னிகளாகவே காலத்தைக் கழிக்கின்றனர்.
இப்படிப்பட்ட பரிதாப நிலைக்கும் இந்த நகைதான் காரணியாகின்றது.
இப்போதெல்லாம்
நாட்டில் கொலையும் கொள்ளையும் சர்வசாதாரணமாகி விட்டன. தினமும்
காலையில் தினசரிகளைப் புரட்டிப் பார்த்தால்
நம் இதயத்துடிப்பே நின்று போகும் அளவுக்கு கொடூரக் கொலைகளையும் அதிர வைக்கும் கொள்ளைச்
சம்பவங்களையும் தாங்கியே வருகின்றன.
தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்துப் பார்த்தால் பட்டப்பகலிலும் பரபரப்புச்
செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியின் கழுத்தை
அறுத்துக் கொலை. மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணின் கழுத்தில்
கிடந்த இருபது பவுன் தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
பூட்டிய வீட்டை உடைத்துப் பீரோவில் இருந்த நூறு பவன் நகை கொள்ளை, அதிகாரியின்
மனைவியை கட்டி வைத்து வீட்டிலிருந்த ஒரு கிலோ, இரண்டு கிலோ தங்கம் அபேஸ்.
இப்படிப்பட்ட
செய்திகளெல்லாம் பஞ்சமில்லாமல் தினமும் பத்திரிகைகளுக்கும் தொலைகாட்சிகளுக்கும் தீனி
போட்டு கொண்டே இருக்கின்றன.
“தான் செத்து
மீன் பிடிப்பதால் என்ன பயன்” என்ற பழமொழியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் உழைத்து களைத்து சம்பாதித்ததை
எல்லாம் இப்படி பொன்னாக்கி காதிலும் கழுத்திலும் அணிந்தும் வீட்டு பீரோவில் அடுக்கியும்
வைப்பதினால்தானே உங்கள் விலைமதிப்பற்ற உயிருக்குக்கூட உலை வைக்கின்றனர்.
நீங்கள்
நகையின் மீது மோகம் கொண்டு உயிரையே காவு கொள்ளக்
கொடுப்பதினால் என்ன பயன் என்று எண்ணிப் பார்க்காதது ஏனோ?
நகை மீதுள்ள
மக்களின் மோகம் தங்களுக்கு இலாபகரமானது என அறிந்துள்ள நகைக்கடை முதலைகளும் மக்களை கவருவதற்காக
என்னென்ன விளம்பர உத்திகளை கையாள முடியுமோ அத்தனை உத்திகளையும் மிக அற்புதமாக கையாண்டு
வருகின்றனர்.
நகைக் கடைகளில்
விளம்பர உத்தி என்பது மீன்களை பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலைப் போன்றது. தூண்டிலில்
மாட்டிய மீனின் வாழ்க்கை எப்படி மாயமாகிறதோ அதைப் போன்றுதான் நகையின் மீது மோகம் கொள்ளும்
மனிதற்களின் வாழ்க்கையும் விலையற்றுப் போகின்றது.
நீங்கள்
காதிலும் கழுத்திலும் நகையை அலங்கரித்துக் கொண்டு வழியில் பயந்து பயந்து நடப்பதை விடவும்
வீட்டுப் பிரோவில் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளை அடிக்கி அடிக்கி வைத்து விட்டு தூக்கவும்
நிம்மதியுமின்றி தவிப்பதை விடவும் இவற்றிக்காகச் செலவழிக்கும் பணத்தை மாற்று வழியில்
பயன்படுத்தி பலருக்கும் பயன்படச் செய்ய ஏதேனும் வழியுண்டா என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்ட?
இல்லை… இல்லவே
இல்லை… என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அப்படி
எண்ணியிருந்தால் எத்தனை எத்தனையோ வழிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வழிகளில் நீங்கள் பயணித்து பலருக்கும் பயன்படக்கூடிய
வகையில் உங்கள் வருமானத்தைப் பயன்படுத்தி அமைதியான, நிம்மதியான, பாதுகாப்பான ஒரு வாழ்க்கைப்
பாதையில் நீங்கள் பயணித்திருக்கலாம்.
நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள
வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதனால்,
நகைக்காகவும் தங்கத்திற்காகவும் நாம் செலவளிக்கும் பணத்தைக் கொண்டு ஏதேனும் சிறு, பெரும்
தொழில் தொடங்கலாம். அதன் பேரில் எத்தனையோ பேர் வேலை வாய்ப்பு பெற்று எத்தனையோ குடும்பங்கள்
மகிழ்ச்சியாக வாழ முடியும். அதன் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கும் நல்ல வருமானம்
வரும்; கூடவே நிம்மதியான வாழ்வும் கிடைக்கும்.
தொழில் செய்யாததற்கு
விரும்பாதோர் குறைந்த பட்சம் தங்கள் கையிருப்பாக உள்ள நகைகளையும் கிலோ கணக்கான தங்கத்தையும்
விற்றுப் பணமாக்கி அதை ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெப்பாசிட் செய்யலாம்.
அதன் மூலம் அவர்களுக்கு வங்கி மூலம் நல்ல வட்டியும் கிடைக்கும்; எவ்வகையிலும் பயமில்லாத
மகிழ்ச்சியான. அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
மட்டுமின்றி
நம்மிடம் இருக்கும் நகையும் தங்கமும் பணமானால் நாட்டில் பணத்தேக்கம் ஏற்படாமல் பணப்புழக்கம்
ஏற்படுவதற்கு வழிவகைச் செய்யலாம். இதனால் விலைவாசிக் குறையும். ஏழை, எளிய மக்களின்
வாழ்வாதாரம் உயரவும் வழிவகை ஏற்படும்.
தொழில் துறையில்
மூதலீடு செய்வதற்கோ, வங்கியில் சேமிக்கவோ விரும்பதாவர்கள், விவசாயத்தில் நாட்டம் இருந்தால்
விவசாயத்தில்கூட முதலீடு செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில்
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதும் அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும்
உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் அமையும்.
எனவே, பெண்களாக
இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் பொன்னின் மீது கொண்டுள்ள அதீதமான பற்றையும் பிடிவாதத்தையும்
விட்டுவிட்டு அவற்றின் பயன்பாட்டை மிகவும் குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதிலும்
குறிப்பாக பெண்கள் நகைகளை அணிவது வெறும் அடையாளத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும்
இருக்க வேண்டுமே தவிர அது ஆடம்பரத்திற்காகவோ,
அலங்காரத்திற்காகவோ உரியதாக மாறிவிட கூடாது. அப்படியானால் அது அவர்களுக்கு இன்றைய காலச்சூழலில்
பெரும் ஆபத்தை விளைவிப்பதாகவே அமைந்து விடும்.
நகை மீதுள்ள
மோகத்தைக் குறைத்து நமது உயிரையும் பிற உடைமைகளையும் பாதுகாக்க முயற்சிப்போம். அதோடு
நாட்டு நலத்தின் மீது அக்கறைக் கொண்டு பணப்புழக்கத்தை ஏற்படுத்தி வீ லைவாசி
ஏற்றத்தைத் தடுத்து ஏழை, எளிய மக்கள் வாழ்வதற்கு வழிவகுத்து
ஏற்றமிகு இந்தியாவை உருவாக்குவோம்.
இக்கட்டுரை ஃபெட்காட் செய்திகள் காலாண்டிதழில் ஜனவரி – மார்ச் : 2014 இதழில்
பிரசுரமானது.
No comments:
Post a Comment