Monday, 27 February 2012

இந்தியாவிற்குத் தேவை இரும்பு மனிதர்கள்


                                  இந்தியாவிற்குத் தேவை இரும்பு மனிதர்கள்.
    
     இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள்,அனைவரும் சகோதர, சகோதரிகள். ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரேக் கொள்கை, எங்கும் எல்லோருக்கும் சமதர்மம். இதுதான் சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்.  இந்திய தேசத்தின் கொள்கை கோட்பாடும் அதுதான்.
     காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கம் அதன் பொருட்டு அதிகரிக்கும் தேவைகள் என பல்வேறுப் பிரச்சனைகள் உருவாகவே, ஒன்றுபட்ட இந்தியாவை பல மாநிலங்களாகப் பிரித்தனர் அன்றைய ஆட்சியாளர்களும் அரசியல் வல்லுநர்களும்.
     அந்தப் பிரிவினையும் எதன் அடிப்படையில் ஏற்பட்டதென்றால் நில அடிப்படையில் ஏற்படாமல் மொழி அடிப்படையில் ஏற்பட்டது.  அன்றைய அரசியல் தலைவர்கள் எவ்வித உள்நோக்கமோ அல்லது மாறுபட்ட சிந்தனையோ இல்லாமல் இந்த மாநிலங்களைப் பிரித்தனர்.
    அதன் மூலம் மக்களுக்கு மாநில வாரியான ஆட்சி, அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டன.  அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் வசதிக்கும் வாய்ப்புக்கும் தேவைக்கும் ஏற்ப எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
     ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறும் கட்சிகள் ஆட்சி அமைத்து தன்னாட்சி மாநிலங்களாகத் திகழ்ந்து வந்தன. என்றாலும், மத்திய அரசின் நேரடி கண்காணிப்பும் சில குறிப்பிட்ட அதிகாரமும் மாநில அரசுகள் மீது இருந்து கொண்டுதான் இருந்தன.
     மாநில அரசுகள் ஏதேனும் விஷயத்தில் வழி தவறவோ அல்லது தேச நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடவோ செய்தால் அதனைக் கண்டித்து நெறிப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தது. முன்பெல்லாம் மத்திய அரசு வழங்கும் அறிவுரைகளையும் வழி காட்டுதல்களையும் மாநில அரசுகள் தவறாமல் அப்படியே கேட்டும் நடைமுறைப்படுத்தியும் வந்தன.
      ஆனால், சமீபகாலமாக இந்த நடைமுறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  தேச நலனுக்கு அல்லது பிற மாநில அரசுகளுக்கு பாதகம் ஏற்படும் வண்ணம் ஏதேனும் ஒரு மாநில அரசு நடந்து  கொண்டால், அந்த அரசை நெறிபடுத்த  மத்திய அரசு வழங்கும் அறிவுரைகளையோ அல்லது நெறிமுறைகளையோ ஏந்த மாநில அரசுகளும் கண்டு கொள்வதில்லை.  அவற்றை ஏற்றுக் கொள்வதுமில்லை.
     சில நேரங்களில் மத்திய அரசின் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்த்து நின்று மாநில அரசுகள்  செயல் படுகின்றன. கூடவே, நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் தொடர்கின்றன.  இதனால், மத்திய அரசு மாநில அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திக்குமுக்காடிப் போகின்றது.
     மாநில அரசுகள் மத்திய அரசை அணுசரித்தோ அல்லது பணிந்தோ செயல்படாமல் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
      இதனால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே பெரும் குழப்பங்களும் கலகங்களும் ஏற்பட்டு  வருகின்றன. இந்தக் குழப்பங்களும் கலகங்களும் உள்நாட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  இதனால், உள்நாட்டுக்குள்ளையே ஒரு மாநிலத்திலுள்ள மக்கள் இன்னொரு மாநிலத்தில் அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் கட்டாயத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இந்த நடைமுறை இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
     இந்த மாறுபட்ட நடைமுறைகளுக்குச் சான்றாகப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டுவதற்கு இயலும். மத்திய அரசு தமிழகத்தில் நிறுவியுள்ள அணுமின் நிலையத்தைத் திறந்துச் செயல்பட வைப்பதற்குத் தமிழக அரசுப் போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது,
     தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முல்லைப் பெரியார் அணை மற்றும் தண்ணீர் பிரச்சனை, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடி , அத்திட்டத்தைச் செயல்படுத்த  விடாமல் இடையூறு செய்வது, கர்நாடக மாநிலத்தில் காவிரியிலிருந்துத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அளவு தண்ணீரை வழங்குவதற்கு மறுப்பது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு புதிய மாநிலத்தைப் பிரிப்பதற்காகச் செய்யும் போராட்டங்கள்,கலகங்கள், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு மறுப்பது என பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.
     இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகளாகும்.  இப்பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் தலையாயக் கடமையாகும்.  ஆண்டாண்டு காலமாக நடைபெறும் இப்பிரச்சனைகளுக்கு எவ்வித நிரந்தர தீர்வுகளையும் ஏற்படுத்தாமல் மத்திய அரசு ஒரு பொம்மை போல் கைகட்டி, வாய் பொத்தி மொளனம் சாதித்து வருவது வேடிக்கையானது.
     இரு மாநிலங்களுக்கு இடையே கொள்கை முரண்களோ, ஒப்பந்த மறுப்புகளோ ஏற்படும் போது அந்த இரு மாநிலங்களில் ஆளும் அரசுகள் அல்லது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த முரண்பாடுகளுக்கு முறையான, திடமான, தீர்க்கமான முடிவெடுத்து இரு மாநிலங்களுக்கு இடையேயும் சுமூக நட்புறவை ஏற்படுத்த வேண்டியது ஆளும் மத்திய அரசின் தவிக்க முடியாத பொறுப்புணர்ச்சியாகும். 
     ஒரு வேளை மத்திய அரசு ஏற்படுத்தும் சுமூக முடிவுக்கு மாநில அரசுகள் முரண்பட்டு நின்றால் அந்த அரசுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவோ அல்லது அந்த அரசையே பதவி நீக்கம் செய்யவோ வேண்டிய முழு அதிகாரமும் மத்திய அரசிற்கு உண்டு.
     இந்த அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தாமல் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளைக்கூட பூதாகரமாக்க விட்டு அவை கலவரங்களாக வெடித்து குழப்பங்களாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிப்பது எந்த வகையில் நியாயமானதாகும்?
     அந்த வகையில் தற்போது தமிழக – கேரள அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் இருமாநில அரசுகளும் தங்களுக்குள் ஒங்வொரு நியாயத்தைக் கூறிக்கொண்டு தான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு என்ற பழமொழிக்கு ஏற்ப சொல்லாலும் செயலாலும் தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்றன.
     இந்தப் பிரச்சனைச் சம்பந்தமாக நிபுணர் குழு அந்த அணையை ஆய்வுச் செய்து அதன் உறுதிப்பாடு, பயன்பாடு,காலப்பழக்கம் போன்றவைப் பற்றிய தெளிவான அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.  அதோடு, உச்ச நீதிமன்றமும் இந்த அணை பிரச்சனைப் பற்றிய தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.
     இவ்விரு  அடிப்படை ஆதாரங்களையும் சாதகமாக வைத்துக் கொண்டு மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்து சுமூகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  ஒரு வேளை மத்திய அரசு எடுக்கும் நியாயமான முடிவுக்கு ஏதேனும் ஒரு மாநில அரசு மாறுபட்டு, முரண்பட்டு போகுமேயாயின் அந்த அரசை கலைப்பதற்குக்கூட மத்திய அரசு தயங்கக் கூடாது.
     அண்டை மாநிலமான கேரளத்தில் தமிழக மக்கள் அம்மாநில தலைநகரமான திருவனந்தபுரம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்து உள்ளனர். அது போலவே கேரள மாநில மக்கள் குமரிமாவட்டம் தொடங்கி தலைநகராம் சென்னை வரை வியாபித்துள்ளனர்.
     இப்படி, இரு மாநிலங்களிலும் தமிழ், மலையாள மக்கள் பரஸ்பரம் வியாபித்து சகோதரர்கள் போல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒர் அணைப் பிரச்சனையைப் பூதாகரமாக்கி இரு மாநில மக்களையும் ஒருவருக்கொருவர் மோத விட்டு ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் சிறைபிடிப்பு, முற்றுகை, மலையாளிகளையும் தமிழர்களையும் விரட்டியடிப்பு என கலவர பூமியாக்கி குழப்பத்திற்கு மேல் குழப்பம் நடந்து கொண்டிருக்கும் போது மத்தியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் பாவித்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
     இவ்விரு  மாநிலங்களுக்கிடையே எழுந்துள்ள ஒரு சிறியப் பிரச்சனைக்கு தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயல   வில்லை எனில் இந்த அரசே, மாநில அரசுகளைக் கலைப்பதை விட்டுவிட்டு தானாகவே மத்திய அரசைக் கலைத்து விடலாம்.
     சுயமாக முடிவெடுக்கும் திறனும் தான் எடுத்த முடிவை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நடைமுறைப் படுத்தும் சக்தியும் வாய்ந்த தலைவர்கள் மத்திய அரசில் இருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு காரணத்தால் மத்திய அரசின் தீர்க்கமான, நியாயமான கொள்கையை அல்லது தீர்மானத்தை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அந்த அரசுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் வல்லமை வாய்ந்தத் தலைவர்கள்தான் இந்தியாவிற்கு இப்போது தேவையாக உள்ளனர்.
      இவ்விரும்புக் கரம் படைத்தத் தலைவர்கள் மத்தியில் ஆட்சி செய்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது.  மாநில அரசுகளிலும் இரும்புக் கரம் படைத்தத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே மாநிலங்களில் ஏற்படும் தீவிரவாத மற்றும் பயங்கரவாதங்களைக்கூட அடக்கியாள முடியும்.
இந்தியாவில் இரும்பு மனிதராக இருந்த சர்தார்வல்லவாய்பட்டேலுக்குப்
பிறகு இன்னும் அவர் போல் ஓர் இரும்பு மனிதர் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட இரும்பு மனிதர்களின் தேவை இப்போது இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட இரும்பு மனிதர்கள் தோன்றினால் மட்டுமே இனி இந்தியாவை பல்வேறு கலகங்களிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் காப்பாற்ற இயலும்.
                நன்றி: சமுதாய நண்பன் - ஜனவரி 2012.













     
  

     

Sunday, 19 February 2012

மீண்டும் வேண்டாம் கற்கால வாழ்க்கை.


             மீண்டும் வேண்டாம் கற்கால வாழ்க்கை

     இப்பூவுலகில் மனித பிறவி என்பது இறைவனின் அளப்பரியக் கொடை.  சிரித்தல்... சிந்தித்தல்... பகுத்தறிதல்...செயல்படுதல்... முன்னேறுதல்... இவை அனைத்தும் இறைவன் மனிதப் பிறவிக்குக் கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்கள்.
     இந்த வரப்பிரசாதங்களைக் கொண்டுதான் அன்று காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று நாடு, நகரங்களிலும் மாடமாளிகைகளிலும் வாழ்கின்றான்.  அன்று இலைகளையும் தளைகளையும் உடுத்த மனிதன் இன்று,  பட்டாடைகளைக் கட்டி மகிழ்கின்றான்.  அன்று கட்டிச் சோறுடன் கால் கடுக்க நடந்த மனிதன் இன்று விமானங்களில் மின்னல் வேகத்தில் நாடுவிட்டு நாடு பயணிக்கின்றான்.  அன்று விண்ணைக் கண்டு வியந்து நின்ற மனிதன் இன்று, அங்குச் சென்று விளையாடவும் செய்கிறான்.  அன்று கல்லை உரசி நெருப்பை உருவாக்கிய மனிதன் இன்று வெள்ளத்திலிருந்தும் காற்றிலிருந்தும் சூரிய சக்தியிலிருந்தும் மின்சாரத்தைக் கண்டுபிடித்து இரவையும் பகலாக்கி  இன்புற்று வாழ்கின்றான்.  இப்படி, அடுக்கிக் கொண்டேப் போனால் ஆயிரமாயிரம் விஷயங்களை அடையாளம் காட்டலாம்.
     இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் மனிதனின் அதீதமான அறிவின் ஆற்றல் இன்றி வேறு என்னவென்று இயம்ப  இயலும்.  இந்த மாற்றங்கள், இவ்வையகத்தில் வரும் என்பதை அன்றே நம் நாட்டு ஞானிகள் உணர்ந்துள்ளனர்.  அதனால்தான் பாட்டுக்கொரு பாரதிகூட
                    வானையளப் போம்கடல் மீனையளப்பேம்
                     சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
                     சந்தி தெருபெருக்கும் சாத்திரம் கற்போம்    
என்று அன்றே உரைத்திட்டான்.  அவன் உரைத்தவை அனைத்தும் அப்படியே பலித்து விட்டன.
     இவையனைத்தும் ஒருபுறம் இப்படியிருக்க, மறுபுறம் இதுவரை கடவுளால் மட்டுமே கையாளப்பட்ட படைப்பின் ரகசியத்தைக் கூட இன்று மனிதன் கையகப்படுத்தி விட்டான். அதன் விளைவு இன்று டெஸ்டீயூப் [சோதனைக் குழாய்] குழந்தைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன.  இத்தனை விந்தைகளுக்கும் சொந்தக்காரன் மனிதன். இதனை யாரேனும் மறுக்க முடியுமா?
     உலகம் தோன்றிய அன்றிலிருந்து இன்று  வரைப் படிப்படியாக இத்தனை வளர்ச்சியைக் கண்டுள்ள மனிதர்களில் சிலர் இன்றும்  அறிவீலிகளாக இருப்பது வியப்பிற்குரியது.
     நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப நாளுக்கு நாள் புதிய புதிய கண்டு பிடிப்புகளும் விஞ்ஞான விந்தைகளும் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.  இவற்றை ஏற்றுக் கொள்வதும் பயனுடையதாக்கிக் கொள்வதும் மனிதனின் கடமையாகும்.  இவற்றையெல்லாம் பயன்படுத்த மாட்டோம் இவையனைத்தும் மனிதனுக்குத்  தீங்கு விளைவிப்பவை என ஒதுக்கி விடுவது மனிதனின் மடமையாகும்.  கூடவே மனிதன் நவீன காலத்தை விட்டு பின்நோக்கி மீண்டும் கற்காலத்தை நோக்கியே  செல்கிறான் என்பதற்கு அடையாளமாகும்.
     கொடும் காற்றும் அடைமழையும் பொங்கி எழும் பூகம்பமும் சரிந்து விழும் மலையும் சீறியெழும் கடலும் இயற்கையாய் எழும் அபாயங்கள். இவை நாள் தோறும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும்.  இவற்றால் உண்டாகும் உயிர்ச் சேதங்களும் பொருள் நாசங்களும் அளவிடற்கரியன.  இவற்றைகூட ஓரளவுக்கு முன் கூட்டியே ஆய்ந்தறிந்து அவற்றின் ஆபத்துகளை உணர்ந்து மக்களை எச்சரித்து அபாயங்களிலிருந்து விலக்கி நிறுத்த எத்தணக்கின்றனர் விஞ்ஞானிகள். நூறு சதவீதம் இல்லையென்றாலும் பத்து சதவீதமாவது தற்காத்துக் கொள்ளும் சக்தி இன்றைய அறிவியல்  கண்டுபிடிப்புகளுக்கு உண்டு என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
     இப்படி, மனிதனின் அறிவுத் திறனும் அறிவியியல் வல்லமையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உந்து சக்திகளாக இருக்கும் போது அய்யய்யோ... இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது... இவை அனைத்தும் நம்மை பயமுறுத்த வரும் பூச்சாண்டிகள்... என்று சிறுபிள்ளைத் தனமாக அப்பாவி மக்களை அச்சுறுத்தி, அவர்களை இவற்றிற்கு எதிராக போர் தொடுக்கவும் போராட்டம் நடத்தவும் தூண்டி விடுவது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்பதை உணர வேண்டும்.
     அப்படிப்பட்ட ஒரு பூச்சாண்டியைத்தான் இன்றுக் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏவி விட்டுள்ளனர் சில அதி அபூர்வ புத்திசாலிகள். ஏன் இந்தப் பூச்சாண்டி? எதற்கு இந்த ஆவேசம்? யார் இதற்கு மூல காரணம்? என்பதை எல்லாம் ஆய்ந்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அந்த அளவுக்கு அவகாசமும் கொடுக்கக் கூடாது.
     கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தீர்த்தோம் என்பதல்ல முக்கியம்; ஆயிரக்கணக்கான அறிவியல் வல்லுநர்களின் ஆய்வு மூலதனம் முடக்கப்படுகிறதே என்பதுதான் வேதனை.  லட்சக்கணக்கான விஞ்ஞானிகளின் மூளை முடமாக்கப்படுகிறதே என்பதுதான் கோபம். இந்த நாட்டின் முதுகெலும்பான தொழிற்சாலைகளின் மூடு விழாவிற்கு வித்திடுகிறார்களே என்பதில்தான் ஆவேசம்.
     இவ்வளவு அறிவும் ஆற்றலும் கொண்டு இயற்கையைக் கூட கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும் விஞ்ஞானிகள், தாங்களாக உருவாக்கும் ஓர் அணு ஆலையைப் பாதுகாப்பாக கட்டமாட்டார்களா? எப்படி அதன் மூலம் கேடு விழைவிப்பதற்கு எண்ணுவார்கள்.  அப்படி கேடு விளைவிக்க எண்ணுவார்களே ஆயின் அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் நாட்டு மக்களை விட அந்த அணு உலையின் உள்ளே வேலைச் செய்யும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளாகத்தானே இருக்க முடியும்.  இதனை ஏன் இந்த அதிபுத்திசாலிகளான போராளிகள் சிந்திக்கவில்லை.
     கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏதும் அறியா அப்பாவி மக்களை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு  வேண்டாம் என்பார்களா?  மின்சாரத்தால் இயங்கும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் கற்கால மக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்களா? அவர்கள் தங்களின் வீடுகளில் வரவேற்பு அறை முதல் கழிவறை வரை ஏர்கண்டிஷன் வசதி செய்துள்ளனர்.  பயணிக்கும் காரிலிருந்து படுத்துறங்கும் அறை வரையிலும் குளுகுளுவென்றே இருக்கும்.  ஏன் அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கூட மின்விசறியும், ஒலி பெருக்கியும் பயன்படுத்துகிறார்களே இவை எப்படி இயங்குகின்றன? மின்சாரம் இல்லாமல் வெறும் தண்ணீரில் அல்லது காற்றினாலா இயக்குகிறார்கள்?
     அவர்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு அடுத்தவர்கள் எதுவும் அனுபவிக்காமல் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணும் இவர்களுக்குச்  சரியான பாடம் புகட்ட வேண்டும்.  அதற்கு  நாட்டு மக்களை விட அரசாங்கமே நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
     ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களின் ஒட்டு மொத்த பாதுகாவலாகத் திகழ வேண்டியது  அந்நாட்டு அரசாங்கத்தின் கண்ணியமிகுக் கடமையாகும். அந்த வகையில் மக்களின் வசதி, வாய்ப்புக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் மனப்பூர்வமாகவோ அல்லது பிறரின் தூண்டுதலினாலோ முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்றால் அதனை முடிவுக்குக் கொண்டு வந்து தீட்டிய திட்டங்களை திடமாகச் சொயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
     அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அரசு நிறுவியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்துச் செயல்பட வழிவகைச் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக அரசைச் சார்ந்ததாகும்.  போராட்டக்காரர்களின் முழுப் பின்னணியையும் துருவி ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அணுமின் நிலையத்தை செயல்படச் செய்ய வேண்டும்.  இது தமிழக அரசின் தயையாயக் கடமையாகும்.
     ஒரு வேளை தமிழக அரசு, தமிழக மக்களின் ஓட்டு வங்கிக்காக, தற்போது நடந்து வரும் சமூக விரோதிகளின் தூண்டுதலால் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தோ அல்லது மொளம் சாதித்தோ கைகட்டி, வாய் பொத்தி இருக்குமேயாயின், மத்திய அரசு நேரடியாக களத்தில் குதித்து தனது இரும்புக் கரத்தைக் கொண்டு இப்போராட்டத்திற்கு முடி கட்ட வேண்டும்.
     அதற்காக, ஒரே நாளில் கூடங்குளத்தில் இராணுவ வீரர்களை அனுப்பி அப்படியே போராட்டக்கார்களை அள்ளி எடுத்து அப்புறப்படுத்தி விட்டு அணுமின் நிலையத்தை செயல்பட வைக்க வேண்டும்.  இதைச் செய்வதற்கு மத்திய அரசும் தயக்கம் காட்டுமே ஆயின் தற்போது இந்தப் போராட்டக்காரர்களுக்குப் பின்துணை வகித்துக் கொண்டிருக்கும் அன்னிய சக்திகள் மிக சுலபமாக நம் நாட்டிற்குள் ஊடுருவி விடுவர்.  அதோடு நம் நாட்டை மூண்டும் அடிமைப்படுத்தி விடுவார்கள்.
     எனவே, போராட்டக்காரர்கள் மீண்டும் நம் நாட்டை கற்காலத்திற்கு இட்டுச் செல்லாமல் போராட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும், இல்லையேல் மத்திய அரசு நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி அன்னிய தீய சக்திகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி மீண்டும் நம்மை அடிமையாக்காமல் காக்க வேண்டும்.
                       நன்றி: சமுதாய நண்பன் டிசம்பர். 2011.



      .