Monday, 23 March 2026

தனித்துக் களம் காணும் த.வெ.க: வரலாற்றை விஜய் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாரா?

      தனித்துக் களம் காணும் த.வெ.க:  வரலாற்றை விஜய் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாரா?

முனைவர் கமல. செல்வராஜ்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்நோக்கிய, எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்குக் காரணம், இத்தனை ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு வாக்களித்ததால் ஏற்பட்டுள்ள வெறுப்பும், புதிதாக உதயமான நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியுமாகும்.
புதிய உதயம், தமிழக இளைஞர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை உருவாக்கியது. மிக விரைவாக எவ்வளவு எழுச்சியை உருவாக்கியதோ, அதே வேகத்தில் கரூர் கொடுந்துயரம், ஜனநாயகன் திரைப்படம் வெளியிடத் தடை, மனைவியின் விவாகரத்து விவகாரம், புதிய வரவிற்குள் ‘திரி(ஷ)சங்காய்’ இன்னொரு வரவு உட்பட பல்வேறு வீழ்ச்சிகளும் குறுகியக் காலத்திற்குள் அரங்கேறின.
எனினும், ஏதேனும் மாநில அல்லது தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட்டு, புதிய வரவின் தலைவர், முதல்வராவார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
புதிய உதயத்தோடு கைகோர்க்க, கையும், இலையும், மலரும் இமயத்தளவு முயற்சித்தன. அவை அனைத்தையும் உதறிவிட்டு, ‘நானே தலைவன்’, ‘நானே முதல்வன்’ என்ற முடிவை, தேர்தல் களம் அறியாத இளம் கன்று எடுத்துள்ளது. தனித்துக் களம் காண்பது தன்மானம் தான். ஆனால், ஆழம் தெரியாமல் காலை விடுவது அவமானம் என்பதை உணர்வது தலைவன் கடமையன்றோ?
ஒற்றைத் தலைவனாய், முதல்முறையே முதல்வனாகி விடவேண்டும் என்னும் அவா அவசியம் தான். ஆனால், அதற்கு முன் எந்தெந்த நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து, என்னென்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதும் மிக முக்கியம்.
நடிப்புத் துறையில் திலகமாகத் திகழ்ந்து, காங்கிரஸ் கட்சியில் பிரபலமாக விளங்கிய சிவாஜிகணேசன், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் 1988 இல் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் அரசியல் கட்சி, எதையும் சாதிக்காமல் மாய்ந்து, தேய்ந்துப் போனதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நடிப்பில் தனி முத்திரைப் பதித்து, தி.மு.க. பிரமுகராயிருந்த டி. இராஜேந்தர் 1991 தனியாக ஆரம்பித்த தாயக மறுமலர்ச்சி கழகம், தமிழகத்தில் தடம் பதிக்காமல், மக்கள் இதயத்தில் இடம் பிடிக்காமல் இடறிப்போனதை உணர வேண்டும்.
திரையுலகில் பிரபலமாகவும், நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயலாற்றிய சரத்குமார், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஏக சிந்தையில் 2007 இல் தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இன்று பா.ஜ.க.,விடம் அழிந்து போயுள்ளதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் திரையுலகில் பலத் தளங்களில் முத்திரைப் பதித்த பாக்கியராஜையும், அரசியல் ஆசை விட்டு வைக்கவில்லை. அவரும் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை 1989 இல் தொடங்கினார். அதுவும் தொடங்கிய வேகத்தில் முடங்கிப்போன வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
நடிப்பில் தனித்துவத்தை நிலைநிறுத்திய, கமலஹாசனையும் முதல்வர் ஆசை தூண்டியது. அதன் விளைவு 2018 இல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் உதயமானது. முதல்வரல்ல, சட்டமன்ற உறுப்பினராவதற்கே தகுதியற்று போனார் அவர்.
தமிழரைத் தமிழர் ஆள வேண்டும் என்னும் கோஷத்தை முன்னிறுத்தி, திரைத்துறையை முற்றும் துறந்து 2010 இல் நாம் தமிழர் கட்சியை தமிழகத்தில் தடம் பதிக்க வைத்தார் சீமான். அதன் பிறகு நடந்த அத்தனை தேர்தல்களையும் தன்மானத்தோடுத் தனித்தேக் களமாடினார். ஆனால், ஒன்றிலும் இன்று வரை கரைசேர விடாமல் கரிசனத்தோடு உள்ளனர் தமிழக மக்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் புதிய உதயம்.
இவர்கள் அனைவருக்கும் மாற்றாக உள்ளனர் இருவர். அவர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கேப்டன் விஜயகாந்தும். இவர்களில் முன்னவர் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன் வேறு அரசியல் கட்சியில் பல ஆண்டுகள் பயணித்து, அரசியல் ஞானமும், தந்திரமும் முழுமையாகப் பெற்றிருந்ததினால், அவரது அரசியல் பயணம் முழு வெற்றிபெற்று பத்தாண்டுகள் தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக பதவி வகித்தார்.
கேப்டன் விஜயகாந்த் அரசியலில் ஓரளவிற்கு வெற்றி பெற்றார் என்றுதான் கூற முடியும். அதுவும் எடுத்த எடுப்பில் நானே தலைவன் நானே முதல்வர் என்று தேர்தல் களம் காணாமல், அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்ததால் அவ்வளவும் சாதிக்க முடிந்தது. அவரது காலத்திற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் அக்கட்சி எப்பாடு படுகிறது என்பது ஊரறிந்த உண்மை.
புதிய வரவு, இந்த முன்னுதாரணங்களை ஒரு முறையாவது புரட்டிப் பார்த்திருந்தால், தங்களோடு உறவாட தவமாய் தவம் கிடந்த கையோடும், இலையோடும், பூவோடும் கைகோத்து இம்முறை சட்டமன்றத்திற்குள் பாதம் பதித்துவிட்டு, அடுத்த முறை மக்கள் விரும்பினால் முதல்வர் நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, சினிமா பாணியில் எடுத்த எடுப்பில் ஒரேயடியாக முதல்வர் ஆக வேண்டும் என்னும் ஆசைக்கு மீசை முளைக்குமா? என்பதற்கு தமிழக வாக்காளர்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
எழுத்தாளர், அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21- 03 -2026 அன்று ieTamil இணைய இதழில் பிரசுரமானது)
All reactions:
Thirupa

No comments:

Post a Comment