Saturday, 6 September 2025

ஓணம் சொல்லும் மகாபலி கதை!

 ஓணம் சொல்லும் மகாபலி கதை!

முனைவர் கமல. செல்வராஜ்.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மலையாள மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும், தங்களின் வசந்த விழாவாகக் கொண்டாடும் ஓணப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தில் கோலாகலமாக நடக்கிறது. கேரளாவில் ஆண்டுதோறும் சிங்கம் மாதத்தின் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோண நட்சத்திரம் வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக இப்பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இப்பண்டிகை மக்களின் பொழுதுப் போக்கிற்காக மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இதற்குள், அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியத் மிக முக்கியமானத் தத்துவங்கள் ஏராளம் நிறைந்துள்ளன.
ஓணம் பிறந்த கதை.
அசுரக்குலத்துதித்து, நீதியையும், தர்மத்தையும் நிலைநிறுத்தி நல்லாட்சிப் புரிந்ததால், நாட்டு மக்களால் போற்றிப் புகழப்பட்டவர் மகாபலி மன்னன். பூலோக ஆட்சியில், மக்களிடம் கிடைத்த ஏகோபித்த ஆதரவு, அவரை, வெல்வதற்கு எவருமில்லை என்னும் ஆணவத்தின் உச்சத்திற்குக் கொண்டுச்சென்றது. அதனால், மன்னருக்கு, தேவலோகத்தையும் அடக்கியாள வேண்டும் என்னும் பேராசைப் பற்றிக் கொண்டது. அதனால், தேவர்களோடுப் போர் தொடுப்பதற்குத் தயாரானார்.
அசுரக் குலத்தைச் சார்ந்த ஒருவர், தங்களுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து, தங்கள் மீது போர் தொடுப்பதற்கும் தயாரானதைத் தாங்கிக் கொள்ள இயலாத தேவர்கள், நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, தங்களை, அசுரனிடமிருந்து பாதுகாக்குமாறு முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன அவதாரமெடுத்து, பூலோகம் வந்தார். பின்னர் நேராக யாகத்திலிருந்த மகாபலி மன்னனிடம் சென்று, தமக்கு பூலோகத்தில் யாகம் நடத்துவதற்கு மூன்றடி மண் வேண்டுமென்று யாசித்து நின்றார்.
தன்முன் யாசித்து நிற்பவர் யார் என்பதை ஆய்தறியும் ஞானமற்ற அவ்வசுரன், வாமனனிடம், மூன்றடி மண் தானே, தாராளமாக எடுத்துக்கொள் என ஏளனமாகவும் இளக்காரமாகவும் பதிலுரைத்தார். தமது, தவ வல்லமையால், மகாபலி முன், யாசித்து நிற்பவர் யாரென்பதை உணர்ந்த, அசுரக்குலத்தின் குரு சுக்கிராச்சாரியர், தடுத்தும், மகாபலி செவிமடுக்காமல், தான் கொடித்த வாக்குறுதியில் உறுதியாக நின்றார்.
தமது சுயரூபத்தால் மண்ணையும் விண்ணையும் இரண்டடியால் அளந்த மகாவிஷ்ணு, மூன்றாவதடியாக ஆணவத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மகாபலியின் தலையில், தன் காலை வைத்து பாதாளத்தில் தாழ்த்தினார். அப்போது, மகாவிஷ்ணுவிடம், மகாபலி யாசித்துப் பெற்றது தான், ஆண்டுக்கு ஒரு முறை, தன்னை நேசித்த மக்களைச் சந்திக்க பூலோகம் வர அருள வேண்டும் என்னும் வரம். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை தங்களுக்கு நல்லாட்சி வழங்கிய மன்னன் மகாபலி, தங்களை சந்திக்க வரும் நாளை ஓணப்பண்டிகையாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மிகவும் விமரிசையாக இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
கதை கூறும் தத்துவம்.
ஓணம் பற்றி பல்வேறு கதைகளும் சம்பவங்களும் கூறப்பட்டாலும். இக்கதை மட்டுமே மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்து பரவலாகப் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் இக்கதையினுள் அடங்கியுள்ள, அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியியல் தத்துவங்களாகும்.
அதில் முதலாவது, நாடாளும் மன்னன், மக்களின் நலனுக்காக நல்லாட்சி நடத்தினால், மக்கள் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை உணர்த்துவது. அதைத் தொடர்ந்து மன்னன், எவ்வளவுதான் நல்லாட்சி நடத்தினாலும், அவனுக்கு ஆணவம் தலைக்கேறி விட்டால் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டுவது.
தன்னை விட வலிமை மிக்காரிடம் வம்பு செய்தால், ஏதேனும் வகையில் தோல்வி நிச்சயம் என்பதை அறிவிப்பது. எதையும் ஆய்ந்தறியாமல் வாக்குறுதியளிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் அங்கே ஆபத்து சூழ்ந்திருக்கும் என்பதை வலியுறுத்துவது. எவருடைய உருவையும் கண்டு ஏளனம் செய்யாதிருத்தல். எந்தச் சூழ்நிலையிலும் குருவின் அறிவுரையை உதாசினப்படுத்தக் கூடாது.
எவருக்காகவும், ஒருவருக்குக் கொடுத்த வாக்குறுதியை வாப்பஸ் பெறாமல், அதில் உறுதியாகயிருந்து நிறைவேற்றுவது. தங்களுக்கு நல்லாட்சி நல்கிய மன்னனுக்கு நன்றி மறவாமலிருப்பது. உழைப்பிற்கும் நேர்மைக்கும் மரியாதை செலுத்துவது. இவையே இப்பண்டிகை மூலம் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணர்த்தும் தத்துவங்களாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை.
தமிழகத்தில் தீபாவளியை எப்படி உலகத் தமிழர்கள் அனைவரும் எவ்வித சாதி, மத, இன, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுமின்றி கொண்டாடுகிறார்களோ அது போன்றே கேரளாவில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மக்களும் எவ்வித வேற்றுமையுமின்றி ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த ஒற்றுமைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில், ஓணப்பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகள் விளங்குகின்றன. அவற்றில் கயிறு இழுத்தல், களரி, வள்ளக்களி, புலிக்களி, பெண்களுக்கு மட்டுமே உரித்தான, அனைவரும் கசவு எனப்படும் தூய வெண்ணிற சாரி அணிந்து, வட்ட வடிவில் நின்று பாடல்பாடி, கைதட்டி நடனம் ஆடும் கைகொட்டுக் களி அல்லது திருவாதிரை களி மற்றும் பாரம்பரிய நடனப் போட்டிகள், ஓண ஊஞ்சல், அத்தப்பூ கோலம் போடுதல் போன்ற அனைத்து விளையாட்டுகளும் கேரளமக்கள் அனைவரும் ஒருவரே என்பதற்குப் சான்றுப் பகர்வனவாகும்.
இவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய, இப்பண்டிகை, தமிழகத்தில் மன்னராட்சி நடந்த காலகட்டத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன், மதுரையில் சிறப்பாகக் கொண்டாடயிருக்கிறார் என்ற தகவல் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதுபோன்று தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் இப்பண்டிகைப் பற்றியச் செய்திகள் உள்ளன. ஆனாலும் இப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தின் தேசியப் பண்டிகையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மங்களகரமாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குத் தமிழக மக்களின் பொன்னோண வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 05-09-2025 அன்று IE Tamil E Journal இல் பிரசுரமானது.)

No comments:

Post a Comment