அறம் போதிக்கும் பல்கலைக் கழகத்தின் அவலம்.
தலைமை இல்லாமல் தடுமாறும் அறம் போதிக்கும் பல்கலைக் கழகம்; தமிழக அரசு கவனிக்குமா?
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
அப்படிப்பட்டக் கல்விக்கு அடித்தளம் அமைப்பது ஆசிரியர்களின் தலையாயக் கடமை. அதற்காக அறிவு, ஆற்றல், தியாகம், அறம், அர்பணிப்பு, தன்னலமின்மை ஆகியவற்றைக் கொண்ட கண்ணியமிகு ஆசிரியர்களை உருவாக்குவது அரசின் உன்னத நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் 2008 இல், தமிழக அரசால் சென்னையில் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம். இது, இந்தியாவில் ஆசிரியர் கல்விக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகமாகும். அதுவரையிலும் தமிழகத்திலுள்ள வேறுவேறு பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து பி.எட். கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, இப்பல்கலைக் கழகம் செயல்படத் தொடங்கியது.
ஆரம்பத்தில், இதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என சுமார் 746 கல்லூரிகள் இயங்கி வந்தன. அதன் பின்னர் பல்கலைக் கழத்தின் நிர்வாகச் சீர்கேடு, சுயநிதி கல்லூரிகளுக்குப் பல்கலைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட தேவையற்ற நெருக்கடிகள் உட்படப் பல்வேறு காரணங்களால், தொடர்ந்து ஒவ்வொரு பி.எட். கல்லூரிகளாக மூடப்பட்டு, தற்போது சுமார் அறுநூறுக்கும் குறைவான கல்லூரிகளே செயல்படுகின்றன.
தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் மிக முக்கியப் பொறுப்புகளான துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று பொறுப்புகள், பல ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளன. இதனால், இப்பல்கலைகழகம் எண்ணற்ற நிர்வாகக் குளறுபடிகளுக்குள் சிக்குண்டுள்ளது. இதனால், இதன் கீழ் செயல்படும் பி.எட். கல்லூரி நிர்வாகிகளும் அவற்றில் படிக்கும் மாணவர்களும் நாள்தோறும் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அளவேயில்லை.
கடைசியாக இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் 2022 நவம்பர் மாதம் பணி நிறைவுற்றுள்ளார். அதன் பிறகு, கடந்த மூன்றாண்டுகளாகத் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தருக்கு அடுத்து மிக முக்கியப் பொறுப்பானப் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் 2016 ஜூன் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பொறுப்பில் இதுவரை நிரந்தர பதிவாளர் நியமிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஒன்பது ஆண்டுகளில், இப்பல்கலைக் கழகத்தில், வேறுவேறு துறைகளில் பணிபுரிந்த பேராசிரியர்கள் ஏழு பேரை மாற்றி மாற்றி பொறுப்பு பதிவாளர்களாக நியமித்துள்ளது தமிழக அரசு.
இவர்களில் ஒருவர் மீது, பதிவாளர் பொறுப்புக்குரியக் கல்வித் தகுதியும் பணி அனுபவமும் இல்லாமல், போலியான சான்றிதழ்கள் மூலம் நியமிக்கப்பட்டார் என்றக் குற்றச்சாட்டு எழுந்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதனால், அவர் அப்பொறுப்பிலிருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார். ஒருவர் மீது, நிர்வாக சீர்கேடு குற்றச்சாட்டு எழுந்து அதுவும் நீதிமன்றத்தில் வழக்காகி, அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். இன்னொரு பதிவாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, வழக்குப் பதிவானதினால், பதிவாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இப்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பல்கலைக் கழகத்தில், தகுதியும் திறமையும் வாய்ந்த நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால், பல்கலைக் கழகத்திற்குள் அரங்கேறி வரும் நிர்வாக அசிங்கங்களுக்கு அளவேயில்லை.
இவ்விரு முக்கியப் பொறுப்புகளின் பரிதாப நிலை இப்படியிருக்க, மூன்றாவது முக்கியப் பொறுப்பாகிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பு 2019 மே மாதத்திருந்து, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தற்காலிகப் பொறுப்பாகவே இருக்கிறது.
ஒரு பல்கலைக் கழகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய மூன்று முக்கியப் பொறுப்புகளும் முடமாகியிருப்பதால், பல்கலைக் கழகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் செயலிழந்து, ‘கோமா’ நிலையில் உள்ளன.
இதனால், பல்கலைக் கழகத் தேர்வின் முடிவுகள் (Result) வெளியாகி, மாணவர்களுக்கு, ஒருசில நாட்களில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள், பல்வேறு பிரச்னைகளை எழுப்பியப் பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இதனால் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் உரியக் காலத்தில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு இயலாமல், அரிதாகக் கிடைத்த வேலை வாய்ப்புகளையே இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல், பல்கலைக் கழகப் பட்டம் (Degree) வழங்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் வேலைவாய்ப்புகள் வரும் போது ஏதேனும் பிரச்னையை உருவாக்குமா? என்ற ஐயப்பாட்டை மாணவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இதுபோன்று, நாள்தேறும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளும் ஐயப்பாடுகளும் இப்பல்கலைக் கழகம் மூலம் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளுக்கும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களை விரைவாக நியமித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் மாண்பை காத்து, மாணவர்களின் சிரமங்களைப் போக்குவது தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநரின் தலையாயக் கடமையாகும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 18-09-2025 அன்று ie Tamil E-Journal இல் பிரசுரமானது.)
All reaction

