விடுதலை வேள்வியில் குடும்பத்தையே அற்பணித்த தியாகி விஸ்வநாத தாஸ்.
முனைவர் கமல. செல்வராஜ்
பாரதத்தின் விடுதலைக்காகத் தங்களை அற்பணித்துப், போதிய அளவிற்கு அங்கீகரிக்கப்படாமல் வாழ்ந்து மறைந்த தியாகச்சுடர்கள் ஏராளம்… தாராளம்… அப்படிப்பட்ட, அறியப்படாத ஆளுமைகளின் மறைக்கப்பட்ட… மறுக்கப்பட்ட… அறியப்படாத.. வாழ்வியலை, ஆய்வுச் செய்து, அவர்களை இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன், பாரததின் 75 வது சுதந்திரத்தினத்தில் மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டது. அதன் வாயிலாக, தேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான மறைக்கப்பட்டத் தியாகிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்திலிருந்து, விடுதலைக்காகத் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையே விடுதலை வேள்வியில் ஈடுபடுத்தியவர் தியாகி விஸ்வநாத தாஸ். தமிழகத்தின் சந்துபொந்தெல்லாம், தன் குடும்பத்தாருடன் நாடகம் நடத்தி, பாமரர்களின் மனதில் சுதந்திரப் பொறியைப் பரவச் செய்த, இந்தத் தியாகி விஸ்வநாத தாஸ்ஸின், வீரம் செறிந்த வரலாற்றை யாரறிவார்?
படிப்போரின் உதிரத்தை உறைய வைக்கும் அவரின் வாழ்க்கை வரலாற்றை, இன்று சுதந்திரக் காற்றை சுதந்திரமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் எத்தனைபேர் அறிவார்கள்? சுதந்திரத்திப் போரின் வீரியத்தை, கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, தாய்நாட்டின் பழமை பெருமைக்குப் பங்கம் விளைவித்து, அன்னிய நாட்டுக் கலாச்சாரத்திற்குத் தங்களை முழுமையாக அடிமைகளாக்கிக் கொண்டிருக்கும், நம் இளைஞர்களின் மனதில், இந்த வீர விதைகளை விதைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எடுத்திருக்கும் முயற்சிகள் என்னென்ன? அதற்காக எந்தப் பாடப்புத்தகத்தில் பாடமாக வைத்துள்ளார்கள்? என்பதெல்லாம் விடைகிடைக்காத, வேதனைக்குரியக் கேள்விகள்.
இராமநாதபுரம் மாவட்டம், பட்டாசுத் தொழிலுக்கு உலகளவில் பெயர்பெற்று விளங்கும் சிவகாசியில் 1886 ஜூன் 16 இல் சுப்பிரமண்ணியம் – ஞானம்மாள் தம்பதியரின் ஆறுபிள்ளைகளில் இரண்டாவது மகவாகப் பிறந்தவர் தாசரிதாஸ். ஆம் இவருக்குப் பெற்றோர் வைத்தப் பெயர் இதுதான். சிறுவயதில் பள்ளியில் சேர்த்த போது, தன் பிறப்பு, வகுப்பறையில் சக மாணவர்களுடன் சரிசமாகயிருந்துப் படிப்பதற்கு அனுமதிக்காமல், தனியாகத் தரையில் அமர்ந்து படிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதனால் படிப்பின் மீது வெறுப்புற்று பள்ளி செல்வதையே நிறுத்தியுள்ளார். பின்னர் நடிப்பின் மீதும் பிற கலைகள் மீதும் நாட்டம் கொண்டார். அதோடு, சுதந்திரத்திற்காகத் தலைவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பாகி, அதுவே இவரை பின்னாளில் மிகப்பெரிய சுதந்திரப்போராட்ட வீரராகவும் மாற்றி, தியாகி விசுவநாத தாஸ் என மக்களால் மதிக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்திற்காக ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு விதமான போராட்ட முறையைக் கையாண்டனர். அதில் தியாகி விஸ்வநாத தாஸ் கையாண்ட முறை சற்றே வித்தியாசமானது. தாமாக நாடகம், புரட்சிகரப் பாடல்களை எழுதியுள்ளார். அவற்றை மேடைகளில் பாடி, நடித்து, அதன் வாயிலாக மக்களுக்குள் சுதந்திர வேட்கையை ஊட்டியுள்ளார். வெள்ளையர்களை மறைமுகமாகத் தாக்கும் விதத்தில் மேடைகளி்ல்:-
“கொக்கு பறக்குதடிப் பாப்பா – நீயும்
கோபமின்றி கும்பிடடிப் பாப்பா
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு – நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து – கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா…”
என்னும் இப்பாடலை மிகவும் உணர்சிபூர்வமாகப் பாடிவந்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் வெள்ளையன் அரசு, இவர் மீது கடும் கோபமடைந்து, எண்ணற்ற முறை, இவர் மேடைகளில் நாடகம் நடத்துவதற்கும், அதில் நடிப்பதற்கும் தடை விதித்துள்ளது.
ஆனால், வெள்ளையனின் தடையையும் மீறி, நாடகங்களை நடத்தவும் அவற்றில் மாறுவேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார் இந்த வீரதீரன். அதன் விளைவு 29 முறை வெள்ளையனின் கைக்கூலிப் போலீசார், இவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒரு முறை சிறையில் வைத்து இனி நாடகத்தில் நடிக்கமாட்டேன் என எழுதிக் கொடுத்தால் விடுதலைச் செய்வதாகப் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு என் உயிரை எடுத்தாலும் அப்படி எழுதித்தர மாட்டேன் என மிகவும் கராராகக் கூறியுள்ளார், இந்தப் பாரதத்தாயின் தவப்புதல்வன்.
இவ்வளவு வைராக்கியத்துடன் நாடகத்தின் மூலம் சுதந்திர வேட்கையைப் பரப்பிய, இத்தியாகச் செம்மல், ஒரு முறை போலீசாரின் சதிவலையில் சிக்காமல் இருப்பதற்காக மாறுவேடத்தில் சென்னையில் ஒரு நாடக மேடையில் 31-12-1940 அன்று நடித்துக் கொண்டிருக்கும் போதே, இவரின் இன்னுயிர், இவரிடமிருந்து விடைபெற்றிருக்கிறது. அங்கு கூடியிருந்தக் கூட்டமெல்லாம், அவருக்குக் கண்ணீரால் செலுத்திய அஞ்சலி, பின்னாளில் இத்தேசத்தின் சுதந்திரத்திற்கு வித்திட்டிருக்கிறது.
அடிக்கடி, போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது குடும்பமே வறுமையின் ஆணிவேரை அனுபவித்திருக்கிறது. அவரோடு மட்டுமின்றி, அவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அவரின் மகன்கள் எனக் குடும்பத்திலுள்ள அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளப் பெருமை, சுதந்திரப்போராட்ட வீரர்களில் இவருக்கு மட்டுமே சேரும்.
சுதந்திரப்போராட்டக் காலத்தில், காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, வ.உ. சிதம்பரனார், முத்துராமலிங்கத் தேவர், சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற பெரும் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பிருந்திருக்கிறது. அவர்கள் பேசிய மேடைகளில் இவர் தமது நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதோடு அவர்கள் நடத்திய உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் உட்பட பல்வேறுப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
எனினும், சிறுவயதில் பள்ளியில் படிக்கச் சென்றபோது, வகுப்பறையில் சகமாணவர்களுடன், சமமாகச் சேர்ந்திருந்து படிக்க விடாமல், அவரை தடுத்தது எதுவோ, அதுவேதான் சுதந்திரத்திற்காக இவ்வளவு பெரியத் தியாகத்தைச் செய்த அவரை, மறுக்கப்பட்ட… மறைக்கப்பட்ட… அறியப்படாத… சுதந்திரத் தியாகிகளின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை. .
இவரின் படிக்கப் படிக்க உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் கசியச்செய்யும் பாடல்களையும், கேட்க கேட்க உதிரத்தைச் சுடேற்றும் நாடக வசனங்களையும் ‘விடுதலைவேள்வியில் தியாகி விசுவநாததாஸ்’ என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் முனைவர் வ. இராயப்பன்.
பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இம்மாவீரனின் தியாக வாழ்க்கையைப் பாடமாக்கி, இளம் தலைமுறைகளின் இதயங்களில் வாழ வைப்பதுதானே, இத்தேசம் இந்த மாவீரன் தியாகி விஸ்வநாத தாஸிற்குச் செலுத்தும் மாபெரும் மரியாதையாக இருக்கும்.
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை தினமலர் தேசிய நாளிதழில் 15-08-2025 அன்று பிரசுரமானது)

No comments:
Post a Comment