Sunday, 24 August 2025

காதல் என்னும் மாய வலையால் ஓயாத மரணங்கள்: தீர்வு என்ன?

 காதல் என்னும் மாய வலையால் ஓயாத மரணங்கள்: தீர்வு என்ன?

முனைவர் கமல. செல்வராஜ்
சென்னையில் பட்டப்பகலில், இரயில் நிலைத்தில் மக்கள் மத்தியில் ஸ்வாதி வெட்டிக் கொலையிலிருந்து தொடங்கி, திருப்பூர் சத்தியஸ்ரீ-ஐ அவள் வேலை செய்த மருத்துவமனையில், பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொன்றது வரை காதலிகளை, காதலர்கள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
நாட்டில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களால், ஏதும் அறியாப் பள்ளிப் பருவத்திலிருந்தே, மாணவ, மாணவிகளிடையே, மோகமும் காமமும் கலந்த காதல் துளிர் விடுகிறது. இவ்வாறு, அறியாப் பருவத்தில் ஆரம்பிக்கும் காதல், பின்னாளில் ஆபத்தாக முடியும் என்பதை இக்காதலர்கள் உணர்வதில்லை. அதன் விளைவு திருமணப்பருவம் எட்டும் போது, பல்வேறு சமூகச் சம்பிரதாயங்களும், குடும்பப் பின்னணிகளும் இவர்களின் காதலுக்கு இடையூறுச் செய்கின்றன.
அதோடு, மட்டுமின்றி நீண்ட நெடுநாள், நிதானமிழந்து உணர்ச்சிப் பெருக்கால் காதலித்து வந்தவர்கள், ‘எல்லாம்’ முடிந்த பிறகு, நிதானமாக தங்களின் எதிர்கால நிஜ வாழ்வைப் பற்றி பரஸ்பரம் சிந்திக்கத் தொடங்குகின்றனர். அப்பொழுது, இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண் இம்மாதிரியான கசப்பானக் கொடூரங்களுக்கு, இவர்களை இட்டுச் செல்கின்றன.
இதுபோன்ற காதல் விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்தும் வாராமலும் ஆண்டுக்குச் சராசரியாக 150 பெண்கள் வரை கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான புள்ளி விவரத்தை ஒரு தனியார் அமைப்பு (மதுரை எவிடன்ஸ்) வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தக் காதல் கொலைகளின் திசை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதுவரையிலும், இருவரும் காதலித்து இடையில் காதலியால் தடங்கல் ஏற்பட்டால், அந்த வலியைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையற்ற காதலன், காதலியின் கதையை முடித்து வந்தான். இதற்கு விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில், காதலின் இடையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரணால், காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கொடுத்துக் கொன்ற கிரீஷ்மாவின் கசப்பானக் கதையும் உண்டு.
என்றாலும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, காதலித்து இடையில் ஏதோ காரணத்தால் கைவிட்ட, காதலியைப் பழிவாங்க வேண்டும் என்னும் ஏகச்சிந்தனையில், அவளின் வீட்டின் அருகில் அல்லது வீட்டினுள் சென்று காதலன் தனக்குத்தானே, சுயமரணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தான் காதலித்தக் காதலியைத் திருமணம் முடிக்க முயன்றபோது, அவளின் பெற்றோர் சம்மதிக்காததால், ஒரு மாலை வேளையில் தன் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு, சாலையோரம் இருந்த காதலியின் வீட்டில் முன் நின்று, தன் உடலில் தானே தீ வைத்து சுயமரணத்திற்கு ஆளானான் ஒரு காதலன்.
நோய்வாய்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, தனக்கு ஒருசில நாள்கள் மட்டுமே சிகிச்சையளித்த நர்ஸ் மீது மோகம் ஏற்பட்டு, அவளை திருணம் முடிக்க ஆசை கொண்டு, அதற்குச் சம்மதம் கிடைக்காததால், ஓர் இரவு, அவள் வீட்டின் முன்பக்கத்தில் நின்ற மரத்தில் தூக்கிட்டு, சுயமரணம் ஏற்றுள்ளான், கேரள மாநிலத்தைச் சார்ந்த ஓர் இளைஞன்.
பள்ளி வகுப்பறையிலிருந்து தொடங்கியக் காதல், கல்லூரி படிப்பு முடித்து, வேலை கிடைத்தப் பிறகு, திருமணம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வந்து, பெண்வீட்டாரிடம் முறைபடி பெண் கேட்க, அவர்களிடமிருந்து ஏமாற்றமே கைமாறாக, அவளின் வீட்டு மாடியில் தூக்கிட்டு சுயமரணம் செய்துள்ளான் ஒரு காதலன்.
இந்த அதிர்ச்சிகள் அனைத்துமே தமிழகத்தில், கற்றவர் அதிகமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. இவ்வாறு நடந்தேறும் கொடூரங்கள், தங்கள் பிள்ளைகள் பற்றி ஆயிரமாயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும் இருக்கும், இருசார் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்குப் பேரிழப்பையும், வாழ்நாள் முழுவதும் நீங்கா மனக்காயத்தையும் ஏற்படுத்துகின்றன.
தங்கள் வாழ்க்கையின் இளம் பருத்தில் இமயத்தளவு சாதிக்க வேண்டிய, இளம் சிங்கங்கள், இப்படி, காதல் என்னும் மாய வலையில் சிக்குண்டு, தங்களின் இன்னுயிரை தாங்களாகவே மாயித்துக் கொள்வதும், காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக, அவளை வாழவிடாமல் தீர்த்துக் கட்டுவதும் எதனால் என்பதை அறிவுடையோர் ஆராய வேண்டும்.
இதுபோன்ற அநியாய நிகழ்வுகள், வரும் சந்ததியினரிடம் பகராமலிருக்க, பள்ளிப்பாடப் புத்தகங்களில், ஆரம்ப நிலையிலிருந்தே விழுமியக் கவ்வியை (Value Education) அறிமுகப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்பு மற்றும் வாழ்வியல் முறையைப் பாடத்திட்டங்களில் உட்படுத்த வேண்டும். அதன் மூலம் உண்மையான அன்பு அல்லது காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் விழிப்புணர்வினையும் மாணக்கர்களிடையே உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற வன்மங்களுக்குப் பெரும்பாலானக் காரணமாக இருப்பவை சாதி, மத வேறுபாடுகளாகும். எனவே பள்ளிச் சேர்க்கைப் படிவத்திலிருந்து சாதி, மதம் போன்ற மாணவர்களிடம் வேற்றுமையைத் தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும்.
ஏதேனும் காரணத்திற்காக மாணவர்கள் அல்லது போலி காதலர்கள் சுயமரணம் செய்து கொண்டால் அவர்களின் குடும்பத்திற்கு அரசும், அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பண உதவியும் பிற சலுகைகளையும் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இது மற்றவர்களை இது போல் செய்வதற்கு ஊக்கமளிக்கிறது. அதனால், எந்த வகையில் சுயமரணம் செய்தாலும், அதற்குச் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எவ்வித உதவியும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவையே இவ்விரு வன்மத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து, வரும் தலைமுறையைின் தலையெழுத்தை மாற்றுவதற்கு வழிகோலும் என்பது திண்ணம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், கல்வியாளர், அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21-08-2025 அன்று IETamil E Journal இல் பிரசுரமானது)
All reactions

Friday, 15 August 2025

விடுதலை வீரர் தியாகி விஸ்வநாத தாஸ்.

 விடுதலை வேள்வியில் குடும்பத்தையே அற்பணித்த தியாகி விஸ்வநாத தாஸ்.

முனைவர் கமல. செல்வராஜ்
பாரதத்தின் விடுதலைக்காகத் தங்களை அற்பணித்துப், போதிய அளவிற்கு அங்கீகரிக்கப்படாமல் வாழ்ந்து மறைந்த தியாகச்சுடர்கள் ஏராளம்… தாராளம்… அப்படிப்பட்ட, அறியப்படாத ஆளுமைகளின் மறைக்கப்பட்ட… மறுக்கப்பட்ட… அறியப்படாத.. வாழ்வியலை, ஆய்வுச் செய்து, அவர்களை இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன், பாரததின் 75 வது சுதந்திரத்தினத்தில் மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டது. அதன் வாயிலாக, தேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான மறைக்கப்பட்டத் தியாகிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்திலிருந்து, விடுதலைக்காகத் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையே விடுதலை வேள்வியில் ஈடுபடுத்தியவர் தியாகி விஸ்வநாத தாஸ். தமிழகத்தின் சந்துபொந்தெல்லாம், தன் குடும்பத்தாருடன் நாடகம் நடத்தி, பாமரர்களின் மனதில் சுதந்திரப் பொறியைப் பரவச் செய்த, இந்தத் தியாகி விஸ்வநாத தாஸ்ஸின், வீரம் செறிந்த வரலாற்றை யாரறிவார்?
படிப்போரின் உதிரத்தை உறைய வைக்கும் அவரின் வாழ்க்கை வரலாற்றை, இன்று சுதந்திரக் காற்றை சுதந்திரமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் எத்தனைபேர் அறிவார்கள்? சுதந்திரத்திப் போரின் வீரியத்தை, கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, தாய்நாட்டின் பழமை பெருமைக்குப் பங்கம் விளைவித்து, அன்னிய நாட்டுக் கலாச்சாரத்திற்குத் தங்களை முழுமையாக அடிமைகளாக்கிக் கொண்டிருக்கும், நம் இளைஞர்களின் மனதில், இந்த வீர விதைகளை விதைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எடுத்திருக்கும் முயற்சிகள் என்னென்ன? அதற்காக எந்தப் பாடப்புத்தகத்தில் பாடமாக வைத்துள்ளார்கள்? என்பதெல்லாம் விடைகிடைக்காத, வேதனைக்குரியக் கேள்விகள்.
இராமநாதபுரம் மாவட்டம், பட்டாசுத் தொழிலுக்கு உலகளவில் பெயர்பெற்று விளங்கும் சிவகாசியில் 1886 ஜூன் 16 இல் சுப்பிரமண்ணியம் – ஞானம்மாள் தம்பதியரின் ஆறுபிள்ளைகளில் இரண்டாவது மகவாகப் பிறந்தவர் தாசரிதாஸ். ஆம் இவருக்குப் பெற்றோர் வைத்தப் பெயர் இதுதான். சிறுவயதில் பள்ளியில் சேர்த்த போது, தன் பிறப்பு, வகுப்பறையில் சக மாணவர்களுடன் சரிசமாகயிருந்துப் படிப்பதற்கு அனுமதிக்காமல், தனியாகத் தரையில் அமர்ந்து படிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதனால் படிப்பின் மீது வெறுப்புற்று பள்ளி செல்வதையே நிறுத்தியுள்ளார். பின்னர் நடிப்பின் மீதும் பிற கலைகள் மீதும் நாட்டம் கொண்டார். அதோடு, சுதந்திரத்திற்காகத் தலைவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பாகி, அதுவே இவரை பின்னாளில் மிகப்பெரிய சுதந்திரப்போராட்ட வீரராகவும் மாற்றி, தியாகி விசுவநாத தாஸ் என மக்களால் மதிக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்திற்காக ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு விதமான போராட்ட முறையைக் கையாண்டனர். அதில் தியாகி விஸ்வநாத தாஸ் கையாண்ட முறை சற்றே வித்தியாசமானது. தாமாக நாடகம், புரட்சிகரப் பாடல்களை எழுதியுள்ளார். அவற்றை மேடைகளில் பாடி, நடித்து, அதன் வாயிலாக மக்களுக்குள் சுதந்திர வேட்கையை ஊட்டியுள்ளார். வெள்ளையர்களை மறைமுகமாகத் தாக்கும் விதத்தில் மேடைகளி்ல்:-
“கொக்கு பறக்குதடிப் பாப்பா – நீயும்
கோபமின்றி கும்பிடடிப் பாப்பா
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு – நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து – கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா…”
என்னும் இப்பாடலை மிகவும் உணர்சிபூர்வமாகப் பாடிவந்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் வெள்ளையன் அரசு, இவர் மீது கடும் கோபமடைந்து, எண்ணற்ற முறை, இவர் மேடைகளில் நாடகம் நடத்துவதற்கும், அதில் நடிப்பதற்கும் தடை விதித்துள்ளது.
ஆனால், வெள்ளையனின் தடையையும் மீறி, நாடகங்களை நடத்தவும் அவற்றில் மாறுவேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார் இந்த வீரதீரன். அதன் விளைவு 29 முறை வெள்ளையனின் கைக்கூலிப் போலீசார், இவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒரு முறை சிறையில் வைத்து இனி நாடகத்தில் நடிக்கமாட்டேன் என எழுதிக் கொடுத்தால் விடுதலைச் செய்வதாகப் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு என் உயிரை எடுத்தாலும் அப்படி எழுதித்தர மாட்டேன் என மிகவும் கராராகக் கூறியுள்ளார், இந்தப் பாரதத்தாயின் தவப்புதல்வன்.
இவ்வளவு வைராக்கியத்துடன் நாடகத்தின் மூலம் சுதந்திர வேட்கையைப் பரப்பிய, இத்தியாகச் செம்மல், ஒரு முறை போலீசாரின் சதிவலையில் சிக்காமல் இருப்பதற்காக மாறுவேடத்தில் சென்னையில் ஒரு நாடக மேடையில் 31-12-1940 அன்று நடித்துக் கொண்டிருக்கும் போதே, இவரின் இன்னுயிர், இவரிடமிருந்து விடைபெற்றிருக்கிறது. அங்கு கூடியிருந்தக் கூட்டமெல்லாம், அவருக்குக் கண்ணீரால் செலுத்திய அஞ்சலி, பின்னாளில் இத்தேசத்தின் சுதந்திரத்திற்கு வித்திட்டிருக்கிறது.
அடிக்கடி, போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது குடும்பமே வறுமையின் ஆணிவேரை அனுபவித்திருக்கிறது. அவரோடு மட்டுமின்றி, அவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அவரின் மகன்கள் எனக் குடும்பத்திலுள்ள அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளப் பெருமை, சுதந்திரப்போராட்ட வீரர்களில் இவருக்கு மட்டுமே சேரும்.
சுதந்திரப்போராட்டக் காலத்தில், காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, வ.உ. சிதம்பரனார், முத்துராமலிங்கத் தேவர், சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற பெரும் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பிருந்திருக்கிறது. அவர்கள் பேசிய மேடைகளில் இவர் தமது நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதோடு அவர்கள் நடத்திய உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் உட்பட பல்வேறுப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
எனினும், சிறுவயதில் பள்ளியில் படிக்கச் சென்றபோது, வகுப்பறையில் சகமாணவர்களுடன், சமமாகச் சேர்ந்திருந்து படிக்க விடாமல், அவரை தடுத்தது எதுவோ, அதுவேதான் சுதந்திரத்திற்காக இவ்வளவு பெரியத் தியாகத்தைச் செய்த அவரை, மறுக்கப்பட்ட… மறைக்கப்பட்ட… அறியப்படாத… சுதந்திரத் தியாகிகளின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை. .
இவரின் படிக்கப் படிக்க உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் கசியச்செய்யும் பாடல்களையும், கேட்க கேட்க உதிரத்தைச் சுடேற்றும் நாடக வசனங்களையும் ‘விடுதலைவேள்வியில் தியாகி விசுவநாததாஸ்’ என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் முனைவர் வ. இராயப்பன்.
பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இம்மாவீரனின் தியாக வாழ்க்கையைப் பாடமாக்கி, இளம் தலைமுறைகளின் இதயங்களில் வாழ வைப்பதுதானே, இத்தேசம் இந்த மாவீரன் தியாகி விஸ்வநாத தாஸிற்குச் செலுத்தும் மாபெரும் மரியாதையாக இருக்கும்.
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை தினமலர் தேசிய நாளிதழில் 15-08-2025 அன்று பிரசுரமானது)
May be an image of ‎1 person and ‎text that says '‎L ចនមឹសបល ផង្ត အိပ်သညာ விடுதலை வேள்வியில் குடும்பத்தையே அர்ப்பணித்த தியாகி விஸ்வநாத தாஸ் பாந்நத்குன் செய்து போன்ற பெரும் தலலை குழு ரவணதைக்கு คณจิ பகலவில் இல் தியாகி விஸ்வநாத தாஸ் ในเิยวปินนีก சடிபடுந்தியவர் மேடை நிலைக்கு சாறவாா? من_اله ค அடித்துக் காழுக்குதா கொள்வதற்கும் இரத்தைச் விகவ யத்தியில் முனைவர் கொஞ்சம் மத்து. பழனமை இம்மாவ் வாழ்ுக்கை அன்னிய சாரக்கிற்கு அவ்வொரு முையைக் முறை இெவங் வைப்பதே, நேசம் விஸ்வநாத கொண்டி ுக்கும், மனகில், விஸ்வநாத சற்றே போராட்டத மரியாதையாக இருக்கும். பப்பதற்கு புட்சியாணர்கலு நாடகங்களை அவற்றில் மாறுவேடக் பெருமை. வீரர்களில் ருக்கு மட்டுமே ொடர்பு எழுதியுண்னார். امصلوعاقا துன்ளார் மேயர் மகேஷ் சுதந்திர தின கழித்திர வீரதீரன். மழை சுதந்திர கலத்தில், காந்தியடடி நேரு. சரிப் இ‍රவணரக் தேவர், சுவாமிகள் முனைவர் கமல. செல்வராஜ்‎'‎‎
All react