காதல் என்னும் மாய வலையால் ஓயாத மரணங்கள்: தீர்வு என்ன?
முனைவர் கமல. செல்வராஜ்
நாட்டில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களால், ஏதும் அறியாப் பள்ளிப் பருவத்திலிருந்தே, மாணவ, மாணவிகளிடையே, மோகமும் காமமும் கலந்த காதல் துளிர் விடுகிறது. இவ்வாறு, அறியாப் பருவத்தில் ஆரம்பிக்கும் காதல், பின்னாளில் ஆபத்தாக முடியும் என்பதை இக்காதலர்கள் உணர்வதில்லை. அதன் விளைவு திருமணப்பருவம் எட்டும் போது, பல்வேறு சமூகச் சம்பிரதாயங்களும், குடும்பப் பின்னணிகளும் இவர்களின் காதலுக்கு இடையூறுச் செய்கின்றன.
அதோடு, மட்டுமின்றி நீண்ட நெடுநாள், நிதானமிழந்து உணர்ச்சிப் பெருக்கால் காதலித்து வந்தவர்கள், ‘எல்லாம்’ முடிந்த பிறகு, நிதானமாக தங்களின் எதிர்கால நிஜ வாழ்வைப் பற்றி பரஸ்பரம் சிந்திக்கத் தொடங்குகின்றனர். அப்பொழுது, இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண் இம்மாதிரியான கசப்பானக் கொடூரங்களுக்கு, இவர்களை இட்டுச் செல்கின்றன.
இதுபோன்ற காதல் விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்தும் வாராமலும் ஆண்டுக்குச் சராசரியாக 150 பெண்கள் வரை கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான புள்ளி விவரத்தை ஒரு தனியார் அமைப்பு (மதுரை எவிடன்ஸ்) வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தக் காதல் கொலைகளின் திசை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதுவரையிலும், இருவரும் காதலித்து இடையில் காதலியால் தடங்கல் ஏற்பட்டால், அந்த வலியைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையற்ற காதலன், காதலியின் கதையை முடித்து வந்தான். இதற்கு விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில், காதலின் இடையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரணால், காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கொடுத்துக் கொன்ற கிரீஷ்மாவின் கசப்பானக் கதையும் உண்டு.
என்றாலும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, காதலித்து இடையில் ஏதோ காரணத்தால் கைவிட்ட, காதலியைப் பழிவாங்க வேண்டும் என்னும் ஏகச்சிந்தனையில், அவளின் வீட்டின் அருகில் அல்லது வீட்டினுள் சென்று காதலன் தனக்குத்தானே, சுயமரணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தான் காதலித்தக் காதலியைத் திருமணம் முடிக்க முயன்றபோது, அவளின் பெற்றோர் சம்மதிக்காததால், ஒரு மாலை வேளையில் தன் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு, சாலையோரம் இருந்த காதலியின் வீட்டில் முன் நின்று, தன் உடலில் தானே தீ வைத்து சுயமரணத்திற்கு ஆளானான் ஒரு காதலன்.
நோய்வாய்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, தனக்கு ஒருசில நாள்கள் மட்டுமே சிகிச்சையளித்த நர்ஸ் மீது மோகம் ஏற்பட்டு, அவளை திருணம் முடிக்க ஆசை கொண்டு, அதற்குச் சம்மதம் கிடைக்காததால், ஓர் இரவு, அவள் வீட்டின் முன்பக்கத்தில் நின்ற மரத்தில் தூக்கிட்டு, சுயமரணம் ஏற்றுள்ளான், கேரள மாநிலத்தைச் சார்ந்த ஓர் இளைஞன்.
பள்ளி வகுப்பறையிலிருந்து தொடங்கியக் காதல், கல்லூரி படிப்பு முடித்து, வேலை கிடைத்தப் பிறகு, திருமணம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வந்து, பெண்வீட்டாரிடம் முறைபடி பெண் கேட்க, அவர்களிடமிருந்து ஏமாற்றமே கைமாறாக, அவளின் வீட்டு மாடியில் தூக்கிட்டு சுயமரணம் செய்துள்ளான் ஒரு காதலன்.
இந்த அதிர்ச்சிகள் அனைத்துமே தமிழகத்தில், கற்றவர் அதிகமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. இவ்வாறு நடந்தேறும் கொடூரங்கள், தங்கள் பிள்ளைகள் பற்றி ஆயிரமாயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும் இருக்கும், இருசார் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்குப் பேரிழப்பையும், வாழ்நாள் முழுவதும் நீங்கா மனக்காயத்தையும் ஏற்படுத்துகின்றன.
தங்கள் வாழ்க்கையின் இளம் பருத்தில் இமயத்தளவு சாதிக்க வேண்டிய, இளம் சிங்கங்கள், இப்படி, காதல் என்னும் மாய வலையில் சிக்குண்டு, தங்களின் இன்னுயிரை தாங்களாகவே மாயித்துக் கொள்வதும், காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக, அவளை வாழவிடாமல் தீர்த்துக் கட்டுவதும் எதனால் என்பதை அறிவுடையோர் ஆராய வேண்டும்.
இதுபோன்ற அநியாய நிகழ்வுகள், வரும் சந்ததியினரிடம் பகராமலிருக்க, பள்ளிப்பாடப் புத்தகங்களில், ஆரம்ப நிலையிலிருந்தே விழுமியக் கவ்வியை (Value Education) அறிமுகப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்பு மற்றும் வாழ்வியல் முறையைப் பாடத்திட்டங்களில் உட்படுத்த வேண்டும். அதன் மூலம் உண்மையான அன்பு அல்லது காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் விழிப்புணர்வினையும் மாணக்கர்களிடையே உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற வன்மங்களுக்குப் பெரும்பாலானக் காரணமாக இருப்பவை சாதி, மத வேறுபாடுகளாகும். எனவே பள்ளிச் சேர்க்கைப் படிவத்திலிருந்து சாதி, மதம் போன்ற மாணவர்களிடம் வேற்றுமையைத் தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும்.
ஏதேனும் காரணத்திற்காக மாணவர்கள் அல்லது போலி காதலர்கள் சுயமரணம் செய்து கொண்டால் அவர்களின் குடும்பத்திற்கு அரசும், அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பண உதவியும் பிற சலுகைகளையும் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இது மற்றவர்களை இது போல் செய்வதற்கு ஊக்கமளிக்கிறது. அதனால், எந்த வகையில் சுயமரணம் செய்தாலும், அதற்குச் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எவ்வித உதவியும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவையே இவ்விரு வன்மத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து, வரும் தலைமுறையைின் தலையெழுத்தை மாற்றுவதற்கு வழிகோலும் என்பது திண்ணம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், கல்வியாளர், அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21-08-2025 அன்று IETamil E Journal இல் பிரசுரமானது)
