Monday, 24 March 2025

அர்த்தமுள்ள ‘அறுவடை’.

 அர்த்தமுள்ள ‘அறுவடை’.

ச. உமா கண்ணன்.
படைப்பாளி திருமதி ச. உமா கண்ணனின் முதல் படைப்பான 'மொழி மறந்த மொளனங்கள்' கவிதை நூலைத் தொடர்ந்து இரண்டாவது நூலாக வெளிவந்திருப்பது ‘அறுவடை’ சிறுகதைத் தொகுப்பு.
அக்கினிக் கூண்டுகள் தொடங்கி… என் அம்மையே தொடர்ந்து… விபத்தை நிறைவாகக் கொண்டு இருபது சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது இத்தொகுப்பு.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் நாட்டு நலப்பணித் திட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, சமூகப் பணியாற்றி வந்ததால், சமூகத்தின் மீது இவரது பார்வை மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதன் வெளிப்பாட்டைப் பிரதிப்பலிக்கிறது ‘அறுவடை’ என்பது வெளிப்படை.
சமூகத்தில் காணும் அவலங்களை மிக உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டு அதற்குத் தீர்வேதும் சொல்லாமல் வெறும் கதைச்சொல்லிகளாகச் செல்லும் படைப்பாளிகளில் ஒருவரல்ல இவர். சமுதாயத்திலிருந்து தன் கண்ணில் பட்டதை, வெட்ட வெளிச்சமாக்கி அதற்கான நிரந்தரத் தீர்வையும் கதைக்குள்ளே புதைத்து வைத்திருப்பார். பிரச்னையோடு தீர்வையும் சொல்லிச் செல்லும் படைப்பாளி, வாசகர் மனதில் நிலைத்திருப்பார், மற்றவர் வாசகர் மனத்திலிருந்து மாய்ந்திடுவர். அவ்வகையில் உமா கண்ணனை நிலைத்திருப்பவர் வரிசையில் முன்நிறுத்தலாம்.
எதார்த்தவாதிகள் எப்பொழுதும் சமகாலத்தின் மிகச் சிக்கலான விஷயங்களை அதிபயங்கரத் துணிச்சலோடு, அப்பட்டமாக வெளிப்படுத்துவார்கள். அத்துணிச்சல் ‘அறுவடை’யில் வீறுகொண்டிருக்கிறது என்பதற்கு ‘என் அம்மையே’ கதை ஆதாரமாகிறது, ஈவு, இரக்கம், இயற்கை, காதல், கண்ணியம், கடமை, எழுச்சி, வீழ்ச்சி, விழிப்பு, எதிர்ப்பு என அனைத்தையும் கருவாக்கி, கதைகள் நகர்கின்றன. விம்மி அழவும்… வயிறு வலிக்கச் சிரிக்கவும்… மெய்மறந்து சிந்திக்கவும்… இன்னும் நிறைய… நிறைய… அனுபவிக்கலாம் ‘அறுவடை’யிலிருந்து.
இது வல்லவர் கண்பட்டால் பள்ளி, கல்லூரிப் பாடப்பகுதியில் இடம் பெறலாம். இளம் தலைமுறைகள் சீர்படலாம்.
படைப்பு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் 141 பக்கங்களைக் கொண்ட ‘அறுவடை’யின் அறுவடைக்கு ரூ,200/- மட்டும்.
அறுவடை அழைப்புக்கு:9487641020
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
அழைக்க:9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க:drkamal voice(YouTube)

All react

ஆசிரியர்கள் கம்பு எடுத்தால் மாணவர்கள் கம்பி எண்ண வேண்டாம்.

 ஆசிரியர்கள் கம்பு எடுத்தால் மாணவர்கள் கம்பி எண்ண வேண்டாம்.

21 Mar 2025 ietamil.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
சமீபக் காலமாகத் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடையே அரங்கேறி வரும் ஒழுங்கீனங்கள் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளன. மாணவர்கள் செய்யும் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்துவதற்கான அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், நாளுக்கு நாள் பள்ளி மாணவர்கள் மத்தியில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சீர்கேடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் சின்னஞ் சிறு குறும்புகள், ஒழுங்கீனங்கள், சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டித்தும், தண்டித்தும், அறிவுரைக் கூறியும் திருத்தி, சமுதாயத்தில் அவர்களை மாண்புமிகு மனிதர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் தலையாயக் கடமையாக இருந்தது. தவறிழைக்கும் பிள்ளைகளை, அதிலிருந்து திருத்தி நல்வழிப் படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு அடுத்தப்படியாக ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ அல்லது அறிவுரைக் கூறுவதற்கான உரிமையோ கூட ஆசிரியர்களுக்கில்லை. அரசின் சட்டங்களால் ஆசிரியர்களின் வாய்களுக்குப் பூட்டும், கைகளுக்குக் கட்டும் போடப்பட்டிருக்கின்றன.
அதனால், தவறு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களின் உயிருக்கே உத்தரவாதமில்லை. அவர்கள் வகுப்பறையிலும் பொதுவெளிகளிலும் மாணவர்களின் தாக்குதலுக்கும், கொலைவெறிக்கும் ஆளாகின்றனர். அதையும் தாண்டி மாணவர்களின் ஒழுங்கீனங்களைத் திருத்துவதற்கு முயற்சிக்கும் ஆசிரியர்கள், அரசின் சட்டத்திற்குள் அகப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஜெயிலுக்குள் அடைக்கப்படுகின்றனர்.
இது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மரியாதைக் கொடுத்து, அவர்களை அனுசரித்து நடந்த காலம் மாறி, இன்று ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்துப் பயங்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலை தமிழகத்தில், கல்வித்துறையில் கற்றல், கற்பித்தலில் பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் பள்ளிக்கூடங்களில் தவறிழைக்கும் மாணவர்களைத் திருத்துவதற்கான சிறு தண்டனை கூட ஆசிரியர்களால் வழங்க வழியின்மையாகும்.
முன்பெல்லாம் மாணவர்கள், பள்ளியில் தவறிழைத்து ஆசிரியர்கள் அதற்குக் கடும் தண்டனை அளித்தால் கூட மாணவர்களின் பெற்றோர், தன் பிள்ளை தவறிலிருந்து திருந்தி வரவேண்டும் என்பதற்காகத் தண்டனை வழங்கிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். ஆனால் இப்பொழுது, மாணவர்கள் தடம் மாறும் போது ஆசிரியர்கள் தண்டனை வழங்கினால், அந்த மாணவர் சார்ந்திருக்கும் ஜாதி, மத, அரசியல் கட்சியினர் அனைவரும் ஒண்றிணைந்து, அவர்களின் சுய லாபத்திற்காக அப்பாவிப் பெற்றோரைத் தூண்டிவிட்டு ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் எதிராகப் போராட்டக் களத்தில் இறங்கி விடுகின்றனர். அதோடு சமூக வலைதளங்களும் அவர்கள் பங்கிற்கு அவற்றைப் பூதாகரமாக்கின்றன.
இதனால் அவ்வாசிரியர் மட்டுமின்றி பள்ளி நிர்வாகிகள் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன், அப்பள்ளியில் படிக்கும் மாணவியை தாக்கியுள்ளார். இதனை கண்டித்த அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி தலைமையாசிரியை பணியிட மாற்றமும் செய்துள்ளது கல்வித்துறை.
வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே நடக்கும் சிறுசிறு பிரச்னைகள், அவர்களுக்குள்ளே கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது. அதுதான் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாணவனை, அப்பள்ளி சகமாணவர்களே பள்ளியின் வெளியில் வைத்துக் கொலை செய்த சம்பவம். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் கொலைகளில், கொலையாளிகளின் பட்டியலில் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் கூறுகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் பல்வேறு விதங்களில் அதிகரித்து வருவதால், தொடக்க நிலையில் படிக்கும் மாணவர்களே அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறுவகுப்பிலிருந்தே மாணவர்கள் கீழ்படிதலற்றவர்களாக மாறுகின்றனர். அவர்களை சீர்படுத்துவதற்கே பெரும் சிரமமாக உள்ளது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ‘பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் ஆசிரியர்கள் கையில் கம்பு வைத்திருக்க வேண்டும்’ என கேரள மாநில ஐகோர்ட் நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், கேரள மாநில ஆசிரியர்களுக்கும் கல்வித்துறைக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனை, ஆசிரியர் கம்பால் அடித்தார் எனப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவ்வாசிரியர் மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். அதனால் ஆசிரியர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுவளித்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, ‘மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பை உபயோகிக்காமல் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றமும் ஒழுக்கமும் வந்துவிடும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்களுக்குச் சிறிய தண்டனைக் கொடுத்தாலே கிரிமினல் வழக்கு வந்துவிடும் என்ற அச்சத்துடன் ஆசிரியர்கள் வேலை செய்யக் கூடிய நிலை இருக்கக் கூடாது. புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீசாரும் உடனடியாக வழக்குப் பதிவுச் செய்யக் கூடாது. இன்றைய மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்’ என அரசுக்கும் காவல் துறைக்கும் அறிவுரை கூறியுள்ளார்.
நீதிபதியின் இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் பொருத்தமுடையதாகும்.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் என்னென்ன நடைமுறைகளைக் கையாளலாம் என்ற வழிகாட்டி நெறிமுறையைத் தமிழக அரசும் கல்வித்துறையும் உருவாக்க வேண்டும். என்றால் மட்டுமே ஆசிரியர்கள் அச்ச உணர்வின்றி சுதந்திரமாகத் தங்களின் கடமைகளைச் செய்ய முடியும். மாணவர்களையும் சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும்.
முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.
அழைக்க: 9443559841,
அணுக:drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21-03-2025 ietamil E Journal இல் பிரசுரமானது)
Like
Comment
Send
Share

Thursday, 2 January 2025

பாரதி ஒரு தீர்க்கதரிசி.

                                        பாரதி ஒரு தீர்க்கதரிசி.

தேசிய மொழிகள் தின சிறப்புக் கட்டுரை.

டிசம்பர் 11 – மகாகவி சுப்பிரமணியப் பாரதி பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” – என்னும் கவிதை வரியால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைச் சேர்த்த முறுக்கு மீசைக்காரன் சுப்பிரமணியப் பாரதிக்குப் பெருமை சேர்க்கும் நாள் இந்நாள்.
தேசியக்கவி சுப்பிரமணியப் பாரதியின் பிறந்த நாளை முன்னிறுத்தி மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு நவம்பர் - 19 முதல் ஒரு மாதகாலம் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசியில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தது. நிகழ்ச்சியை நடத்தி முடித்ததோடு மட்டும் நின்று விடாமல், அவ்வாண்டு முதல் பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை ‘தேசிய மொழிகள் தினமாகப்’ பிரகடனப்படுத்தியது.
இது மகாகவிக்குக் கிடைத்த மாபெரும் அந்தஸ்து என்பதோடு, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். மத்திய அரசால், “பாரதிய பாஷா திவாஸ்” என அறிவிக்கப்பட்ட இந்நாளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறித்தியது.
அவ்வகையில் கடந்தாண்டு முதல் தமிழகத்திலுள்ள, பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இந்நாளை, மாணவர்களுக்கிடையே சுப்ரமணியப் பாரதியின் பெயரில் பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாரதியின் மகத்துவத்தை இளம் தலைமுறையினருக்குள் புகுத்துவதில் தேசம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன.
“காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்” என்னும் வரிகள் பாரதியின் தீர்க்கதரிசம். அவ்வரிகள் இன்று நிதர்சனமாயிருக்கின்றன என்பதற்கு அடையாளமாகவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வைக் கொள்ளலாம்.
பாரதத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளில்:-
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்னும் பாரதியின் கூற்று, வெறும் பொய்யும் புரட்டுமானதன்று. அவர் சுமார் 13 மொழிகளுக்கு மேல் ஆய்ந்தறிந்தவர். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த நிதர்சனமான உண்மையை உரக்க உரைத்துள்ளார். இது அவர் தமிழ் மொழி மீது கொண்டிருந்த தீராதக் காதலுக்கும் சாட்சியாகும்.
இன்னும் அவர் தமிழர்களுக்கு ஒரு கட்டளையை இட்டுச் சென்றுள்ளார். அது:-
“ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்பதாகும். மகாகவியின் இக்கூற்று தமிழகத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும், அவர் கொண்டிருந்த கரிசனத்திற்குப் மிகப்பொருத்தமான சான்றாகும்.
ஆனால் தமிழகத்தில் பாரதியின் கூற்றுக்கு மாற்றாக, அன்னிய மொழியாம் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கம் அதிகரித்து, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிலிருந்து, வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் வரை தமிழ் மொழியில் படிப்பதையும், பேசுவதையும் கேவலமாகக் கருதும் நிலை நீடித்து வருகின்றது. இதனால் தெருக்களில் தமிழ் முழக்கம் இல்லாதது மட்டுமல்ல வீடுகளிலும் தமிழ் பேசும் பழக்கம் இல்லாமலாகியுள்ளது.
இதையும் அன்றே அவர், தீர்க்கதரிசனமாய் தெரிந்திருக்கிறார். அதனால்தான்:-
“மெல்லத் தமிழ்ச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்” என ஒரு பேதை உரைத்ததாகக் குறிப்பிடுகிறார். அக்கூற்று மெய்த்து விட்டது போன்ற ஒரு நிலையைத் தான் இன்று தமிழகத்தில் பார்ப்பதற்கு முடிகிறது.
இவ் இழிநிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இத்தேசத்திலுள்ள எந்த மொழிக்கும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசால், தற்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், தொடக்க நிலையிலிருந்து, உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள் ஒரு மொழி அறிவோடு மட்டுமின்றி, பன்மொழி கற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் சிந்தை நம் தாய்மொழியைக் காப்பதிலும், தாய்நாட்டைப் பேணுவதிலும் எப்படி கரிசனமாக இருந்ததோ அதைப்போன்று, இன்று அவரின் பெயரால் தமிழ் மொழிக்குத் தேசம் முழுக்கக் கிடைத்திருக்கும் இவ்வளப்பரிய அங்கீகாரத்தை, இத்தேசத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல் பார்போற்றும் பாரதியாக மாற்றிக்காட்டும் பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை.
முனைவர் கமல. செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம், தமிழ் நாடு.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 11-12-2024 அன்று ietamil இணையவழி இதழில் பிரசுரமானது.)
Like
Comment
Send
Share

DREAM

கனவு - 2025. 

இந்த வீடியோ 21ஆம் நூற்றாண்டில் கால் நூற்றாண்டான 2025 வரையிலும் நம் பாரதத்தேசம் என்ன சாதித்திருக்கிறது, இனி அடுத்து வரும் கால் நூற்றாண்டில் 2050 இக்குள் என்ன சாதிக்க வேண்டும் என்பது பற்றியான ஒரு கனவாக உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவேற்றும் படி வேண்டுகிறேன்.

Phone : 9443559841
Youtube link : https://www.youtube.co​...​
Twitter link :    / selvarajwriter  ​
Facebook link :   / kamala.selva.  ​.
Blogger link :https://www.blogger.co​...​.
Email: drkamalaru@gmail.com
இந்த வீடியோவை முழுமையாகப் பார்ப்பதற்குக் கீழே உள்ள லிங்கில் தொடவும் செய்யவும்.