அர்த்தமுள்ள ‘அறுவடை’.
ச. உமா கண்ணன்.
படைப்பாளி திருமதி ச. உமா கண்ணனின் முதல் படைப்பான 'மொழி மறந்த மொளனங்கள்' கவிதை நூலைத் தொடர்ந்து இரண்டாவது நூலாக வெளிவந்திருப்பது ‘அறுவடை’ சிறுகதைத் தொகுப்பு.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் நாட்டு நலப்பணித் திட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, சமூகப் பணியாற்றி வந்ததால், சமூகத்தின் மீது இவரது பார்வை மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதன் வெளிப்பாட்டைப் பிரதிப்பலிக்கிறது ‘அறுவடை’ என்பது வெளிப்படை.
சமூகத்தில் காணும் அவலங்களை மிக உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டு அதற்குத் தீர்வேதும் சொல்லாமல் வெறும் கதைச்சொல்லிகளாகச் செல்லும் படைப்பாளிகளில் ஒருவரல்ல இவர். சமுதாயத்திலிருந்து தன் கண்ணில் பட்டதை, வெட்ட வெளிச்சமாக்கி அதற்கான நிரந்தரத் தீர்வையும் கதைக்குள்ளே புதைத்து வைத்திருப்பார். பிரச்னையோடு தீர்வையும் சொல்லிச் செல்லும் படைப்பாளி, வாசகர் மனதில் நிலைத்திருப்பார், மற்றவர் வாசகர் மனத்திலிருந்து மாய்ந்திடுவர். அவ்வகையில் உமா கண்ணனை நிலைத்திருப்பவர் வரிசையில் முன்நிறுத்தலாம்.
எதார்த்தவாதிகள் எப்பொழுதும் சமகாலத்தின் மிகச் சிக்கலான விஷயங்களை அதிபயங்கரத் துணிச்சலோடு, அப்பட்டமாக வெளிப்படுத்துவார்கள். அத்துணிச்சல் ‘அறுவடை’யில் வீறுகொண்டிருக்கிறது என்பதற்கு ‘என் அம்மையே’ கதை ஆதாரமாகிறது, ஈவு, இரக்கம், இயற்கை, காதல், கண்ணியம், கடமை, எழுச்சி, வீழ்ச்சி, விழிப்பு, எதிர்ப்பு என அனைத்தையும் கருவாக்கி, கதைகள் நகர்கின்றன. விம்மி அழவும்… வயிறு வலிக்கச் சிரிக்கவும்… மெய்மறந்து சிந்திக்கவும்… இன்னும் நிறைய… நிறைய… அனுபவிக்கலாம் ‘அறுவடை’யிலிருந்து.
இது வல்லவர் கண்பட்டால் பள்ளி, கல்லூரிப் பாடப்பகுதியில் இடம் பெறலாம். இளம் தலைமுறைகள் சீர்படலாம்.
படைப்பு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் 141 பக்கங்களைக் கொண்ட ‘அறுவடை’யின் அறுவடைக்கு ரூ,200/- மட்டும்.
அறுவடை அழைப்புக்கு:9487641020
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
அழைக்க:9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க:drkamal voice(YouTube)