தேசிய மொழிகள் தினம்: பாரதிக்குக் கிடைத்த மகத்துவம்.
இன்று மகாகவி சுப்பிரமணியப் பாரதி பிறந்த தினம், நாடு முழுவதும் தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பாரத தேசத்தில் சுதந்திரக் கனல் பற்றி எரிந்த போது, விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொரு தலைவரும், அவரவருக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்து, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால், முண்டாசுக் கவிஞர் சுப்ரமண்ணியப் பாரதி, இப்போராட்டத்தில், தன் மனதில் தோன்றிய போராட்ட எண்ணங்களை, போனாவை துப்பாக்கியாக்கி, வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி, அன்னியனின் நெஞ்சில் தீக்கனலாய்ப் பாச்சினான்.
தமிழ்மொழி மீது காதல்.
மற்றவர்களெல்லாம், நாட்டு விடுதலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அதற்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், பாரதி, நாட்டு விடுதலையோடு, நம் நாட்டின் கல்வி, கலாச்சாரம், கலை, மொழி, பொருளாதாரம், தொழில் வளம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை எப்படி உலகின் உன்னத நிலைக்குக் கொண்டுச் செல்லலாம் என்ற தொலைநோக்குடன் சிந்தித்துச் செயலாற்றினார்.
அந்த வகையில் அவர், பாரதத்திலுள்ள மொழிகள் மீது கொண்டிருந்த மரியாதை அபரிதமானது. அதிலும், தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதல் அளப்பரியது.
பன்மொழி புலமை.
பாரதத்தில், தேசிய அந்தஸ்து பெற்ற மொழிகள் 22 ஆகும். இவற்றில்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”- எனப் பாரதி ஓங்கி உரைக்கின்றார். இது அவர், வெறும் பொய்யும் புரட்டுமாக உரைத்ததன்று. சுமார் 13 மொழிகள் அவருக்கு, நன்கு பரிச்சயமாயிருந்தன. அதன் வெளிப்பாடே இக்கூற்று.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” – என்னும் கவிதை வரியால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் பாரதி. இவ்வாறு, பாரதி, மொழிகள் மீது கொண்டிருந்த பற்றினைப் போற்றும் வகையில் மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு முதல், பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை, ‘பாரதிய பாஷா திவாஸ்’ என்னும் பெயரில் ‘தேசிய மொழிகள் தினமாகப்’ பிரகடனப்படுத்தியது.
மகாகவிக்குக் கிடைத்த அந்தஸ்து
மத்திய அரசால், “பாரதிய பாஷா திவாஸ்” என அறிவிக்கப்பட்ட இந்நாளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறித்தியது.
அவ்வகையில் தற்பொழுது தமிழகத்திலுள்ள, பள்ளிகள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை இந்நாளில், மாணவர்களுக்கிடையே சுப்ரமணியப்பாரதியின் பெயரில் பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாரதியின் மகத்துவத்தை இளம் தலைமுறையினருக்குள் புகுத்துவதில் தேசம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன. இது, மகாகவிக்குக் கிடைத்த மாபெரும் அந்தஸ்து மட்டுமின்றி, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த அளப்பரிய அங்கீகாரமாகும்.
பார்போற்றும் பாரதி.
''ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”- என்கிறார்.
ஒரு பேதை உரைத்ததாக பாரதி கூறும் நிலை, பாரதத்திலுள்ள எந்த மொழிக்கும் வராமல் இருப்பதற்காக மத்திய அரசால், தற்பொழுது வாடிவமைக்
கப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், தொடக்க நிலையிலிருந்து, உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள், ஒரு மொழி, அறிவோடு நின்று விடாமல் பன்மொழி கற்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தமிழ் மொழிக்குத் தேசம் முழுக்கப் பெருமை சேர்த்துள்ள பாரதியை, பார்போற்றும் பாரதியாக மாற்றிக்காட்டும் பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
-முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர், அருமனை.
பேச: 9443559841
(இக்கட்டுரை இன்றைய(11-12-2025), தினமலர் தேசிய நாளிதழில் பிரசுரமாகியுள்ளது)


