Friday, 20 September 2024

பொக்கிஷத் தேடல்.

                                      பொக்கிஷத் தேடல்.

இஃது ஓர் அறிவுக் கலவை.
ஒரு படைப்பாளியாவதற்குப் படிப்பு, பட்டம், பதவி இவை எதுவும் தேவையில்லை; ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர் இந்நூலாசிரியர் செ. வின்சென்ட் அவர்கள்.
அது போலவே, ஒரு நூலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற நெறிமுறையின்றி, எப்படியும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்கும் இவரே முன்மாதிரியாவார்.
பொக்கிஷத் தேடல் என்பது இவரின் பதிமூன்றாவது நூல். இவற்றில் முதல் இரண்டு மூன்று நுல்களைத் தவிரப் பிற அனைத்து நூல்களுக்கும் அடியேன் அணிந்துரை ஆக்கியுள்ளேன்.
அவற்றில் ஒரு நூலுக்குக் கூட, ‘நீங்கள் இதைதான் எழுத வேண்டும்; இப்படித்தான் எழுத வேண்டும்’ என அவருக்குக் கட்டளையிட்டதோ, கட்டுப்படுத்தியோ இல்லை.
ஏனென்றால், அவருக்குள், எழுத வேண்டும் என்ற உந்துசக்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குள் பிறரின் மேதாவித்தனம் புகுந்து விட்டால், அந்த ஆதிக்கத்தின் உத்வேகம் குறைந்து, அவரின் முயற்சி முற்று பெற்றிடும்.
அதனால், அவர் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என முனைகிறாரோ, அதை அப்படியே எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவதையே கரிசனமாகச் செய்துள்ளேன். அதனால், அவர் இத்தனை நூல்களை எழுதி, இன்று தமிழக அரசிடமிருந்து தமிழறிஞர்களுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்று எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.
அதனடிப்படையில் பொக்கிஷத் தேடல் என்னும் இந்நூலுக்குள் என்ன பொக்கிஷம் இருக்கிறது? எனத் தேடாதீர்கள். அன்னாரின் வாழ்நாளின் அனுபவத்தில் கண்டது, கேட்டது, பார்த்தது, படித்தது, அனுபவித்தது என அனைத்தையும் அவியல், பொரியல், துவயலாக்கித் தந்துள்ளார். அவற்றில் எவை வாசகர்களாகிய உங்களுக்குப் புதுமையாகப் புலப்படுகிறதோ, அதைப் பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இவர் திருவிவிலியக் கருத்துக்கள் மீது தீராக் காதல் கொண்டவர். அக்கருத்துக்களை மேன்மைப்படுத்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம். அவற்றினூடே வள்ளலாரையும் பட்டணத்தாரையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கூடவே சபரிமலை ஐயப்பனின் சொரூபத்தையும் கடைசியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் மங்கள வீடுகளின் அடையாளமாகத் திகழ்ந்திருந்த சளை மரமும், மாடு கட்டி தேங்காய் அரைப்பதற்குப் பயன்படுத்திய அரவைச் செக்கும், இன்று அடையாளமின்றி அழிந்துபோயின. அவற்றை அறியாத, காணாத இன்றைய இளம் தலைமுறையினர் இந்நூலைப் படித்தால், அவர்களுக்கு, அவை புதையலாகவே புலப்படலாம். அதுபோலவே, வியாபாரத் தரகர்கள் தங்களுக்குள் பயன்படுத்தி வந்த, பிறருக்குப் புரியாத இரகசிய எண்களும் புதையலாகலாம்.
மேலும் நவீன காலத்தில் பல்கிப் பெருகி வரும் போதைப் பழக்கமும், அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகளும், படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் போலி பட்டங்களும், தினசரிகளில் தினம் தோறும் வெளியாகும் கொலை, கொள்ளை, பலாத்காரங்களும் இந்நூலின் கருப்பொருள்களாகி, மொத்தத்தில் இந்நூல் ஓர் அறிவுக் கலவையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இவ்வறிவுக் கலவைக்கு வாசகர்கள் பேராதரவு நல்கினால், இந்நூலாசிரியரின் அறிவுத் தேடல் இன்னும் தொடர்ந்து,.. படர்ந்து… விரிந்து… மேலும் பலப் பொக்கிஷங்கள் புலரும் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்
அழைக்க: 9443559841
அணுக:drkamalaru@gmail.com
அருமனை.
19-08-2024.
(இஃது எழுத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் எழுதிய பொக்கிஷத் தேடல் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய அணிந்துரை.)
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9751519114
May be an image of text
All re

Wednesday, 11 September 2024

பாலியல் கொடுமைகளை வேரறுக்க போதை ஒழிப்பு அவசியம்.

 

பாலியல் கொடுமைகளை வேரறுக்க போதை ஒழிப்பு அவசியம்.

     22 Aug 2024

  கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.

     நம் நாட்டின் வரலாற்றில், மன்னராட்சி காலத்திலிருந்து ஒரு நாட்டின் அழிவுக்கும், ஆட்சியின் முடிவுக்கும் முக்கிய காரணிகளாக விளங்குபவை மண்ணாசையும் பெண்ணாசையும் என்பதை புராணங்கள் தொடங்கி காப்பியங்கள் வரை தெளிவுப்படுத்துகின்றன.

அதன் நீட்சி தற்கால மக்களாட்சியிலும் தொடர்கதையாகயுள்ளது என்பதற்கு, சமீபக் காலமாக நம் நாட்டில் அரங்கேறி வரும் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் சாட்சியாகின்றன.

     பகுத்தறிவைப் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பச்சிளம் குழந்தைகளிலிருந்து, வேலைக்குச் செல்ல ரயிலில் பயணிக்கும் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாழ்படுவதும் பலியாவதும் மலிவாகியுள்ளன.

     தற்போது, இந்த எல்லைக் கோடுகளைத் தாண்டி, கொடும் நோயாலும் பெரும் விபத்தாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போரை, இறைவனுக்கு அடுத்தபடியாக, இரவு, பகல் பாராமல், சிகிச்சையளித்து பாதுகாக்கும் பணியில், தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மீதும் தொடங்கியுள்ளது.

     ஆரம்பக் காலங்களில் பாலியல் பலாத்காரங்களை வெளியேச் சொன்னால் அவமானம் எனக் கருதி, பாதிக்கப்படுபவர்கள் அதை வெளிக்கொணராமல் தங்களுக்குள்ளே மூடிமறைத்தனர். அது, இதுபோன்ற ஈனச் செயலைச் செய்த பாதகர்களுக்குச் சாதகமாக மாறியது. இப்பொழுதெல்லாம், மூடிமறைப்பதற்கு முன்புபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது போன்ற சம்பவங்களல்ல, நாடெங்கும் நித்திய சம்பவங்களாக மாறியுள்ளன.

     மணிப்பூரில் கடந்த ஓராண்டு காலமாக, இனக்கலவரம் என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேறி வரும் பாலியல் அத்துமீறல்கள்; மேற்குவங்கத்தில் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் கூட்டுப் பலாத்காரக் கொலை; மஹாராஷ்டிராவில் பள்ளிக் கழிவறையில் நான்கு வயது சிறுமியருக்கு ஏற்பட்டிருக்கும் தாங்க முடியாத பாலியல் கொடுமை; இப்படி பட்டியலிட்டால் இன்னும் பல பல...

     ஏன் இந்த இழிச்செயல்? யார் இதற்குப் பொறுப்பு? என்பதையெல்லாம் ஆய்ந்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு முழுமுதல் காரணமாக இருப்பது, நாடு முழுவதும் வெகு இலகுவாகக் கிடைக்கும் விதவிதமானப் போதைப் பொருள்கள். இவை வகுப்பறையிலிருந்தே  மாணவர்களை வழிமாற்றி விடுகிறது. இளைஞர்களை மாஃபியா கும்பல்களிடம் மண்டியிட வைக்கிறது. வழிபோக்கனையும் வழிபறி கொள்ளையனாக்குகிறது.

     அடுத்ததாக நம் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள். குற்றவாளிகளுக்குக் காலம் தாழ்ந்து கொடுக்கப்படும் இலகுவானத் தண்டனைகள். பாலியல் குற்றங்கள் உண்மையென கையும் களவுமாகப் நிரூபிக்கப்பட்டால், விசாரணை என்ற பெயரில் காலதாமதம் ஏற்படுத்தாமல் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் கடுமையான சட்டத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

     இவற்றிற்கு அப்பாற்பட்டு அரசியல் தலையீடு. இம்மாதிரி குற்றவாளிகள் தங்களின் அரசியல் அல்லது ஆட்சியாளர்களின் பின்புலத்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை உறுதி செய்யும் விதத்தில் தற்போது, மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கூட்டுப்பலாத்கார கொலை நடந்துள்ளது. இந்த வழக்கில் அம்மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் களத்தில் இறங்கி, மருத்துவர்கள் பாதுகாப்புக்காக வழிமுறைகளை உருவாக்க 10 பேர் அடங்கிய தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

     பள்ளிக் குழந்தைகளிடமும் பணிபுரியும் இடங்களில் பெண்களிடமும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஈனர்களை உடனடியாக அவர்கள் வகிக்கும் பணியிலிருந்து நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எவ்விதச் சலுகைகளும் வழங்கக் கூடாது.

     நாட்டில் நிலவும் போதை பொருள்களின் புழக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு நாட்டு மக்களின் கூட்டுப்போராட்டமும் விழிப்புணர்வும் பேரியக்கமாக மாற வேண்டும்.

(இக்கட்டுரை 22-08-2024 ietamil இணைய இதழில் பிரசுரமானது.)