மகத்துவம் நிறைந்த மானிடச் சிறகுகள்.
முனைவர் கமல. செல்வராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (youtube)
(புலவர் கு. இரவீந்திரன் அவர்களின் மானிடச் சிறகுகள் நூல் உள்ளோட்டம்.)
பல்லாண்டுகாலம் பயிற்றுவித்தலில் பயணித்து, எண்ணிலா மாணவச் செல்வங்களை மாண்புறு மனிதர்களாக்கிய மகத்தும் நிறைந்தவர். செவிமடுப்போரின் இறுக்கமான இதயங்களை இளகவைக்கும் சுவைமிகு இலக்கியப் பேச்சாளர். ஆலயங்களில் ஆன்மீக உரையாற்றி, கேட்போரை பக்திபரவசத்திற்குள்ளாக்கி, இறைநிலைக்கு ஆற்றுப்படுத்தும் பேராற்றல் பெற்றவர்.
பயிற்றுவித்தல் நிறைவுற்ற பின்பு, எழுதுகோலை நெம்புகோலாக்கி, கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, வரலாறு, ஆன்மீகம், புதினம் என நூலாக்கம் செய்து, அண்மையில் பிரசுரித்த, பிரபலமான சங்கத் தமிழும் தமிழர் சமயமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்று, தமிழன்னையின் தவப்புதல்வனாகத் திகழ்பவர் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள்.
அன்னாரின் அரிய முயற்சியால், அளப்பரியச் சிந்தனையால் புதிய வரவாக உருப்பெற்றிப்பது மானிடச் சிறகுகள் என்னும் மகத்தான இந்நூல்.
அகிலம் போற்றும் அக்கினிச் சிறகை அமுதம் போல் இளையச் சமுதாயத்திற்கு ஆக்கியளித்த ஆகாய விஞ்ஞானி அப்துல்கலாமின் அறிமுகத்தோடு தொடங்கி… மண்ணில் வாழ்வதென்ன விண்ணையும் கண்டுதெளிவோம் என்னும் தீரத்துடன் முதல் மனிதனாய் நிலவில் பாதம் பதித்த நீல் ஆம்ஸ்டாங்கைத் தொடர்ந்து… ஓர் ஏழையாய் பிறந்து, ஓயாத உன்னத உழைப்பால் உயந்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முந்திநின்ற இராக் பெல்லரை இறுவாயிலாகக் கொண்ட… அறுபது அற்புத மனிதர்களல்ல புனிதர்கள், அவரவர் வாழ்கையின் உச்சத்தை அடைந்த அற்புதத்தை அகிலமறியச் செய்யும் அதிசயப் பெட்டகம் இந்நூல்.
கை, கால் என உடல் உறுப்புகள் எதுவுமின்றி, வெறும் முண்டமாய் பிறந்தும், உலகத்தின் இளைஞர்களுக்கு ஊக்க மருந்தென்னும் பண்டமாய் மாறிய கேரள மாநிலம் ஷிகாப் பூக் கோட்டூரின் வாழ்கையை ஒரு கதை சொல்லி போல் விவரித்திரிருக்கும் விதம் விசித்திரமானது.
மண்ணில் மனித குலத்தில் பிறந்தும், பரந்து விரிந்த உலகத்தை கண்திறந்து பார்க்க முடியாமலும், உலகத்தோடு ஒட்டி உறவாடி, வாய்திறந்து போச இயலாமலும், பிறர் கூறும் இன்செல்லைக் கேட்கும் திறனற்றும் திக்குமுக்காடி நின்றவள் அமெரிக்க நாட்டின் ஹெலன் கெல்லர்.
இன்று உலக நாடுகளில் கண்ணொளி இழந்தோர் கல்வியில் முன்னொளியாய் திகழ எழுத்துருவை உருவாக்கி முன்னோடியாகத் திகழும் கெல்லரின் வாழ்க்கையை, தன் எழுத்துத்திறத்தால் வாசிப்போரை வசீகரிக்கும் முறையில் எடுத்தியம்பியிருப்பதற்கு ஒரு வைர வாளையே பரிசளிக்கலாம் இவருக்கு.
இத்தேசத்தின் தென்கோடி கன்னியாகுமரியில் குடிசையில் பிறந்து, விண்வெளியில் வித்தைகளாயிரம் செய்த சிவனும், அசாமில் சுயமாகக் காடுவளர்த்து நாட்டுவளம் பேணி அரசின் கவனத்தை தன்பால் ஈர்த்த ஜாதவ் பயேலும், தன் வீரதீரத்தால் அண்டத்தையே அடக்கியாண்டு, இறுதியில் எடுத்துச் செல்லுவதற்கு ஒன்றுமில்லையென்று தன்னிரு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே நீட்டி, ஆறடி மண்ணுக்குள் அடைக்கலமான மாவீரன் நெப்போலியனும், வறுமையை மூலதனமாகக் கொண்டக் குடும்பத்தில், தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், மூன்றாவது குழந்தைக்கு வேண்டா வெறுப்புடன் வேண்டாம் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்ட பெண், இன்று ஜப்பான் நாட்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று தன் பிறவிப்பயனை தமிழகத்தில் திருவள்ளூரில் வசிக்கும் பெற்றோருக்கு உணர்த்திய பெண்மணியல்ல பொன்மணி என எப்பக்கம் புரட்டினாலும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் ஆறுபது வரலாற்று நாயக, நாயகிகளின் வாழ்க்கை நகல் இந்நூல்.
உள்ளூரில் உள்ளவர்களிலிருந்து, உலகளாவிலுள்ளோர் வரை பிறப்பால் இயலாமலும், இல்லாமலும் இருந்து, தங்களின் சீரிய முயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் உயர்ச்சி பெற்றோரை, அனைத்தும் உள்ளோருக்கு முன்னுதாரணமாய் திகழும் உதாரண புருஷர்களாக்கி, முடங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்திற்குப் புதிய உதிரமேற்றி, வெற்றியெனும் இமயத்தின் உச்சியிலேற சக்தி கொடுத்திருக்கிறது இவரது எழுதுகோல்.
பிறப்பால் உடலில் சக்தியிருந்தும், பிறந்த இடத்தில் செல்வ செழிப்புடன் அனைத்துமிருந்தும் வாழ்க்கை நெறி தவறி, போதைக்கும் பேதைக்கும் அடிமையாகி, வாழ்கையின் வசந்தங்கள் அனைத்தையுமிழந்து திசைமாறிச் செல்லும் நாளைய இளைய சமுதாயத்திற்கு சக்தியும் முக்தியும் தரும் வல்லமை இந்நூலுக்குண்டு.
ஒவ்வொருவரின் வாழ்கை வரலாற்றின் இறுவாயிலில் பொய்யாமொழியாரின் மெய்மொழியொன்றை பொருத்திக்காட்டியுள்ளார் இந்த மெய்ஞானப் புலவர். நூல்வகையில் இது கட்டுரை வடிவம் கொண்டிருந்தாலும், படிக்க படிக்க தீந்தேன் பருகும் சுவையை அனுபவிக்கும் விதத்தில் நல்ல கதை சொல்லும் பாங்கினையே கையாண்டிருப்பது வாசகர்களை, நுழைவாயிலிருந்து இறுவாயில் வரை ஒரே இருப்பில் வாசித்து முடிக்கும் அவாவுள்ளாக்கியிருப்பது நூலாசிரியருக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.
வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்போருக்கு இஃது ஓர் உந்து சக்தி.
வாழக்கையை வெற்றி கொள்ள நினைப்போருக்கு இது ஒரு கலங்கரை விளக்கு.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
23-03-2024.
(மிக அற்புதமான இந்நூலைப் பெற்றுக் கொள்வதற்கு நூலாசிரியரின் தொடர்புக்கு: 9 4 8 7 6 5 3 2 6 5)
All reactions
No comments:
Post a Comment