Thursday, 8 August 2024

மகத்துவம் நிறைந்த மானிடச் சிறகுகள்.

                    மகத்துவம் நிறைந்த மானிடச் சிறகுகள்.

முனைவர் கமல. செல்வராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வி மேம்பாட்டுக் கேந்திரம், தமிழ் நாடு.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (youtube)
(புலவர் கு. இரவீந்திரன் அவர்களின் மானிடச் சிறகுகள் நூல் உள்ளோட்டம்.)
பல்லாண்டுகாலம் பயிற்றுவித்தலில் பயணித்து, எண்ணிலா மாணவச் செல்வங்களை மாண்புறு மனிதர்களாக்கிய மகத்தும் நிறைந்தவர். செவிமடுப்போரின் இறுக்கமான இதயங்களை இளகவைக்கும் சுவைமிகு இலக்கியப் பேச்சாளர். ஆலயங்களில் ஆன்மீக உரையாற்றி, கேட்போரை பக்திபரவசத்திற்குள்ளாக்கி, இறைநிலைக்கு ஆற்றுப்படுத்தும் பேராற்றல் பெற்றவர்.
பயிற்றுவித்தல் நிறைவுற்ற பின்பு, எழுதுகோலை நெம்புகோலாக்கி, கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, வரலாறு, ஆன்மீகம், புதினம் என நூலாக்கம் செய்து, அண்மையில் பிரசுரித்த, பிரபலமான சங்கத் தமிழும் தமிழர் சமயமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்று, தமிழன்னையின் தவப்புதல்வனாகத் திகழ்பவர் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள்.
அன்னாரின் அரிய முயற்சியால், அளப்பரியச் சிந்தனையால் புதிய வரவாக உருப்பெற்றிப்பது மானிடச் சிறகுகள் என்னும் மகத்தான இந்நூல்.
அகிலம் போற்றும் அக்கினிச் சிறகை அமுதம் போல் இளையச் சமுதாயத்திற்கு ஆக்கியளித்த ஆகாய விஞ்ஞானி அப்துல்கலாமின் அறிமுகத்தோடு தொடங்கி… மண்ணில் வாழ்வதென்ன விண்ணையும் கண்டுதெளிவோம் என்னும் தீரத்துடன் முதல் மனிதனாய் நிலவில் பாதம் பதித்த நீல் ஆம்ஸ்டாங்கைத் தொடர்ந்து… ஓர் ஏழையாய் பிறந்து, ஓயாத உன்னத உழைப்பால் உயந்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முந்திநின்ற இராக் பெல்லரை இறுவாயிலாகக் கொண்ட… அறுபது அற்புத மனிதர்களல்ல புனிதர்கள், அவரவர் வாழ்கையின் உச்சத்தை அடைந்த அற்புதத்தை அகிலமறியச் செய்யும் அதிசயப் பெட்டகம் இந்நூல்.
கை, கால் என உடல் உறுப்புகள் எதுவுமின்றி, வெறும் முண்டமாய் பிறந்தும், உலகத்தின் இளைஞர்களுக்கு ஊக்க மருந்தென்னும் பண்டமாய் மாறிய கேரள மாநிலம் ஷிகாப் பூக் கோட்டூரின் வாழ்கையை ஒரு கதை சொல்லி போல் விவரித்திரிருக்கும் விதம் விசித்திரமானது.
மண்ணில் மனித குலத்தில் பிறந்தும், பரந்து விரிந்த உலகத்தை கண்திறந்து பார்க்க முடியாமலும், உலகத்தோடு ஒட்டி உறவாடி, வாய்திறந்து போச இயலாமலும், பிறர் கூறும் இன்செல்லைக் கேட்கும் திறனற்றும் திக்குமுக்காடி நின்றவள் அமெரிக்க நாட்டின் ஹெலன் கெல்லர்.
இன்று உலக நாடுகளில் கண்ணொளி இழந்தோர் கல்வியில் முன்னொளியாய் திகழ எழுத்துருவை உருவாக்கி முன்னோடியாகத் திகழும் கெல்லரின் வாழ்க்கையை, தன் எழுத்துத்திறத்தால் வாசிப்போரை வசீகரிக்கும் முறையில் எடுத்தியம்பியிருப்பதற்கு ஒரு வைர வாளையே பரிசளிக்கலாம் இவருக்கு.
இத்தேசத்தின் தென்கோடி கன்னியாகுமரியில் குடிசையில் பிறந்து, விண்வெளியில் வித்தைகளாயிரம் செய்த சிவனும், அசாமில் சுயமாகக் காடுவளர்த்து நாட்டுவளம் பேணி அரசின் கவனத்தை தன்பால் ஈர்த்த ஜாதவ் பயேலும், தன் வீரதீரத்தால் அண்டத்தையே அடக்கியாண்டு, இறுதியில் எடுத்துச் செல்லுவதற்கு ஒன்றுமில்லையென்று தன்னிரு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே நீட்டி, ஆறடி மண்ணுக்குள் அடைக்கலமான மாவீரன் நெப்போலியனும், வறுமையை மூலதனமாகக் கொண்டக் குடும்பத்தில், தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், மூன்றாவது குழந்தைக்கு வேண்டா வெறுப்புடன் வேண்டாம் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்ட பெண், இன்று ஜப்பான் நாட்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று தன் பிறவிப்பயனை தமிழகத்தில் திருவள்ளூரில் வசிக்கும் பெற்றோருக்கு உணர்த்திய பெண்மணியல்ல பொன்மணி என எப்பக்கம் புரட்டினாலும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் ஆறுபது வரலாற்று நாயக, நாயகிகளின் வாழ்க்கை நகல் இந்நூல்.
உள்ளூரில் உள்ளவர்களிலிருந்து, உலகளாவிலுள்ளோர் வரை பிறப்பால் இயலாமலும், இல்லாமலும் இருந்து, தங்களின் சீரிய முயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் உயர்ச்சி பெற்றோரை, அனைத்தும் உள்ளோருக்கு முன்னுதாரணமாய் திகழும் உதாரண புருஷர்களாக்கி, முடங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்திற்குப் புதிய உதிரமேற்றி, வெற்றியெனும் இமயத்தின் உச்சியிலேற சக்தி கொடுத்திருக்கிறது இவரது எழுதுகோல்.
பிறப்பால் உடலில் சக்தியிருந்தும், பிறந்த இடத்தில் செல்வ செழிப்புடன் அனைத்துமிருந்தும் வாழ்க்கை நெறி தவறி, போதைக்கும் பேதைக்கும் அடிமையாகி, வாழ்கையின் வசந்தங்கள் அனைத்தையுமிழந்து திசைமாறிச் செல்லும் நாளைய இளைய சமுதாயத்திற்கு சக்தியும் முக்தியும் தரும் வல்லமை இந்நூலுக்குண்டு.
ஒவ்வொருவரின் வாழ்கை வரலாற்றின் இறுவாயிலில் பொய்யாமொழியாரின் மெய்மொழியொன்றை பொருத்திக்காட்டியுள்ளார் இந்த மெய்ஞானப் புலவர். நூல்வகையில் இது கட்டுரை வடிவம் கொண்டிருந்தாலும், படிக்க படிக்க தீந்தேன் பருகும் சுவையை அனுபவிக்கும் விதத்தில் நல்ல கதை சொல்லும் பாங்கினையே கையாண்டிருப்பது வாசகர்களை, நுழைவாயிலிருந்து இறுவாயில் வரை ஒரே இருப்பில் வாசித்து முடிக்கும் அவாவுள்ளாக்கியிருப்பது நூலாசிரியருக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.
வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்போருக்கு இஃது ஓர் உந்து சக்தி.
வாழக்கையை வெற்றி கொள்ள நினைப்போருக்கு இது ஒரு கலங்கரை விளக்கு.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
23-03-2024.
(மிக அற்புதமான இந்நூலைப் பெற்றுக் கொள்வதற்கு நூலாசிரியரின் தொடர்புக்கு: 9 4 8 7 6 5 3 2 6 5)
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
All reactions

விடுதலை வேள்வியில் தியாகி விஸ்வநாததாஸ்.

             விடுதலை வேள்வியில் தியாகி விஸ்வநாததாஸ்.

பாரதத் தாயின் தவப்புதல்வன்.
முனைவர் கமல. செல்வராஜ்
மானிட வாழ்வில் மகத்தும் மிகுந்த கற்பித்தல் பணியில் அரைநூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக தன்னை முழுமையாக அற்பணித்தவர் கப்பியறை அறிவர் வ. இராயப்பன் அவர்கள்.
அதில், அவருக்குக் கிடைத்த அறிவும் அனுபவமும், அவரை ஓய்வுக்குப் பின்னும் சோர்ந்து போகாமல் இயக்கிக் கொண்டேயிருக்கின்றன, ஒரு படைப்பாளியாக… பயிற்சியாளராக… போச்சாளராக… ஆய்வாளராக.
அதன் விளைவாகத் தமிழகத்தில் இலக்கியம், சமயம், சமூகம், தேச விடுதலை ஆகியவற்றிற்காக, தங்களை அற்பணித்து, போதிய அளவிற்கு அங்கீகரிக்கப்படாமல் வாழ்ந்து மறைந்த தியாகச்சுடர்களின் வாழ்க்கை வரலாற்றை வெட்ட வெளிச்சமாக்குவதற்கு முனைப்புடன் ஓர் ஆய்வளராக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை பத்துப் புத்தகங்கள் வாயிலாக ஐம்பதிற்கும் அதிகமான அறியப்படாத ஆளுமைகளின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வாழ்வியலை வரும் தலைமுறையினருக்காக ஆவணப்படுத்தியுள்ளார் இவர். அதன் ஒரு பகுதியாக விடுதலை வேள்வியில் தியாகி விஸ்வநாததாஸ் என்னும் இந்நூலைப் படைத்தளித்துள்ளார்.
ஆண்டாண்டுக் காலமாக அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பாரதத்தை, அவனிடமிருந்து மீட்டெடுப்பதற்காகத் தன் எழுத்தாலும் பேச்சாலும் வெகுண்டெழுந்த பாரதியையும், தமது சத்தியாக்கிரக் குணத்தால் வெள்ளையனை மிரளச் செய்த மகாத்மாவையும் இப்பாரறியும்.
இவர்களுக்கெல்லாம் இம்மியளவிற்கும் சளைக்காமல், தமிழகத்தின் சந்துபொந்தெல்லாம் குடும்பத்துடன் நாடகம் நடத்தி, பாமரர்களின் மனதில் சுதந்திரப் பொறியைப் பரவச் செய்த, இந்தத் தியாகி விஸ்வநாத தாஸ்ஸின், வீரம் செறிந்த வரலாற்றை யாரறிவார்?
படிப்போரின் உதிரத்தை உறைய வைக்கும் அவரின் வாழ்க்கை வரலாற்றை, இன்று சுதந்திரக் காற்றை சுதந்திரமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் எத்தனை பேர் அறிவார்கள்? சுதந்திரப் போரின் வீரியத்தை, கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, தாய்நாட்டின் பழமை பெருமைக்குப் பங்கம் விளைவித்து, அன்னிய நாட்டுக் கலாச்சாரத்திற்குத் தங்களை முழுமையாக அடிமைகளாக்கிக் கொண்டிருக்கும், நம் இளைஞர்களின் மனதில், இந்த வீர விதைகளை விதைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எடுத்திருக்கும் முயற்சிகள் என்ன? அதற்காக எந்தப் பாடப்புத்தகத்தில் பாடமாக வைத்துள்ளார்கள்? என்பதெல்லாம் விடைகிடைக்காத, வேதனைக்குரியக் கேள்விகள்.
அந்த வேதனைகளின் வெளிப்பாட்டிற்கு விடைகிடைக்கும் விதத்தில் இந்த எழுபத்தி ஐந்தாவது சுதந்திரத்தின ஆண்டில். மத்திய அரசாங்கம், நாடுமுழுவதும் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு, வரலாற்றில் இடம்பிடிக்காமல், மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்டச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் பற்றியத் தகவல்களை வெளியிடத் தயாராகி வருகிறது.
அப்படித் தயாரித்தத் தமிழக வீரர்களின் பட்டியலில், இந்த மாபெரும் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதனை அறிந்த, நம் நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது தணியாத தாகம் கொண்ட இந்நூலாசிரியர், அத்தியாகத் தீபத்தைப்பற்றி அற்புதமான இந்நூலை ஆக்கியுள்ளார்.
தியாகியின் உண்மை வரலாற்றை ஆய்ந்தறிந்து வெளிக்கொணர வேண்டும் என்னும் பேரவாவில், ஒரு நேர்த்தியான ஆய்வாளரைப் போன்று, அவர் வாழ்ந்த ஊருக்குக் கள ஆய்விற்காக நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகி, தியாகியின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இரண்டு தலைமுறையைச் சார்ந்த அனைவரையும் சந்தித்துத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.
அவர் நடித்த நாடகங்கள், அவரே இயற்றி மேடைகளில் பாடியப் புரட்சிகரப் பாடல்கள் அனைத்தையும் வாய்மொழியாகக் கேட்டறிந்துள்ளார். அவரோடு மட்டுமின்றி, அவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அவரின் மகன்கள் எனக் குடும்பத்திலுள்ள அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளத் தகவல்களும் கிடைத்துள்ளன.
சுதந்திரப் போராட்டத்திற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதமான போராட்ட முறைகளைக் கையாண்டுள்ளனர். அதில் தியாகி விஸ்வநாததாஸ் கையாண்ட முறை சற்றே வித்தியாசமானது. தாமாக நாடகம், புரட்சிகரப் பாடல்களை எழுதி, மேடைகளில் பாடி, நடித்து, அதன் வாயிலாக மக்களுக்குள் சுதந்திர வேட்கையை ஊட்டுவது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் வெள்ளையன் அரசு இவர் மீது கடும் கோபமடைந்து, எண்ணற்ற முறை, இவர் மேடைகளில் நாடகம் நடத்துவதற்கும், அதில் நடிப்பதற்கும் தடை விதித்துள்ளது.
ஆனால் வெள்ளையனின் தடையையும் மீறி நாடகங்களை நடத்தவும் அவற்றில் மாறுவேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார் இந்த வீரதீரன். அதன் விளைவு 29 முறை வெள்ளையனின் கைக்கூலிப் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். ஒரு முறை சிறையில் வைத்து இனி நாடகத்தில் நடிக்கமாட்டேன் என எழுதிக் கொடுத்தால் விடுதலைச் செய்வதாகப் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு என் உயிரை எடுத்தாலும் அப்படி எழுதித்தர மாட்டேன் என மிகவும் கராராகக் கூறியுள்ளார் இந்தப் பாரதத்தாயின் தவப்புதல்வன்.
இவ்வளவு வைராக்கியத்துடன் நாடகத்தின் மூலம் சுதந்திர வேட்கையைப் பரப்பிய இத்தியாகச் செம்மலின் இன்னுயிர், அவர் ஒரு நாடகத்தில் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விடைபெற்றிருக்கிறதென்றால், இவரன்றோ இப்பாரதத்தாயின் உத்தமப்புத்திரன்.
ஏதோ ஒரு காரணத்திற்காக மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, அறியப்படாத ஒரு தவப்புதல்வனின் வாழ்க்கை வரலாற்றை, தாய்நாடு சுதந்திரமடைந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும் சிரமத்திற்குள்ளும் ஒரு புத்தகமாக வடிவமைத்திருக்கும் இந்நூலாசிரியரையும் இப்பாரதத்தாயின் தவப்புதல்வன் என்றே கருதத்தோன்றுகிறது.
படிக்கப் படிக்க உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் கசியச்செய்யும் பாடல்களையும், கேட்கக் கேட்க உதிரத்தைச் சுடேற்றும் நாடக வசனங்களையும் நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் விதம் முற்றிலும் வித்யாசமானது.
பள்ளி, கல்லூரி வரலாற்றுப் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு இந்நூலைப் பாடப்புத்தகமாக்குவது தான், இத்தேசம் இந்த மாவீரன் தியாகி விஸ்வநாத தாஸிற்குச் செலுத்தும் மாபெரும் மரியாதையாகும்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்
மேனாள் முதல்வர்
கிரேஸ் கல்வியியல் கல்லூரி
படந்தாலுமூடு.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (youtube)
(காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் விலை ரூ.200/-
தொடர்புக்கு: கப்பியறை முனைவர் இராயப்பன் 9488291900)
May be an image of 1 person and text
All reactio