நல்லறம் காக்கும் இல்லறம்.
(இஃது எழுத்தாளர் செ. வின்சென்ட் அவர்கள் எழுதிய திருமணமும் குடும்ப வாழ்க்கையும் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய உள்ளோட்டம்.)
பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் பெரும் பங்கு வகிப்பது, கட்டுக்கோப்பான கூட்டுக்குடும்ப வாழ்வியலாகும். அவ்வாழ்வியலின் அடித்தளமாக அமைந்துள்ளது நிச்சையிக்கப்பட்ட திருமண அமைப்பு முறை. மனிதப்பிறப்பின் மகத்துவமே திருமணம்.
அதனால்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சையிக்கப்படும் என்றுரைக்கின்றனர் நம் மூதாதையர்.
ஆனால் இன்றைய அதிநவீன நாகரிகத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் திருமண பந்தங்களில் பல்வேறு விதமன மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்களில் சில ஏற்றமாகவும் பல ஏமாற்றங்களாகவும் மாறுகின்றன. இவை பாரதத்தின் குடும்பப் பாரம்பரியத்தின் அஸ்திவாரத்தையே அதிர வைக்கின்றன.
இச்சூழலில் எழுத்தாளர் செ. வின்சென்ட் அவர்கள் எழுதியுள்ள திருமணமும் குடும்ப வாழ்க்கையும் என்னும் இந்நூல் பாராட்டுக்குரியது. எழுத்தையே மூச்சாகக் கொண்டுள்ள இவரது 11 ஆவது நூல் இது. உயர் படிப்பும், எண்ணிலாப் பட்டமும். உன்னதப் பதவியும் இல்லையென்றாலும் எழுத்தால், தமிழக அரசிடம் தமிழறிஞர் என்னும் உயரிய விருதைப் பெற்று எழுத்துலகில் உயர்ந்து நிற்பவர்.
தான் சார்ந்திருக்கும் சமயத்தின் மீது அபரிதமான நம்பிக்கையுடையவர். அதனால் அச்சமயநெறியில் திருணம் பற்றியும் குடும்ப வாழ்வியல் பற்றியும் வலியுறுத்தப்பட்டிருக்கும் அறக்கருத்துகளை அமுதம் போல் எடுத்தியியம்பியுள்ளார். அக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் பிற சமயங்களிலும் இலக்கியங்களிலும் விவரிக்கப்பட்டிருக்கும் திருமண பந்தங்களைச் சான்றாதாரமாக்கியுள்ள விதம் வியப்பிற்குரியது.
திருமணப்பந்தம் பற்றி நல்லறிஞர்கள் கூற்றும், பல்மொழியில் கூறப்பட்டிருக்கும் விளக்கங்களும் இங்கே கையாளப்பட்டிருக்கும் விதம் எழுத்தாளரின் ஆழமான, பரந்துப்பட்ட வாசிப்பின் சாட்சிகளாக உள்ளன. அன்றையக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த திருமணம் மற்றும் குடும்ப உறவு முறைகளிலிருந்து இன்றைய நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் உருவாகி வரும் உறவுகளின் விரிசல்கள், பண்பாட்டின் சிதைவுகள் ஆகியவற்றையும் ஆதங்கத்தோடு அடுக்கியுள்ளார்.
சமுதாயத்தின் மாற்றத்திற்கான தமது சிந்தனையோட்டத்தை வெட்டவெளிச்சமாக்குவதற்கு எழுத்தை ஆயுதமாக்கியுள்ள இவரது தொடர் முயற்சியின் வெற்றிக்கு, வாசிப்பை சுவாசிக்கும் அனைவரும் இணைந்தே துணைநிற்போம்.
(நூலைப் பெற்றுக்கொள்ள நூலாசிரியரின் தொடர்புக்கு: 9751519114)
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com