சிதறால் திருச்சாரண மலையில் ஓர் இனிய பயணம்.
( நூல் உள்ளோட்டம். )
கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக உலக வரைபடத்தில் இடம் பிடித்திருப்பது, சிதறால் திருச்சாரணத்து மலை. வரலாற்று ஆய்வாளர்களால், காலத்தை வரையறுத்து மிகத்துல்லியமாகக் கூறமுடியாத, தொன்மை வாய்ந்தது இம்மலை.
சுதந்திரத்திற்கு முந்தைய மன்னராட்சிக் கலத்தில் தோற்றிவிக்கப்பட்டது என்று கூறினாலும், அதற்கான ஆதாரபூர்வமான ஆவணங்களோ, அடையாளங்களோ முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது நிஜம். என்றாலும் அங்கிருக்கும் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், அதன் பழமையை ஊகித்துக் கொள்வதற்குத் துணைபுரிகின்றன.
இங்கே பல்கலைக்கழகம் அமைந்திருந்ததாகவும் பல்வேறு நாட்டிலிருந்து மாணவர்கள் வந்து வேத, சாஸ்திரக் கல்வி கற்றுத்தேர்ந்து சென்றதாகவும், அதனால் தான் உலக வரைப்படத்தில் இவ்விடம் இடம் பிடித்தது என்றும் ஆய்வாளர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.
சிதறால் திருச்சாரண மலையில் ஓர் இனியப் பயணம் என்னும் இந்நூலை, நூலாசிரியர் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் மிகவும் கரிசனையோடு படைத்தியிருக்கிறார். தமது நீண்ட நெடுங்காலக் கல்விப் பணிக்குப் பிறகு, முழுமையாகப் படைப்புப் பணியில் தன்னை அற்பணித்துக் கொண்டு, புதினம், ஆன்மீகம், இலக்கியம், ஆய்வு சார்ந்த பல நூல்களைப் படைத்து, குமரிமாவட்ட சாதனை எழுத்தாளர் பட்டியலில் முந்தியிருக்கிறார்.
தமது வாழ்விடத்திற்கு மிக அருகாமையில் இவ்விடம் அமைந்துள்ளதால், இளமைப் பருவம் முதல் இவ்விடம், இவருக்கு மிகவும் பரிச்சயம். அதனால் அங்குள்ள இயற்கையழகை அணுவணுவாக இரசித்து… திளைத்து… திகைத்து… கவிதை வடிவில் வருணனையாக எழுதியிருக்கும் விதம், அனைவரையும் அப்படியே சுட்டியிழுத்து எட்டிப்பார்க்க வைக்கிறது.
படிப்போருக்கு இன்பம் நல்கும் இயற்கை வருணனையோடு மட்டும் நின்று விடாமல், பிறநூல்கள் பலவும் ஆய்ந்தறிந்து அவற்றின் சான்றாதாரங்களையும் எடுத்தியம்பியிருக்கிறார். இங்கே பல்கலைக் கழகம் இருந்தது என்பதற்கு சான்று பகரும் விதத்தில் மலையாள மொழி எழுத்தாளரான ஆற்றிங்கல் இராதாகிருஷ்ணன், தமது படியேற்றம் நாவலில் குறிப்பிட்டிருப்பதை, இங்கே சான்றாக்கியுள்ளார். இதன் மூலம் இந்நூலுக்காக இவரின் தேடல் பல தளங்களைத் தாண்டியிருக்கிறது என்பது புலனாகிறது.
அதுபோலவே, குமரிமாவட்டத்திலுள்ள திற்பரப்பு மஹாதேவர் ஆலயம், கோட்டைக்ககம் திருவிக்ரமர் ஆலயம் உட்பட பல கோயில்களில் இருக்கும் சிறப்பம்சங்களைக் கண்டுபிடித்து, திருச்சாரணத்து மலையோடு ஒப்புமைப்படுத்தியுள்ளார். அவற்றில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற 12 சிவாலயத் திருத்தலங்களில் மூன்றாவதாகியத் திற்பரப்பு மஹாதேவர் ஆலயத்தில், ‘சமணர் தடம் பதித்த அடையாளம் தென்படுகிறது, அங்கே கலைவளர் கல்லூரி அமைந்திருந்ததாய் நிபுணர்கள் கூறியிருப்பதாக’ நூலாசிரியர் கூறியிருப்பது மிகவும் வியப்புக்குரியது.
திருச்சாரணத்து மலையின் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுச் செய்யும் போது, இது சமண, பௌத்த, சைவ, சமயங்களில் எதை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறுதியிட்டுக் கூறுவதில் ஆய்வாளர்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. அந்தக் குழப்பங்களுக்கு இடமளிக்காத விதத்தில் இந்நூலில் பல்வேறு விளக்கங்களை நூலாசிரியர் புலவர் கு. இரவீந்திரன் அளித்துள்ளார்.
நூலாசிரியர் சின்னஞ்சிறு வயதில் பெற்றோர், உற்றாருடன் இம்மலையில் சென்றபொழுது இருந்த நிலையையும், இப்பொழுது அடைந்திருக்கும் மலையின் மாற்றங்களையும் ஒப்புமை படுத்தியிருப்பது ஒரு பரிணாமத்தின் ஆவணப்படுத்துதலாகும்.
இதுவரை இம்மலைப் பற்றியச் செய்திகளும் கட்டுரைகளும் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சில ஆய்வு நூல்களில் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. ஆனால் முழுமையான ஒரு நூலாக வெளிவருவது இந்நூலாகத்தான் இருக்கும் எனக் கருதுகிறேன். இனி வரும் காலங்களிள் இம்மலையைப் பற்றி ஆய்வுச் செய்யும் ஆய்வாளர்களுக்கு இஃது ஓர் சிறந்த பொக்கிஷமாகவே விளங்கும் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அழக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (YouTube)
அருமனை.
21-03-2023.
(இந்நூலாசிரியரின் தொடர்புக்கு: 9487653265.
நூலைஇணைதளம் வழியாகப் பெற்றுக்கொள்வதற்கு: www.notionpress.com)
No comments:
Post a Comment