Behin JM 27-03-2023
இன்றைய கதாநாயகன்.
கமல செல்வராஜ் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை இவரது பூர்வீகம். தினமலர் நாளிதழில் நிருபராக பல ஆண்டுகள் பணியாற்றி பல தரப்பு மக்களின் அன்பை பெற்றவர். தொடர்ந்து கல்லூரி பேராசிரியராக பணியாற்றி மாணவ செல்வங்களுடன் பயணிக்க துவங்கினார். படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். இவர் கடந்த 2005 ம் ஆண்டு சிதறால் பகுதியில் சித்ராலயா சேவா டிரஸ்ட் என்ற ஒரு காப்பகத்தை துவங்கினார். ஆத்மார்த்தமான சில நண்பர்கள் உதவியுடன் துவங்கிய இந்த காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட பெண் குழந்தைகளை சேர்த்தார். பல்வேறு காரணங்களால், உறவுகளை இழந்த, உடமைகளை இழந்த பெண் குழந்தைகளின் காவல் தெய்வமானார். சிறு வயதிலேயே இந்த காப்பகத்துக்கு வரும் குழந்தைகளை மூன்று வேளை உணவு அளித்து, பாதுகாப்பு கொடுத்து, அப்பகுதியில் உள்ள தரமான பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி கல்வியும் புகட்டினார். பிளஸ் டூ முடித்த குழந்தைகளை உயர்கல்வி பயில வாசல் திறந்தார். ஆண்டுகள் வேகமாக நகர்ந்தாலும், காப்பகத்தின் செலவுகளை சமாளிப்பதில், நண்பர்கள் மற்றும் நல்லுள்ளம் படைத்த பலரது பங்களிப்புகள் அமைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இக்காப்பகத்தில் பயின்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு, பெரும் மனநிறைவை தந்தது அவருக்கும் அவரது நலன்விரும்பிகளுக்கும். சில மாதங்களில் அடுத்த பெண்ணும் மணமகளானாள். மூன்றாவது பெண்ணிற்கு இன்று (27/3/23) திருமணம் நடந்தது. சிதறால் தனியார் திருமண மண்டபத்தில் தடபுடல் விருந்துடன். வீடு காண செல்லும் போது கொண்டு போக வேண்டிய கட்டில், பீரோ மற்றும் பொருட்கள் அனைத்தையும் நேற்று மாலையிலேயே மார்த்தாண்டம் அனுஷயா டிரஸ்ட் நிர்வாகிகள் வாங்கி மணமகளிடம் ஒப்படைத்து சென்றனர். 30 க்கும் மேற்பட்ட காப்பக மாணவிகள் மற்றும் ஊர்மக்கள் பங்கேற்று சிறப்பித்த திருமணம் பலதரப்பிலும் நம்பிக்கை சேர்ப்பதாக அமைந்தது. தந்தை தாயை இழந்த நிலையில், தங்களின் எதிர்காலம் தெரியாமல் தடுமாறி நின்ற பெண்குழந்தைகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி நிமிர்ந்து நிற்கிறார் கமல செல்வராஜ் அவர்கள்.
இனிய வாழ்த்துகள் ஐயா....
மகிழ்வுடன்
பெகின் கன்னியாகுமரி
All react
No comments:
Post a Comment