Thursday, 12 January 2023

நவயுக சிற்பி டாக்டர் இராதாகிருஷ்ணன்.

                      நவயுக சிற்பி டாக்டர் இராதாகிருஷ்ணன் - ஆசிரியர் தினக் கட்டுரை.

எதுவும் அறியாத மாணவர்களின் இதயங்களில் அறவுத் தீபத்தை ஏற்றி, உலகறியும் உன்னத மனிதர்களாக்கும் மிக உயரியச் செயலைச் ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி செய்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
தான்கற்பித்த மாணவர்கள், தன்னை விட எவ்வளவு உயர்ந்து பெயரும் கீர்த்தியும் பெற்று வளர்ந்தாலும் அவர்களைப் பார்த்து எவ்விதப் பொறாமையும் கொள்ளாமல், அவர்களின் வளர்ச்சி, தன்மகிழ்ச்சி எனக் கருதும் உத்தமர்கள் ஆசிரியர்கள்.
அதனால்தான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, பெரும் துயரத்திலும் துன்பத்திலும் சுழன்ற பிறகும், விடா முயற்சியுடன் படித்து, பட்டங்கள் பல பெற்று, ஆசிரியர் பணியில் அமர்ந்து, அளவிடற்கரிய சாதனைகள் புரிந்த சர்வப்பள்ளி டாக்டர் வி. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தத் தினத்தை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றது நம் பாரத தேசம்.
ஆசிரியர் பணிக்குள் பாதம் பதித்து, இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகி, யுனஸ்கோவின் தூதராகி, சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி, இரண்டாவது ஜனாதிபதி என பதவிகள் பல வகித்து, பாரதத்தின் மிக உயரிய பாரதரத்னா விருதுவரை தனதாக்கி, கல்வியால் உயர்ந்த உத்தமர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
சிறந்த ஆசிரியராக மட்டுமின்றி, தன்னிகரற்ற தத்துவவித்தகராகவும், வேத, இதிகாசங்களின் உண்மை நிலைகளை ஆய்ந்தறிந்து உலகிற்குப் போதித்த ஆன்மீக வல்லுநராகவும் விளங்கினார். அதனால் இன்றும் அவரது தத்துவங்கள் மாணவர்களுக்குப் பாடநூலாகவும் ஆய்வு நூலாகவும் இருக்கின்றன. மட்டுமின்றி நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் கூறியத் தத்துவங்கள் இன்றைய நவீனகாலத்திற்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன.
கல்வி பற்றி அவர் கொண்டிருந்த தத்துவங்கள் இன்றைய மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் பிரதிபலித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதுதான் ‘திறமையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும்’ என்பது. மேலும் கல்வியைப் பற்றி அவர் கூறும் போது ‘கல்வியின் உண்மையான நோக்கம், அமைதியான வாழ்க்கையை அமைப்பதே’ என்கிறார்.
தத்துவங்களில் மட்டுமின்றி சமயங்கள் பற்றிய அவரது அழமான கருத்துகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவருக்குப் பிடித்தமான நூலாகியப் பகவத் கீதையைப் பற்றிக் கூறும் போது, ‘உபநிடதங்கள் என்ற பசுவிலிருந்து கிருஷ்ணர் என்ற தெய்வீக ஆயர் அர்ஜூனனுக்காக் கறந்த பால் தான் பகவத் கீதை; என்றும் அது பழமாயானதும் அன்று; பழையதும் அன்று; புதியதும் அன்று;. நிரந்தரமானது’ எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் ‘மனிதன் ஆசைகளை ஒழுங்குபடுத்தி பகவானிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கை என்பது சந்தேகமில்லாத, உறுதியான விசுவாசமும் ஈடுபாடும் இணைந்து வாழ்க்கையின் ஒரு நோக்கத்தை அளிப்பதோடு, வாழ்வில் ஏற்படும் இன்னலிலும் இருளிலும் இருந்து மீண்டு வரசெய்யும் நம்பிக்கையை அளிக்கிறது. இன்னல்களிலிருந்து விடுபட சுயக்கட்டுபாடும் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்’ என்று வலியுறுத்துகிறார்.
இதன் மூலம் ஆசிரியர்கள் வெறும் ஆறிவு மட்டும் பெற்றவர்களாக இருக்கக் கூடாது, அவர்களின் ஐம்புலங்களையும் அடக்கவல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவர்களாக இருக்கு வேண்டும் என்பதை இயல்பாக எடுத்தியம்புகிறார்.
இந்த நம்பிக்கை இன்றைய ஆசிரியர்களிடையே மிக அருகி வருவதால் தான், சமூகத்தில் அவர்கள் பல அவதூறுகளுக்கு ஆளாகி, சுயமதிப்பிழந்தவர்களாகி வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.
அக்காலத்து குருகுலக் கல்வியிலிருந்து இக்கால கம்பியூட்டர் கல்வி வரை நாம் ஆய்ந்துப் பார்த்தால் அவற்றில் கற்றல், கற்பித்தல் நடைமுறையில் எத்தன எத்தனையோ மாற்றங்கள், முன்னேற்றங்கள். அதுபோல் அன்று கற்பித்த ஆசிரியர்களுக்கும் இன்றைய நவீனகால ஆசிரியர்களின் நடைமுறையிலும் சமூகச் செயல்பாட்டிலும் பல பல மாற்றங்கள். என்றாலும், பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதில் ஆசிரியருக்கு நிகர் அவர்களாகவே இன்றும் திகழ்ந்து வருகின்றனர்.
எனவே தான் தங்களுக்குள் ஆறிவுத் தீபத்தை ஏற்றிய ஆசானின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என நினைத்து, அவரிடம் அனுமதி பெறுவதற்காச் சென்ற மாணவர்களுக்கு, அந்த உத்தமர் கொடுத்த ஆச்சரியம் ‘எனக்காக ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றீர்கள், அதை இந்த நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களின் தினமாகக் கொண்டாடுங்கள்’ எனத் தன் மாணவர்களுக்குக் கொடுத்த அறிவுரைதான் இன்று நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மட்டுமின்றி நம் நாட்டில் மத்திய அரசும் மாநில அரசும் அவர் பிறந்த நாளில் மிகவும் சிறப்பாகத் தங்கள் கடமையை ஆற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து வருகின்றன.
இத்தனைப் பெரும்பேறு பெற்ற இப் பெரும்மகனார் 1888 செப்டம்பர் 5 இல் திருத்தணியில், சர்வப்பள்ளியில் மண்ணுதித்து, 1975 ஏப்ரல் 17 இல் விண்ணேற்றார். அவர் கீர்த்தி என்றும் ஆசிரியர் பெருந்தகைகளின் இதயங்களில் இதமாக இருக்கும் என்பது திண்ணம்.
( இக்கட்டுரை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றைய 05-09-2022 தினமலர் நாளிதழில் பிரசுரமானது.)
May be an image of 2 people
Lazar Joseph, Mahesh Kumar and 82 others

No comments:

Post a Comment