Sunday, 15 January 2023

புதுப் பொங்கல்

 

”மஞ்சளும் கரும்பும்  விவசாயிக்கு விருந்து”: மனதை தொடும் பொங்கல் கவிதை

பொங்கல் திருநாள் பற்றிய கவிதை இது. கவிஞர் கமல. செல்வராஜ் எழுதியது.

”மஞ்சளும் கரும்பும்  விவசாயிக்கு விருந்து”: மனதை தொடும் பொங்கல் கவிதை

மாதம் மும்மாரி

இயற்கை இடுபொருளில்

இருபோக விளைச்சல்

உழவனுக்கு மகிழ்வு!

           வற்றா நீர்நிலை

           செழிப்பாய் வயல்வெளி

           மஞ்சளும் கரும்பும்

           விவசாயிக்கு விருந்து!

           செங்கல் அடுப்பில்

          மரபுமாறா மண்பானை

          அழகழகாய் அகல்விளக்கு

          குயவனுக்குக் கொண்டாட்டம்!

          முக்கனி முல்லைபூ                      

          வெற்றிலை பாக்கு

          தலைவாழை இலையில்

          புத்தரிசிப் படையல்!

          ஜல்லிக்கட்டுக் காளை

          மல்லுகட்டுக் வீரன்

          சண்டைக் கோழி

          வீரத்தின் அடையாளம்!

          நாளும் கோளும் மாறும்

          கதிரோன் தனுமாறி

          மகரப்பிவேசம் தையின் புலர்ச்சி

          செழிப்பும் களிப்பும்!

          உலகத் தமிழர்

          ஒத்து முழங்கும்

          ஒரே குரல்

          பொங்கலோ… பொங்கல்…!

          போக்கிப் பொங்கல்

          தைப் பொங்கல்

          மாட்டுப் பொங்கல்

          காணும் பொங்கல்!

கவிதை: கவிஞர் கமல. செல்வராஜ்.அருமனை,   அழைக்க: 9443559841

(இக் கவிதை 15-01-2023 IE Tamil மின்னிதழில் பிரசுரமானது.)

இயற்கையோடு இணைந்த பண்டிகைக் கொண்டாட்டங்கள்.

                  இயற்கையோடு இணைந்த பண்டிகைக் கொண்டாட்டங்கள்.

மனித வாழ்க்கையில் மிகவும் அடிப்படைத் தேவையாக விளங்குவன மூன்று “உ” இக்கள். அவை உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றும் இயற்கையின் வரப்பிரசாதமாக மனிதனுக்குக் கிடைக்கின்றன. அதனால் மண்ணும் விண்ணும் தோன்றிய காலத்திலிருந்து மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எனவே மனிதன் அன்றும்… இன்றும்… என்றும்… இயற்கைக்கு நன்றிகடன் பட்டவனாகவே இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.
இயற்கையின் ஒரு பகுதியான நாளும், கோளும் மாறும் போது அவற்றிற்கு ஏற்ப காலநிலைகளும் மாறி, மழையும் வெயிலும் காற்றும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கு உந்து சக்திகளாக இருக்கும், உழவுக்கும் விவசாயத்திற்கும் தானிய உற்பத்திக்கும் உதவி வருகின்றன. அந்த வகையில் பொங்கலைப் பொறுத்தவரை சூரியன் தனுராசியிலிருந்து மகரராசிக்கு மாறுவதை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
நான்கு நாள்களாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை முதல்நாள் ‘போக்கிப் பொங்கல்’, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என்கிறோம். அவற்றில் போக்கிப் பொங்கல் என்பது வருடத்தின் இறுதி மாதமான மார்கழியில் “பழையன கழிதலும் புதியனப் புகுதலும்” என்பதற்கிணங்க, வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருள்கள் அனைத்தையும் மாற்றி விட்டு, கிருமி நாசினியானச் சுண்ணாம்பினால் வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து, மறுநாள் புது வருடத்தை வரவேற்பதற்குத் தயாராகுவதாகும்.
இதில் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை அதிகம் நேசிக்கும் தமிழர்கள் போக்கி என உச்சரிப்பதற்குப் பெரும் சிரமப்பட்டு, அதை போகிப் பொங்கல் என வார்த்தைச் சிதைவையும் பெருள் மாற்றத்தையும் உருவாக்கி விட்டனர். 2ம் நாளான தைப்பொங்கல் வீட்டிலுள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, புத்தாடை உடுத்து, முற்றத்தில் கோலமிட்டு, மண்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு, குலவையிட்டு, தலைவாழையிலையில் சூரிய பகவானுக்குப் படையல் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவதாகும்.
ஆனால் இன்று நகர்புறங்களில், பெரும்பாலும் மக்கள் அடிக்குமாடிகளிலும் அப்பார்ட்மென்ட்களிலும் வாழ்கின்றனர். அவர்களுக்குக் கோலமிடுவதற்கு தெரிவதுமில்லை, முற்றமுமில்லை. அதையும் மீறி சிலர் பொங்கலிடுவதாக இருந்தாலும், மண்பானையில் இடுவதற்குப் பதில் நவீனப் பாத்திரங்களையேப் பயன்படுத்துகின்றனர். தலைவாழையிலைக்குப் பதில் பிளாஸ்டிக் இலைகளில் சூரியனுக்குப் படையல் வைக்கின்றனர். இக்காலப் பெண்களுக்குக் குலவையிடுவதற்குச் சுத்தமாகத் தெரிவதுமில்லை. மாட்டுப் பொங்கலான 3 ம் நாள், வயல்களில் உழுது, மனிதர்களின் வயிற்றுக்குச் சோறுபோடும் காளைகளையும் வீட்டில் பிள்ளைகளுக்குப் பால் தரும் பசுக்களையும் குளிப்பாட்டி, அலங்கரித்து, நல்ல உணவளித்து, தரிசித்து மகிழும் நாளாகும். மாடில்லையேல் ஏரியில்லை… ஏரியில்லையேல் வயலில்லை… வயலில்லையேல் உழவில்லை… உழவில்லையேல் உணவேது? என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டும், மாட்டுவண்டிப் போட்டியும், கோழிப்போர் சண்டையெல்லாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்தன. கடைசி நாளான 4 வது நாள் காணும் பொங்கல். இதற்குள்ளே ஒரு பரமரகசியமே ஒழிந்திருக்கிறது. முன்னுள்ள மூன்று நாள்களும் வீட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இந்தக் காணும் பொங்கல் சற்று வித்யாசமானது. இது பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், விதவிதமானப் பலகார வகைகளைச் செய்து, தங்களின் வீட்டில் இருக்கும் இளம் பெண்களையும் அழத்துக்கொண்டு உறவினர்களின் வீடுகளுக்கு விருந்திற்குச் செல்வதாகும். அப்படிச் செல்லும் போது அந்தந்த வீடுகளில் திருமண வயதான இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்குள் பர்த்துப்பேசி, திருமண ஒப்பந்தங்கள் செய்து கொள்வார்கள். இன்று போல், அன்று தடுக்கி விழுந்தால் எட்டிப்பிடிப்பது திருமணத் தகவல் மையங்கள் என்ற நிலை கிடையாது. அதனால் நம் மூதாதையர்கள், இப்படி பண்டிகைகளையும், ஊர்திருவிழாக்களையும் மணமக்களைத் தேர்வுச் செய்யும் இடமாகப் பயன்படுத்தி வந்தார்கள். இதுவே காணும் பொங்கலின் நோக்கமாக இருந்தது.
இப்படிக் காலத்தின் கோலத்திற்கிணங்க நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளங்களானப் பண்டிகைகளும் திருவிழாக்களும் வீரவிளையாட்டுகளும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் காப்பிய, இதுகாசங்களும் இருக்கும் வரை இப்பண்டிகைகளின் பெயர்களையும் நோக்கங்களையும் எவராலும் பெயர்த்தெடுக்க முடியாது என்பது மட்டும் திண்ணம். பொங்கலோப் பொங்கல்!
முனைவர் கமல செல்வராஜ் அருமனை
No photo description available.
( இது 15-01-20




( இது 15-01-2023 அன்று தினமலர் நாளிதழில் பிரசுரமானப் பொங்கல் சிறப்பு கட்டுரையாகும்)

Thursday, 12 January 2023

நவயுக சிற்பி டாக்டர் இராதாகிருஷ்ணன்.

                      நவயுக சிற்பி டாக்டர் இராதாகிருஷ்ணன் - ஆசிரியர் தினக் கட்டுரை.

எதுவும் அறியாத மாணவர்களின் இதயங்களில் அறவுத் தீபத்தை ஏற்றி, உலகறியும் உன்னத மனிதர்களாக்கும் மிக உயரியச் செயலைச் ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி செய்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
தான்கற்பித்த மாணவர்கள், தன்னை விட எவ்வளவு உயர்ந்து பெயரும் கீர்த்தியும் பெற்று வளர்ந்தாலும் அவர்களைப் பார்த்து எவ்விதப் பொறாமையும் கொள்ளாமல், அவர்களின் வளர்ச்சி, தன்மகிழ்ச்சி எனக் கருதும் உத்தமர்கள் ஆசிரியர்கள்.
அதனால்தான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, பெரும் துயரத்திலும் துன்பத்திலும் சுழன்ற பிறகும், விடா முயற்சியுடன் படித்து, பட்டங்கள் பல பெற்று, ஆசிரியர் பணியில் அமர்ந்து, அளவிடற்கரிய சாதனைகள் புரிந்த சர்வப்பள்ளி டாக்டர் வி. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தத் தினத்தை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றது நம் பாரத தேசம்.
ஆசிரியர் பணிக்குள் பாதம் பதித்து, இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகி, யுனஸ்கோவின் தூதராகி, சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி, இரண்டாவது ஜனாதிபதி என பதவிகள் பல வகித்து, பாரதத்தின் மிக உயரிய பாரதரத்னா விருதுவரை தனதாக்கி, கல்வியால் உயர்ந்த உத்தமர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
சிறந்த ஆசிரியராக மட்டுமின்றி, தன்னிகரற்ற தத்துவவித்தகராகவும், வேத, இதிகாசங்களின் உண்மை நிலைகளை ஆய்ந்தறிந்து உலகிற்குப் போதித்த ஆன்மீக வல்லுநராகவும் விளங்கினார். அதனால் இன்றும் அவரது தத்துவங்கள் மாணவர்களுக்குப் பாடநூலாகவும் ஆய்வு நூலாகவும் இருக்கின்றன. மட்டுமின்றி நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் கூறியத் தத்துவங்கள் இன்றைய நவீனகாலத்திற்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன.
கல்வி பற்றி அவர் கொண்டிருந்த தத்துவங்கள் இன்றைய மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் பிரதிபலித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதுதான் ‘திறமையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும்’ என்பது. மேலும் கல்வியைப் பற்றி அவர் கூறும் போது ‘கல்வியின் உண்மையான நோக்கம், அமைதியான வாழ்க்கையை அமைப்பதே’ என்கிறார்.
தத்துவங்களில் மட்டுமின்றி சமயங்கள் பற்றிய அவரது அழமான கருத்துகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவருக்குப் பிடித்தமான நூலாகியப் பகவத் கீதையைப் பற்றிக் கூறும் போது, ‘உபநிடதங்கள் என்ற பசுவிலிருந்து கிருஷ்ணர் என்ற தெய்வீக ஆயர் அர்ஜூனனுக்காக் கறந்த பால் தான் பகவத் கீதை; என்றும் அது பழமாயானதும் அன்று; பழையதும் அன்று; புதியதும் அன்று;. நிரந்தரமானது’ எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் ‘மனிதன் ஆசைகளை ஒழுங்குபடுத்தி பகவானிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கை என்பது சந்தேகமில்லாத, உறுதியான விசுவாசமும் ஈடுபாடும் இணைந்து வாழ்க்கையின் ஒரு நோக்கத்தை அளிப்பதோடு, வாழ்வில் ஏற்படும் இன்னலிலும் இருளிலும் இருந்து மீண்டு வரசெய்யும் நம்பிக்கையை அளிக்கிறது. இன்னல்களிலிருந்து விடுபட சுயக்கட்டுபாடும் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்’ என்று வலியுறுத்துகிறார்.
இதன் மூலம் ஆசிரியர்கள் வெறும் ஆறிவு மட்டும் பெற்றவர்களாக இருக்கக் கூடாது, அவர்களின் ஐம்புலங்களையும் அடக்கவல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவர்களாக இருக்கு வேண்டும் என்பதை இயல்பாக எடுத்தியம்புகிறார்.
இந்த நம்பிக்கை இன்றைய ஆசிரியர்களிடையே மிக அருகி வருவதால் தான், சமூகத்தில் அவர்கள் பல அவதூறுகளுக்கு ஆளாகி, சுயமதிப்பிழந்தவர்களாகி வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.
அக்காலத்து குருகுலக் கல்வியிலிருந்து இக்கால கம்பியூட்டர் கல்வி வரை நாம் ஆய்ந்துப் பார்த்தால் அவற்றில் கற்றல், கற்பித்தல் நடைமுறையில் எத்தன எத்தனையோ மாற்றங்கள், முன்னேற்றங்கள். அதுபோல் அன்று கற்பித்த ஆசிரியர்களுக்கும் இன்றைய நவீனகால ஆசிரியர்களின் நடைமுறையிலும் சமூகச் செயல்பாட்டிலும் பல பல மாற்றங்கள். என்றாலும், பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதில் ஆசிரியருக்கு நிகர் அவர்களாகவே இன்றும் திகழ்ந்து வருகின்றனர்.
எனவே தான் தங்களுக்குள் ஆறிவுத் தீபத்தை ஏற்றிய ஆசானின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என நினைத்து, அவரிடம் அனுமதி பெறுவதற்காச் சென்ற மாணவர்களுக்கு, அந்த உத்தமர் கொடுத்த ஆச்சரியம் ‘எனக்காக ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றீர்கள், அதை இந்த நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களின் தினமாகக் கொண்டாடுங்கள்’ எனத் தன் மாணவர்களுக்குக் கொடுத்த அறிவுரைதான் இன்று நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மட்டுமின்றி நம் நாட்டில் மத்திய அரசும் மாநில அரசும் அவர் பிறந்த நாளில் மிகவும் சிறப்பாகத் தங்கள் கடமையை ஆற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து வருகின்றன.
இத்தனைப் பெரும்பேறு பெற்ற இப் பெரும்மகனார் 1888 செப்டம்பர் 5 இல் திருத்தணியில், சர்வப்பள்ளியில் மண்ணுதித்து, 1975 ஏப்ரல் 17 இல் விண்ணேற்றார். அவர் கீர்த்தி என்றும் ஆசிரியர் பெருந்தகைகளின் இதயங்களில் இதமாக இருக்கும் என்பது திண்ணம்.
( இக்கட்டுரை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றைய 05-09-2022 தினமலர் நாளிதழில் பிரசுரமானது.)
May be an image of 2 people
Lazar Joseph, Mahesh Kumar and 82 others

Wednesday, 11 January 2023

தேசிய இளைஞர்கள் தினம்.

                                    சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி.

Swami Vivekananda’s birthday | National Youth Day 2023.
( இன்றைய 12-01-2023 ietamil மின்னிதழில் அடியேன் எழுதியுள்ளக் கட்டுரை.)
கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியரின் பத்து நாள் பண்பு பயிற்சி முகாம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்தது. முகாமின் இறுதி நாள் அனைவரும் விவேகானந்தா் நினைவு பாறையை சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். சில மணிநேரம் அங்கே செலவழித்து விட்டு, அனைவரும் திரும்பிச்செல்லப் படகுத்துறைக்குச் சென்றனர். முகாம் பொறுப்பாளர் மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்தபோது ஒரு மாணவி விடுபட்டிருந்தாள்.
அனைவருக்குள்ளும் ஒருவிதப் பதற்றம். அந்த மாணவி எங்குச் சென்றாள்? என்னவானாள்? போராசிரியர்கள் ஒரு சிலரோடு, மிகுந்த பரபரப்போடு மாணவியைத் தேடும் படலம் தொடங்கியது. என்ன அதிசயம், அந்த மாணவி, விவேகானந்தரின் கம்பீரமானச் சிலையின் முன்னே, கண்களில் கண்ணீர் கசிய… உள்ளம் உருகி… பிரார்த்தனையில் சிலையாக நின்று கொண்டிருந்தாள்.
பதற்றத்தோடு அவளிடத்தில் ஏன்? என்ன ஆச்சு? எனப் போராசிரியர்கள் கேட்டபோது, மிகவும் நிதானமாக அவள் அளித்தப் பதில், அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. “நான் விவேகானந்தரைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவரின் கருத்துகளை உள்வாங்கி என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன். ஆனால் அவரின் இதுபோன்ற திருவுருவச் சிலையை இதுவரை நேரடியாகப் பார்த்ததில்லை. இங்கே அவரை பார்த்தவுடன் என்னுள்ளம் உருகி அவரோடு ஒன்றிவிட்டது, இவ்விடத்திருந்து அசையவே என் மனம் அனுமதிக்கவில்லை. அதனால்தான் வேறொங்கும் செல்லாமல் என்னையே மறந்து இங்கேயே மெய்யுருகி நின்றுவிட்டேன்” என கண்ணீர்ப் பெருக்கோடு பக்திபரவசத்தோடு கூறினாள்.
இது பாரத தேசத்தில் ஒரு மாணவியின் உள்ளத்திற்குள் உண்டான தாக்கமல்ல இது, லட்சோபலட்சம் இளைஞர்களின் உள்ளத்திற்குள் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டத் தாக்கம். இதற்கு என்ன காரணம்? “இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்” என இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அவரது நம்பிக்கை முழுவதும் இளைஞர்களிடத்தில் இருந்தது. அவரின் எழுதும்… பேச்சும்… மூச்சும்… இளஞர்களை வீரர்களாக, விவேகமுள்ளவர்களாக, ஆற்றலும், நம்பிக்கையும் மிக்கவர்களாக, ஒழுக்கச்சீலர்களாக, தேசபக்தர்களாக மாற்றின.
“இளைஞர்களே உங்களுக்கு என்னிடத்தில் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரியத் தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.” இளைஞர்கள் மத்தியில் இப்படிப்பட்ட நம்பிக்கை தீபமேற்றும் தைரியம் இந்த நரேந்திரனுக்கன்றி வேறுயாருக்கு வரும்?
அவர் எதையும் இளைஞர்கள் மத்தியில் திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. மாறாக, அவரே, அவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார். “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” என இளைஞர்களுக்கு வலிமைச் சேர்க்கிறார் அந்த நவயுகச் சிற்பி.
1893 ஆம் ஆண்டு சிகாகோ பாராளுமன்றத்தில் உலக சமயத்தலைவர்கள் மத்தியில், எவராலும் மதிக்கப்படாத ஒரு சாதாரண சன்னியாசி வேஷத்தில் சென்று, அவர் பேசிய பேச்சு உலக அரங்கில் பாரத தேசத்தைத் தலைநிமிர்ந்து பார்க்க வைத்தது. அவர் சிகாகோவில் பேசி நூறு ஆண்டு நிறைவடைந்த போது, அந்தப் பேச்சை நினைவுகூரும் விதத்தில் நாடு முழுவதும், சிகாகோ பேச்சின் நூற்றாண்டுக் கொண்டாடப்பட்டது. உலக வரலாற்றில் ஒருவர் பேசிய பேச்சிற்கு நூற்றாண்டு கொண்டாடிய வரலாறு இவரது பேச்சிற்கு மட்டுமேயன்றி வேறு எவருக்கும் இருக்காது.
அதுபோலவே 2013 ஜனவரி 12 இல் அவரின் 150 ஆவது பிறந்தநாள் வந்த போது அதனை ஓராண்டு காலம் முழுவதும் சுவாமி விவேகனந்தரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என அப்போதை பாரத பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுப் பிறப்பித்தார். அதன் அடிப்படையில் அவ் ஓராண்டு காலம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதுவும் முற்றும் துறந்த இந்தத் துறவிக்கு மட்டும் கிடைத்த மாபெரும் வெகுமதியாகும் என்றே கருதலாம்.
சாதாரண மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் உயரம்… கம்பீரமானத் தலைப்பாகை… தேஜஸ் ஜொலிக்கும் முகம்… காந்தசக்தி வாய்ந்த கண்கள்… சுண்டியிழுக்கும் பேச்சு… காவிதரித்த ஜாகுவானுபாகு உடம்பு… இத்தனை அடையாளங்களின் ஒட்டுமொத்த உடமை நரேந்திரநாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர், கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் தவப்புதல்வனாக 1863 ஜனவரி 12 இல் அவதரித்தார்.
“என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என இளைஞர்களிடம் கூறும் இவரின், ஜென்ம தினமான ஜனவரி 12 ஆம் தேதியை தேசிய இளைஞர்கள் தினமாகக் கடைபிடிக்க இந்திய அரசு 1984 இல் முடிவுசெய்து, 1985 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
வாழ்க்கையின் மகத்துவத்தை அறியாமல் போதைப் பொருள்களுக்கும் செல்போன் உட்பட தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் தங்களின் வாழ்க்கையை முழுமையாக அடிமையாக்கி, பாழ்படுத்தி, தங்களின் வலிமையை இழந்துகொண்டேயிருக்கும் இன்றைய இளைஞர்களின் காதுகளில், “வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கையாகும்” என்னும் சுவாமிஜியின் வரிகள், அவரின் ஜென்ம தினமான இன்று (ஜனவரி 12) ரீங்காரமாக ஒலித்துக் கொண்டேயிருக்கட்டும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.
அழைக்க: 9443559841 அணுக: drkamalaru@gmail.com