இயற்கையின் ஒரு பகுதியான நாளும், கோளும் மாறும் போது அவற்றிற்கு ஏற்ப காலநிலைகளும் மாறி, மழையும் வெயிலும் காற்றும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கு உந்து சக்திகளாக இருக்கும், உழவுக்கும் விவசாயத்திற்கும் தானிய உற்பத்திக்கும் உதவி வருகின்றன. அந்த வகையில் பொங்கலைப் பொறுத்தவரை சூரியன் தனுராசியிலிருந்து மகரராசிக்கு மாறுவதை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
நான்கு நாள்களாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை முதல்நாள் ‘போக்கிப் பொங்கல்’, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என்கிறோம். அவற்றில் போக்கிப் பொங்கல் என்பது வருடத்தின் இறுதி மாதமான மார்கழியில் “பழையன கழிதலும் புதியனப் புகுதலும்” என்பதற்கிணங்க, வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருள்கள் அனைத்தையும் மாற்றி விட்டு, கிருமி நாசினியானச் சுண்ணாம்பினால் வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து, மறுநாள் புது வருடத்தை வரவேற்பதற்குத் தயாராகுவதாகும்.
இதில் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை அதிகம் நேசிக்கும் தமிழர்கள் போக்கி என உச்சரிப்பதற்குப் பெரும் சிரமப்பட்டு, அதை போகிப் பொங்கல் என வார்த்தைச் சிதைவையும் பெருள் மாற்றத்தையும் உருவாக்கி விட்டனர். 2ம் நாளான தைப்பொங்கல் வீட்டிலுள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, புத்தாடை உடுத்து, முற்றத்தில் கோலமிட்டு, மண்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு, குலவையிட்டு, தலைவாழையிலையில் சூரிய பகவானுக்குப் படையல் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவதாகும்.
ஆனால் இன்று நகர்புறங்களில், பெரும்பாலும் மக்கள் அடிக்குமாடிகளிலும் அப்பார்ட்மென்ட்களிலும் வாழ்கின்றனர். அவர்களுக்குக் கோலமிடுவதற்கு தெரிவதுமில்லை, முற்றமுமில்லை. அதையும் மீறி சிலர் பொங்கலிடுவதாக இருந்தாலும், மண்பானையில் இடுவதற்குப் பதில் நவீனப் பாத்திரங்களையேப் பயன்படுத்துகின்றனர். தலைவாழையிலைக்குப் பதில் பிளாஸ்டிக் இலைகளில் சூரியனுக்குப் படையல் வைக்கின்றனர். இக்காலப் பெண்களுக்குக் குலவையிடுவதற்குச் சுத்தமாகத் தெரிவதுமில்லை. மாட்டுப் பொங்கலான 3 ம் நாள், வயல்களில் உழுது, மனிதர்களின் வயிற்றுக்குச் சோறுபோடும் காளைகளையும் வீட்டில் பிள்ளைகளுக்குப் பால் தரும் பசுக்களையும் குளிப்பாட்டி, அலங்கரித்து, நல்ல உணவளித்து, தரிசித்து மகிழும் நாளாகும். மாடில்லையேல் ஏரியில்லை… ஏரியில்லையேல் வயலில்லை… வயலில்லையேல் உழவில்லை… உழவில்லையேல் உணவேது? என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டும், மாட்டுவண்டிப் போட்டியும், கோழிப்போர் சண்டையெல்லாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்தன. கடைசி நாளான 4 வது நாள் காணும் பொங்கல். இதற்குள்ளே ஒரு பரமரகசியமே ஒழிந்திருக்கிறது. முன்னுள்ள மூன்று நாள்களும் வீட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இந்தக் காணும் பொங்கல் சற்று வித்யாசமானது. இது பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், விதவிதமானப் பலகார வகைகளைச் செய்து, தங்களின் வீட்டில் இருக்கும் இளம் பெண்களையும் அழத்துக்கொண்டு உறவினர்களின் வீடுகளுக்கு விருந்திற்குச் செல்வதாகும். அப்படிச் செல்லும் போது அந்தந்த வீடுகளில் திருமண வயதான இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்குள் பர்த்துப்பேசி, திருமண ஒப்பந்தங்கள் செய்து கொள்வார்கள். இன்று போல், அன்று தடுக்கி விழுந்தால் எட்டிப்பிடிப்பது திருமணத் தகவல் மையங்கள் என்ற நிலை கிடையாது. அதனால் நம் மூதாதையர்கள், இப்படி பண்டிகைகளையும், ஊர்திருவிழாக்களையும் மணமக்களைத் தேர்வுச் செய்யும் இடமாகப் பயன்படுத்தி வந்தார்கள். இதுவே காணும் பொங்கலின் நோக்கமாக இருந்தது.
இப்படிக் காலத்தின் கோலத்திற்கிணங்க நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளங்களானப் பண்டிகைகளும் திருவிழாக்களும் வீரவிளையாட்டுகளும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் காப்பிய, இதுகாசங்களும் இருக்கும் வரை இப்பண்டிகைகளின் பெயர்களையும் நோக்கங்களையும் எவராலும் பெயர்த்தெடுக்க முடியாது என்பது மட்டும் திண்ணம். பொங்கலோப் பொங்கல்!
முனைவர் கமல செல்வராஜ் அருமனை