Sunday, 14 November 2021

மகத்தான மனிதர்களின் அடையாளம்.

 

              மகத்தான மனிதர்களின் அடையாளம்.

    குமரி மாவட்டச் சாதனையாளர்கள் (பாகம் 4)                         

இயற்கையின் படைப்பில் மிகவும் மகத்தானவர்கள் மனிதர்கள். அவர்களில் மாணிக்கங்களாக மிளிர்பவர்கள் ஒருசிலர். அந்த மாணிக்கங்களைக் கோபுரத்தின் உச்சியில் வைத்து மெச்சினால், அது  பலருக்கும் பாதை வகுக்கக்கூடியதாக இருக்கும். 

     அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மனிதர்களில் மாணிக்கங்களை மிளிர வைக்கும் மகத்தானப் பணியை எவ்வித எதர்பார்ப்புமின்றித் தொடர்ந்து செய்துவருபவர் எழுத்தாளர் திரு. அ. கிருஷ்ணகுமார் அவர்கள்.

     இதுவரை குமரி மாவட்டச் சாதனையாளர்கள் என மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இது நான்காவதுத் தொகுதி. இத்தொகுதியில் பத்து மாணிக்கங்களைப் பதியம் செய்துள்ளார். அதில் முன்னவராக இருப்பவர் தக்கலை ஹாஜி. முனைவர் எம்.எஸ். பஷீர் அவர்கள். இஸ்லாமிய இலக்கியம் படைத்து அவற்றை பாரறியச் செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். அதன் மூலம் அவர் அடைந்திருக்கும் கீர்த்தியும், சேர்த்திருக்கும் விருதுகளும் எண்ணிலடங்காதவை. சாதனைகளால் சிகரத்தைத் தொட்டாலும், அனைவரிடமும் மனிதநேயத்துடன் பழகும் தலைசிறந்த பண்பாளர்   என்பதே இவரின் மிக உயரிய அடையாளம்.

     வள்ளுவரையும் பாரதியையையும் தன்னிரு விழிகளாகக் கொண்டு தேனினியத் தமிழுக்கு அருந்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் கவிமாமணி முனைவர் குமரிச்செழியன் இரண்டாமவராக இடம் பிடித்துள்ளார். வையம் முழுதும் வள்ளுவரின் கீர்த்தி ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதற்காக  ஓய்வறியாது, துயிலறியாது அவர் நாமத்தை நாவாலும் எழுத்தாலும் எடுத்தியம்பி வருபவர். குமரி முதல் கோட்டைவரை இவர் இணைந்திருக்கும் தமிழ் இலக்கிய அமைப்புகளும் அவற்றில் வகித்து வரும் பொறுப்புகளும் இவரை ஓர் இலக்கியப் பித்தனாகவே மாற்றியிருக்கிறது.

     முத்தான மூன்றாவது இடத்தில் முனைப்புடன் முந்தி நிற்பவர் திரு. எம். டி. மதிமயக்கும் பெருமாள் அவர்கள். தனது சிறுவயதில் பொழுதுபோக்காகத் தொடங்கிய உலகப் பிரபலங்களின் கையெழுத்திட்டப் புகைப்படங்களைச் சேகரிக்கும் பழக்கம், இன்று இவரை, இந்தப் பார்போற்றும் கின்னஸ் சாதனையாளர் என்ற நிலைக்கு அழைத்துச் சென்றுகொண்டேயிருப்பது வியப்புக்குரியது. இந்தப் பெரும் சாதனைக்காக அவர் அனுபவித்திருக்கும் வேதனைகளும் சோதனைகளும் ஒரு தனிப்புத்தம் எழுதுவதற்கே போதுமானதாக இருக்கும். இவரின் சாதனக்குப் பேருதவியாக இருப்பது, இவரின் இன்முகமும், இன்சொல்லும் நற்செயலும் என்றால் மிகையாகாது.

     ஓர் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கி, பின் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றினால் துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் மாதாஜி தங்கலட்சுமி அவர்கள் நானிலம் போற்றும் நான்காவது இடத்தில் உள்ளார். முற்றும் துறந்தவர்கள் தங்களின் சாதனைகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதற்குப் பதில் மற்றவர்களின் வாழ்க்கை அமைதியுறவும் நாட்டில் ஆன்மீகம் தழைக்கவும் பாடுபடுவார்கள். அந்த அரும் பெரும் செயலை மாதாஜி அவர்கள் எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமுமின்றி செய்து வருவது ஒரு தன்னலமற்ற சேவையாகும்.

     நீதிமன்றத்தில் வாதாடுவதில் வல்லவர், சமூகச் சேவையில் சிறந்தவர் இவர்தான் ஐந்தாவதாக வரும் வழக்கறிஞர் குமரி மு. இராஜேந்திரன் அவர்கள். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியலாளர், சமூகச் சேவகர் என பன்முக ஆளுமை கொண்ட இவர், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு ஆற்றி வரும் தொண்டுகளால், இல்லாதவர்கள் மற்றும் இயலாதவர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார் என்றால் அது மிகையன்று.

     தனக்குக் கிடைத்த அரிய அரசு வேலையைத் துறந்து, துறவி வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டு ஆன்மீகச் சுடராய் ஆறாவது இடத்தில் வரமாய் வந்திருப்பவர் மாதாஜி அன்புமதி அவர்கள். தமிழகம், கேரள மாநிலத்தில் கிராமம் கிராமமாகச் சென்று திருவிளக்குப் பூஜை நடத்தி, ஆன்மீக ஞானமூட்டி தாய்குலங்களின் இதயங்களில் என்றும் சுடரொளியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மாதாஜி செய்திருக்கும் சாதனைகளும் பெற்றிருக்கும் விருதுகளும் பெருமைக்குரியவை. மக்களின் மன அமைதியே ஆன்மீகத்தின் அடையாளம் என விளக்கமளிக்கும் இவரின் துறவற வாழ்வு தூய ஆன்மீகத்தின் அளப்பரிய அடையாளமாகும்.

     இம்மண்ணில் மாந்தராய் பிறந்து விட்டோம், வீணாய் வாழ்ந்து மடியாமல், என்றும் மாயாத சாதனை யாதேனும் செய்து மடிவோம் என்பதிற்கிணங்க, இப்புத்தகத்தில் ஏழாமிடத்தில் ஏற்றம் பெற்றிருப்பவர் திருவாளர் ப. குமாரசுவாமி அவர்கள். தனது சிறு வயதிலிருந்தே  நாணயம், கரன்சிநோட்டுகள், தபால்தலைகள் சேகரித்து அதன் மூலம் சாதனையாளராக மாறியவர். பள்ளி, கல்லூரிகளில் தனது சேகரிப்புகளை கண்காட்சி நடத்தி, மாணவர்கள் மனங்களில் நிறைந்து நிற்கும் இவர் கீர்த்தி இவ்வையகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்.

     கல்வி, கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூகம் எனப் பல தளங்களில் தடம் பதித்து எட்டாம் இடத்தில் நெட்டென உயர்ந்து நிற்பவர் பேராசிரியர் செ. சஜீவ் அவர்கள். அவர் ஏற்ற பொறுப்பு எதுவாயினும் செம்மையுறச் செய்து முடிப்பதில் வல்லவர். கணினித்துறை இவருக்குக் கைவந்த கலை. அன்பு, அமைதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியக் குணாதிசையங்களின் மொத்த வடிவம்.  தெய்வீகமும் தேசியமும் இவரின் உயிர் மூச்சு. சலிக்காத உழைப்பு இவருக்கு மட்டுமே சொந்தம். அதனால் நாடிவந்த விருதுகள், தேடி வந்த பதவிகள் எண்ணில. இவரின் தமிழ் இலக்கியப்பணி அளப்பரியது.

        கல்வி, கலை, இலக்கியம் இவை மூன்றையும் தாரக மந்திரமாய் கொண்டு, கற்பித்தலை மும்முரமாய் செய்து, இப்புத்தகத்தின் ஒன்பதாவது மாணிக்கமாய் மிளிர்பவர் பேராசிரியர் முனைவர் சு. சிறிலெஜா அவர்கள். எழுத்தும், பேச்சும் இவருக்கு மூச்சு. கற்பித்தலோடு மட்டும் நின்று விடாமல் ஏழை, எளிய மாணவிகளின் கல்விக் கட்டணத்தை, பிறர் அறியாமல் செலுத்தி அவர்களின் இதயங்களில் என்று கலங்கரை விளக்காய் ஒளிர்பவர். தமிழ் இலக்கியத்தின் மீது கொண்டத் தீராதத் தாகத்தால் சுதேசி இலக்கிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்று மிகத் தீவிரமாய் இலக்கியப் பணியாற்றி வருபவர். மேடைப் பேச்சும், வானொலிப் உரை வீச்சும் உணர்ச்சிப் பெருக்காய் அமைந்திருக்கும். அதனால் இவர் பெற்றிருக்கும் பாராட்டுகளும், இவரை தேடி வந்திருக்கும் விருதுகளும் ஏராளம்... தாராளம்...

     தேசியக்கவி பாரதியின் புரட்சிப் பெண்ணாய் இங்கே ஒரு இளம் கவிஞி அ. பாரதி பத்தாமிடத்தில் உயர்ந்து நிற்கிறார். கவிதையும் கதையும் கட்டுரையும் ஆய்வும் இவருக்கு இளம் வயதிலையே கைவந்த கலைகள். காணொளி (YOUTUBE) மூலம் கருத்து முழக்கம் செய்யும் இவர், நாளையப் பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரம். இவரின் சாதனைகளின் தொடக்கம் இங்கே அரங்கேறியிருக்கிறது. தொடரும் சாதனைகளால் விருதுகளும் பதவிகளும் இவரை நாடி வரட்டும்.

     தனது வாழ்க்கை முழுவதையும் அடுத்தவர்களின் சாதனைகளை ஆய்வுச் செய்யும் எழுத்துப் பணிக்காக அற்பணித்திருக்கும் இந்நூலாசிரியர் திரு. அ. கிருஷ்ணகுமார் அவர்கள், தனது வாழ்வின் இறுதியில் தன் நல்லுடலை, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மாருத்துவ மாணவ, மாணவிகளின் ஆய்வுக்காக அற்பணம் செய்திருக்கிறார். அவரின் இந்த அரும் பெரும் தியாகத்திற்காக சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்குகிறேன்.

                                          என்றும் சிநேகங்களுடன்...

                                          முனைவர் கமல. செல்வராஜ்.

அருமனை

18-10-2021

           -----------------------------------------------------------------------------      

       

No comments:

Post a Comment